December 21, 2011

2000ஆவது ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

விஜயகாந்த், விவேக் மற்றும் ரஹ்மானுக்கு சிறந்த ஆண்டாக விளங்கிய 2000, பிரபு, மீனா ஆகியோருக்கு தங்கள் நட்சத்திர அந்தஸ்தை இழந்த ஆண்டாக ஞாபகத்தில் இருக்கும். மணிரத்னத்தின் கடைசி வியாபார ரீதியிலான வெற்றிப்படம் அலை பாயுதே இந்த ஆண்டில் தான் வெளிவந்தது. ஹேராம், தெனாலி என வானவில்லின் இரண்டு எல்லைகளைப் போன்ற படங்களை கமல் கொடுத்தது இந்த ஆண்டில்தான்.

விஜயகாந்த்

சரிந்து கிடந்த கேப்டனின் மார்க்கெட் விக்ரமன் இயக்கிய வானத்தைப் போல படம் மூலம் எழுந்து நின்றது. மொக்கை காமெடி, அரதப் பழசான செண்டிமெண்ட் சீன்கள் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெற்றது. விகரமனுக்கும் இதுதான் கடைசி வணிக வெற்றிப் படம். என் கதையை சுட்டுவிட்டார் என்று பொருமிக் கொண்டே லிங்குசாமி எடுத்து அடுத்த ஆண்டு வந்த ஆனந்தம் படமும் வெற்றி பெற்றது. தற்போதும் மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள் வெற்றி பெருவதைப் பார்க்கும் போது கூட்டுக் குடும்ப அமைப்புக்கு தமிழக ஆண்கள் ஏங்குகிறார்களோ என்னும் எண்ணம் எழுகிறது.

அடுத்து வந்த வல்லரசுவின் வெற்றியே விஜயகாந்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆக்‌ஷன் படத்தை வெற்றி பெற வைக்க ஹீரோவின் மாஸ் முக்கியம். இப்பட வெற்றியின் மூலம் கேப்டனுக்கு மாஸ் இன்னும் இருக்கிறது என்று வினியோகஸ்தர்கள் முடிவு செய்தார்கள். கமலா தியேட்டரில் இதற்காக அவருக்கு விழா நடத்தி வீர வாளும் கொடுத்தார்கள். இதன்பின் இப்பட இயக்குநர் மகராஜன் இயக்கிய எந்தப் படமும் வெற்றியடைய வில்லை.

விவேக்

கிக்கிரி பிக்கிரி காமெடிகளைப் பண்ணிக் கொண்டிருந்த விவேக்குக்கு இது திருப்புமுனை ஆண்டு. திருநெல்வேலி படத்தில் தன் காமெடி டிராக்கில் எம் ஆர் ராதா எலிமெண்ட்ஸை கொண்டு வந்தார். அது சின்ன கலைவாணர் பட்டம் வரை அவரை கொண்டு சென்றது. தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன், ஏழையின் சிரிப்பில், சந்தித்த வேளையில், டபுள்ஸ், சுதந்திரம், குஷி ஆகிய படங்களில் திரையரங்கை அதிர வைத்தார். பாளையத்து அம்மனில் மூட நம்பிக்கைகளை சாடி செய்த காமெடி டிராக்கும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. வின்னர் கைப்புள்ள 2004ல் வரும் வரையில் நம்பர் 1 அந்தஸ்தை இந்த ஆண்டுப் படங்களின் வாயிலாக பெற்றார்.

ரஹ்மான்

தால் பட வெற்றிக்குப் பின்னர் இந்தி மற்றும் ஹாலிவுட்டுக்கு ஷிஃப்ட் ஆகும் முன் ரஹ்மான் இசையமைப்பில் இந்த ஆண்டு அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ரிதம் மற்றும் தெனாலி ஆகிய படங்கள் வந்தன. இதில் தெனாலி தவிர அனைத்துப் பாடல்களும் ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்களாக அமைந்து விட்டன.

பிரபு

ஒருவர் எப்பொழுது ராம நாராயணன் படத்தில் நடிக்கிறாரோ அப்போதே அவர் மார்க்கெட் அவுட் என்பார்கள். ஆனால் பிரபு 99ல் திருப்பதி ஏழுமலை வெங்கடேசாவில் நடித்தும் அவருக்கு அடுத்த ஆண்டு நிறைய படங்கள் வந்தன. பெரும்பாலும் தோல்விப் படங்கள் [மனம் விரும்புதே உன்னை, திருநெல்வேலி, வண்ணத் தமிழ் பாட்டு], . வெற்றி பெற்ற படங்களும் அவரால் வெற்றியடைய வில்லை [தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன்]. இதனால் அவர் நட்சத்திரத்தில் இருந்து நடிகராக மாறிப் போனார்.

