August 10, 2015

சென்ட்ரல் தியேட்டர்கள்


உலகிலேயே அதிக தியேட்டர்கள் கொண்டுள்ள பெயர் என்ன என்று சர்வே எடுத்துப் பார்த்தால் “சென்ட்ரல்” என்று வந்தாலும் வரலாம். தமிழ்நாட்டில் மட்டுமே எத்தனை சென்ட்ரல் தியேட்டர்கள்?

மதுரை,கோவை,திருநெல்வேலி,விருதுநகர்,திண்டுக்கல் என தமிழகத்தின் பல நகரங்களில் சென்ட்ரல் தியேட்டர்கள் உள்ளன. என் குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயதை எட்டும் வரை சென்ட்ரல் தியேட்டர்களில் ஏராளமான நாட்களை கழித்துள்ளேன்.

நான் கைக்குழந்தையாக இருந்த போது திண்டுக்கல் சென்ட்ரலானது பிரிமியம் தியேட்டர். என் அம்மாவும் அவர் சகோதரியும் அங்கே ஒரு படத்திற்கு ரிக்‌ஷாவில் சென்றார்களாம். கொழுக் மொழுக் என இருந்த என்னை ரிக்‌ஷாக்காரர் தூக்கி வைத்துக் கொண்டு தர மாட்டேன் என அடம் பிடித்தாராம். இதை எல்லோரிடமும், ஏன் என் மனைவியும் கூட பெருமையாகச் சொல்லி வந்தார் என் அம்மா. என் மகன் ஒருமுறை ஏன் பாட்டி? நீங்க காசு கொடுக்கலைன்னு டாடிய தூக்கி வச்சுக்கிட்டாங்களா? எனக் கேட்டு என் மனைவி க்ளுக் என சிரித்த நாளில் தான் அந்த பெருமை பீத்தலை நிறுத்தினார் என் அம்மா. சென்ட்ரல், நாகா-லக்‌ஷ்மி, ஆர்த்தி என புதிய தியேட்டர்கள் வந்த பின்னர் பழைய படங்களை மட்டுமே திரையிடும் தியேட்டராக மாறியது.

திண்டுக்கல் சென்ட்ரல் மட்டுமல்ல ஏனைய சென்ட்ரல்களும் பழைய படங்களை திரையிடும் தியேட்டராகவே மாறிவிட்டன. கோவையில் இருக்கும் சென்ட்ரல்-கனகதாரா தியேட்டர் மட்டுமே இன்னும் முண்ணனி தியேட்டராக விளங்கி வருகிறது. அது கூட 90களின் ஆரம்பத்தில் சற்று டொங்கலாகத்தான் இருந்தது. ஆங்கில மற்றும் இந்தி திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வந்தது. பின்னர் நல்ல முறையில் ரெனெவேஷன் செய்யப்பட்டது. விருதுநகர் சென்ட்ரலும் 2000க்குப் பின் பொலிவிழந்து போனது. அங்கே கரகாட்டக்காரன் 100 நாட்கள் ஓடியது. மாரியம்மா மாரியம்மா பாடலுக்கு தியேட்டர் முழுவதும் சாம்பிராணி புகையைப் போட்டு நாலைந்து பெண்களை சாமியாட விட்ட பெருமைக்குரியது விருதுநகர் சென்ட்ரல். திருநெல்வேலி சென்ட்ரல் கூட அருமையான கட்டிடம்.

எத்தனை சென்ட்ரல் தியேட்டர்களில் படம் பார்த்திருந்தாலும் அது மதுரை சென்ட்ரல் தியேட்டருக்கு ஈடாகாது. சகலகலா வல்லவன், காக்கி சட்டை, படிக்காதவன் என அங்கே பலமுறை பார்த்த படங்கள் ஏராளம். ஏர் கண்டிஷன் வசதியுடன் புதிய தியேட்டர்கள் வரத் தொடங்கிய உடன் அங்கே பெரிய நடிகர்கள் நடித்த புதிய படங்கள் வெளியாவது குறைந்தது. அதன்பின்னர் சில வருடங்கள் தெலுங்கு டப்பிங் படங்களில் கவனம் செலுத்தினார்கள். காதல் தேவதை (ஜெகதேச வீருடு அதிரூப சுந்தரி, சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்தது), அபூர்வ சக்தி 369 (டைம் மெஷின் கான்செப்டில் பால்கிருஷ்ணா, மோகினி நடித்தது) ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடின. அதன்பின்னர் இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று படங்களைத் திரையிடும் தியேட்டராக மாறியது. இப்போது பழைய எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன் படங்களைத் திரையிடும் தியேட்டராக மாறிப்போனது.

இந்த சென்ட்ரல் தியேட்டர்கள் பெரும்பாலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை. நகரின் முக்கிய குடும்பங்கள் தங்கள் வசதியின் அடையாளமாக, பெருமைக்காக கட்டியவையாகவே இவை இருக்கின்றன. கூட்டுக் குடும்பமாக இருந்தோ அல்லது தொழில் செய்யும் பாகஸ்தர்கள் ஒன்று சேர்ந்தோ கட்டியவை. கட்டப் பட்டபோது  புவியியல் ரீதியாக முக்கியத்துவம் இல்லாததாக (பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்) இருந்திருந்தால் கூட இன்று அவை  நகரின் மையப் புள்ளியாக இருக்கின்றன. மதுரை சென்ட்ரல்  மீனாட்சி அம்மன் கோவிலின் அருகிலும், திண்டுக்கல், விருதுநகர், கோவை, நெல்லை என மற்ற சென்ட்ரல் களும் சென்ட்ரலாகவே அமைந்துள்ளன.

இந்த ஒற்றுமையைத் தாண்டி இன்னொரு ருசியான ஒற்றுமையும் இருக்கும். மதுரை சென்ட்ரலில் பவண்டோ போன்ற மிகச் சுவையான கலர் ஒன்றை கண்ணாடி டம்ளர்களில் தருவார்கள். சித்திரை அக்னி நட்சத்திர மேட்னி ஷோ  இடைவேளையில் அதைக் குடிப்பது போல ஒரு போதை எங்கும் இருக்காது. திண்டுக்கல் சென்ட்ரல் பருப்பு போளிக்கு பெயர் போனது. சில சௌராஸ்ட்ர குடும்பங்கள் அதைத் தயாரித்து அங்கு விற்று வந்தார்கள். கோவை சென்ட்ரல் தியேட்டர் கேண்டீனில் கிடைக்கும் பருப்பு வடை, சின்ன போண்டா ஆகியவை பிரபலம்.

இந்த சென்ட்ரல்கள் எல்லாம் கட்டப்படும் போது ”ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்” ஆக கட்டப்பட்டவையே. அந்த நாளின் சிறப்பான புரஜெக்‌ஷன், சவுண்ட் சிஸ்டம், இருக்கை வசதி என பார்த்து பார்த்து செய்யப்பட்டவையாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் விருதுநகர் சென்ட்ரல் தான் ஆவரேஜாக கட்டப்பட்ட தியேட்டர். நெல்லை சென்ட்ரல் எழிலானது என்றால் கோவை சென்ட்ரல் பிரம்மாண்டமானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் புதிய வசதிகள் வரும்போது அவற்றை அப்டேட் செய்யத் தவறிவிட்டார்கள் எனச் சொல்லலாம். கோவை சென்ட்ரல் மட்டும் விதிவிலக்கு.

அப்டேட் செய்ய மற்ற தடைகளும் இருந்தன. திண்டுக்கல் சென்ட்ரலில் பார்வையாளர்கள் மாடத்தில் பிரம்மண்டமான தூண்கள் இருந்தன. கார்களில் வருபவர்கள் பார்க் செய்யவோ, எக்ஸ்டென்சன் செய்து கட்ட முடியாதபடியோ சில திரையரங்குகள் நகரின் மத்தியில் அமைந்து இருந்தன. சில தியேட்டர்கள் இரண்டாம் தலைமுறை வாரிசுகளுக்கு இடையே பாகவிஸ்தி செய்வதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக மூத்த தாரப் பிள்ளையாக கவனிப்பின்றி விடப்பட்டன. சில தியேட்டர்களை குளிர்சாதன வசதி செய்து புதுப்பிக்கும் செலவில் புதிய தியேட்டரே கட்டிவிடலாம் என்னும் அளவில் இருந்தன.

