March 23, 2016

இயன் போத்தம்

1987 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ரிலையன்ஸ் உலககோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட போது அந்த நாட்டு மக்களை விட அதிக வருத்தப்பட்டவர் எங்கள் ஏரியா கிரிக்கெட் டீம் கேப்டன் குமார் அண்ணன் தான். ஏனென்றால் அவர் இயன் போத்தமின் தீவிர ரசிகர். அந்நாள் வரை அவர் போத்தம் ஆடிய எந்த மேட்சையும் நேரடியாகவே தொலைக்காட்சியிலோ பார்த்ததில்லை. ஆனாலும் அவர் இங்கிலாந்து அணி ஆடிய ஆட்டங்களின் வர்ணனையை பிபிசி ரேடியோவில் கேட்டும், அது தொடர்பான செய்திகளையும் படித்தே போத்தத்தின் பெரிய ரசிகராய் மாறி இருந்தார்.

அப்போது லைப்ரரிக்கு வரும் காப்பி தவிர எங்கள் ஊருக்கு  மூன்றே மூன்று ஸ்போர்ட்ஸ்டார் புத்தகங்கள் தான் வரும். அதில் ஒன்றை குமார் அண்ணனும் இன்னொன்றை ஸ்டேட் பாங்க் மேனேஜர் ஒருவரும் வாங்குவார்கள். மூன்றாவது காப்பி பஸ்ஸ்டாண்ட் கடையில் தொங்கிக்கொண்டேயிருக்கும். வெளியூர் பிரயாணிகள் யாராவது அதை வாங்குவார்கள். இல்லையெனில் ரிட்டர்ன் தான். அந்த வாரம் குமார் அண்ணன் வெளியூர் சென்றுவிட்டார். பஸ்ஸ்டாண்டில் இருந்த 2 காப்பிகளை எப்போதாவது, பாலோ ஆன் வாங்கியும் ஜெயிக்கும் அணியைப் போல இரண்டு பேர் வாங்கிச் சென்று விட்டார்கள். குமார் அண்ணன் ஊரிலிருந்து வந்ததும் புத்தகம் இல்லையென தெரிந்து டென்சன் ஆகிவிட்டார், ஏனென்றால் அந்த வாரம் நடுப்பக்க நாயகன் போத்தம். அடுத்த பஸ்ஸிலேயே மதுரைக்குச் சென்று காலேஜ் ஹவுஸ் புத்தகக் கடையில் ஒன்றுக்கு இரண்டு காப்பியாக வாங்கி வந்தார்.

போத்தம் ஆறடிக்கும் சற்று கூடுதலான உயரம், ஆனால் அந்த உயரம் சட்டென தெரியாதபடி சற்று பருமனான உடல்வாகு. ஹாலிவுட் ஹீரோ போன்ற முகவெட்டு. அந்த நடுப்பக்கப் படத்தில் நீல நிற ஜீன்ஸும், சிவப்பு சட்டையும் அணிந்து அதற்கு மேல் ஜீன்ஸால் ஆன சட்டையை ஜெர்கின் போல பட்டன் போடாமல் அணிந்திருப்பார். சீரான தாடி, கூலிங் கிளாஸ், கழுத்தில் தொங்கும் கேமரா உடன் ஒரு மலைப்பாறையில் ஸ்டைலாக அவர் உட்கார்ந்திருக்கும் அந்த போஸ்  யாரையும் வசீகரித்துவிடும்.

அந்த போஸ்டரை வீட்டில் ஒட்டி தினமும் சூடம் காண்பிக்காத குறை தான். அந்த அளவுக்கு போத்தமின் மீது பிரியம் கொண்டிருந்த குமார் அண்ணனுக்கு உலக கோப்பை போட்டிக்கு போத்தம் வராதது பெரிய மன வருத்தம் கொடுத்தது. 

இதுவரை இங்கிலாந்துக்கு விளையாடிய ஆல் ரவுண்டர்களில் போத்தமின் இடத்தை நிரப்ப இன்று வரை ஆள் இல்லை. பொதுவாகவே எந்த துறையிலும் எதிர் எதிர் துருவங்களாக இருமுனைப் போட்டிதான் பெரிதும் பேசப்படும். சினிமா மற்றும் கிரிக்கெட்டில் இது அதிகம். கிரிக்கெட்டில் சச்சின்லாரா, வார்னேமுரளிதரன் என பல உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பேர் ஒரே துறையில் ஒரே சமயத்தில் போட்டியாளர்களாக இருந்தது எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்த இம்ரான் கான், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி மற்றும் கபில்தேவ் தான். இந்த ஆல்ரவுண்டர்களை ரீ பிளேஸ் செய்ய அந்த அந்த நாட்டில் யாரும் உருவாகவில்லை. ஏன் உலக அளவில் கூட யாரும் உருவாகவில்லை.

