October 25, 2009

தமிழ்சினிமாவில் மீனவர்கள்

உலகின் பாரம்பரியத் தொழில்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது உழவும், நெசவும். அதற்கு அடுத்ததாகத்தான் நமக்கு மீன்பிடித் தொழில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் உழவுக்கும் நெசவுக்கும் முன்னரே கூட இந்த தொழில் நடைபெற்றிருக்கக் கூடும். தமிழ்நாட்டில் சென்னை, கடலூர்,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இத்தொழில் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

உழவுத் தொழிலைப் பற்றி தமிழ் சினிமா கருத்தியல் ரீதியாக என்ன சொல்லி இருக்கிறது? என்று பார்த்தால் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தான் கிடைக்கும். எம்ஜியாரின் விவசாயி முதல் தற்காலத்திய படங்கள் வரை விவசாயத்தை ஒரு பேக் ட்ராப்பாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளன. விவசாயிகள் கூட்டுறவாக செயல் படவேண்டும், பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், காவிரி பிரச்சினை (ஒரு படம் எடுக்கப்பட்டது, வெளிவரவில்லை) என்பது போன்ற எந்தக் கருத்தையும் ஆணித்தரமாகச் சொல்லாமல் மேம்போக்காக மட்டுமே காட்டி வந்துள்ளன.

நெசவைப் பற்றி இன்னும் மோசம். இப்போதுதான் ஒரு காஞ்சிவரம் வந்திருக்கிறது. நெசவைத் தவிர அதன் உப தொழில்களான சாயப் பட்டறை போன்றவற்றைப் பற்றிய பதிவுகள் தமிழ்சினிமாவில் இல்லை. ஸ்ட்ரைக் நடக்கும் காட்சி, அதன்மூலம் ஒரு ஹீரோயிஸக் காட்சிக்கு மட்டுமே நெசவு ஆலைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அது மாதிரியான ஸ்பின்னிங் மில்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் போன்றவற்றை ஒரு வசனமாகக் கூட காட்டியதில்லை நம் சினிமா. நமக்குத் தெரிந்ததெல்லாம் போனஸ் பிரச்சினை மட்டுமே.

நெசவுத் தொழிலில் சம்பந்தமான படங்களில் வீரம், ஈரம் மற்றும் கதைக்குத் தேவையான சம்பவங்கள் குறைவு என்று சொன்னாலும் அதற்கெல்லாம் பஞ்சமேயில்லாத மீனவர் வாழ்க்கையையாவது நம் சினிமா ஒழுங்காக பதிவு செய்திருக்கிறதா என்றால் அதிலும் ஏமாற்றமே.

படகோட்டி (எம்ஜியார்), தியாகம் (சிவாஜி), கடல்மீன்கள் (கமல்ஹாசன்), சின்னவர், கட்டுமரக்காரன் (பிரபு), கடலோரக் கவிதைகள் (சத்யராஜ்), கடல் பூக்கள் (முரளி, மனோஜ்), செம்பருத்தி (ராதாரவி, மன்சூர் அலிகான்), நிலாவே வா (விஜய்), சிட்டிசன் (அஜீத்) என பல படங்களில் பலர் மீனவர் வேடத்திலோ அல்லது மீனவக் கிராமங்களில் வாழ்வது போன்றோ காட்சியமைப்புகள் உள்ளன.

பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகளும், கடல் பூக்களும் வெங்கடேசின் நிலாவே வாவும் தென் தமிழக மீனவ கிராமத்தை கதைக்களமாக கொண்ட படங்கள். சிட்டிசனை டெல்டா மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டம் வரையில் உள்ள மீன் பிடிப் பகுதிகளில் ஒன்று என்பது போல் (அத்திப்பட்டி) சொல்லி இருப்பார்கள். சின்னவர், கட்டுமரக்காரன் போன்றவை சுத்தமான மைய நீரோடைத் தமிழை பேசும் படங்கள்.

இதில் என்ன பிரச்சினை? சென்னை காசிமேடு, ராயபுரம் மக்கள் பேசும் மீனவ பாஷைக்கும், கடலூர் தேவனாங்குப்பம் பகுதி பாஷைக்கும், கன்னியாகுமரி பாஷைக்கும் வேறு பாடு உண்டு. கன்னியாகுமரி மீனவர்களின் பாஷை ஓரளவுக்கு நிலாவே வா படத்தில் காட்டியிருப்பார்கள். ஆனால் மற்ற படங்களில் அதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது.

படகோட்டியில் எம்ஜியாரும், சரோஜாதேவியும் அன்பேவா வில் பேசியது போலவேதான் பேசுவார்கள். தியாகம் படத்தில் சிவாஜியும், கடல் மீன்களில் கமலும் அப்படித்தான். கடல் பூக்கள் திரைப்படத்தில் முரளி ஓரளவு முயற்சித்திருப்பார்.

சரி பாஷையை விட்டுவிடுவோம். வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறதா? மீனுக்கு வியாபாரிகள் விலை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், மீனவர்களின் குடிப்பழக்கம், அவர்களின் கோபம் ஆகியவையே மீண்டும் மீண்டும் பதிவு செய்யப் படுகின்றன. சில படங்களில் மட்டும் எந்திர படகுகளால் கட்டுமர மீனவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இது மட்டும் தானா, மீனவர்களின் பிரச்சினை? கச்சத்தீவு, இலங்கை ராணுவ அத்துமீறல்கள் போன்றவை பதிவு செய்யப் பட்டுள்ளனவா? எப்படி முடியும்? சமீபத்திய பேராண்மை மிகச் சிறந்த உதாரணம், மத்திய அரசின் சென்சார் போர்டு எப்படி செயல்படும் என்பதற்கு. படித்து முன்னுக்கு வரும் பழங்குடியினர் மீது மற்ற முன்னேறிய ஜாதியினர் காட்டும் குரோதத்தை பல வசனங்களின் மூலம் சித்தரித்திருந்தார்கள். அவையெல்லாம் வெட்டுப் பட்டு விட்டன. பாவம் ஆப்பரேட்டரின் குடும்பத்தாருக்கும் இதனால் பலத்த திட்டு.

மீன்கள் இனப் பெருக்கம் செய்யம் காலங்களில் மீன் பிடிக்க நிலவும் கட்டுப்பாடுகள், அந்த நாட்களீல் மீனவர்கள் பொருளாதார பிரச்சினையை எங்கணம் சமாளிக்கிறார்கள்?, பவழப் பாறைகள் அழிப்பு, வெடி வைத்து மீன் பிடிக்கும் ஆபத்தான போக்கு, மண்டைக்காடு கலவரம், கன்னியாகுமரி,தூத்துக்குடி,சென்னை மாவட்ட மீனவ அரசியல் போன்ற எதுவுமே ஒரு சிங்கிள் ஷாட்டில் கூட பதிவு செய்யப் படவில்லை.

புகழ்பெற்ற செம்மீன் படத்திற்கு பின்னால் தகழி சிவசங்கரனின் நாவல் இருந்தது. வண்ண நிலவனின் கடல் புறத்தில், நரசய்யாவின் பல நூல்களில் மீனவக் கதைகளும், பிரச்சினைகளும் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை படத்தில் மாலுமிகளின் ஒரு பக்கத்தை காட்டிய ஜனநாதன் போன்றவர்கள் மனது வைத்தால் மீனவர்களின் உண்மை வாழ்க்கையை நாம் திரையில் காணலாம்.

October 11, 2009

1976 ஆம் ஆண்டு திரைப்படங்கள் – ஒரு பார்வை

சுதந்திரத்திற்க்குப் பின் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளான 65ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜூன் 75 முதல் மார்ச் 77 வரை அமலில் இருந்த அவசர நிலை பிரகடனம், அதன் விளைவுகள் ஆகியவை தமிழ்சினிமாவில் எங்காவது ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. (இருவர் திரைப்படம் இதை ஊறுகாய் போலவே தொட்டுச் சென்றிருந்தது).

விடுதலைக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுமை கொண்ட தலைவர்களில் பெரியார் மற்றும் காமராஜரை வைத்து மட்டுமே திரைப்படங்கள் வந்துள்ளன. வ உ சி, பாரதியார் பற்றிய படங்கள் வந்திருந்தாலும் அவர்கள் சுதந்திரத்திற்க்கு முன்னரே மறைந்தவர்கள். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்றினை திமுகவோ அதிமுகவோ தயாரித்திருக்கலாம்.

இணையத்தில் அண்ணா என்று தேடினாலே ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிக்காவின் படங்களும்,செய்திகளும் தான் வருகின்றன என்ற ஆதங்கத்தில் தனியார் சிலர் அண்ணா பற்றிய ஆவணப் படத்தை தயாரித்தனர். தற்போது அரசும் ஒரு ஆவணப்படத்தை தயாரித்தது. ஆனால் அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை கருணாநிதி பற்றி படமெடுத்தால் இந்தி எதிர்ப்பும், ஸ்டாலின் பற்றி படமெடுத்தால் மிசாவும் ஆவணப்படுத்தப் படலாம்.

அவசரநிலை விலக்கப்பட்டவுடன் ஜனதா கட்சியின் ஆட்சி சில ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் கூட, மிசா கொடுமைகளைப் பற்றிய எந்த பதிவும் தமிழ்படங்களில் அப்போது வரவில்லையே என நான் நினைத்தது உண்டு. பின் செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிக்கை படம் பாஜக ஆட்சியில் கூட பல ட்ரிப்யூனல்களில் பந்தாடப்பட்டதைப் பார்த்த போதுதான் உண்மை நிலவரம் விளங்கியது. இந்திரன்கள் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லையே.

1976 ஆம் ஆண்டு அவசரநிலை உச்சத்தில் இருந்த ஆண்டு. அரசுக்கு எதிராக யாரும் தமிழ்சினிமாவில் தும்மக்கூட இல்லை. எனவே பெரும்பாலும் அரசியல் கலப்பில்லாத பொழுது போக்கு படங்களே வந்தன. அதில் சில படங்களைப் பார்ப்போம்.

அன்னக்கிளி

இளையராஜா அறிமுகமான படம். பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் சிவகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன் நடிதத படம். அறிமுகமாகி அடுத்த 16 ஆண்டுகளுக்கு தனிகாட்டு ராஜாவாய் விளங்கியவருக்கு ஆரம்பமே அட்டகாசம் தான். ஆனால் அவரது இசைக்கேற்ப காட்சிகளை பல இயக்குநர்கள் அமைக்கவில்லை. அதனால்தான் அந்தப் பாடல்களை கேட்க முடிந்தாலும் பாடல் காட்சிகளை பார்க்க முடியவில்லை.

மன்மதலீலை

கமலுக்கு காதல் இளவரசன் என்னும் பட்டத்துக்கு அதி பயங்கர அடித்தளம் போட்ட படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கமல் படமா? அசிங்கமா இருக்கும் பார்க்கக்கூடாது என தடை உத்தரவு அளிக்க ஒரு காரணமாய் இருந்த படம். பத்தாண்டுகள் கழித்தும் ரஜினி-கமல் ரசிகர் மோதலில், கமலின் மீது கடைசி பிரம்மாஸ்திரமாக உபயோகிக்கப்படும் பொம்பளைப் பொறுக்கி என்னும் வசவுக்கு ஒரு காரணமாய் இருந்த படம்.
நான் கல்லூரியில் படித்த நாலு ஆண்டுகளும் (91-95) இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் ரீ ரிலிஸ் ஆவதும், மாணவர்கள் அனைவரும் இரண்டாம் ஆட்டத்திற்க்கு சேர்ந்து செல்வதும் சம்பிரதாயமாக நடந்த ஒன்று என்பதில் இருந்தே இந்தப் படத்தின் பொடென்சியலை அறியலாம். இப்போதும் இது ஜீவன்,ஜீவா மற்றும் சிம்புவுக்கு ஏற்ற ரீமேக் படம்.

கே பாலசந்தர் இயக்கத்தில், எம் எஸ் விஸ்வனாதன் இசையில், கமல்,ஆலம்,ஹேமா,ஒய் ஜி பி,ஒய் ஜி எம், ஒய் விஜயா,ராதாரவி ஆகியோர் நடித்த படம். கமல் திருமணத்துக்குப் பின்னும் திருந்தாமல் உமனைசராக அலைகிறார். இளாம்பெண்கள் மட்டுமின்றி, அறிமுகமானவர்களின் மனைவிகளையும் விட்டு வைப்பதில்லை. இதைக்கண்டு வருந்தும் அவரது மனைவி விவகாரத்துக்கு மனு செய்கிறார். பிரிந்திரிக்கும் நேரத்தில் தந்திரமாக வந்து அவரை கருத்தரிக்க செய்துவிடுகிறார் கமல். ஆனால் பின்னர் நடக்கும் சில சம்பவங்களால் மனம் திருந்தி விடுகிறார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், ஹலோ மைடியர் ராங் நம்பர், நாதமெனும் கோவிலிலே போன்ற அருமையான பாடல்கள் நிறைந்த படம்.

உணர்ச்சிகள்

கமல் அரங்கேற்றம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது உருவாக்கிய கதை. இதை தன் ஆப்த நண்பர் ஆர் சி சக்திக்கு இயக்க கொடுத்தார். இந்தப் படத்தில் கமலின் வசனப் பங்களிப்பும் உண்டு. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கமலின் எல்டாம்ஸ் ரோடு (வரும் நாட்களில் டாக்டர் கமல்ஹாசன் சாலை என மாறப் போகும்) இல்லத்திலேயே எடுக்கப்பட்டது. அதன்படி இந்தப் படம் ஸ்டியோவுக்குள் இருந்த கேமிராவை அவுட்டோருக்கு ஓரளவு மாற்றிய படம் எனலாம். பாரதிராஜா அடுத்த ஆண்டில் 16 வயதினிலே மூலம் கிராமத்துக்கே அதைத் தூக்கிச் சென்றுவிட்டார்.
இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் பிரபல கேரள இசை அமைப்பாளார் ஷ்யாம் அவர்கள். இவர் ஆர் சி சக்தியின் அடுத்த படமான மனிதரில் இத்தனை நிறங்களா படத்துக்கும் இசை அமைத்தார். மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா என்ற அழியாப் பாடலை அந்தப் படத்தில் கொடுத்தார். ஒரு சி பி ஐ டைரி குறிப்பு, நேரறியான் சி பி ஐ போன்ற படங்களில் இவர் அமைத்த தீம் மியூசிக் மிகப் பிரபலம்.

மூன்று முடிச்சு

கமல்,ரஜினி ஸ்ரீதேவி என்னும் டிரீம் காம்பினேஷன் அமைந்த படம். கே பாலசந்தர் இயக்கம், எம் எஸ் விஸ்வனாதன் இசை. கமல்,ஸ்ரீதேவி காதலர்கள். ரஜினி கமலின் நண்பர். ஆனால் ஸ்ரீதேவியை லுக் விடுகிறார். ஸ்ரீதேவி இதை அறிந்து கமலிடம் எச்சரிக்கை செய்கிறார். கமல் நண்பனை நம்புகிறார். ஒருமுறை மூவரும் பிக்னிக் போகிறார்கள். படகு சவாரி செய்யும்போது கமல் தவறி ஏரியில் விழுந்து விட, ரஜினி காப்பாற்றாமல் பன்ச் சாங் பாடுகிறார். கமல் இறக்கிறார். ஸ்ரீதேவிக்கு மேலும் ஒரு இடியாக அவரது அக்காவுக்கு தீயில் முகம் வெந்து போகிறது.

மனைவியை இழந்த, குழந்தைகளை பராமரிக்க மணப்பெண் தேடும் ஒரு பணக்காரரை மணந்து கொள்கிறார் ஸ்ரீதேவி. அவர் யாருமல்ல ரஜினியின் தந்தை தான். பிற்பாதியில் ரஜினி, ஸ்ரீதேவி மோதல் காட்சிகள் சுவராசியம். இந்தப் படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்த கல்கத்தா விஸ்வனாதன் 2002ல் பாபாவிலும் ரஜினிக்கு தந்தையாக நடித்தார்.

ஆடி வெள்ளி தேடி உன்னை, வசந்த கால நதிகளிலே போன்ற அருமையான பாடல்கள் கொண்ட படம்.

நீதிக்கு தலை வணங்கு

தன் 59 வயதில் கல்லூரி மாணவனாக எம் ஜி ராமசந்திரன் நடித்த படம். இணை லதா. ஒரு விபத்தில் தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக பணக்கார வீட்டுப் பிள்ளை, தன் வீட்டை விட்டு அங்கு சென்று அவர்களை காப்பாற்ற கஷ்டப்படும் கதை. (தவசி படம் ஞாபகம் வருகிறதா?). அவர்களைக் காப்பாற்றும் முயற்சியாக இன்னொரு வீட்டில் பணியாளராக இருப்பார். இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப் பூவினில் என்னும் அருமையான பாடல் உண்டு. இந்தப் படத்தின் சேஸிங் காட்சிகளை படம் பிடித்தவர் காமிரா மேதை கர்ணன்.

உத்தமன்

சிவாஜிகணேசன், மஞ்சுளா நடித்த படம். காஷ்மீரில் இருவரும் சந்தித்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சிவாஜி பனிப் பிரதேசத்தில் காய்ச்சலால் குளிரில் அவதிப்பட, அவர் உடல் சூடானால் பிழைப்பார் என்னும் நிலையால் அவருக்கு ஒரு ஸ்பெசல் ட்ரீட்மெண்ட் தருகிறார் மஞ்சுளா. டிரீட்மெண்டால் சிவாஜி குணமடைய மஞ்சுளா கர்ப்பமாகிறர். சுய நினைவில்லாமல் இருந்த சிவாஜிக்கு இது தெரியாது. பின் இருவரும் தமிழ்நாடு வந்து விடுகிறார்கள். பின் மஞ்சுளாவுக்கு குழந்தை பிறந்து, வளர்ந்த பின் உண்மை தெரிந்து இருவரும் இணைகிறார்கள். படகு படகு ஆசைப் படகு என்னும் ரிதமான பாடலும் உண்டு.

துணிவே துணை

ஒரு கிராமத்தில் குற்றங்களே பல ஆண்டுகளாக நடை பெறவில்லை. அந்தக் கிராம தெய்வம் யாரையும் குற்றம் செய்யவிடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே அங்குள்ள காவல் நிலையத்தை காலி செய்து விட்டார்கள் என உளவுத்துறைக்கு அறிக்கை வருகிறது. இதை நம்பாத உளவுத்துறை அந்த மர்மத்தைக் கண்டறிய அதிகாரி விஜயகுமாரை அனுப்புகிறது. அந்த ஊரில் வெளியாட்கள் தங்கினால் சாமி ஒத்துக் கொள்ளாது என்று பயமுறுத்தப் படுகிறார். தொடரும் விசித்திர சம்பவங்களால் அதிர்ச்சியிலேயே ரத்தம் கக்கி இறக்கிறார். இதனால் வருத்தமடையும் அவர் தம்பி ஜெய்சங்கர் (இவரும் அதிகாரி) துப்பறிய அந்த ஊருக்கு வருகிறார்.

அவருக்கும் அதே மாதிரியான விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் அவர் தப்பிக்கிறார். குக்கிராமத்தில் சிக்கன் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் கிடைப்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் தான் தெரிய வருகிறது, ஒரு பெரிய கடத்தல் கூட்டம், அந்த கிராம பெரிய மனிதர்களுக்கு பணத்தாசை காட்டி தங்கள் புகலிடமாக அந்தக் கிராமத்தை பயன் படுத்துவது. பல்வேறு திருப்பங்களுக்குப் பின் ஜெய்சங்கர் கடத்தல் கூட்டத்தை பிடிக்கிறார். முதல் 45 நிமிடங்களுக்கு பரபரப்பாக செல்லும் படம், கடத்தல் கூட்டம் பிண்ணனியில் இருப்பது தெரியவந்ததும் சுருதி இறங்கி வழக்கமான வேகத்தில் செல்லத் தொடங்கி விடும். ஹெலிகாப்டர் சேசிங் போன்ற காட்சிகளும் உண்டு. ராஜ சுலோசனா, அசோகன், சுருளி ராஜன் எனப் பலரும் நடித்த படம். இயக்கம் எஸ் பி முத்துராமன்.