நாம் மகிழ்ச்சியாக, வெற்றிக் களிப்புடன் இருக்கும் நாட்களில் கிராமத்தில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றால் அங்கு இருக்கும் வசதிக் குறைவுகள் உறுத்தும். பெட் இல்ல, உட்கார ஷோபா இல்ல,ஃபேன் ஒன்னுதான் இருக்கு என. ஆனால் மனக் கிலேசம் இருக்கும் நாட்களில் அங்கு சென்றால் அவர்கள் காட்டும் பரிவுதான் நமக்குத் தெரிந்து நம்மை ஆறுதல் படுத்துமே தவிர வசதிக் குறைவை உணரவே மாட்டோம்.


இரு மாதங்களுக்கு முன்பு, மதுரைக்கு சென்றிருந்தேன், ஒரு பெரும் மனக்கவலையுடன். சரி சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகலாம் என நடந்து சென்றேன். வெற்றி விழா படம் போட்டிருந்தார்கள். ஒரு 100 பேர் இருந்திருப்போம். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிய ஹோல் சேல் வளையல் கடைகள், அழகு சாதன கடைகளில் பொருள் வாங்க வந்தவர்கள், லோடு மேன்கள், சிறு கடைகளில் வேலை பார்ப்போர், 40 வயதுக்கு மேற்பட்ட கமல் ரசிகர்கள் என ஒரு கலவையான கூட்டம். இடைவேளையில் வழக்கம் போல ஒரு கலர் குடித்தேன். படம் முடிந்து வெளியே வந்தபோது மனம் லேசான உணர்வு. சிறுது தூரம் நடந்துவிட்டு திரும்பிப் பார்த்த போது, என் தாத்தா வீட்டு ஞாபகம் வந்தது.







July 10, 2015

எழுதியதால் ஆன பயன்

இப்போது போல செமெஸ்டர் பேட்டர்ன் இல்லாமல் பொறியியல் கல்லூரிகளில் இயர் பேட்டர்ன் இருந்த காலம். அப்போது முதலாமாண்டு மாணவர்கள் வகிடெடுத்து சீவி, சுருட்டி விடாமல் முழுக்கை சட்டை அணிந்து, கழுத்து வரை பட்டன் போட்டு, இன் செய்யாமல், மேல் பாக்கெட்டில் எதுவும் வைத்துக் கொள்ளாமல்,ஹவாய் செப்பல் அணிந்து, மஞ்சப்பையில் நோட்புக் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும், மாணவிகள் சேலை அணிந்து, ஒற்றை ஜடை போட்டு வரவேண்டும் என்றும் ராக்கிங் சட்டம் அமலில் இருந்தது. மேலும் சீனியர்களை “சார்” என்றுதான் அழைக்க வேண்டும். இந்த ராக்கிங்கானது சரியாக கல்லூரி ஆண்டுவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் ”வெல்கம் பார்ட்டியுடன்” முடிவுக்கு வரும். 

இந்த ராக்கிங்கில் முதலாமாண்டு மாணவிகளின் பயோ டேட்டாவை சீனியர்களுக்கு வாங்கிக் கொடுப்பது என்று ஒரு வைபவம் உண்டு. என்னை “லட்சுமி பிரியா” என்னும் மாணவியிடம் வாங்கித் தரச்சொன்னார்கள். நானும் தயங்கியபடியே சென்று “சீனியர் சார் உங்க பயோ டேட்டா கேட்டாரு” என்று கேட்டேன். யோசிக்காமல் ஒரு ஏ4 ஷீட்டை எடுத்து சரசரவென்று எழுதி நீட்டினாள். அதை வாங்கி வரும்போது தான் எனக்கு உறைத்தது. அக்கா, தங்கை என்ற உறவில்லாமல் நான் பேசிய முதல் இளம் பெண் லட்சுமி பிரியாதான்.

