June 04, 2009

பாஸ்கட் பால்

இந்த முறையும் டிராபியை எடுத்துவிடுவோம் என்றே நம்பியிருந்தேன். இரண்டாம் பாதியில் பையன்கள் சொதப்பி விட்டார்கள். ரன்னர் அப் என்பது பரவாயில்லைதான். ஆனால் எங்கள் கல்லூரி சேர்மன் எதிலும் முதலிடம்தான் வரவேண்டும் என்று உடும்புப்பிடியாய் நிற்பவர். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

விளையாட்டுகளில் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் தன் நிறுவனத்தின் இமேஜை உயர்த்த வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு செலவு செய்கிறார்.

நாங்கள் திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறோம். நேற்றோடு முடிவடைந்த ஒரு வார டோர்ணமெண்டின் களைப்பு எல்லோரிடமும். மற்ற பையன்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக இருக்கையில் இருந்து எழுந்து சற்று முன்னால் நடந்து சென்றேன்.

நாலு பேர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் ஒரு ஐபாடில் ஆளுக்கொரு ஹெட் போன் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.இரண்டு பேர் நல்ல தூக்கத்தில். ஒருவன் கல்லூரி ரப்பர் ஸ்டாம்ப் பொறிக்கப் பட்ட பாலை தன் ஆள்காட்டி விரலால் சுழற்றி எதிர் சீட் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தான்.

”ஆமா இதை மட்டும் பண்ணு. மேட்சுல கோட்டை விட்டுடு” என்று அவனது சகா அவனை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

வண்டியின் வேகம் குறைந்து கொண்டு வந்தது. விழுப்புரத்துல எஞ்சின் மாத்துவாங்க. இருபது நிமிசமாவாது நிற்கும் என்று அடிக்கடி அதில் பயணம் செய்யும் இரு நடுத்தர வயதினர் பேசிக்கொண்டார்கள்.

வண்டி நின்றது. ”பாய்ஸ் வாங்க, ஏதாவது சாப்பிட்டு வரலாம்” என்று அழைத்தேன்.இறங்கி கும்பலாக நடந்து வந்தார்கள். அவர்கள் கடையை மொய்க்கத் தொடங்கினார்கள். நான் சற்று ஒதுங்கி மொபைலை எடுத்து கல்லூரி தலைமை பி டி யிடம் எப்போது வந்து சேர்வோம் என்ற தகவலைச் சொன்னேன்.

மாணவர்கள் ஆண்டின் அடிப்படையில் குழுக்களாக பிரிந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புதிதாக அணியில் சேர்ந்திருந்த முதலாமாண்டு மாணவன் மட்டும் அகதியைப் போல தனித்து நின்று கொண்டிருந்தான்.இந்த ஆண்டு எப்படியும் நான்கைந்து முதலாமாண்டு மாணவர்களைச் சேர்த்து விடவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஆட்டத்துக்கு பத்து, பன்னிரெண்டு வயதிலேயே பாலைத் தட்டி பழகியிருக்க வேண்டும். ரத்தத்தில் அப்போதே ஊறினால்தான் உண்டு. பதினெட்டு வயதில் சொல்லிக் கொடுப்பது கஷ்டம். ஸ்கூல் லெவலில் ஓரளவு ஆடியிருந்த இவன் மட்டும்தான் தேறியிருந்தான்.

அவனை சைகை காட்டி அழைத்தேன்.

என்ன கார்த்தி, ”தோத்துட்டமேன்னு பீல் பண்றியா” என்றேன்.

”கொஞ்சம் கஷ்டமாத்தான் சார் இருக்கு,அடுத்த டோர்ணமெண்ட் எல்லாம் விட்டுறக்கூடது சார்” என்று பதிலளித்தான்.


மனதுக்கு மிக சந்தோஷமாய் இருந்தது. ஆர்வமான பையன்.

சார், எனக்கு ஒரு சந்தேகம். ஏன் சார் மத்த டீமில ஆடுற பசங்களோட சொந்த ஊரு, ஸ்கூல் எல்லாம் விசாரிச்சுக்கிட்டே இருந்தீங்க?

கார்த்தி, அதுல ஒரு விஷயம் இருக்கு. இப்ப புட்பால்ல பார்த்தயின்னா இத்தாலி டீம் டிபெண்சுல நல்ல ஸ்ட்ராங்கா இருக்கும். பிரேசில் அட்டாக்கிங்லதான் கான்சண்டிரேட் பன்ணுவாங்க. ஜெர்மன் என்ன பிளானோட இறங்குனாங்களோ அத எக்ஸிகியூட் பண்னத்தான் பார்ப்பாங்க.

அதுபோல இங்கயும் சில ஸ்டைல் இருக்கு. மதுரை,திண்டுக்கல் டீம் பார்த்தியின்னா அதுல வத்தலகுண்டு பசங்களோட இன்புளூயன்ஸ் இருக்கும். டிரிபிள் பண்ணும் போது கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தாலும் பாலை நம்ம கிட்ட இருந்து பிடுங்கிடுவாங்க. ஷூட் பண்ணும்போது கேர்லெஸ்ஸா இருந்தா அவன் அடிக்கிற டேப்ல பால் காலரியில போய் விழும். திருநெல்வேலி, நாகர்கோயில் பசங்க ஸ்டெமினா தூக்கலா இருக்கும்.நாப்பது நிமிசமும் அதே எனர்ஜியோட விளையாடுவாங்க.

இதுமாதிரி அறந்தாங்கி,கரூர், உடுமலை, கோவைன்னு ஏரியாக் கேத்த ஸ்டைல் இருக்கு. நம்ம சென்னை பசங்க கிட்ட கில்லர் இன்ஸ்டின்க்ட் கொஞ்சம் கம்மியா இருக்கும். அதுக்கேத்த மாதிரி நாம பிளான் பண்ணி ஆடணும். அதுக்குத்தான் விசாரிக்கிறது என்று முடித்தேன்.


சார், இது அப்படியேவா வரும்? என்று சந்தேகத்துடன் கேட்டான்.

கார்த்தி, நான் டிஸ்ட்ரிக்ட், ஜோனல்,அண்டெர் 17,19, யுனிவர்சிட்டி அப்புறம் ஸ்டேட் வரைக்கும் விளையாடி, வந்த அப்சர்வேஷன் இது. அப்போ என்கூட விளையாடுனவங்களோட லெகஸீ அடுத்த செட்டுக்கு அப்படியே வரும். அதுபோக அங்க கோச்சாவும் இருக்குறவங்க முந்தைய செட் ஆளுங்கதானே. நீ இன்னும் ரெண்டு மூணு டோர்ணமெண்ட் வந்தா உனக்கும் பிடிபட்டுடும் என்றேன்.

அணி கேப்டன் மகேஸ், என்னைப் பார்த்து தயங்கி தயங்கி வருவதைப் பார்த்தேன். எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ வாங்கிட்டு வா என்று கார்த்தியை அனுப்பி வைத்தேன்.

மகேஸ் அருகில் வந்தான்.

என்னா மகி, எனி பிராப்ளாம்? என்றேன்.

நீங்க மெயின் பைவ்ல இறக்காம விட்டூட்டிங்கன்னு ரொம்ப அப்செட்ல இருக்கான் சார் நந்தா என்றான்.

நந்தா ஆறடி இரண்டங்குலம். அருமையான பீவட் பொசிஷன் பிளேயர்.

மகி, நீதான் பார்த்தேயில்ல செமீஸ்ல முதல்ல அவனதான் இறக்கிணோம். ரொம்ப கேர்லெஸ்ஸா ஆடுனான். 10 பாயிண்ட் ட்ரெயில் ஆயிட்டோம். அதுக்கப்புறம் ஆதியை இறக்கி எவ்வளோ கஷ்டப்பட்டு ஜெயிச்சோம்.

நானே உன்கிட்ட இதுபத்தி தனியா பேசணூம்னு நினைச்சேன்.நீதான் அவன் கூட எப்பவுமே இருக்குறியே. அவனுக்கு என்ன பிராப்ளம்? இந்த டோர்ணமெண்ட்ல அவன் ஆட்டிடியூட் ரொம்ப புவர் மகி என்றேன்.

