May 31, 2016

விடுதியில் மாணவர்களை சேர்ப்பதன் அவசியம்

பத்தாண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுதியில் சேர்ப்பது குறைந்து கொண்டு வருகிறது. –பெரும்பாலானவர்களுக்கு அவரவர் வசிக்கும் இடங்களில் இருந்து பேருந்தில் சென்று திரும்பும் தூரத்திலேயே கல்வி நிறுவனங்கள் அமைந்திருப்பதும் ஒரு காரணம். என்னைப் பொறுத்தவரையில் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் சேர்ந்து படிப்பது நல்ல பலனைத் தரக்கூடிய ஒன்று.

நம்முடைய மூளையின் உள்வாங்கும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம் ஆகியவை 21 வயது வரை மிகச் சிறப்பாக இருக்கும். அதன்பின்னர் சற்று குறையத் துவங்கும். எனவே இந்த 21 வயதிற்குள் நேரத்தை வீணடிக்காது பாடங்களைக் கற்றுக்கொள்வது அந்தத்துறையில் விற்பன்னராவதற்கு உதவும். விடுதியில் இருந்தால் நாம் கற்றுக் கொள்வதற்கான நேரம் அதிகமாகக் கிடைக்கும்.

இப்பொழுது மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுவர சராசரியாக இரண்டு மணி நேரம் ஆகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மூன்று முதல் நான்கு மணிநேரமும் ஆகின்றது. இந்த பயண நேரத்தில் ஆக்கபூர்வமாக படிக்க முடியாது. இந்த பயணத்தினால் உண்டாகும் உடல் அலுப்பால் வகுப்பில் பாடங்களை கவனித்தலும் குறையும், மாலையில் கவனமாகப் படிக்கவும் முடியாது.

மேலும் இந்த வயதுதான் நன்றாகப் பசியெடுக்கும் வயதும் கூட. இதில் காலை வேளையில் அவசர அவசரமாக சாப்பிட்டு ஓடுவதாலும், மதியம் டப்பாவில் கொண்டு சென்ற சாப்பாட்டை சாப்பிடுவதாலும் மாலையில் பயங்கர பசியெடுக்கும். இந்த நேரத்தில் அதிகமான நொறுக்குத்தீனிகளை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள். மேலும் இரவில் அதிக அளவு உணவினைச் சாப்பிடுகிறார்கள். இது அனைத்துமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள். உடலை உறுதி செய்ய வேண்டிய வயதில் இதைச் செய்வது, நாற்பது வயதிற்கு மேல் அவர்களை நோயாளியாக்கி விடும். மாறாக விடுதியில் இருக்கும் போது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஒழுங்கான கால வேளையில் சரியான உணவினைச் சாப்பிட்டு வருவது ஜீரண மண்டலத்தை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்து விடும்.

அடுத்ததாக பல வீடுகளில் பிள்ளைகள் அடிப்படை வேலைகளைக் கற்றுக்கொள்வது கூட இல்லை. என் பொண்ணு சாப்பிட்ட தட்டைக் கூட தூக்கி வைக்க மாட்டா என்பதை பெருமையாகக் கூட சிலர் சொல்லுகிறார்கள். சில விவாகாரத்தான திருமணங்களிலோ கணவன் ஒரு டம்ளர் தண்ணி கூட தானே பிடிச்சுக் குடிக்காத சோம்பேறி போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. விடுதியில் இருக்கும் போது நமக்கான சில வேலைகளையாவது நாமே செய்து கொள்ளும் படி இருக்கும். முக்கியமாக ஆண்களுக்கு. அடிப்படை வேலைகளை செய்து, இந்த வயதில் முதுகு வளையாவிட்டால் பின் எந்த வயதிலும் முதுகு வளையாது.

விட்டுக் கொடுத்தல் என்பதும் இப்போது அருகிவரும் பழக்கமாக இருக்கிறது. நான் ஏன் விட்டுக் கொடுக்கணும்? என்ற மனப்பான்மையிலேயே பலரும் இருக்கிறார்கள். விடுதியில் ஒரே அறையில் இரண்டு மூன்று பேருடன் தங்கி இருக்கும் போது மற்றவர்களைப் பார்த்து விட்டுக் கொடுக்கும் மனோபாவம் வரும். மற்றவர்களின் குடும்ப நிலை, பழக்க வழக்கங்கள் தெரியவரும் போது அதனுடன் நம் குடும்பத்தை ஒப்பிட்டு நாம் எதில் பின் தங்கியிருக்கிறோம்? எந்த குணநலம் நம்மிடம் இல்லை என்ற ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளலாம். நாம் தனியே இருக்கும் போது நம் மூளை நம்மை அறியாமலேயே இதைச் செய்யும். இந்த சிந்தனைக்கான நேரம், வாய்ப்பு எல்லாம் டேஸ்காலராக இருக்கும் போது கிடைக்காது.

பையன்களுக்கு இன்னொரு வகையிலும் விடுதி வாழ்க்கை ஒரு நன்மையைக் கொடுக்கும். பதின்பருவத்தில் தந்தையின் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பு வரும். அது வளர்ந்து கொண்டே செல்லும். திருமணத்திற்குப் பின் மனைவி, என்ன உங்க வீட்டுல இப்படி பண்ணுறாங்க என்பது போன்ற கமெண்டுகள் அடிக்கும் போது அந்த வெறுப்பு இன்னும் அதிகமாகும். திருமணத்திற்கு முன்னால் பெற்றோரிடம் இருந்து சில ஆண்டுகள் பிரிந்திருப்பது நல்லது அது கல்லூரி காலகட்டமாயிருந்தால் இன்னும் நல்லது. ஏனென்றால் வேலை பார்க்கும்போது பிரிந்திருந்தால் கூட வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், பணிச்சுமை போன்றவற்றாலும் நம் காசில் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணம் வருவதாலும் பெற்றோர்களைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்யமாட்டார்கள். ஆனால் கல்லூரி விடுதியில் இருக்கும் போது அவர்கள் மீதான புரிதல் வரும். எந்த உறவிலுமே சிறு பிரிதல்கள் உறவை வலுவாக்க அவசியம்.

எல்.கே.ஜி தொடங்கி பணி ஓய்வு பெறும் வரை கூட காலையும் மாலையும் ஒரு செவ்வகத்தின் வழியாகவே உலகைப் பார்த்துக் கொண்டு போகிறவர்கள் அதிகம். பள்ளி வேன் தொடங்கி, கல்லூரி பேருந்து, அலுவலகப் பேருந்து, பெரிய பதவிக்கு வந்த பின்னர் கார் என அந்த ஜன்னலின் வழியாகப் பார்த்தே நாம் பல ஆண்டுகளைத் தொலைத்து விடுகிறோம். சில ஆண்டுகளாவது பிரயாணம் இல்லாமல் நடந்து கொண்டு 360 டிகிரியிலும் சூழலை அனுபவித்துக் கொண்டு வாழ்வது நல்லதுதானே?

5 comments:

Deiva said...

Agreed. Good write up on hostel life

Tamil Indian said...

Different perspective. Thanks.

முரளிகண்ணன் said...

நன்றி தெய்வா மற்றும் தமிழ் இந்தியன்

Annaraj Ponpandi said...

class room-ல் கற்றதை விட Hostel room-ல் கற்றது அதிகம்.
எப்படி உலகத்தை எதிர்கொள்வது,மத்தவங்க கூட பழகுவது என் ஒரு Mockup விடுதியில் கிடைக்கும்.
கல்லூரி நாட்களில் பாடத்தை விட மனிதர்களை, மாணவர்களை கத்துக்க வேண்டியது அவசியம்.

நிலவன் said...

nice sir...