October 08, 2009

மயில் சாமி – ஒரு பார்வை

ஒருமுறை நாங்கள் கிரிக்கெட் லீக் மேட்சில் தோற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். பஸ்ஸ்டாப்பை நோக்கி நடக்கையில் வழக்கத்துக்கு மாறான உற்சாகம். ஏதோ நாங்கள்தான் வென்றதைப் போல ஒரு மிதப்பு.

அப்போது ஒருவர்

“ என்னப்பா ஜெயிச்சிட்டு வரும்போது கூட இவ்வளோ சிரிப்ப பார்த்ததில்ல” என்று கேட்டார்.

“ஆமா, ஈக்வல் டீம்கிட்ட தோத்தா கவலைப்படலாம். சப்பை டீம் கிட்ட தோத்தோமினா ஆத்திரப்படலாம், நம்ம விட நல்ல டீம், நல்லா பைட் பண்ணினோம் அவ்வளோதான், என அந்த அணியை சிலாகிக்கத் தொடங்கி பேச்சு வளர்ந்தது.

இதேபோலத்தான் ஒரு காலத்தில வெஸ்ட் இண்டீஸ் டீம் கூடத் தோத்தாக்கூட யாரும் கவலைப்படமாட்டாங்களாம் என பேச்சு வந்தது. உடனே அந்த பியர்சம் போர்சம் பற்றி அணியின் சீனியர் சிலாகித்தார்.

“ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜியோல் கார்னர், மால்கம் மார்ஷல், இப்படி இனிமே எந்த டீமுக்கும் செட் அமையாது”

அப்போது இன்னொருவர் ஆரம்பித்தார்.

“ இதே டைம்ல அங்க இன்னும் கூட நல்ல பௌலர்லாம் இருந்திருப்பாங்க. இவங்களைக் காட்டிலும் ஒரு 5% எபெக்டிவ்நெஸ் கம்மியா இருந்திருப்பாங்க”

அவங்கல்லாம் பாவம், இந்த செட்டை உடைச்சு உள்ள வரமுடியாம அப்படியே மங்கிப்போயிருப்பாங்க. இவங்க வெளியே வரும்போது அவங்க மாரல்,பார்ம் எல்லாம் காலியாயிருக்கும்.” என்று முடித்தார்.


இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று. அப்போதைய ”ஸ்டேட் ஆப் தி ஆர்ட்” திறமையை விட உச்சத்திறமை இருந்தால் வாய்ப்பு தானாகக் கிடைக்கும். ஆனால் 1% குறைவான திறமை இருந்தால் கூட வாய்ப்பு அதோகதிதான்.

தமிழ்சினிமாவில் 80களில் மூன்று காமெடி நடிகர்கள் கலக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய பட்ஜெட்,பெரிய நாயகர்களின் படங்களில் ஜனகராஜ்; மீடியம் பட்ஜெட், மீடியம் ஹீரோ,கிராமிய கதையைப்பு உள்ள படங்களில் கவுண்டமணி; திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,விஜயகாந்த்,டிஆர், ராமநாராயணன் போன்றோரது படங்களில் எஸ் எஸ் சந்திரன் என ஒரு அமைப்பு இருந்தது.

இந்த காலகட்டத்தில் அறிமுகமான காமெடி நடிகர்களால் இவர்களைத் தாண்டி பெரிய அளவில் வரமுடியவில்லை. சின்னி ஜெயந்த், சார்லி போன்றோர் கல்லூரி நாயகனின் நண்பன் போன்ற வேடங்களில் நடித்து சமாளித்துக் கொண்டிருந்தனர். 85ஆம் ஆண்டு கன்னிராசி படத்தில் தன் 20 வயதில் அறிமுகமான மயில்சாமிக்கு அதுவும் வாய்க்கவில்லை.