அந்த ஆண்டு விழாவின் இளவரசி லட்சுமி பிரியாதான். கிளாசிக்கல் டான்ஸ், வோக்கல் சோலோ, ஸ்கிட் என எல்லாவற்றிலும் ஸ்டார் பெர்பார்மன்ஸ் அவளுடையது தான். அதன்பின் கல்லூரியே அவள் பின்னால் சுற்றியது. இரண்டாம் ஆண்டில் அவளுக்கு கடிதங்கள் எழுத பல காடுகள் அழிக்கப்பட்டன. இந்த நேரத்தில் நான் ”டிபைன் தயிர்” என்ற கேட்டகிரியில் இருந்தேன். முட்டாளாக இருப்பவர்களை தேங்காய்க்கு டிபனிசனே இவன்தாண்டா என கலாய்க்கும் நோக்கில் ”டிபைன் தேங்கா” என அழைப்பார்கள். நான் தயிர்சாத வகையறா. வகுப்பில் முதல் பெஞ்சிலும் இல்லாமல், கடைசியிலும் இல்லாமல் நடு பெஞ்ச். படிப்பும் அப்படித்தான். ஆனால் தினமும் கல்லூரிக்கு வந்துவிடுவேன். டாப்பர், கோ-கரிகுலர், எக்ஸ்ட்ரா கரிகுலர் என்று எதிலும் அடிபடமாட்டேன். அதேபோல் ராக்கிங், மாஸ் கட், லேட் சப்மிஷன் என்ற கேட்டகிரியிலும் இல்லை. கிளாஸில் சந்தேகம் வந்தால் கூட கேட்க மாட்டேன். அதனால் என் பெயர் வகுப்பு எடுக்கு ஆசிரியர்களுக்கு கூட பரிச்சயமில்லாமல் இருந்தது. 

மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ஆண்டு விழாவில் இன்னொரு நட்சத்திரம் உருவாகியது. ஆனந்த செல்வி. லட்சுமி பிரியாவுக்கு இணையாக அவளுக்கும் பெரிய பெயர் கிடைத்தது. நான்காம் ஆண்டு ஆரம்பிக்கும் போது, லட்சுமி பிரியாவுக்கு இணையாக ஆனந்த செல்விக்கும் பாலோயர்கள் அதிகமானார்கள். அது லட்சுமி பிரியாவுக்கு பெரிய மன வலியைக் கொடுத்தது. வெளி கல்லூரிகளில் நடைபெறும் கல்சுரல் ஈவெண்டுகளில் ஆனந்த செல்வியுடன் சேர்ந்து பங்கேற்க மாட்டேன் என மறுத்தாள். கேட் பிரிப்பரேசன் என சாக்குச் சொன்னாள். கல்சுரல் செக்கரெட்டரி கூட இவளுக ரெண்டு பேரும் இறங்குனா எல்லா ஷீல்டும் நமக்குத்தான். வாசிம் அக்ரமும் கர்ட்லி அம்புரோசும் மாதிரி டெட்லி காம்பினேஷன். இந்த ஈகோனால நம்ம காலேஜுக்குத்தான் லாஸ் என்று புலம்பினான்.

எங்கள் கல்லூரிக்கு வரும் நகரப் பேருந்துகளில் ஒரு வழக்கம் இருந்தது. சீனியர் மாணவர்கள் நின்று கொண்டிருந்தால் ஜூனியர்கள் எழுந்து இடம் கொடுத்து விடுவார்கள். நான் ரெகுலராக கல்லூரிப் பேருந்தில் மட்டுமே செல்பவன். ஒரு நாள் கல்லூரிப் பேருந்தை தவற விட்டு விட்டு நகர பேருந்தில் ஏறி வந்தேன். நல்ல கூட்டமாகையால் நின்று கொண்டு வந்தேன். முன்னால் அமர்ந்திருந்த என் கிளாஸ்மேட், திரும்பிப் பார்த்து, உட்கார்ந்திருந்த ஜூனியரிடம், டேய் பைனல் இயர் மெக்குடா, நிக்க வைச்சிருக்கீங்க என சத்தம் போட்டான். அலறியடித்து எழுந்த இரண்டு ஜூனியர்கள் சாரி கேட்டு என்னை உட்காரச் சொன்னார்கள். அதில் ஒருவன் மூன்றாம் ஆண்டு எங்கள் துறை மாணவன்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மொத்தமே 700 பேர் படிக்கிற காலேஜ். நாலு வருசமா இங்க இருக்கோம். நம்ம டிபார்ட்மெண்ட் இம்மீடியட் ஜூனியர்க்கே நம்மை தெரியலை. என்னத்த கிழிச்சோம் என்று உறுத்திக் கொண்டே இருந்தது. காலேஜ விட்டுப் போகுறதுக்குள்ள நம்ம கிளாஸ் தவிர பத்திருபது பேருக்காச்சும் நம்மை தெரிய வைத்து விடவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

இந்நிலையில் கல்லூரி ஆண்டுவிழாவுக்கான ஆடிசன் தொடங்கியது. பெண் விடுதலை சம்பந்தமாக எனக்குள் ஒரு நாட் இருந்தது. அதை சிறிது டெவலப் செய்து என்னைப் போன்ற சில நண்பர்களிடம் கெஞ்சி ஒரு டீம் அமைத்துப் போனோம். உள்ளே போன உடனேயே எந்த இயர்? என்று செலக்ஷன் கமிட்டி கேட்ட எங்கள் சுருதி கொஞ்சம் இறங்கியது. சமாளித்து நடித்தோம். ரிஜக்டட் என்று சொல்லிவிட்டார்கள். 

