January 02, 2012

2002 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

2001 ஆம் ஆண்டின் மொக்கைப் படங்களால் டயர்ட் ஆகி இருந்த தமிழ் சினிமா துறையையும், ரசிகர்களையும் ஆசுவாசப் படுத்தும்படி இந்த ஆண்டில் சில படங்கள் வெளியாகின.

அறிமுகங்கள்

இன்று பல கிராமியம் சார்ந்த, யதார்த்தக்கதை களன் கொண்ட படங்கள் வருவதற்கு அடித்தளமிட்ட படம் என்று அழகியைச் சொல்லலாம். வட மாவட்ட கதைக்களனை தமிழ் சினிமாவிற்கு வீரியமாக கொண்டுவந்த படம் இதுதான். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் தங்கர் பச்சான் தன் சிறுகதையையே அழகியல் ததும்ப படமாக்கினார். அன்று 30 வயதான பல ஆண்களை மூக்கு சிந்த வைத்த படம்.

இன்று சக போட்டியாளர்களாக விளங்கும் சிம்புவும், தனுஷ்ஷும் நாயகர்களாக அறிமுகம் ஆனது இந்த ஆண்டில்தான். எங்க வீட்டு வேலன் என்னும் படத்தை தன் சிறு வயதிலேயே அனாயாசமாக சுமந்திருந்தாலும், மோனிஷா என் மோனலிஷா வில் ஒரு பாட்டுக்கு வாலிப தோற்றத்தில் ஆடியிருந்தாலும், நாயகன் என்னும் முத்திரையுடன் சிம்பு அறிமுகமானது இந்த ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் தான். டி ஆர் தன் மகனுக்காக தமிழ் மக்களையும், பிரகாஷ் ராஜ், சீதாவையும் கடுப்படித்தார். இந்தப் பட அறிமுகம் சார்மி பின் தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தார்.

செல்வராகனுக்கும் இதை அறிமுக ஆண்டு என சொல்லலாம். ஆனால் அபிசியலாக சொல்ல முடியாது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தன் பெயரைப் போட்டுக் கொண்டார். யுவனின் அருமையான பாடல்கள் துள்ளுவதோ இளமைக்கு பலம் சேர்த்தது. ஷெரின்னின் கண் பார்வையில் வயசுப் பசங்கள் அனைவரும் சுருண்டார்கள். தனுஷ் இதில் அறிமுகமான போது யார் கணித்திருக்க முடியும், அவர் ரஜினியின் மாப்பிள்ளை ஆவார், தேசிய விருது பெறுவார். படங்களில் காண்பிப்பது போல் ஒரே பாட்டில் உலகப் பிரபலம் அடைவார் என்று. உண்மையான சிண்ட்ரெல்லா ஸ்டோரியை நாம் லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே சமயத்தில் தான் இந்தி முதல்வன் ரீமேக்கில் கையைச் சுட்டுக்கொண்ட ஏ எம் ரத்னத்திற்காக பாய்ஸ் படத்தை ஷஙகர் எடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு படங்களின் மைய இழையும் ஒன்று தான். ஆனால் அப்படம் தோல்வி அடைந்ததுடன் இல்லாமல் அவப் பெயரையும் பெற்றுத்தந்தது.

ஷங்கரின் உதவி இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாமுராய் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தியன், சிட்டிசன் என முன் பிரதிகள் இருந்ததால் இது எடுபடாமல் போனது. ஷங்கரின் இன்னொரு உதவி இயக்குநரான வசந்த பாலனும் இந்த ஆண்டு ஆல்பம் மூலம் அறிமுகமானார். பின் இருவருமே முறையே காதல், வெயில் என தங்கள் குருவின் தயாரிப்பில் தங்களை நிரூபித்தார்கள்.