ஆமா சார். அவன் மட்டுமில்லே சிவா,வெங்கட்டும் கூட ரொம்ப பீல் பண்ணுறாங்க சார். நம்ம கிரிக்கெட் டீம பார்த்து.

ஏம்பா, எல்லோரையும் ஒரே மாதிரி தானே ட்ரீட் பண்ணுறோம்?.

சார், கிரிக்கெட் டீம்ல ஆடுறவங்களுக்கு இந்தியா சிமெண்ட்ஸ், ஸ்பிக்,டிவிஎஸ்ன்னு ஏகப்பட்ட ஆபர் வருது சார். நம்ம பசங்களுக்கு ஒண்ணும் கிடைக்கலை. போன மாசம் நம்ம ஏரியாவில மட்டும் 20 சம்மர் கிரிக்கெட் கேம்ப் நடந்திருக்கு. காலேஜ் டீம் பசங்க எல்லோரையும் கேம்ப் நடத்துறவங்க அள்ளிட்டுப் போயிட்டாங்க. சின்னப் பசங்களுக்கு பவுலிங் போட,கத்துக் கொடுக்கன்னு. விண்டர் கேம்புக்கு கூட இவனுகள வரச்சொல்லியிருக்கங்களாம்.

ஐபிஎல் லயும் டீமுக்கு பத்து,இருபது ஸ்டாக் பிளேயர் எடுக்குறாங்க. ஒரு லெவெல் கூட விளையாடினாலே பிரைட் பியூச்சர் இருக்கு. இத விளயாடி என்ன ஆகப் போகுதுன்னு கேக்குறாங்க சார்?

சரி சரி நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன். நீ ரிலாக்ஸா இரு என்று அனுப்பி வைத்தேன்.

காலேஜ் பி டி யும் இதே மாதிரிதான் சொன்னார். புட்பால்,ஹாக்கி டீம தேத்துறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு என்று புலம்பினார்.

கிரிக்கெட் மட்டும் ஆடினாப் போதுமா? அப்போ மத்த விளையாட்டெல்லாம்?


கார்த்தி டீ வாங்கிக் கொண்டு அருகில் வந்தான். இன்னும் பத்து நிமிஷத்துல வண்டி கிளம்பிடுமாம் சார் என்றான்.

இவனுக்கும் இந்தப் பேச்சுகள் எட்டியிருக்குமா? என்று யோசனையுடன் டீயை வாங்கினேன்.

அவனே ஆரம்பித்தான். நீங்க, ஸ்டேட்டுக்கு அப்புறம் நேஷனல் ஆடலியா சார்? என்றான்.

இல்லப்பா. ஸ்டேட் ஆடுன டீமில அப்போ எல்லோருக்கும் நல்ல வேலை கிடைச்சது. ரயில்வே,கஸ்டம்ஸ்,என் எல் சின்னு. எல்லா ட்ரான்ஸ்போர்ட் கார்பரேசன்னிலயும் அப்போ டீம் இருந்தது. எனக்கும் ஒரு ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன்ல கிடச்சது. மூணு வருஷம் நல்லாப் போச்சு. அப்புறம் வந்தவங்க நிர்வாக சீர்திருத்தம் பண்றேன்னு, டீமெல்லாம் வேணாம்.அவங்களும் ஆபிஸ் வேலையை முழு நேரமாப் பார்க்கட்டும்னு சொல்லிட்டாங்க.

இருபத்தஞ்சு வயசெல்லாம் இந்த ஆட்டத்துக்கு பீக்கான வயசு. அப்பப் போயி பாலத் தட்டாம பேப்பரா புரட்டுறதான்னு குழப்பம். வேலையை ரிசைன் பண்ணீட்டு நார்த் சைட் போயிட்டேன். அங்க சில வருசம் பிரைவேட் கம்பெனி டீம்கள்ல ஆடுனேன். நம்ம காலேஜ் பிடி என்னோட சீனியர்தான். அவர்தான் இங்க கோச்சா வந்துடுன்னு கூப்பிட்டாரு.