குமார் அண்ணன் போத்தமை பற்றி சொல்லும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடும் விஷயம் 81 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரைப் பற்றித்தான். அந்த தொடருக்கு போத்தம் தான் கேப்டன். ஒரு டெஸ்டில் தோல்வியும், ஒன்றில் டிராவையும் செய்து இங்கிலாந்து அணி திணறிக் கொண்டிருந்தது. சில சூழ்நிலைகளால் போத்தம் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார்.  மைக் பியர்லி கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மூன்றாம் டெஸ்டில் சோதனையாக பாலோ ஆன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. பேட்ஸ்மென்கள் அனைவரும் பெவிலியன் திரும்பி விட்டனர். பந்து வீச்சாளர்களுடன் இணைந்து போத்தம் ஒரு 145 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. பின் ஆஸ்திரேலிய அணியை அந்த ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அடுத்த 2 டெஸ்டுகளையும் போத்தமின் பந்து வீச்சாலும், பேட்டிங்காலும் வென்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கிட்டத்தட்ட தனி ஒருவனாக நின்று ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டினார் போத்தம். இதே போலத்தான் ட்ராவிட்டும் லக்‌ஷ்மணனும் இணைந்து கல்கத்தாவில் பாலோ ஆன் வாங்கிய அணியை ஆஸ்திரேலியாவிற்கு எதிராய் ஜெயிக்க வைத்தார்கள்.

போத்தமின் பேட்டிங் ஸ்டைலானது மிகவும் சிம்பிளானது. ஸ்டைலான பேட்ஸ்மென் என்றெல்லாம் சொல்ல முடியாது, அவரது அணி சக வீரர் டேவிட் கோவரின் பேட்டிங் ஸ்டைலுக்கு பக்கத்தில் கூட அவரால் வரமுடியாது. ஆனால் எஃபெக்டிவான பேட்ஸ்மென். பந்தை சரியாக கணித்து போர்ஸாக அடிக்கக்கூடியவர், பெரும்பாலும் மிட் ஆன் மற்றும் மிட் ஆப் திசையில் பவர் ஷாட் ஆடுவார். நல்ல லெங்தில் வீசப்படும் பந்தைக்கூட அந்த திசையில் பறக்க விட்டு விடுவார். ஹூக் அண்ட் புல் ஷாட் அடிப்பதில் கில்லாடி. கவர் டிரைவ் மற்றும் ஸ்கொயர் ட்ரைவ் ஸ்டைலிஷாக இருக்காது ஆனால் ஸ்கொயர் கட் பொறி பறக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் ரிவர்ஸ் சுவீப்பை அப்போதே ஆடியவர். அதை வேகப்பந்து வீச்சாளரிடமே ஆடுவார் என்பது இன்னும் விசேஷம்.

மார்ஷல், தாம்சன் போல போத்தம் அதி வேக பந்து வீச்சாளர் கிடையாது. ஆனால் பந்தை அருமையாக சுவிங் செய்யக்கூடியவர். செட்டிலான பேட்ஸ்மென்களையே எளிதில் திணறடித்து விடுவார். 70களில் நல்ல வேகத்தில் வீசிக்கொண்டிருந்த போது, பந்தையும் சுவிங் செய்வதால் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 80களின் மத்திக்குப் பிறகு அவரது விக்கெட் எடுக்கும் திறமை சற்று குறையத் தொடங்கி இருந்தது.

