January 15, 2009

கிரிமினல்

ஒரு முக்கிய நபரை சந்திப்பதற்காக அம்பத்தூரில் இருந்து அடையாறை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன், வழியெங்கும் பொறியியல் கல்லூரி பேருந்துகளில் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் 91ல் படிக்கும் போது டேஸ் ஸ்காலர் மாணவர்களைப் பார்ப்பது கோஷ்டி சண்டை இல்லாத சிறுபத்திரிக்கையைப் பார்ப்பது போல அபூர்வம். அப்போது ராகிங் செய்யாதவன் ராங் பர்சன் என்னும் கருத்தியல் நிலவிய காலம். சீனியரிடம் வாங்கிய அடியை ரன் வட்டி,மீட்டர் வட்டி போட்டு ஜுனியரிடம் ஒப்படைக்கும் நேர்மையான கடன்காரர்கள், அஸைன்மெண்ட்,ரெக்கார்ட் எழுத வைத்து கையை உடைக்கும் காரியவாதிகள், கிரீட்டிங்க்ஸ்,லெட்டரை கொடுக்கவைத்து அனுமாராக்கும் ராமர்கள் என பல குழுவினர் இருந்தார்கள். இவர்களிடம் மாட்டினால் கூட பரவாயில்லை, இன்னொரு எக்சென்ட்ரிக் குழு இருந்தது. அவர்களிடம் மாட்டினால் அம்பேல்தான்.

இவர்கள் புறநகரில் இருந்த ஒரு டூரிங் தியேட்டரை களமாக கொண்டு இயங்கியவர்கள். அங்கே சனி ஞாயிறுகளில் பிரத்யேக காட்சிகள் இணைக்கப்பட்ட மாற்றுக் கலாச்சாரத்தை முன் மொழியும் படங்கள் திரையிடப்படும். வெள்ளியன்று ஏதாவது ஜுனியரைப் பிடித்து அங்கே சென்று டிக்கட் ரிசர்வ் பண்ண சொல்வார்கள். அங்கே எந்திரன் வெளியானால்கூட சுடச்சுட தான் டிக்கெட் கொடுப்பார்கள். மாட்டிக்கொண்டவன் அங்கே போய் விழிப்பான் பாருங்கள். அதற்க்கடுத்த நாள் 20 அல்லது 30 ஜுனியர் மாணவர்களை மொத்தமாக கூட்டிச் சென்று விடுவார்கள். பிரத்யேக காட்சி ஓடத்தொடங்கியதும் ஸ்டார்ட் என்று ஆணையிடுவார்கள். ஜுனியர்கள் அனைவரும் எழுந்து நின்று முத்தைத்திரு அத்தித் திருநகை என்று பாட வேண்டும். படம் பார்க்க ஆவலுடன் வந்தவர்கள் எல்லாம் டென்சன் ஆகி நம் வீட்டார் மீது அர்ச்சனை செய்ய தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இதில் யாரிடமும் சிக்காமல் தப்பித்தவன் கிரிமினல் மணி என்று எங்களால் பின்னாளில் அழைக்கப்பட்ட மணிமுருகன். இரண்டாமாண்டு தொடக்கத்தில் அவனுக்கும் ஒரு நண்பன் கிடைத்தான். எப்படிடா என்று அந்த பாவப்பட்டவனிடம் கேட்டபோது, "மணி ரொம்ப நல்லவன்டா, நாங்க எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிருவோம்டா" என்று பதிலளித்தான். ஒருமுறை அவர்களைப் பின் தொடர்ந்த போது தான் ஷேரிங் என்றால் என்ன என்று தெரிந்தது


இவன் மெக்டோவல் ஆப் வாங்கினான், மணி மாப்பிள்ளை வினாயகர் சோடா

இவன் பிரியாணி ஆர்டர் செய்தான், மணி தயிர் வெங்காயம் கொண்டு வரச் சொன்னான்


இவன் வில்ஸ் பில்டர் வாங்கினான், மணி வெட்டுப்புலி தீப்பெட்டி வாங்கினான்.


இந்த ஏகாதிபத்திய சுரண்டலை கண்டு கொதித்தெழுந்த எங்கள் தோழன் ஒருவன், பல் போராட்டங்களுக்குப் பின் அவனது அடிமைத்தளையை உடைத்தெரிந்தான். சனி இப்போது தன் வக்கிரப் பார்வையை தோழன் மீது திருப்பியது.