எனக்கும் அதுதான் சரின்னு பட்டது. அடுத்த தலைமுறையை உருவாக்கணும்ல.

கார்த்தி இடைமறித்தான். ”நாம் எப்படி ஆடினாலும் இண்டர்நேஷனல் லெவெல்ல பின்தங்கி தான இருக்கோம். புரபஷனலா இத ஆடமுடியாதுன்னு சீனியர்ஸ் எல்லாம் பேசிக்கிறாங்க சார்” என்றான்.

அப்ப்டி இல்ல கார்த்தி. அமெரிக்கா,ஆப்ரிக்கா,யூரோப்ல நம்மளை விட பிசிக்கலா சுப்பீரியரா இருக்காங்க.அவ்வளவுதான். நம்ம நாட்டிலயும் கிராமப்புறங்கள்ல அது மாதிரி நிறைய ஆளுக இருக்காங்க. ஐடெண்டிஃபை பண்ணி ட்ரைனிங் கொடுத்தா போதும். கிரிக்கெட்டுக்கு கிடைக்கிற இம்பார்ட்டன்ஸ் மத்த ஆட்டத்துக்கும் கிடைச்சா நாமளும் சாதிக்கலாம்.

அப்படி கிடைக்கிறப்போ, கோச்,பிளேயர், இன்ஃபிராஸ்டிரக்சர் இல்லாம இருந்துச்சுனா, இந்த கேமே இங்க அழிஞ்சிடுமே. நாம அப்படி விட்டுடலாமா? வாய்ப்பு வரும். நாம அதுக்குரிய தயாரிப்புகளோட எப்பவும் இருந்துக்கிட்டேதான் இருக்கணும்.

நீ, எதுவும் மனசில வச்சிக்காத. நல்லா விளையாடு. நல்லது நடக்கும்.என்று அவனுக்கு பதிலளித்தேன்.

சேர்மன சமாதானப் படுத்தணும், நந்தா குரூப்ப மோட்டிவேட் பண்ணனும்,பக்கத்து கிராமங்களுக்கு ஞாயித்துக் கிழமை போயி பார்க்கணும் என மனதுக்குள் பல எண்ணங்கள். முடியுமா என ஒரு கணம் தோன்றியது.

எத்தனை மேட்ச் இருபது பாயிண்ட் ட்ரெயிலிங்ல போயி ஜெயிச்சிருக்கோம். இதையும் பார்ப்போம் என்று நினைத்தபடியே வண்டியில் ஏறினேன்.



உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் போட்டிக்கான சிறுகதை

June 02, 2009

உரையாடல் சிறுகதைப் போட்டி தொடர்பாக தி.நகரில் ஒரு எதிர்பாராத பதிவர் சந்திப்பு

டயரிக்குறிப்புகள் எழுதி எழுதி டைரி தீர்ந்து விட்டதால் புது டைரி வாங்க டி நகர் வருகிறார்
அப்துல்லா. சாந்த சக்கு பாய் பட டிவிடி தி நகர் பிளாட்பார்மில் கிடைப்பதை அறிந்து அதை
வாங்க வருகிறார் முரளிகண்ணன். கிருஷ்ணவேணி திரையரங்கில் பகல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறார் கேபிள் சங்கர். தி நகரில் ஒரு கடையில் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப் படவில்லை எனக் கேள்விப்பபட்டு அதை தட்டிக் கேட்க வருகிறார் டாக்டர் புருனோ. எதிர்பாராமல் அனைவரும் ஒரு டீக்கடையில் சந்திக்கிறார்கள்.

பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் பேச்சு, பதிவர் பைத்தியக்காரன் அறிவித்திருக்கும் உரையாடல் சிறுகதைப் போட்டியை நோக்கி திரும்புகிறது.

புருனோ : என்ன முரளி எழுதியாச்சா?

முரளி : டாக்டர் விளையாடுறீங்களா?. ஒரு பரிசு இல்ல ரெண்டுன்னா நிறைய
ஜாம்பவான்கள் கலந்துக் கிட்டாங்க, போட்டி கடுமை அதான் கிடைக்கலைன்னு
சமாளிக்கலாம். இல்லைன்னா பாலிடிக்ஸ்னு கதை உடலாம். இங்க 20 பரிசு.
இருபதுக்குள்ள கூடவா நீ இல்லன்னு எல்லாரும்
கலாய்ச்சிட்டாங்கண்ணா?