போத்தமின் பீல்டிங்கும் சிறப்பான ஒன்று. ஒருமுறை அவர் ஆப் அண்ட் மிடிலில் வீசிய பந்தை பேட்ஸ்மென் ரன்னரின் தலைக்கு மேலே அதி வேகத்தில் அடித்தார். பந்தை  வீசி விட்டு  லேண்ட் ஆகி கண் இமைப்பதற்குள் தன் வலது கைப்பக்கம் பாய்ந்து அந்த கேட்சைப் பிடிப்பார். போத்தமைத் தவிர அதை யாருமே நம்பவில்லை. ஒரு அதிசயம் போலவே அதை அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஒரு வழியாக குமார் அண்ணன் 91ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக கோப்பை நேரடி ஒளிபரப்பில் தான் போத்தமைக் கண்டார். அந்த தொடரில் கேப்டன் கூச்சுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் போத்தம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து 53 ரன்களையும் அடித்தார். இத்தனைக்கும் அது அவரின் அந்திமக்காலம். இந்தியாவுடன் ஆடிய மேட்சிலும் நல்ல பார்மில் ஆடிக்கொண்டிருந்த தெண்டுல்கரை திணறடித்து அவுட் ஆக்கி வெற்றிக்கு வழி வகுத்தார். தெண்டுல்கர் அவுட் ஆன உடன் அவர் ஆடிய ஸ்டைலான ஆட்டம் அந்த கோப்பையின் சிறந்த வெற்றி ஆட்டங்களில் தலையாயது. இங்கிலாந்து பைனல் வரை போக முக்கிய காரணமாக இருந்ததே  போத்தமின் ஆல் ரவுண்டர் திறமைதான். ஆனால் பைனலில் இறுதிச் சிரிப்பு அவரது சக ஆல்ரவுண்டர் போட்டியாளரான இம்ரான் கானுக்கே வாய்த்தது.

அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து போத்தம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கடுத்து யாராவது நன்கு பந்து வீசி, நாலு மேட்ச் ஒழுங்காக பேட்டிங் ஆடிவிட்டாலே வந்து விட்டார் புதிய போத்தம் என்று இங்கிலாந்து  பத்திரிக்கைகள் கூக்குரலிடும். அப்படித்தான் டொமினிக் கார்க் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு ஹேட் டிரிக் எடுத்து 50 ரன்கள் எடுத்தவுடன் அடுத்த போத்தம் என்றார்கள். பிளிண்ட் ஆப் 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் கிட்டத்தட்ட போத்தம் போலவே பெர்பார்ம் செய்து பெரிய பெயர் பெற்றார். வந்து விட்டார் புது போத்தம் என்றார்கள், அவராலும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

போத்தம் ஒரு சண்டைக்கோழி டைப் கேரக்டரும் கூட. ஒரு முறை ஆசியர்களை வம்பிழுத்த போது, இம்ரான்கான் அதற்கு பதிலடியாக “நீங்கள் குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த போதே வடிகால் வசதிகளுடன் நாகரீக வசிப்பிடங்கள் கட்டி வாழந்தவர்கள் நாங்கள்’ என பதிலடி கொடுத்தார். இப்போது ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறார் போத்தம்.

ஆளையே பார்க்காமல், செய்திகள் வர்ணனைகள் மூலமே போத்தமின் மீது பெரும் அபிமானம் கொண்டவர்கள் இந்தியாவில் அப்போது அதிகம் இருந்தார்கள். அப்படியென்றால் இங்கிலாந்தில் எப்படிப்பட்ட ஹீரோவாய் அவர் அப்போது இருந்திருப்பார்?.

2 comments:

விசு said...

போதம் அவர்கள் ஒரு நகைச்சுவை உணர்வுள்ள நபர். ஒரு முறை பாகிஸ்தான் நாட்டிற்கு அணி செல்லும் போது .. பாகிஸ்தான் பயணம் பற்றிய கேள்வியை ஒருவர கேட்கும் போது... கிரிக்கெட்டில் நான் வைத்துள்ள பிரியத்தினால் தான் போகிறேன், ஆனால் இந்த நாட்டிற்கு என் மாமியாரை கூட அனுப்ப மாட்டேன் என்றார்.

இன்னும் ஒன்று.. ஐவரும் விவியன் ரிச்சர்ட்ஸ் சேர்ந்து அடிக்காத கூத்தே இல்லை. கிரிக்கட் உலகில் ஜாம்பவான்களாக திரிந்த இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அடித்த கூத்தை அறியாதோர் யாரும் உள்ளாரே..
அடியேனும் குமார் ஆர்கலை போல் தான். போதமின் பரம விசிறி..
மட்டை ஆட்டம், பந்து வீச்சை விடுங்கள்.. முதல் ஸ்லிப்பில் இவர் நின்று அசாத்தியமாக பிடித்த கேட்ச் கள் தான் எத்தனை.

அருமையான மலரும் நினைவுகள்... உங்களுக்கும் குமாருக்கும் நன்றி.

முரளிகண்ணன் said...

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.