இன்று எஸ் பி முத்துராமன், ராஜசேகர், கே எஸ் ரவிகுமார் வரிசையில் மசாலா இயக்குநராக அறியப்படும் அருவா ஹரி இந்த ஆண்டு தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். மதுரை பேக் டிராப்பில் நடுத்தட்டு இளைஞன் வன்முறை பாதைக்கு பயணப்பட்டு பின் மீள்வதை வெற்றிகரமாக சொன்ன படம் இது.

நகைச்சுவை நடிகராக பார்ம் ஆகி விட்ட சிங்கம்புலி இயக்குநராக அறிமுகமான படம் ரெட். அஜீத், மதுரை பேக் டிராப் இருந்தும் படம் மரண அடி வாங்கியது.

பேராவூரணி எம் எல் ஏ அருண் பாண்டியன் எம் எல் ஏ ஆகக் காரணமான படம் தேவன். ரேஷன் அரிசி கடத்தலை மையமாக வைத்து தன் நூறாவது படத்தை [உண்மையிலே அவ்வளோ நடிச்சிட்டாரா?] அவரே இயக்கினார். விஜயகாந்த், கார்த்திக் துணை நின்றார்கள்.

ரோஜா கூட்டம் மூலம் ஸ்ரீகாந்த்தும், பைவ் ஸ்டார் மூலம் பிரசன்னாவும், தமிழன் மூலம் பிரியங்கா சோப்ராவும் இந்த ஆண்டு தமிழுக்கு அறிமுகமானார்கள்.

திறமையை நிரூபித்தவர்கள்

இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் ஆசிட் டெஸ்ட். ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கதை இருக்கும். அதை அப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இயக்கி வெளியிட்டால் அது வெற்றிதான். ஆனால் இரண்டாம் படம்?. அதில் வெற்றி பெறுபவர்களைத்தான் கோடம்பாக்கம் அங்கீகரிக்கிறது.

தீனா படத்தின் மூலம் கவனத்தைப் பெற்ற ஏ ஆர் முருகதாஸுக்கு ரமணா பெரும் பெயரைத் தந்தது. விஜயகாந்த் அரசியலில் இறங்க முதுகெலும்பாக இருந்தது. இப்படம் வெளியான நேரத்தில் அரசுப்பணியில் இருந்த உறவினர் ஒருவரை சந்தித்த போது, “படத்தைப் பார்த்தா வாங்கவே பயமா இருக்குடா” என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒரு இம்பாக்டை கொடுத்த படம் இது.

ஆனந்தம் படம் மூலம் கால் வைத்த லிங்குசாமி வேகமெடுத்தது ரன் படத்தின் மூலம். அருமையான பாடல்கள், விவேக் காமெடி, உணர்ச்சிகளை சரியாக காட்டத் தெரிந்த நாயகன், அழகான கதாநாயகி, போதுமான வில்லன் என மக்களைக் கவர்ந்தது இந்தப் படம்.

நகைச்சுவை படங்கள்

இந்த ஆண்டில் ஏராளமான முழு நீள நகைச்சுவைப் படங்கள் வந்தன. பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், விவரமான ஆளு, ஷக்கலக்க பேபி, சார்லி சாப்ளின், ஒன் டூ த்ரி, தென்காசிப் பட்டணம், சுந்தரா டிராவல்ஸ், நைனா, இதில் சார்லி சாப்ளின் இந்திக்கு நோ எண்ட்ரி என்ற பெயரில் சென்றது. பம்மலும், தந்திரமும் சன் டிவிக்கு விடுமுறை நாட்களில் காலை 11க்கு திரையிட உபயோகப் பட்டது.

ஏமாற்றங்கள்

99 படையப்பாவுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து வந்த படம் பாபா. மதுரையில் இப்படம் திரையிடப்பட்டிருந்த அரங்கைச் சுற்றி அதிகாலை இரண்டு மணிக் காட்சி காண்பதற்காக
ஒரு கிமீக்கு ரசிகர் வெள்ளம். இரவு 9 மணியில் இருந்தே பட்டாசு சத்தமும், குரலோசையும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இங்கயே கத்தி தீர்த்துடாதீங்கடா, படத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்க என்று பில்லா காலத்து ஆட்கள் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். படம் ஆரம்பித்தது. ஏதோ நியூஸ் ரீல் போல புண்ணிய ஷேத்திரங்கள், சாமியார்கள் என போய்க் கொண்டிருந்தது. ரஜினி ஒரு டர்ன் செய்து ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொல்லி அறிமுகமாக மொத்த கூட்டத்துக்கும் பியூஸ் போனது. அவர்கள் பிரகாசமான மீண்டும் மூன்றாண்டுகள் தேவைப்பட்டது.