அப்துல் : ஏன்னே போட்டி அவ்வளவு கடுமையாவா போட்டியிருக்கு?

முரளி : நீங்க வேற. அந்தக் கால பதிவர் பினாத்தலார்ல இருந்து நாளைக்குத்தான்
பிளாக்கையே ஆரம்பிக்கப் போறவர் வரைக்கும் களத்துல இருக்காங்க. இப்பவே
இருபது, முப்பது கதை வந்துருச்சாம். இன்னும் இந்த மாச கடைசி வரைக்கும்
டைம் இருக்கு.

புருனோ : டி என் பி எஸ் சி எக்சாம் ரெண்டு லட்சம் பேரு எழுதுறாங்க. அதுக்கு கைடு
வருது. ஆனா இந்த போட்டிக்கு ஆதிமூலகிருஷ்ணன் கைடு போட்டுருக்காருன்னா
எவ்வளவு பேரு கலந்துக்கிருவாங்கண்ணு கணக்குப் பண்ணிக்குங்க.

அப்துல் : கேபிள், புருனோ அந்த பிகர கணக்குப் பண்ண சொல்லல.

கேபிள் : ஹி ஹி. ஹீரோயினுக்கு சூட் ஆகுமான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

முரளி : யாரெல்லாம் நடுவரா இருப்பாங்கண்ணு தெரிஞ்சா நல்லாயிருக்கும்.

அப்துல் : ஏன்னே போட்டி முடியிறவரைக்கும் டெய்லி 10 பின்னூட்டம் அவங்க பதிவில
போட்டு கரெக்ட் பண்ணலாம்னு பார்க்குறீங்களா?

புருனோ : சே சே பைத்தியக்காரன் வேற லெவல்ல்தான் யோசிப்பாரு. பிரபல எழுத்தாளார்
யாராச்சும் இருக்கும்.

கேபிள் : அப்ப அவங்களுக்கு ஏத்த மாதிரி எழுதி அனுப்பிச்சுடுவோம். யாராயிருக்கும்
டாக்டர்?

புருனோ : நாஞ்சில் நாடன்

கேபிள் : அப்போ நாகர்கோயில் ஏரியாவில ஒரு சமூகப் பிரச்சினையை டச் பண்ணுவோம்.

புருனோ : சாரு நிவேதிதா

கேபிள் : ஜெயமோகனைத் திட்டி நாலு வரி எழுதிடுவோம்.

புருனோ : ஜெயமோகன்

கேபிள் : அப்போ கதையில சாருவையும் ரெண்டு வரி திட்டி வச்சுடுவொம்.

புருனோ : எஸ் ராமகிருஷ்ணன்

கேபிள் : ஒரு பயணக்குறிப்ப புகுத்திடுவோம்.

புருனோ : ச தமிழ்செல்வன்

கேபிள் : கொஞ்சம் கரிசல கரைச்சு ஊத்திடுவோம்.

புருனோ : பா ராகவன்

கேபிள் : நாலஞ்சு கோயிஞ்சாமிய தூவிடுவோம்.

புருனோ : நாகார்ஜூனன்

முரளி : ம்ம் அமலாவையும் அனுஷ்காவையும் பாராட்டிடுவோம். கேபிள்ஜி இதென்ன
கொத்து புரோட்டாவா? கரைச்சிடுவோம், தூவிடுவோம்னு.

அப்துல் : இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணே. என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான்
இருக்குண்ணே.

முரளி : என்ன, நடுவர்கிட்டபோயி இனிமே நான் பாட மாட்டேன்னு சொல்லப்போறீங்களா?

அப்துல் : அதில்லண்ணே. நாம அகநாழிகை,வடகரை வேலன் மாதிரி ஆளுங்களப் பிடிச்சு
இதே மாதிரி போட்டி நடத்துறோம். முடிவு இந்தப் போட்டிக்கு அப்புறம் அறிவிக்கப்
படும்னு சொல்லுறோம். 200 பேருக்கு பரிசு. ஆளுக்கு ரூபாய் 15,000. ஒரே கண்டிசன்
உரையாடலுக்கு கதை அனுப்பிச்சவங்க இதுக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்லிடுவோம்.

