October 21, 2018

நாயகன்

நாயகன் வெளியான 1987 ஆம் ஆண்டு தீபாவளி தினத்திற்கான சிறப்பு ஒலியும் ஒளியுமில் முதலில் ஒளிபரப்பானது மனிதன் படத்தின் “வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், மனுசனை இன்னும் பார்க்கலியே” பாடல். அதற்கடுத்தாற்போல நான் சிரித்தால் தீபாவளி பாடல் ஒளிபரப்பானது. தெருவில் சில வீடுகளில் மட்டுமே டிவி இருந்த காலம். நிகழ்ச்சி முடிந்ததும், உடன் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டன், எங்க தலைவரைப் பார்த்தியா எவ்வளோ தெளிவாப் பாடுறாரு. உங்க பாட்டும் இருக்கே, காதுக்குள்ளயே போகலை என்று கிண்டலடித்தான். அது உண்மை தான் முதல் வரியைத்தாண்டி எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. 

தீபாவளி முடிந்த அடுத்த வாரம், எங்கள் தெருவில் இருந்து மதுரை கல்லூரிகளின் விடுதிகளில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தவர்கள் சனி, ஞாயிறு விடுமுறைக்கு வந்தார்கள். மனிதன் நல்லாயிருக்கு. நாயகன் புரியலை. அது ஒரு மாதிரிப் போகுது என்றார்கள். இன்று அதை நினைத்துப் பார்த்தால் அதில் புரியாமல் போக என்ன இருக்கு எனத் தெரியவில்லை. ஆனால் அப்போது ஒருவர் சொன்னது முக்கியமானதாகப் பட்டது. அது, வசனமெல்லாம் உத்து கவனிச்சு கேட்க வேண்டியிருக்கு என்றார்.

ஆனாலும் நாயகன் மக்களுக்கு எப்படியோ அப்போது பிடித்துப் போய், நன்றாக ஓடியது. படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் என்னத்த எடுத்து வச்சிருக்காங்க, என்ன ஆகுப்போகுதோ என்று புலம்பினார் என்பார்கள். முதல் இரண்டு நாட்கள் கிடைத்த எதிர்மறைப் பேச்சுகளையும் தாண்டி அந்தப் படம் ஓடியது. ஒருவழியாக 100 நாட்கள் கழித்து எங்கள் ஊருக்கு வந்தது. எங்கள் தெரு அண்ணன் சொன்னது போல, வசனங்களை உற்றுக் கவனிக்க வேண்டியிருந்தது. காரணம் அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் ஒரே ஒரு ஸ்பீக்கர் மட்டுமே இருக்கும். ஸைட் ஸ்பீக்கார்கள் சில திரை அரங்கங்களில் மட்டும். மற்றப் படங்களில் எல்லாம் எல்லோரும் ஒரே சத்தத்தில் பேசுவார்கள். அது சாகப்போகும் கிழவியாக இருந்தாலும் சரி, சரசப்பேச்சு பேசும் குமரியாக இருந்தாலும் சரி. வேண்டுமானால் வழக்கத்தை விட சத்தமாக ஹீரோவோ, வில்லனோ கத்துவார்கள். கமல்ஹாசன் படங்களில் கேரக்டருக்கு தகுந்தபடியான, சூழ்நிலைக்கு தகுந்தபடியான சத்தத்திலேயே கேரக்டர்கள் பேசும். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அதுபாட்டுக்கு காதுல வசனம் விழுகணும்யா என்பவர்களுக்கு அது சிறு இடையூறாகவே இருக்கும். பல வசனங்கள் காதில் விழாது. 

இதை 15 ஆண்டுகள் கழித்து அன்பே சிவத்திலும் அனுபவித்தேன். தற்போது கல்யாண மண்டபமாக மாறிவிட்ட உதயம் திரையரங்கில் படம் ரிலீஸ். மாலைக்காட்சி. ஒரிஸ்ஸா காட்சிகளில் விமான நிலைய அறிவிப்புகள் போன்றவை ஸ்பீக்கர் வழியே வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் பல வசனங்கள் காதில் விழவில்லை. சில வருடங்கள் கழித்து நண்பரின் லேப்டாப்பில் இந்தப் படத்தை பார்க்கும் போதுதான் தவறவிட்ட வசனங்கள் தெரிந்தன. 

பி சி ஏரியாக்களில் பல திரையரங்குகளின் நிலை இதுதான். ஒளியாவது முன்னே பின்னே இருந்தாலும் எப்படியாவது பார்த்து விடலாம். ஏனென்றால் நம் கவனம் முழுவதும் திரையிலேயே இருக்கும். இந்த வசனம், பிண்ணனி இசை சரியாகக் கேட்காவிட்டால் என்ன செய்ய முடியும்? ஹேராம் போன்ற ஒரு படத்தை சி செண்டரில் பார்த்தால் இதன் முக்கியத்துவம் தெரியும். ஒன்றிரண்டு வசனங்கள் தான் காதில் விழும், அதுவும் வேற்று மொழியில் இருக்கும். விருமாண்டி படத்தை கிராமத்தில் பார்க்கும் போதும் இந்த கஷ்டம் புரிந்தது. 

காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் இந்த மூன்றையும் தியேட்டரை விட தொலைக்காட்சியில் தான் நன்கு ரசிக்க முடிந்தது. காரணம் எல்லா வசனங்களும் தெளிவாக காதில் விழுந்தன. நானும் ரவுடி தான் படத்தை எங்கள் ஊரில் பார்த்து விட்டு சுமாராத்தான இருக்கு, இதுக்கு எதுக்கு இவ்வளோ பாராட்டுன்னு நினைச்சேன். அப்புறம் ஒரு நல்ல தியேட்டர்ல பார்த்த பின்னாடிதான் பரவாயில்லைன்னு தோணுச்சு. மெட்ராஸ் படமும் அப்படித்தான். என் கணக்குப்படி தமிழ்நாட்டுல எப்படியும் 40% தியேட்டர்கள் இந்தப் பிரச்சினையோடதான் இருக்கு. அதனால தான் தெளிவான தயாரிப்பாளர்கள், ஹரி, கே எஸ் ரவிகுமார் எல்லாம் எல்லோரையும் ஒரே டெசிபல்ல பேச வச்சிடுறாங்க போல. ஷங்கர் கூட கவனிச்சுப் பார்த்தா எளிமையான வசனம், நார்மல் டெசிபல்லயே பேச வைக்கிறார். சென்னையில் ஒரு படம் பார்க்கிறதுக்கும் செம்பட்டியில் ஒரு படம் பார்க்கிறதுக்கும் இருக்கிற வித்தியாசங்கள்ள இதுவும் ஒண்ணு. 

No comments: