October 17, 2016

இயக்குநர் கங்கை அமரன்

திருமணத்திற்கு வருபவர்களில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே முந்தைய நாள் இரவு கல்யாண மண்டபங்களில் தங்கும் காலம் இது. 25 ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் கல்யாணத்துக்கு வருபவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர் முதல்நாள் இரவு கல்யாண மண்டபத்தில் தங்கி விடுவார்கள். ஒரு குரூப் மேடை அலங்காரத்தைப் பார்த்துக்கொண்டால் இன்னொரு குரூப் தேங்காய் பை போடுவார்கள். சிலர் ஜமுக்காளத்தை விரித்து வெட்டி அரட்டையும், சிலர் சீட்டும் ஆடுவார்கள். ஒரு குரூப் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு செகண்ட் ஷோ செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும்.


அப்படி ஒரு குரூப் எந்தப்படத்திற்கு போவது என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பி பின் ஒரு மனதாக கங்கை அமரன் இயக்கியிருந்த ”எங்க ஊரு பாட்டுக்காரன்” படத்துக்குப் போகலாம் என முடிவெடுத்தார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் அதற்கு முந்தைய வாரம் நடந்த கல்யாணத்தின் போதும் இந்தப் படத்தை அந்த குரூப்பில் இருந்த பலர் பார்த்திருந்தார்கள். பாட்டு, காமெடி அப்படின்னு போரடிக்காம போகும்யா, அதுக்கே போகலாம் என்பது அவர்களின் மனநிலையாக இருந்தது.


கங்கை அமரன் இயக்கிய பெரும்பாலான படங்கள் அப்படித்தான். மிக இலேசான கதை, அதில் ஒரு முடிச்சு, அந்த முடிச்சையும் பெரிய புத்திசாலித்தனம் இல்லாமல் எளிதாக அவிழ்ப்பது,அருமையான பாடல்கள், அலுக்காத காமெடி என ஒரு பேக்கேஜாகத் தருவார். பெரும்பாலும் கிராமிய கதைக்களனிலேயே படங்களை இயக்கிய கங்கை அமரனின் படங்களில் ஹீரோயிசம் அதிகமாக இருக்காது. கதை நாயகன் ஒரு சாதாரண மாடு மேய்ப்பவனாகவோ, கிராமிய கலைஞனாகவோ,மீனவனாகவோ இருப்பான். பொறி பறக்கும் வசனங்களோ, அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளோ அதிகம் இருக்காது.


கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர் என விஜயகாந்த் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கும்போதே அவரை கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டவராக வைத்து கதை செய்தது கங்கை அமரனின் இயல்பு.


கங்கை அமரன் படங்களில் மலையாளத் திரைப்படங்களில் இருப்பது போன்றே கதையோட்டம் இருக்கும். மிக மெதுவாகவே படம் தொடங்கி சீராகச் செல்லும். வெகு வேகமாக காட்சிகள் பறக்காது. என்ன மலையாளப் படங்களுக்கு இணையான அழுத்தமான கதை இருக்காது. அதற்குப் பதிலாக தூக்கலான காமெடியும், இனிமையான இசையும் இருக்கும். அதனாலேயே அமரனின் படங்கள் அலுப்பூட்டாதவையாக இருக்கும்.

மணிரத்னம், டி ராஜேந்தர் ஆகியோரை எந்த இயக்குநரிடம் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநரானவர்கள் என்று சொல்வார்கள். கங்கை அமரன் எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராய் இருந்தார் எனத் தெரியவில்லை. அவர், தன் சகோதரர் இளையாராஜா உடன் தான் ஆரம்பகாலங்களில் உதவியாக இருந்துள்ளார்.


முதன்முதலில் அவர் இயக்கிய கோழிகூவுது பெரிய வெற்றிப்படம். பிரபு,சில்க் ஸ்மிதா, சுரேஷ், விஜி நடித்த படம். இளையராஜாவின் இசை பெரிய பங்கு வகிக்க படம் பல செண்டர்களில் 200 நாட்களை கடந்து ஓடியது. ஆனால் அதற்கடுத்து கங்கை அமரன் இயக்கிய கொக்கரக்கோ,

தேவி ஸ்ரீதேவி, பொழுது விடிஞ்சாச்சு, வெள்ளைப் புறா ஒன்று என வரிசையாக தோல்விப்படங்கள். எங்க ஊரு பாட்டுக்காரன் வெற்றி. அதற்கடுத்து செண்பகமே செண்பகமே, அண்ணனுக்கு ஜே என சுமாரான படங்கள். பின்னர் கரகாட்டக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, கும்பக்கரை தங்கையா, கோயில் காளை, சின்னவர் என தொடர்ச்சியாக பெரிய நாயகர்களுடன் படங்கள். பின்னர் பொண்ணுக்கேத்த புருசன், வில்லுப் பாட்டுக்காரன், அத்தை மக ரத்தினமே, தெம்மாங்குப் பாட்டுக்காரன் என மிக சுமாரான படங்கள். கடைசியாக தன் மகன் வெங்கட் பிரபுவை நாயகனாக்கி, ரசிகா (எ) சங்கீதா வை நாயகியாக்கி பூஞ்சோலை என்னும் படத்தை இயக்கினார், ஆனால் படம் இன்றுவரை வெளியாகவில்லை.