அடுத்த நாள் கேண்டீனுக்கு சென்று கொண்டிருக்கும் போது, லட்சுமி பிரியா எதிரில் வந்து புன்னகைத்தாள். நான் அனிச்சையாக, யாரைப் பார்த்து சிரிக்கிறாள் என பின்னால் திரும்பி பார்த்தேன். ஹலோ, உங்களைப் பார்த்துத்தான் சிரித்தேன் என்றவாறு அருகில் வந்தாள். உங்க தீம் நல்லா இருந்தது. ஆனா சில பொண்ணுங்களும் நடிச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே என்றாள். எனக்கு யாரும் அவ்வளவு பழக்கமில்லை என்றேன். எனக்கு உங்க ஸ்கிட்டைக் கொடுக்க முடியுமா? எங்க பிரண்ட்ஸோட சேர்ந்து பண்ணிக்கிறேன் என்றாள். தேவதை கேட்கும் வரம். மறுக்க முடியுமா? 

அவளுக்கு ஆனந்த செல்வியை விட ஒரு படி தான் மேல் என்று காட்டிவிட்டுப் போகவேண்டும் என்ற வெறி இருந்தது. அப்போது அவள் கணையாழியில் சில கவிதைகள் கூட எழுதி இருந்தாள். ஆனால் மாண்வர்களிடம் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆடல் பாடலில் வேண்டுமானால் என்னுடன் நீ போட்டி போடலாம் ஆனால் அறிவுத் தளத்தில் நான் ஒரு படி மேல் என்று பொதுவெளியில் நிரூபிக்க வேண்டும் என்ற ஈகோ அவளிடம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்கு உதவும் வகையில் என் ஸ்கிரிப்ட் இருந்தது. “இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் நன்றாய் இருக்கும்” என கேட்டுக் கொண்டாள். 

மூன்று நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து திரும்ப எழுதினேன். அவள் செட்டுடன் சேர்ந்து செலக்ஷன் கமிட்டி முன்னால் அதை அரங்கேற்றம் செய்தாள். அந்த ஆண்டு வரும் சீஃப் கெஸ்ட், சம்பிரதாய ஆரம்ப உரைகளுக்குப் பின்னால் ஒரு புரோகிராம் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தாராம். அதற்குரிய புரோகிராமாக இதை செலக்ட் செய்தார்கள்.

ஒரு வாரம். சொர்க்கத்தில் இருந்த மகிழ்ச்சியை அனுபவித்தேன். காலை முதல் மாலை வரை ரிகர்சல், திருத்தம், ரிகர்சல் என. கேண்டீனில் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்தினோம், டீ குடித்தோம், பேருந்தில் திரும்பும் போது அருகருகே நின்று கொண்டு பேசினோம். கேசட்டுகள்,புத்தகங்கள் பரிமாறிக் கொண்டோம். அந்த வாரம் முழுக்க யாருடா இவன் என்ற கேள்வியோடு காம்பஸ் முழுக்கப் பார்க்கப் பட்டேன். என் செட் மக்களிடம் பொறாமையும், ஜூனியர்களிடம் மரியாதையும் கிடைத்தது. ஆண்டு விழாவிற்கு வந்திருந்த சீஃப் கெஸ்ட் தன் ஏற்புரையில் நாடகத்தையும் முக்கியமாக லட்சுமி பிரியாவின் நடிப்பையும் சிலாகித்தார். லட்சுமி பிரியாவிடம் இருந்து நழுவிக் கொண்டிருந்த இளவரசி கிரீடம் அவள் தலையிலேயே சம்மணம் போட்டு அமர்ந்தது.

ஆண்டு விழா கொண்டாட்ட லீவ் முடிந்து, கல்லூரி தொடங்கியது. என்னைத் தேடிவந்து ஒரு காட்பரிஸ் டெய்ரி மில்க் கொடுத்து தேங்க்ஸ் சொல்லிச் சென்றாள்.