புருனோ : அப்படியும் சில பேர் மசியமாட்டாங்களே.

கேபிள் : நாம் வேணா பெங்குவின் பதிப்பகத்துல, ஹார்ட் பவுண்டுல ஸ்பெசல் எடிசனா
உங்க கதையெல்லாம் வரும். அதுவும் ஆங்கில மொழிபெயர்ப்போடனு ஆபர்
கொடுப்போம். அங்க கதை போட்ட எல்லாரும் வாபஸ்
வாங்கிட்டு இங்க கதைய கொடுத்துடுவாங்க.

முரளி : சரி, இதுக்கெல்லாம் ஆகிற செலவு?

அப்துல் : இன்னும் பச்சப்புள்ளையா இருக்கீங்களேண்ணே. நம்ம பதிவுலகத்தப் பத்தி
தெரியாதா?

நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். நாமளே அனானியாப் போயி அதில பெட்ரோல ஊத்துவோம்.
குசும்பன், கார்க்கி மாதிரி ஆளுங்க உடனே எதிர்ப்பதிவு
போடுவாங்க. வலையுலகமே பத்தியெறியும். நாம எஸ்கேப்.

முரளி,கேபிள், புருனோ : சூப்பர். கலக்கிடுவோம் என்று மகிழ்ந்தபடியே கலைகிறார்கள்.

June 01, 2009

நானும் கமல்ஹாசனும்

நான் திரைப்படம் பார்க்க ஆரம்பித்த நாட்களில் ரஜினி பில்லா, முரட்டுக்காளை,கழுகு என மிரட்டிக் கொண்டிருந்தார். கமலும் குரு, எல்லாம் இன்ப மயம், சவால் என போட்டி போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்காமல் கமலைப் பிடித்தது எதற்க்காக என்பதற்க்கு உளவியலாளார்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நான் கமல் ரசிகனாக தெருவில் பார்ம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆண்டு சகலகலாவல்லவன் எங்கள் ஊருக்கு வந்தபோது எங்கள் தெருவே விழாக் கோலம் பூண்டது. முதல் நாள் இரவு டேப்ரிக்கார்டரில் படத்தின் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டேயிருந்தார் எதிர் வீட்டு செல்வம் அண்ணன். அவர் வீட்டு வாசலில்தான் அடுத்த நாள் தியேட்டரில் வைக்கப்படப் போகும் தட்டிகள் தயாராகிக் கொண்டிருந்தன. பழைய சைக்கிள் டயர்களின் உள்ளே எக்ஸ் வடிவத்தில் மூங்கில் தப்பைகளை வைத்து அதை உறுதிப்படித்தி, பின்னர் அதன் மீது வெள்ளைப் பேப்பர்களை ஒட்டி தட்டிகள் தயாரிக்கப்படும்.

அதில் சகலகலா வல்லவனைக் காண வரும் கண்களுக்கு நன்றி. இவண் காதல் இளவரசன் கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று எழுதி கீழே மன்ற உறுப்பினர்களது பெயர்களை எழுதுவார்கள். நான் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென செல்வம் அண்ணன், எழுதிக்கொண்டிருந்தவர்களிடம்

“டேய், இவன் பேரையும் எழுதுங்கடா” என்று சொல்லவும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. அடுத்த நாள் தியேட்டருக்குச் சென்று அதை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடுநிலைப் பள்ளி நாட்களிலும், பின்னால் மேல்நிலைப் பள்ளி விடுதி வாழ்க்கையிலும் ரஜினி – கமல் சண்டை என்றாலே கமல் அணியின் முக்கிய தளபதி நான் தான். எந்தப் படம் எவ்வளவு நாள் ஓடியது? வசூல் என்ன? போன்ற விபரங்களுடன் சண்டை போடுவேன்.