கன்னிராசியில், கவுண்டமணியின் வீட்டுக்கு மளிகைச்சாமான் கொண்டு வரும் சிறிய காட்சியில் அறிமுகமான இவர் பின்னர் கமலின் நட்பைப் பெற்றதால் அபூர்வ சகோதரர்கள், வெற்றிவிழா போன்ற படங்களில் சிறிய வேடம் கிடைக்கப் பெற்றார்.

95 ஆம் ஆண்டுவரையிலும் பெரிய பிரேக் கிடைக்காமல் கிக்கிரி பிக்கிரி என மிமிக்ரி பண்ணியே சமாளித்து வந்தார். 96 வாக்கில் காமெடி நடிகர்களை வைத்தே நீலக்குயில் என்னும் படம் தயாரானது. அதில் சொல்லிக் கொள்ளும் படியான வேடம். என்றாலும் படம் ஓடாததால் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விவேக்கின் அசுர வளர்ச்சி ஆரம்பமான 2000ல் மயில்சாமிக்கும் அவரால் நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. பெண்ணின் மனதைத் தொட்டு, கண்டேன் சீதையை (டப்பிங் படம், காமெடி டிராக் மட்டும் புதியது),பாளையத்தம்மன் போன்ற படங்களில் நல்ல காம்பினேஷன் சீன்கள் கிடைத்தன. பெண்ணின் மனதைத் தொட்டில் இலங்கைத் தமிழை சென்னைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் காட்சி கலக்கலாக இருக்கும்.

பாளையத்தம்மனில் விவேக் யாகவா முனிவராகவும், மயில்சாமி டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவாகவும் வந்து மோதும் காட்சி அசத்தலாக இருக்கும். அதில் பாபாவை இமிடேட் செய்து ஆடுவதும், விவேக்கை சிரித்தே டென்ஷன் ஆக்குவதுமாய் அசத்தியிருப்பார்.


பின் 2001ல் வெளியான தில், 12 பி ஆகிய படங்களிலும் விவேக்கின் ட்ரூப் ஆளாக வந்து மக்கள் மனதில் பதிய ஆரம்பித்தார்.

2002 ஆம் ஆண்டு மயில் சாமிக்கு திருப்புமுனையான ஆண்டு. இந்த ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நாயகன் மனோஜுக்கு காதலுக்கு ஐடியா கொடுக்கும் முழு நீள வேடம். பெண்களில் சைக்காலஜியை விளக்குவதும், டி ராஜேந்தரை இமிடேட் செய்வதும் மக்களால் நன்கு ரசிக்கப் பட்டாலும் படத் தோல்வி இவரை பெரிய அளவுக்கு கொண்டு செல்லவில்லை.

ஆனால் சன் டிவியின் அப்பொதைய ஹிட் புரோகிராமான காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு மயில் சாமிக்கு கிடைத்தது. இது தமிழ் மக்கள் அனைவரிடமும் மயில்சாமியை கொண்டு சேர்த்தது.

2003ல் வெளியான தூள், மிலிடரி, ஜெயம் போன்ற படங்களில் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்கள். தூளில் சந்திரபாபு நாயுடு லட்டுக்குப் பதில் ஜிலேபியை மாத்திட்டாரு காமெடியும், ஜெயம் படத்தில் அடிக்கும் டைமிங் ஜோக்குகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இயக்குநர் பூபதி பாண்டியன் இவருக்கு தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை ஆகிய படங்களில் நல்ல வேடம் கொடுத்தார்.

இயக்குநர் சுராஜின் தலைநகரம், படிக்காதவன் படங்களிலும் நல்ல வேடம். சுந்தர் சி யின் ரெண்டு,கிரி ஆகிய படங்களிலும் நடித்து நம்மை சிரிக்க வைத்தார்.

நல்ல டைமிங் சென்ஸ் உள்ள நடிகர் மயில்சாமி. அதனால் தான் விவேக்,வடிவேல் போன்றோரும், பூபதி பாண்டியன், சுராஜ், சுந்தர் சி போன்ற நல்ல காமெடி சென்ஸ் உள்ளவர்களும் இவரை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரு காமெடி நடிகருக்குத் தேவையான டைமிங் சென்ஸ், அடுத்தவரின் வசனத்துக்கு செய்ய வேண்டிய ரியாக்‌ஷன், டயலாக் டெலிவரி என அனைத்து திறமைகளும் மயில்சாமியிடம் கொட்டிக் கிடக்கின்றன. இதை அவர் தொடர்ந்து தன் படங்களில் நிரூபித்துக் கொண்டு வருகிறார். இருந்தும் அவரால் முதல் வரிசை காமெடி நடிகராக முடியவில்லையே? ஏன்?

அறிமுகமான பொழுதில் முடியாவிட்டாலும், விவேக் வடிவேலுவின் எழுச்சிக்கு முன் ஒரு கேப் இருந்ததே, அதைப் பயன்படுத்தி முண்ணனிக்கு ஏன் அவரால் வர முடியவில்லை?

தமிழ்சினிமாவில் கமர்சியல் வேல்யு ஒரு கதாநாயகனுக்கு வர வேண்டுமென்றால் அவன் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவனை மக்கள் ஏற்றுக் கொண்டதாக திரைத் துறையினர் ஒத்துக் கொள்வார்கள். (சரத்குமார்- சூரியன், விஷால் – சண்டகோழி என பல உதாரணங்கள் உண்டு). அது போல ஒரு முண்ணனி காமெடி நடிகனாக வேண்டுமெனில் அவன் ஒரு படத்தில் காமெடி டிராக்கில் கலக்கியிருக்க வேண்டும்.

கவுண்டமணி முண்ணனிக்கு வந்தது பயனங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள் மூலம். வடிவேலுக்கு கண்ணாத்தாளும், நேசம் புதுசும் பெரிய லிஃப்டைக் கொடுத்தது. விவேக்குக்கு நான் பேச நினைப்பதெல்லாம் மற்றும் திருநெல்வேலி.

சரி, அது போல மயிலும் ஏதாவது படத்தில் டிராக்கில் கலக்க ஏன் முடியாமல் போனது? இத்தனைக்கும் வின்னர் பட காமெடி டிராக் எழுதிய பூபதி பாண்டியன் தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கிறாரே?

விஷயம் இதுதான். ஒரு படத்தின் முழு காமெடி டிராக்கையும் கையாள ஒரு தனி பாணி இருக்க வேண்டும். கவுண்டமணி எல்லோரும் புனிதமாக நினைப்பதைக் கேள்வி கேட்பது, அலட்சியமாக யாரையும் இறக்கிப் பேசுவது, நாம் கேள்வி கேட்டு கிண்டல் செய்ய வேண்டும் என நினைப்பதை செய்வது என ஒரு பாணியை வைத்திருந்தார். வடிவேலு உதார் விட்டு அடி வாங்கும் பாணி, விவேக்குக்கு சமுதாய சட்டயர். ஆனால் மயில்சாமி தனக்கென ஏதும் தனி பாணியை வகுக்க வில்லை. இதுவே அவருக்கு முண்ணனி நகைச்சுவை நடிகனாகும் வாய்ப்பைக் கெடுதத்து.

ஆனாலும் படத்திற்க்கு மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். எல்லாத் திறமைகள் இருந்தாலும், அடுத்தவர்களை விட வேறுபடுத்தி தன்னைக் காட்டிக் கொள்ளவில்லையென்றால் பெரிய உயரத்திற்கு செல்ல முடியாது என்பதற்கு மயில்சாமி ஒரு உதாரணம்.

வரும் காலங்களில் எ கட் அபொவ் தி ரெஸ்டாக தன்னை மாற்றிக் கொண்டு உச்சத்துக்கு செல்ல மயில்சாமியை வாழ்த்துவோம்.