இப்போதும் கூட இரவுகளில் பேஸ்புக், ட்விட்டரில் நான் ஏதாவது டைப்பிக் கொண்டிருக்கும் போது, என் மகன் வந்து எப்பவுமே இதுதானா? இதுனால ஒரு யூஸும் இல்லை என்று சலித்துக் கொள்வான்.

அவனுக்குத் தெரியுமா? தயிர்சாதமாக இருந்த என்னை கல்லூரியில் ஒருவாரம் ராஜகுமாரனாக உணர வைத்தது இந்த எழுத்தார்வம் தான் என்று.

July 01, 2015

கமலின் ஓப்பனிங்

கமலின் தீவிர ரசிகர்களின் வயது இப்போது 40ல் இருந்து 50க்குள் இருக்கிறது. குறைந்த பட்சம் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் கமலின் விசிறிகளாக உள்ளனர். 50க்கு மேலும் கூட ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் 35க்கு கீழ் உள்ளவர்கள் பெரும்பான்மை அஜீத்,விஜய்,ரஜினிக்கு இருக்கிறார்கள். ஆனால் 18-25ல் உள்ளவர்களில் ரஜினிக்கு கூட பெரிய அளவில் மாஸ் இல்லை.
ஒரு படம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் போது, காலை காட்சிக்கு அந்த நடிகரின் தீவிர ரசிகர்களும், கல்லூரி மாணவர்களும், வேலை இல்லாதவர்களும், விடுமுறையாக இருந்தால் விடுப்பில் இருப்பவர்களும் தான் பெரும்பான்மையாக வருவார்கள். 40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு இந்தக் காலத்தில் இருக்கும் கமிட்மெண்ட் அனைவரும் அறிந்ததே. அவர்கள் எல்லாம் மாலைக் காட்சிக்கு அதுவும் சனி,ஞாயிறுகளில் தான் வருவார்கள்.
கல்லூரி மாணவர்களிடம் கமல் மேல் ஒரு நல்ல நடிகன் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களை முதல் நாளே வரிசையில் நிற்க வைக்கும் வசீகரம் அவரிடம் இப்போது இல்லை. டாக் வந்தால் பார்ப்பார்கள் அல்லது விஸ்வரூபம் போல் ஹைப் எழுந்து, அந்தப் படம் பார்ப்பது அரசுக்கு/அமைப்புக்கு எதிரானது என்ற எண்ணம் ஏற்பட்டால் வலுக்கட்டாயமாக போய் பார்ப்பார்கள்.
குணா, சிங்கார வேலன் படங்களுக்கு எல்லாம் காலை 4 மணி ஷோ போடப்பட்டது. மகாநதியில் இருந்தே கமலுக்கு புது ரசிகர்கள் வருவது குறையத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டில் இந்தியன், அவ்வை சண்முகி என்ற இரண்டு பிளாக்பஸ்டர்களில் கமல் நடித்த போது, இதே போல் கமல் தொடர்ந்து சில படங்கள் கொடுத்தால் நிச்சயம் புது ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தேன்.
ஆனால் கமல், அவ்வை சண்முகியின் இந்தி ரீமேக், தொடர்ந்து மருதநாயகம் என இரண்டு ஆண்டுகள் தமிழில் படம் கொடுக்கவில்லை. பெப்ஸி தொழிலாளர் பிரச்சினை வந்ததால் அப்போது “காதலா காதலா” படத்தை வலுக்கட்டாயமாக எடுத்தார். அதில் கூட கே எஸ் ரவிகுமார் இயக்குநர் அமைப்புக்கு ஆதரவாக ஒதுங்கிக் கொள்ள சிங்கீதம் சீனிவாச ராவை இயக்க வைத்தார். அந்த சமயத்தில் விஜய் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்து விட்டிருந்தார். காதலா காதலாவோடு இணைந்து வெளியான விஜய்யின் நினைத்தேன் வந்தாய்க்கும் நல்ல கூட்டம் இருந்தது. பெரும்பாலான கல்லூரி மாணவ/மாணவிகள் நினைத்தேன் வந்தாய்க்கே போனார்கள்.