பின்னர் கல்லூரிக்குள் நுழைந்ததும் மனம் பக்குவப்பட்டது. எல்லாப் படங்களையும் ரசிக்கும் மனநிலை ஏற்பட்டது. கல்லூரி முதலாண்டு தீபாவளிக்கு தளபதியும் குணாவும் ரிலீஸ். நான் ரஜினி,மணிரத்னம்,மம்முட்டி மற்றும் பாடல்களுக்காக தளபதிக்கே ஓப்பன் ஷோ சென்றேன். அங்கு என்னை எதிர்பாராத ”ராஜபந்தா ரஜினிகாந்த்” ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

நான் அவர்களிடம் சென்று விட்டுக்கொடுக்காமல் ” குணாவுக்கு டிக்கட் கிடைக்கலை, இங்க தான் பிரீயா இருக்குன்னு வந்தேன்” என்று இனிமா கொடுத்தேன்.

பின்னர் சென்னை வாசம். பல திரைப்பட கலைஞர்கள், நண்பர்கள், சிறு பத்திரிக்கைகள் தற்போது இணையம் என கமலைப் பற்றி கேள்விப்படாத எதிர்மறை செய்திகள் இல்லை.

யாரையும் மதிக்க மாட்டார், கர்வி, துதிபாடிகள் தான் அண்ட முடியும் என அவரைப் பற்றி கேட்காத செய்திகள் இல்லை.

எனக்கும் கமல்ஹாசனுக்கும் உள்ள பிரியமானது கடலளவு. இந்த இங்க் பில்லர்களால் அதை எவ்வளவு உறிஞ்ச முடியும்?

இன்று என் வாழ்வின் முக்கியமான நாள். கமல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப் பட்டறை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். தேநீர் இடைவேளை முடிந்து பங்கேற்பாளர்கள் அரங்கத்துக்கு உள்ளே சென்று கொண்டு இருந்தனர். கமல் வெளியே நின்று கொண்டிருந்த தன்னார்வலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


நீல நிற ஜீன்ஸ், பயிற்சிப் பட்டறை சீருடையான சாம்பல் நிற டி சர்ட், சாதாரண லெதர் செருப்பு, கையில் கறுப்பு நிற டயல் மற்றும் வாருடன் கூடிய வாட்ச். உன்னைப் போல் ஒருவனுக்காக ட்ரிம் செய்யப்பட்ட தாடி. 55 வயதில் 30க்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றத்தில் இருந்தார்.

அங்கே இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். நான் கமலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பி ஆர் ஓ நிகில் முருகன் வாங்க போட்டோ எடுத்துக்குங்க என்று அழைத்தார். மிக மகிழ்ச்சியுடன் என் ஆதர்சத்தின் அருகில் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்ததும், ”உன்னைப் போல் ஒருவன் தீபாவளி ரிலீஸா” என அவரிடம் கேட்டேன்.

”இல்லை, அதற்கு முன்னாலேயே வந்து விடும்” என பதிலளித்தார். அனேகமாக ஆகஸ்ட் 15க்கு வரும் என நான் நினைத்துக் கொண்டேன்.

அங்கு இருந்த செக்யூரிட்டிகள், உணவு கொண்டுவந்த கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் அனைவரும் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர். கேட்டரிங் உதவியாளர் ஓடிச்சென்று வண்டி டிரைவரையும் கிளீனரையும் அழைத்து வந்தார். அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டு போஸ் கொடுத்தார். பின்னர் பட்டறை நடக்கும் அரங்கத்தின் உள்ளே சென்றார்.

நான் வெளியே வரும் போது, அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்கள் பேசிக் கொண்டார்கள். “ கமல் அப்படி இப்படின்னாங்க, எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யுறாரு, ரொம்பத் தன்மையா இருக்காரு” என.

கேட்டரிங்காரர்களும் அதே கருத்தை எதிரொலித்தார்கள். அங்கு இருந்த தன்னார்வலர்களும் டிட்டோ.

இந்த மாதிரி ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஊற்றுவதால் எனக்கும் கமலுக்கும் இடையேயான பாசக் கடலின் நீர் மட்டம் உயர்ந்துவிடுமா என்ன?