கன்னத்தில் முத்தமிட்டால் என்று மணிரத்னம் வந்தார். ஸ்கின் அலர்ஜி வந்துவிடும் என யாரும் அங்கே போகவில்லை.

கமர்சியல் ஹிட்டுகள்

ஏ வி எம் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் விக்ரம், சரண் காம்பினேஷனில் எடுத்த ஜெமினி நல்ல வசூலைக் குவித்தது. கலாபவனின் மிருக மிமிக்ரி, சேட்டுப் பொண்ணு, ஓ போட்ட பாடல் என கலவை சரியாக அமைந்து வெற்றி பெற்ற படம் இது. இதே ஆண்டு வந்த சாமுராயும், கிங்கும் விக்ரமுக்கு தோல்வியைத் தந்தன.

ரெட், ராஜா என படு தோல்விகளுக்குப் பின் அஜீத்துக்கு வாழ்வு தந்தது வில்லன். யூகி சேதுவின் கதை, கே எஸ் ஆரின் திரைக்கதை, அஜீத்தின் நடிப்பு வெற்றிக்குப் போதுமானதாய் இருந்தது.

சூர்யா


உன்னை நினைத்து, ஸ்ரீ என அடிவாங்கினார்.

விஜய்

தமிழனில் சறுக்கினாலும் யூத்தில் நிலை கொண்டார்.

December 25, 2011

கார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு

நண்பனொருவனின் காலம் கடந்த திருமணத்தின் போது நடந்த மது விருந்தில் பொது நண்பன் மூலம் அறிமுகமாகி, பழைய புத்தகக்கடை வைத்திருந்த காரணத்தினால் நெருக்கமானவர் கார்ல்மார்க்ஸ் (எ) சிவசுப்ரமணியன். அவர் தந்தை சித்த வைத்தியர். உடனே அவரை அகத்தியர், போகர் ரேஞ்சுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சித்த வைத்தியசாலையில் உதவியாளராய் இருந்து காய்ச்சல்,தலைவலி மற்றும் வயிற்றுவலி போன்ற எவர்கிரீன் நோய்களுக்கான சூரண பார்முலாவை கற்றுக் கொண்டு தனியே கடை போட்டவர். இலவச இணைப்பாக ஓம வாட்டர் செய்யும் பார்முலாவையும் லவட்டிக் கொண்டு இருந்தவர்.

அந்த பார்முலாதான் இப்போதும் கார்ல் மார்க்ஸின் மூலதனமாக இருந்து வருகிறது. சுற்று வட்டார குழந்தைகள், பாஸ்ட் புட் கஸ்டமர்கள், கோபமுற்ற மனைவிகளின் கணவர்கள் ஆகியோருக்கு வரும் அஜீரணக் கோளாறுகளை கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் தான் குணப்படுத்தி வருகிறது. ஓமத்தை இடித்து சில பல பொருட்களை சேர்த்து (ஆமா பெரிய கிரையோஜெனிக் பார்முலா என்று கிண்டலடிப்பார் ஏங்கெல்ஸ்) சுடுதண்ணியில் கலக்கி, டாஸ்மாக்கில் இருந்து பெறப்பட்ட பீர் பாட்டில்களில் அடைத்து கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் என்ற லேபிளை ஒட்டிவிட்டால் தோழர் ஒரு வாரம் இயக்கப் பணிக்கு வந்து விடுவார்.

இடை இடையே மாக்ஸிம் கார்க்கி பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து கணக்கு வழக்குப் பார்ப்பார். அந்த நேரத்தில் அவர் நண்பர்கள் லெனின், ஸ்டாலின், ரணதிவே மற்றும் ஜோதிபாசு ஆகியோரில் யாராவது அங்கிருப்பார்கள்.

இவர்கள் அனைவரின் பெயர் மாற்றத்திற்கும் காரணம் 15 ஆண்டுகளுக்கு முன் அத்தெருவிற்கு குடிவந்த காம்ரேட் ஒருவர்தான். அனைவரையும் மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர வைக்குமளவுக்கு அவரிடம் பேச்சுத்திறமை இல்லை. ஆனால் பெண்கள் இருவர் இருந்தார்கள். ரஜினி நல்ல கலருல்ல என்று ஆதங்கப்படும் படி ஆத்மாக்கள் இருக்கும் ஏரியா அது. அங்கே கும்மிருட்டில் கூட முகம் தெரியும் கலரில் இரண்டு வயசுப் பெண்கள் எண்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும்? மார்பிள் போல இருக்கும் இட்லியில் உப்பு அதிகமான சாம்பாரை ஊற்றி சாப்பிடும் போது கூட அந்தப் பெண்களின் முகம் ஞாபகம் வந்துவிட்டால் ம்ம் டிவைனாக மாற்றிவிடும் அளவுக்கு லட்சணமான பெண்கள்.

இதனால் சங்கரய்யா, நல்லகண்ணுவைக் கூட யாரென்று தெரியாத அந்த ஏரியா வயசுப் பையன்கள் அனைவரும் கம்யூனிசத்தை தழுவலானார்கள். ஞானஸ்னானம் செய்யும் போது பெயர்களை மாற்றுவது போல தங்கள் பெயர்களையும் மாற்றிக் கொண்டார்கள். கவனமாக ராகுல சாங்கிருத்தயன் என்னும் பெயரை மட்டும் தவிர்த்து விட்டார்கள். ஏனென்றால் அது மச்சினன் பெயர். ஆனால் பரிதாபமாக ஒன்றிரண்டு வருடங்களில்அவர்கள் வீடு மாறிப் போய்விட அம்மை போனாலும் தழும்பு நிரந்தரம் என்னும் கதையாக பெயரும், கம்யூனிஸ ஆதரவும் மட்டும் இவர்களிடம் தங்கிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள் கார்ல்மார்க்ஸ் என்னிடம் வந்து, ஒரு பசுமாடு வளர்க்கணும் தோழர், உங்களுக்குத்தான் கிராமத்துல நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களே, ஏதாச்சும் ஒண்ணை அமைச்சு விடுங்க என்று கேட்டுக் கொண்டார். காரணம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன் எம்ஜியார் பாட்டைக் கேட்டதாகவும், அதில் இருந்த

“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு”

என்ற வரிகள் கவர்ந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அது லட்சுமி என்றெல்லாம் ஓவராக பீல் பண்ணினார்.

உழைப்புக்கு உருவகமான காளை மாடுதானே கம்யூனிசத்திற்கு அடையாளம். பசுமாடு பூர்ஷ்வா இன குறியீடாயிற்றே என்ற சிந்தனை எனக்கு வந்தாலும், இவர் என்ன பிரசங்கம் கேட்டா கம்யூனிஸ்ட் ஆனவர், பிகருக்காக ஆனவர் தானே என சமாதானப் படுத்திக் கொண்டேன்.

பசுவுக்காக அலையும் போதுதான் இத்தனை ரகங்கள், சூட்சுமங்கள் இருக்கிறது என்பதே தெரியவந்ததே. சாதாரண மாடே 100 சிசி பைக்கை விட அதிக விலை விற்கிறது. அதில் கூட இனிசியல் போதும். இதில் சிங்கிள் பேமண்ட். ஈனப் போகும் மாட்டுக்கு தனி விலை. ஆர்வமாய்த்தான் இருந்தது. தோழர் கூட கேட்டார். நீங்க கூட ஒண்ணு வாங்கலாமே என்று.