இந்தப் படங்களைப் பொறுத்த வரை, எந்தப் படத்திற்கும் கங்கை அமரன் ஸ்கிரிப்ட் என்ற ஒன்றைத் தயாரித்திருப்பாரா என்பது சந்தேகமே. அவரின் கோல்டன் ஜூபிலி படமான கரகாட்டக்காரனுக்கே ஒரு ஒன்லைனை மட்டும் மனதிற்குள் வைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு போனதாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். வசனங்கள் எல்லாமே ஸ்பாட்டில் போய்த்தான் யோசித்து அப்படியே சொல்லியிருப்பார் போலும். மிக சாதாரண, அன்றாட வழக்கில் பேசப்படும் வசனங்கள் மட்டுமே அவர் படங்களில் இருக்கும். அதனால் கூட அவை அலுப்பூட்டாதவையாக இருக்கிறதோ என்னவோ?


கங்கை அமரனின் படங்களில் கேமிராமேனுக்கு பெரிய வேலை எல்லாம் இருக்காது. வித்தியாசமான கோணங்கள், லைட்டிங் என்று பெரிய மெனக்கெடல் தேவையில்லை. சாதாரணமாக ஒரு கிராமத்து நிகழ்வுகளை நாம் எப்படி காண்போமோ அதே போன்ற கோணத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். பட்ஜெட்டும் மிக குறைவாகவே இருக்கும். விஜயகாந்த், அர்ஜூன், பிரபு போன்ற நாயகர்கள் நடிக்காத படங்களில் இளையராஜாவின் இசை தான் படத்தின் பட்ஜெட்டில் முக்கியமாக இருக்கும்.


தன் தம்பி என்பதற்காகவோ அல்லது இளையராஜாவின் மனதுக்கு ஏற்ற களமான கிராமத்து எளிய கலைகள் புழங்கும் கதைகளாய் இருப்பதாலோ என்னவோ இளையராஜா இவருக்கு எப்போதும் அருமையான பாடல்களையே கொடுத்து வந்திருக்கிறார். கங்கை அமரன், கவுண்டமணி, எஸ் எஸ் சந்திரன், செந்தில் மூன்று பேரையுமே சிறப்பாக தன் படங்களில் உபயோகப் படுத்தியவர். நகைச்சுவை சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் பல காட்சிகள் கங்கை அமரனின் படங்களில் இருந்து எடுத்தாளப்படுபவையே.


தேவர் மகனுக்கு முன்னால் கங்கை அமரன் இயக்கத்தில் கமல்ஹாசன் – ஐஸ்வர்யா (நடிகை லட்சுமி மகள்) நடிக்க இளையராஜா இசையில் சர்க்கரைப் பொங்கல் என்னும் படத்தை கங்கை அமரன் இயக்குவதாக இருந்து அது பின்னர் கைவிடப்பட்டது. கலைஞானம், ம வே சிவக்குமார் போல ஆரம்ப காலத்தில் சில பேட்டிகளில் சர்க்கரைப் பொங்கலின் கதை தேவர் மகனின் கதைக்கு அடிப்படை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கங்கை அமரனுக்கு கடைசியாக சுமாராக ஓடிய படமென்றால் அது பிரபு நடித்த சின்னவர் தான். அதிலும் கதையில் ஒரு சின்ன முடிச்சுதான். பாடல்களும், கவுண்டமணி-செந்தில்-கோவை சரளாவின் காமெடியும் படத்தைக் காப்பாற்றியது, அதன்பின் வந்த எந்தப் படமும் கைகொடுக்கவில்லை. ஏனென்றால் ரசிகர்களை இழுக்கக்கூடிய நாயகர்களும் இல்லை, இளையராஜாவின் இசையும் ரஹ்மானின் வருகையால் ஆட்களை கவர்ந்திழுக்கும் ஆற்றலை கொஞ்சம் இழந்திருந்தது. மேலும் ரசிகர்கள் சற்று வேகமான பட ஓட்டத்திற்கு பழகியிருந்தார்கள்.

பின்னர் தன் மகன் வெங்கட் பிரபுவை வைத்து பூஞ்சோலை படத்தை துவக்கினார், அது பொருளாதார சிக்கல்களால் நின்று போனது.


டைரக்டர்ஸ் டச் எனச் சொல்லக்கூடிய முத்திரைக் காட்சிகளோ, பவர்புல்லான கதையோ இல்லாமல், சாதாரண நிகழ்வுகளைக் கொண்டு தன் பாணியில் இயக்கினாலும் தமிழ்சினிமா என்றென்றும் நினைத்திருக்கும் இரண்டு, மூன்று படங்களை இயக்கியவராக இந்தத் துறையிலும் மக்கள் ஞாபகத்தில் இருப்பார் கங்கை அமரன்.

1 comment:

Unknown said...

gangai amaran has learnt many forms of cinema including music direction
a versatile lyric writer also
a good music director...
a good director too
sometimes he talks irrelevantly and earns displeasure....
a good artist...