கமல்ஹாசன்

96ல் அவ்வை சண்முகியின் வெற்றிக்குப் பின் கமல் இந்திக்கு அதை ரீமேக்க போனார். பின் திரும்பிவந்து மருதநாயக புதைகுழியில் விழுந்தார். பெப்ஸி பிரச்சினைக்காக காதலா காதலா என்று சறுக்கினார். எனவே ஹே ராமுக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. எல்லோரையும் திருப்திப் படுத்தாவிட்டாலும் சிலருக்கு நல்ல திருப்தி அளித்த படம். ஏகப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள். ஆனந்த விகடன், நாயகனுக்கு பின்னர் இந்தப் படத்துக்கு 60 மார்க் வழங்கியதாக ஞாபகம். இந்தப் படத்தின் மையக்கதை பட வெளியீட்டுக்கு முன்னர் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப் பட்டது. அதைப் படித்து விட்டு வந்தால் ஓரளவு புரிந்திருக்கும். முன் தயாரிப்புகளோடு படத்திற்கு வரச் சொல்வது எவ்வளவு அபத்தம்? படத்தில் கதாபாத்திரங்களின் வழியாக பேசப்பட்ட ஆறு மொழிகள் தான் படத் தோல்விக்கு காரணம் என்போரும் உண்டு. மற்ற நாடுகளில் ஒரு மொழிதான் இருக்கும். கூடுதலாக இன்னொரு மொழி பேசப்படும். எனவே அவர்கள் சப் டைட்டிலோ வாய்ஸ் ஓவரோ இல்லாமல் சமாளிக்கலாம். ஆனால் ஏகப்பட்ட மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் இந்த மாதிரிப் படங்கள் எடுக்கும் போது சற்று யோசித்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி, “ஓநாயா இருந்து பார்த்தாத்தான் அதோட நியாயம் புரியும்” போன்ற வசனங்களும், இசையில் தொடங்குதம்மா, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி போன்ற பாடல்களும் இபடத்தை மறக்க முடியாத அனுபவமாக்குகின்றன.

தெனாலி – ஜெயராமுக்கு சில வாய்ப்புகளையும், ரவிகுமாருக்கு சில கோடிகளையும் சம்பாதித்து கொடுத்த படம்.

இந்த ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே பட நாயகி பூஜா தான் கமலின் விஸ்வரூபம் பட கதாநாயகி என்கிறார்கள்.

பாரதி

ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டது. அதன் நாயகன் சாயாஜி ஷிண்டே மூலம் தென்னாட்டுக்கு ஒரு வில்லன்/கேரக்டர் ஆர்டிஸ்ட் கிடைத்தான். இளையராஜாவின் இசையில் நிற்பதுவே நடப்பதுவே போன்ற கிளாசிக் பாடல்களும் கிடைத்தன.

என்னம்மா கண்ணு

துவண்டு கிடந்த சத்யராஜை எழுப்பி உட்கார வைத்த படம். சக்தி சிதம்பரம் சத்யராஜுக்கே உரிய லொல்லை கேரக்டரில் புகுத்தி படத்தை வெற்றி பெறச் செய்தார். இன்றளவுக்கும் சத்யராஜ் நடித்துக் கொண்டிருக்க இந்தப் படம் ஒரு காரணம். இப்பட வெற்றிக்குப் பின் கூடிய பிரஸ்மீட்டில் சத்யராஜ் சொன்னது இது “ இந்தப் பட ரிலீஸுக்கு அப்புறம் தான் நாலஞ்சு புரட்யூசர் வந்திருக்காங்க, வீட்டுக்கு போனெல்லாம் வருது” என்றார். வடிவேலுவும் இரட்டை வேடத்தில் காமெடியில் கலக்கியிருந்தார்.

விஜய்

பாசில் இயக்கத்தில் ஷாலினி ஜோடியுடன் இளையராஜா இசையில், சார்லி தாமு நட்பில், ஸ்ரீவித்யா அம்மாவாக இன்னொரு காதலுக்கு மரியாதையாக வரும் என்ற எதிர்பார்ப்பில் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால் குஷியின் மூலம் கலக்கலாக திரும்பிவந்தார் விஜய். பிரியமானவளேவும் விஜய்யை காப்பாற்றியது

அஜீத்

அறிமுக இயக்குநர் துரை இயக்கிய முகவரி ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், இன்னொரு அறிமுக இயக்குநர் கவி காளிதாஸ் இயக்கிய உன்னை கொடு என்னை தருவேன் படு தோல்வி அடைந்தது.

வெற்றி கொடி கட்டு

வெளிநாடுகளுக்குப் போகாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுங்கள் என்று பார்த்திபன், முரளியை வைத்து சேரன் மெசேஜ் சொன்ன படம். பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷனுக்கு இது உச்சக்கட்ட படம். ஏஜெண்டிடம் பனம் கொடுத்து ஏமாந்து கலங்குபவராக சார்லி அசத்தியிருப்பார்.

இந்த ஆண்டு தொடக்கத்துக்கு சற்று முன் டிசம்பரில் வெளியான சேது படம் பல இணை,உதவி இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அது இந்த ஆண்டில் தெரியாவிட்டாலும் தற்போது வரை பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

15 comments:

அத்திரி said...

vadai enakkuthaan

முரளிகண்ணன் said...

thank you aththri

Unknown said...

வரலாற்று பார்வை மிகவும் அருமையாக இருக்கிறது.. தொடருங்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி சாய்பிரசாத்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு முரளி..

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜான்

ILA (a) இளா said...

வாங்க வாங்க. நன்றி!

முரளிகண்ணன் said...

நன்றி இளா

Riyas said...

இப்படி விரிவாக விபரமாக உங்களால் மட்டுமே முடியும் முரளிகண்ணன்..

எங்கே ரொம்ப நாளா கானோம்.?

முரளிகண்ணன் said...

நன்றி ரியாஸ். சில பர்சனல் வேலைகள். வேறொன்றுமில்லை

கானா பிரபா said...

நல்ல தொகுப்பு, கொசுறுச் செய்தி ஒன்று வானத்தைப் போல இந்த நூற்றாண்டில் வெளிவந்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பெற்றது

முரளிகண்ணன் said...

நன்றி கானா பிரபா

selventhiran said...

நல்ல சுவாரஸ்யம்; ரசித்து படித்தேன்.

முரளிகண்ணன் said...

Thanks Selventhiran

WordsBeyondBorders said...

படு சுவாரஸ்யம். உங்களுடைய இந்த வகை பதிவுகளை மிகவும் ரசிப்பேன், குறிப்பாக எண்பதுகள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகள் பற்றிய குறிப்புகள். புதிய தகவல்கள், நிறைய ஆசிர்யங்கள்.