மார்க்ஸுக்கு சொந்த வீடு. மாடு கட்ட சிறிது இடமும் இருந்தது. நான் இருப்பதோ வாடகை வீடு. முதல் மாடி. மகன் ஓடினாலே கீழே இருந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆசை இருக்கு மாடு வளர்க்க, அதிர்ஷ்டமிருக்கு ஸ்கிரீன் சேவராக்க.

ஒரு வழியாக நாப்பத்தஞ்சாயிரத்துக்கு படிந்தது. வண்டி வாடகை, தரகு கூலி என அரை லானா ஆகிவிட்டது. பிருந்தா காரட் என்ற பெயரை எங்கள் குழு அதற்கு பரிந்துரைத்தது.

இப்போதெல்லாம் தோழரை புத்தகக் கடையிலோ, பொதுக்கூட்டங்களிலோ காண முடிவதில்லை. மாட்டுடன் ஐக்கியமாகிவிட்டார. கன்றும் ஈந்தது அது. நீண்ட நாட்களுக்குப் பின் தோழர் சீம்பாலில் செய்த இனிப்புடன் எங்களை எதிர்கொண்டார்.

எதற்கு இந்த அவதாரம் என ஏங்கெல்ஸ் நேரடியாகவே கேட்டார். ”ஒரு கம்யூனிஸ்ட்டாக உழைப்பின் அருமையை, விவசாயிகளின் கஷ்டத்தை அறிய” என மேடைப் பேச்சுக்காக தயாரித்திருந்த உரையில் சில பகுதிகளை எங்களிடம் அவிழ்த்து விட்டார்.

”யாரையும் சந்தேகி” என எங்கள் பேராசான் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்றோம். தோழர் பிடி கொடுக்கவில்லை.

பின்னர்தான் தெரியவந்தது. தோழரின் எட்டாவது படிக்கும் பெண்ணுக்கு எஸ் எம் எஸ் வந்து கொண்டிருக்கும் சங்கதி. வீட்ல மாடு கண்ணுன்னு இருந்தா வீடு நச நசன்னு இருக்கும், வீட்டு பொம்பளைகளுக்கு அதை ஒதுங்க வைக்கவே நேரம் இருக்காது, வேளை அதிகமா இருக்கும் போது அலங்காரம் பண்ணத் தோணாது, என்ற யோசனையில் தான் தோழர் பசு வாங்கியிருக்கிறார்.

அடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆவது நமக்குப் புதுசா என்ன?

December 24, 2011

திருமங்கலமும் முல்லை பெரியாறும்

மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு மாங்கல்யம் செய்த ஊர் அதனால் திருமாங்கல்ய ஊர் என வழங்கப்பட்டு திருமங்கலம் எனத் திரிந்ததாக ஒரு கதை இந்தப் பக்கம் உண்டு. இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் பன்னிக்குண்டு. ஆதி காலத்தில் பன்னீர் மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் பன்னீர் குண்டு எனப் பெயர் பெற்று இப்போது பன்னிக்குண்டாக மாறிவிட்டது என்ற செய்தியால் திருமாங்கல்ய கதையையும் நம்பத் தொடங்கி இருந்தேன்.

அந்த பன்னிக்குண்டின் இளைய தலைமுறை தங்கள் ஊர் பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஆதி பெயரான பன்னீர்குண்டையே நிறுவிவிட வேண்டும் என பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஊரில் உள்ள சைக்கிள், பைக், கார், ட்ராக்டர் முதல் கொண்டு மாட்டு வண்டி வரை உரிமையாளர் பெயரை சிறிதாக எழுதி பன்னீர் குண்டு என்பதை முரட்டாக எழுதி வருகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு.

திருமாங்கல்யத்துக்கு சாட்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணம் கிடைத்தது. அப்போது பெய்த பெரு மழையால் மக்கள் ஆக்ரமித்த பகுதிகளில் பெரு வாரியாக தண்ணீர் தேங்கி, அரசின் கவனத்துக்கு வந்தது. ஆக்ரமிப்பை அகற்ற சகல துறையினரும் சேர்ந்து வந்த போது மக்கள் தங்களுக்குரிய ஆவணங்களை கொண்டு அதை தடுக்க முயன்றனர். அதில் ஒருவர் கொண்டு வந்த செப்பு பட்டயத்தை பார்த்து அனைவரும் மூர்ச்சை ஆனார்கள். அதில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானைகளை குளிப்பாட்ட ஏற்பாடு செய்யப்பட்ட வாய்க்காலே இப்போது ஆக்ரமிக்கப்பட்ட ஓடை என்னும் செய்தி இருந்தது. எங்கள் முன்னோர்கள் தான் யானையை குளிப்பாட்டினார்கள், அதனால் இதை ஒட்டி தங்கிக் கொள்ள எங்களுக்கு திருமலை நாயக்கர் அனுமதி கொடுத்தார் என்று வாதிட்டார் அந்த பட்டய உரிமையாளர்.
ஆனால் இன்றைய திருமங்கலம் நடுத்தர வர்க்கத்தின் அப்பட்டமான பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு சிறு நகரம். சென்ற தலைமுறையினர் பெரும்பாலும் ஈடுபட்டது ஆசிரியர் பணி. இடம் வாங்கி வீடு கட்டி, மகனை சாப்ட் வேரில் தள்ளிவிட்டு சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் சராசரிகள் நிறைந்த ஊர். பொறியியலுக்கு இணையாக பி எட், டீச்சர் ட்ரைனிங் படிக்கும் ஊர் இது. தற்போது அம்மா டீச்சர் எலிஜிபிலிடி டெஸ்ட் என்று அறிவித்த உடனேயே பல ட்ரைனிங் செண்டர்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


30,000 ஓட்டுக்கள் உள்ள இந்த ஊரில் சராசரி மாத வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் குடும்பங்கள் மட்டும் 5000க்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு டிசைனர் ஷோ ரூமோ, நல்ல திரையரங்குகளோ இல்லாத ஊர் என்பதில் இருந்தே எந்தளவுக்கு சிக்கனமானவர்கள் இங்கு இருப்பார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த இடைத்தேர்தல் ஒரு துன்பியல் சம்பவம்.

மக்கள் இங்கே அடிதடி அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. ஒரு உதாரணம். சென்ற திமுக ஆட்சியில், கருணாநிதி குடும்பத்தை கிழி கிழி யென்று அதிமுக பேச்சாளர் கிழித்தார். அதனால் அப்போதைய நகரச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய அழகிரி, ”ஏன் அவன் பேச ஆரம்பிக்கும் போதே அடிச்சு நிப்பாட்டலை?” என்று கேட்டார். பதில் அளித்த நகரம், அண்ணே இந்த ஊர்ல அடிதடி பண்ணுனா ஓட்டே போட மாட்டங்கண்ணே என்று பதில் அளித்தார். கோபப்பட்ட அழகிரி, அவரை மாற்றிவிடுமாறு தலைமைக்கு ஓலை அனுப்பினார்.

அடுத்து வந்தவரும் சரி. அதே போல் சம்பவங்கள் நடந்தபோது அமைதி காக்கவே முடிந்தது.

இரண்டு ஆண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளினால் இந்த ஊர் யார் குடியையும் கெடுக்காத சுயநல ஆசாமிகள் கொண்ட ஊர் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.

ஆனால் முல்லை பெரியாறு என் மனதை மாற்றிவிட்டது. பல சங்கங்கள் தாங்களாகவே முன் வந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக ஒரு ராணுவ ஒழுங்குடன் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த சங்கம் போராடுகிறதோ அவர்கள் 100% ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள். பொது மக்களின் ஆதரவும் அமோகம்.

பெருமையாக இருக்கிறது இங்கே இருக்க.