பின் ஹேராம் எடுக்கத் தொடங்கினார். அந்த இடைவேளையில் அஜீத் வாலிக்குப் பின் சில வெற்றிகளை கொடுத்து அவர் பங்குக்கு ரசிகர்களை ஈர்த்தார். 2000ல் ஹேராம் வெளியாகி வணிக ரீதியாக படு தோல்வி அடைந்தது. அதன்பின் கமல் நடித்த தெனாலிக்கு இணையாக விஜய்யின் பிரியமானவளேயும் வியாபாரம் ஆகியது. அதன்பின் வெளியான ஆளவந்தானை விட ஷாஜஹான் வசூல் அதிகம் பெற்றது.
இந்த காலகட்டத்தில் கமலுக்கு புது ரசிகர்கள் அதாவது கமலை முதலிடத்தில் வைத்துப் பார்க்கும் ரசிகர்கள் உருவாகவில்லை. இளைஞர்களால் அவரை தங்கள் பிம்பமாக உருவகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதன்பின் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், விருமாண்டி,வசூல் ராஜா என வெற்றிப் படங்களில் நடித்தாலும் அவரின் பழைய ரசிகர்களைத்தான் திருப்தி செய்து தக்க வைக்க முடிந்தது.
2005ல் சந்திரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ் மூன்றும் ஒரே நாளில் வெளியானது. முதல் இரண்டுக்கு இருந்த ஓப்பனிங்கில் 30% கூட கமலுக்கு இல்லை. ஆனால் அதற்கடுத்த வெளியான வேட்டையாடு விளையாடுவிற்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங் இருந்தது. காரணம் கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ். தசாவதார ஓப்பனிங்குக்காக ஜாக்கி சானை வைத்தெல்லாம் பல்டி அடிக்க வேண்டி இருந்தது. அதன்பின் உன்னை போல் ஒருவன், மன்மதன் அம்பு என ஓப்பனிங் கிடைக்கவில்லை. விஸ்வரூபம் கதை நாம் அனைவரும் அறிந்ததே. உத்தம வில்லனுக்கு வந்த கொஞ்ச நஞ்சமும் பட வெளியீட்டு சிக்கலால் கடுப்பானதுதான் மிச்சம்.
இந்த சூழலில் பாபநாசத்துக்கு ஓப்பனிங்கை யெல்லாம் எதிர்பார்க்கும் மனநிலை இல்லை. இந்தக் காலத்தில் முதல் மூன்று நாளில் தியேட்டரை நிறைக்கப் போகும் இளைஞனை இழுக்கும் அம்சம் இப்போதைய கமல் படங்களில் இல்லை. உத்தம் வில்லன் வர்றீங்களா? என அலுவலகத்தில் கேட்ட போது, யார் ஹீரோயின்? என கேட்டார்கள். ஊர்வசி,பூஜா குமார் என்றதும் பல்டி அடித்து விட்டார்கள். வேட்டையாடு விளையாடுக்குப் பிறகு இளைஞர்கள் கேட்கும் பாடல் எதுவும் அவர் படங்களில் இல்லை. எடுக்கும் களங்களும் 40+ க்கு உரித்ததாக எடுத்தாளுகிறார்.
இந்த 40+ மக்கள் மனைவி, குழந்தைகள் இல்லாமல் படம் பார்க்க முடியாது. மனைவிக்கு ஒக்கே கண்மணியும், பிள்ளைகளுக்கு காஞ்சனாவும் தான் சாய்ஸ். அடுத்து தியேட்டர்ல பார்த்தா புலி தான் என்பது என் மகன்களின் நிலையாக இருக்கிறது.
இந்த நிலையில் 4 மணி ஸ்பெஷல் காட்சியெல்லாம் போட்டால் ஆப்பரேட்டர் மட்டும் தான் பார்க்க வேண்டி இருக்கும்.
கமலுக்கு இருப்பது இரண்டு சாய்ஸ்கள் தான். ஒன்று பாபநாசம் போல மொத்த செலவும் 30 கோடிக்குள் அடங்கும் படம் எடுப்பது. சாட்டிலைட் ரைட்ஸ், தியேட்டர் வசூல், வெளிநாடு, டெண்ட் கொட்டா என எளிதாய் கவர் பண்ணிவிடும்.
இல்லையெனில் ஷங்கர்.முருகதாஸ் போன்ற இயக்குநர்கள், ஏ ஆர் ரஹ்மான், அநிருத் போன்ற இசை அமைப்பாளர்களுடன் இணைந்து யூத் ஆடியன்ஸை கவரும்படி பெரிய பொருட் செலவில் நடித்து, ஹைப் கிரியேட் செய்தால் கூட்டம் வரும்.
பார்ப்போம்.