முதல் ஆண்டில் கல்லூரி விழாவில் அழகு மலராட என அபிநயம் பிடித்த ஈசீஈ சாருலதாவிடம் மனதைப் பறிகொடுத்து பொட்டு வைத்த வட்ட நிலாவையே பாடிக் கொண்டிருப்பான் தோழன். புரட்சிக்காரனுக்கும் காதல் பூ பூப்பது உலக நியதிதானே. நாங்களும் எங்கள் பங்கிற்க்கு உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட நீ வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே என்று எசப்பாட்டு பாடுவோம்.

திடீரென அவனுக்கு சாருலதாவிடம் இருந்து காதல் கடிதம் வந்தது. யாராலும் நம்ப முடியவில்லை. உங்கள் மனதை உங்கள் செயல்கள் மூலம் அறிந்தேன் என்பது போல பல வரிகளில் தன் காதலுக்கான காரணங்களை அவள் சொல்லியிருந்தாள். பின் ஒரு நாள் தனியே சந்திப்போம், அதுவரை என்னிடம் நேரில் ஏதும் பேசவேண்டாம், எனக்கு பிரச்சினை என்று எழுதியிருந்தாள். அடுத்த கடிதத்தில் அவர்கள் விடுதிக்கு அருகில் உள்ள பாறாங்கல் அடியில் பதில் கடிதத்தை வைக்கவும் என்று எழுதியிருந்தாள். பின் ஆரம்பித்தது வினை. ஒவ்வொரு முறையும் அவன் வெடிகுண்டு வைப்பவனைப் போல பதுங்கி பதுங்கிப் போய் அங்கே பதிலை வைத்து விட்டு வருவான்.
சாருலதா அவனைப் பாடாய் படுத்தினாள். மீசை எடுக்க சொன்னாள். பூப்போட்ட சட்டை போடச் சொன்னாள், அவள் நண்பிகளுக்கு டிக்கட் எடுக்கச் சொன்னாள். ஒருமுறை பழனி சென்று மொட்டை கூட அடிக்க வைத்தாள்.

இரண்டாம் ஆண்டு மாணவர்களின் முக்கிய கடமையான ராக்கிங்கில் நாங்கள் மூழ்கி இருந்ததால் இதை நாங்கள் கண்டு கொள்ளவில்லை. போதாகுறைக்கு லெட்டர் வரும் போதெல்லாம் அவன் தரும் சிறு சிறு டிரீட்கள் வேறு. நான்காம் செமெஸ்டர் ஸ்டடி லீவ் விட்டதும் ராக்கிங்கை ஏறக் கட்டிவிட்டு படிக்கத் தொடங்கினோம். அப்போது தோழன் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, அவளிடம் நேரில் பேசினால்தான் நிம்மதியாக இருக்கும் என்று சொல்லி புறப்பட்டான். நாங்களும் சந்திப்பு நல்லபடியாக நடந்தால் நமக்கு டிரீட் கிடைக்குமே என்று வாழ்த்தி அனுப்பினோம். திரும்பி வந்தான் நடைப் பிணமாக, நீங்க யாருன்னு கேட்டுட்டாடா என்று அழ ஆரம்பித்தவன் ஓராண்டு கழித்து அழுகையை நிப்பாட்டியபோது 18 அரியர்களும், மனதில் ஆறாத வடுவும் பாக்கியிருந்தன.

ஆமாம். நாங்கள் எப்படி இது நடந்தது என்று கண்டிபிடித்து அவனைத் தேற்ற ஒரு ஆண்டு ஆனது. சூத்திரதாரி? வேறு யார் நம்ம மணிதான். ஜுனியர் பெண்கள் மூலம் கடிதம் எழுதவைத்து போஸ்ட் செய்தது, சாரு லதா விடுமுறைக்கு செல்லும் போது அவள் ஏரியாவில் இருந்து ஜூனியர் பசங்கள் மூலம் போஸ்ட் செய்வது, கல் அடியில் இருக்கும் லெட்டரை எடுப்பது என ஆறு மாத காலம் தோழரை ஆட்டி வைத்தவன் அவன் தான். எங்களுக்கு சந்தேகம் வராத வகையில் அப்பொழுது அவன் ஒரு சீனியரிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பது போல போக்கு கூட காட்டியிருந்தான்.

நான்காம் ஆண்டில் ரூமுக்கு இருவர் என்றும், அதை லாட் மூலம் தேர்வு செய்யப் போவதாகவும் விடுதி நிர்வாகம் அறிவித்தது. என் ரூம் மேட்டாக மணி வந்து சேர்ந்தான். பக்கத்து அறையில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லாமல் ஒரு உருண்டையும் உருளுதடி என உன்னிக்கிருஷ்ணன் பாடிக் கொண்டிருந்தார் . வார்டனிடம் சென்று மாற்றல் கேட்கப் போகிறேன் என்றவனை நண்பர்கள் தடுத்து விட்டர்கள். நம்ம செட்டுக்கு ஒரு குணா போதும்டா, நாலு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அப்புறம் செமெஸ்டர் லீவு, பிராஜக்ட்டுன்னு ஓடிடும் என்று ஆறுதல் படுத்தினார்கள்.

அப்பொழுதெல்லாம் ஆண்டுக்கு 30- 40 மாணவிகள் தான் எங்கள் கல்லூரியில் சேருவார்கள். பெரும்பாலும் டம்மி பீஸ்தான் இருக்கும். அந்த பெண்களின் ஜாதகத்தை வாங்கி சீனியர்களிடம் தருவதுதான் முதலாமாண்டு மாணவர்களின் முதல் பணி. செமெஸ்டர் தொடங்கிய இரண்டாம் வாரத்தில் அந்த டீடெயில்ஸை எடுத்துக் கொண்டு நண்பன் ஒருவன் ரூமூக்கு வந்தான். அசுவராசியமாக அதை புரட்டிக் கொண்டே, என்னடா இந்த வருஷமும் ஒன்னும் தேறல்லியாமே என்றேன். அவனும் "என்னடா பண்ணுறது, கொஞ்சம் அழகா இருந்தாலும் ப்ளஸ் டூவிலேயெ லெட்டர கொடுத்து படிக்க விடாம பண்ணி ஆர்ட்ஸ் காலேஜுக்கு அனுப்பிடுறாங்க நம்ம பசங்க", இங்க வர்றதெல்லாம் ரிஜெக்டட் பீஸ் தானே என்றான். அப்பொழுது தான் கவனித்தேன் ஒரு பெண் தன் தந்தை வேலை பார்க்கும் இடமாக போட்டிருப்பது என் தந்தை பணிபுரியும் அலுவலகத்தை. பாருடா நமக்கு தெரியாமலே இதெல்லாம் நடக்குது என்று கமெண்ட் அடித்துவிட்டு லிஸ்டை அவனிடம் கொடுத்துவிட்டேன்.

அழுக்கு துணி தாங்காமல் கொடி அறுந்ததும்தான் வீட்டுக்கு போய் ஒரு மாதமானது ஞாபகம் வர வீக்கெண்டில் ஊருக்கு கிளம்பினேன். வீட்டில் நுழைந்ததும் பொளேரென அப்பா கன்னத்தில் அறைந்தார். இதற்கு முன் ஐந்தாவது படிக்கும்போதோ, ஆறாவதிலோ தான் அடித்த ஞாபகம். பின்னர் தான் தெரிந்தது இதுவும் நம்ம மணியின் வேலையென்று. நான் தான் முரளிகண்ணன்,உன் அப்பா வேலைப் பார்க்கும் இடத்தில்தான் என் அப்பாவும் வேலை பார்க்கிறார் என்று அந்த மாணவியை பிக்கப் செய்திருக்கிறான். ஒரு கட்டத்தில் இவன் எல்லை மீறப் போக அவள் தன் தந்தையிடம் சொல்லி எனக்கு அடி வாங்கி கொடுத்துவிட்டாள்.

அடடா மறந்தே போயிட்டனே. முக்கியமான ஆளை பார்க்க போறேன்னு சொன்னேன்ல அது நம்ம மணிய பார்க்கத்தான். பின்ன என்னங்க? ஆபிஸுல பிரச்சினை. மேல இருக்குறவன் குடையுறான், கீழ இருக்குறவன் குத்துறான். அதான் அவன்கிட்ட நெலமய சொல்லி கிரிமினலா ஒரு ஐடியா வாங்கலாம்னு. இதுக்கு முன்னாடி கூட ரெண்டு பிரச்சின வந்தப்ப அவந்தான் தீர்த்து வச்சான்.

54 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இங்க வர்றதெல்லாம் ரிஜெக்டட் பீஸ் தானே என்றான். //


medical college .....?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மீசை எடுக்க சொன்னாள்.//

அஜித் மாதிரி இருப்பானாம்.. நமக்கு பாவமாத் தோணும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பெரும்பாலும் டம்மி பீஸ்தான் இருக்கும்.//


கலைச் சொல் அற்புதம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அழுக்கு துணி தாங்காமல் கொடி அறுந்ததும்தான் வீட்டுக்கு போய் ஒரு மாதமானது ஞாபகம் வர வீக்கெண்டில் ஊருக்கு கிளம்பினேன். //


சரித்திர நிகழ்ச்சிகளை அற்புதமாக பதிவு செய்திருக்கிறீர்கள்..

முரளிகண்ணன் said...

தங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சுரேஷ்

சின்னப் பையன் said...

//ஆபிஸுல பிரச்சினை. மேல இருக்குறவன் குடையுறான், கீழ இருக்குறவன் குத்துறான். //

உங்க வேலை முடிஞ்சப்புறம் அவரை அமெரிக்காக்கு ஏத்தி அனுப்பிடுங்க...

முரளிகண்ணன் said...

சின்னப்பையன் தங்கள் வருகைக்கு நன்றி

Viji said...

அநேகமா எல்லாக் காலெஜ்லயும் ஒரு மணி இருக்காங்க போல.:)
சூப்பரா இருக்கு முரளிசார்

நசரேயன் said...

சொந்த அனுபவமா?

மணி ரெம்ப நல்லவரு, விலாசம் இருந்தா கொடுங்க

Boston Bala said...

தூள்!

----சீனியரிடம் வாங்கிய அடியை ரன் வட்டி,மீட்டர் வட்டி போட்டு ஜுனியரிடம் ஒப்படைக்கும் நேர்மையான கடன்காரர்கள்----

----கொஞ்சம் அழகா இருந்தாலும் ப்ளஸ் டூவிலேயெ லெட்டர கொடுத்து படிக்க விடாம பண்ணி ஆர்ட்ஸ் காலேஜுக்கு அனுப்பிடுறாங்க நம்ம பசங்க----

கலக்கறீங்க!!!

ILA (a) இளா said...

அழியாத கோலங்கள்

புருனோ Bruno said...

முரளி

அசத்தல்

நடை அபாரம்

நர்சிமை தொடர்ந்து அடுத்து சுடப்படபோவது உங்கள் பதிவு தான் !!!

எழுத்தாளர் ஆக மனப்பூர்வ வாழ்த்துக்கள்

பழைய சொற்தொடர்களை தவிர்க்கலாமே

//வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லாமல் ஒரு உருண்டை உருண்டது.//

இது ஏற்கனவே கேட்டது போலிருக்கிறது (உன்னி கிருஷ்ணன் குரலில் :) :) )

புருனோ Bruno said...

//வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லாமல் ஒரு உருண்டை உருண்டது.//

வாய்மொழியும் தாய்மொழியும்
உங்களுக்கு நன்றாக வசப்படுகிறதே. பிறகு என்ன கவலை

பாலராஜன்கீதா said...

(வாத்தியாரின்) ஹாஸ்டல் தினங்களை நினைவூட்டின.

Cable சங்கர் said...

சூப்பர் முரளி. இன்னமும் கொஞசம் நகைச்சுவையை அள்ளி விட்டிருக்கலாம். அருமையான பதிவு..

முரளிகண்ணன் said...

விஜி, நசரேயன் தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

பாஸ்டன் பாலா சார்,
ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி

முரளிகண்ணன் said...

நன்றி இளா

முரளிகண்ணன் said...

புருனோ,

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

அந்த கதை நடந்த காலத்தை பிரதிபலிப்பதற்க்காக (முதலாம் ஆண்டு- இதயம், நான்காம் ஆண்டு ஆரம்பம் - காதலன்) அந்த வரியை எழுதினேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

அந்த பாடல் காதில் கேட்பது போல் மாற்றி விடுகிறேன்.

தொடர் ஆதரவுக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

பாலராஜன் கீதா சார்,

மிக சந்தோஷமாய் இருக்கிறது.

முரளிகண்ணன் said...

கேபிள் சார்

தங்களின் தொடர் ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

உண்மைத்தமிழன் said...

வார்த்தை விளையாட்டு அபாரமாக உள்ளது..

என்ன படித்தீர்கள்..? பி.இ.?

KarthigaVasudevan said...

மணின்னு பேர் வச்சாலே இப்படித்தான் இருப்பாங்களோ? "சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ் ல சுவாமி பிரெண்டா வர மணியும் இப்படித்தான்! (கவுண்டமணி -இதுல கூட பாருங்க என்ன ஒரு பேர் பொருத்தம் ...!)எப்படியோ நல்லது நடந்தா சரி?!

முரளிகண்ணன் said...

உண்மைத்தமிழன் அண்ணா தங்களின் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

மிஸஸ் டவுட், தங்கள் வருகைக்கு நன்றி

அத்திரி said...

தல ஒரே மலரும் நினைவுகளா இருக்கு????!!!

முரளிகண்ணன் said...

வாங்க அத்திரி

புனைவு ட்ரை பண்ணலாம்னு பார்த்தேன்

வெண்பூ said...

கலக்கல் முரளி.. புனைவுன்னாலும் இது அருமையா இருக்கு..

கார்க்கிபவா said...

"இந்த ஏரியா அந்த ஏரியா எங்கேயுமே எனக்கு பயமில்லடா. ஏன்னா ஆல் ஏரியாலயும் அய்யா கில்லிடா"
முரளிகண்ணன்.

புனைவுகளிலும் சிகரம் தொட வாழ்த்துகள். நல்லா இருந்துச்சு தல..

narsim said...

முரளி கண்ணன்..

கலக்கிட்டீங்க.. மிக நல்ல நடை.. சூழலுக்குள் புகுந்து புறப்பட்டது போன்ற உணர்வு.. மிக நல்ல படைப்பு../ புனைவு..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா சுவாரசியமா எழுதியிருக்கீங்க முரளி கண்ணன்.

anujanya said...

அலட்டல் இல்லாத, சுவாரஸ்ய நடை. ஆங்காங்கே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை. கலக்கறீங்க முரளி. தொடர்ந்து இதுவும் எழுதுங்கள். அடுத்த குமுதம் டாப் டென்னில் நீங்களும், நர்சிமும் வரக் கடவது!

அனுஜன்யா

செல்வம் said...

//திரும்பி வந்தான் நடைப் பிணமாக, நீங்க யாருன்னு கேட்டுட்டாடா என்று அழ ஆரம்பித்தவன் ஓராண்டு கழித்து அழுகையை நிப்பாட்டியபோது 18 அரியர்களும், மனதில் ஆறாத வடுவும் பாக்கியிருந்தன.//

மிகவும் ரசித்தேன் முரளி.நல்ல நடை.எனக்கும் பழைய ஞாபகங்களைத் தூண்டியது

ரமேஷ் வைத்யா said...

முரளிகண்ணன்,
ப்ரமாதம். உட்கார்ந்து எழுதியது போல் இல்லாமல் போகிற போக்கில் அடி பின்னிப் பெருக்கெடுத்தது போன்ற தோற்றம் காட்டியிருப்பது அருமேய். ஒரு எழுத்தைக் கூட எடிட் செய்ய முடியாது. டம்மி பீஸ், ரிஜக்டட் பீஸ் போன்ற சொல்லாடல்களை எனக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணியவாதி கடுமையாகக் கண்டிக்கிறான். (கவனிக்க: கண்ணடிக்கிறான் இல்லை.) பல்துறை வித்தகராக மலர என் ஆசிகள்!

முரளிகண்ணன் said...

@ வெண்பூ

மிக்க நன்றி

@ கார்க்கி

நண்பா முயற்சிக்கிரேன்

@ நர்சிம்

உங்களோட பதிவுகளில இருந்து நெறைய அப்சார்ப் பண்ணிதான் இத எழுதினேன்


@ஜியொவ்ராம் சுந்தர்ஜி

மிக்க நன்றி

@ அனுஜண்யா

மிக மிக சந்தோஷம்

முரளிகண்ணன் said...

செல்வம்

மிக்க நன்றி

முரளிகண்ணன் said...

வைத்யாண்னா

உங்கள் ஆசிகள் எனக்கு எப்போதும் தேவை.

குடந்தை அன்புமணி said...

\\மீசை எடுக்க சொன்னாள். பூப்போட்ட சட்டை போடச் சொன்னாள், அவள் நண்பிகளுக்கு டிக்கட் எடுக்கச் சொன்னாள். ஒருமுறை பழனி சென்று மொட்டை கூட அடிக்க வைத்தாள்.\\
கடைசியில் தாடி வைக்கச் சொல்லிட்டாளே... மச்சான் சிங்கத்தை கவுத்துப்புட்டாளே மச்சான்...ச்செ... ச்செ...பாவம் மணி...

முரளிகண்ணன் said...

இன்று மிக சந்தோஷமாய் உணர்கிறேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Karthikeyan G said...

Good one
நல்ல இருக்கு!!

கோபிநாத் said...

\\டேஸ் ஸ்காலர் மாணவர்களைப் பார்ப்பது கோஷ்டி சண்டை இல்லாத சிறுபத்திரிக்கையைப் பார்ப்பது போல அபூர்வம். அப்போது ராகிங் செய்யாதவன் ராங் பர்சன் என்னும் கருத்தியல் நிலவிய காலம். சீனியரிடம் வாங்கிய அடியை ரன் வட்டி,மீட்டர் வட்டி போட்டு ஜுனியரிடம் ஒப்படைக்கும் நேர்மையான கடன்காரர்கள், அஸைன்மெண்ட்,ரெக்கார்ட் எழுத வைத்து கையை உடைக்கும் காரியவாதிகள், கிரீட்டிங்க்ஸ்,லெட்டரை கொடுக்கவைத்து அனுமாராக்கும் ராமர்கள் என பல குழுவினர் இருந்தார்கள். \\

ஆகா..ஆகா...அது ஒரு காலம் ;))

கலக்குறிங்க அண்ணாச்சி ;)))

முரளிகண்ணன் said...

அன்புமணி தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி


கார்த்திகேயன், மிக்க நன்றி

கோபிநாத், தங்களின் தொடர் ஆதரவுக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி

லக்கிலுக் said...

கலக்கல் முரளி. இப்படியே அடிச்சி ஆடுங்க :-)

முரளிகண்ணன் said...

Thank you Lucky (Tamil fond problem)

பரிசல்காரன் said...

ப்பா! முரளிகண்ணன் பதிவான்னு ஆச்சர்யமா இருக்குங்க... ஏன் சொல்றேன்னா அந்த முரளிகண்ணன்ங்கறவர்தான் என்னைக் கூப்ட்டு எனக்கு சினிமாத்தகவல்களை தகவல்களாத்தான் எழுத வருது.. சுவாரஸ்யமான டைப்ல எழுத வரலன்னு ரெண்டு வாரம் முன்னாடி புலம்பிகிட்டிருந்தாரு. இப்போதான் தெரியுது மனுஷன் அடக்கிவாசிச்சிருக்காரு..

என்னா நடை முரளி! கலக்கீட்டீங்க.. இந்தப் பதிவை முழுசா படிக்க வைக்குதுபாருங்க.. அதுதான் உங்க எழுத்தோட வெற்றி. பல இடங்களில் (சீனியரிடம் வாங்கிய அடியை ரன் வட்டி,மீட்டர் வட்டி போட்டு ஜுனியரிடம் ஒப்படைக்கும் நேர்மையான கடன்காரர்கள், //\\இந்த ஏகாதிபத்திய சுரண்டலை கண்டு //) வார்த்தைப் பிரயோகம் அபாரம்!!!

அடிக்கடி இப்படி எழுதுங்க...

(புனைவுன்னு போட்டு!)

முரளிகண்ணன் said...

நன்றி பரிசலாரே,


\\அடிக்கடி இப்படி எழுதுங்க...

(புனைவுன்னு போட்டு!)
\\

இதுதான் பரிசல் டச்சா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றாக இருந்தது முரளி கண்ணன்.

அழகான நடை, தெளிவான விவரணை.. வாழ்த்துகள்.

வெட்டிப்பயல் said...

Excellent...

அருமையான நடை மு.க.

நடைக்காகவே இரண்டு முறை படித்து விட்டேன் :)

Anonymous said...

முரளிகண்ணன்

நீங்கள் எழுதுவதை படித்தேன், கிரிமினல் இல்லாத இடமும் ஒரு இடமா? ஒரு காலத்தில் அடி வாங்கி கொடுத்த கிரிமினலை தேடி நீங்கள் போவது.....இன்னொரு கிரிமினலை உருவாக்கவா.....நன்றாக இருந்தது படிக்க.......

ரத்னா

முரளிகண்ணன் said...

சுரேஷ் சார்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

வாங்க வெட்டிப்பயல்

தங்கள் வருகைக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

ரத்னா

தங்கள் வருகைக்கு நன்றி.

உங்கள் வலைப்பதிவில் ஏன் கமெண்ட் செய்யும் வசதியை தடுத்துள்ளீர்கள்?

சரவணகுமரன் said...

அமர்க்களம்...

Anonymous said...

தவறாமல் கருத்துரை எழுதுங்கள், முரளிகண்ணன், எனது இடுகையில் மற்றவர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.