June 06, 2008

திண்ணையும் திருவிழாவும்


எங்கள் தெருவில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது முன்பொரு காலத்தில். தொலைக்காட்சிகள் தங்கள் கொடூர கரங்களால் குடும்ப உறவுகளை குலைத்திராத காலத்தில் அந்த திண்ணைகள் மகளிரால் நிரம்பி வழிந்தன. கணேஷ் அப்பா வந்துட்டார், குமார் அப்பா வந்துட்டார் போன்ற குரல்கள் கேட்டதும் அவருக்குரியோர் தத்தம் இல்லங்களுக்கு திரும்புவோர். மாலை 6 மணி அளவில் தொடங்கும் இந்த சந்திப்புகள் இரவு 8 மணி அளவில் முடிவுறும். அக்காலத்தில் எல்லார் வீடுகளிலும் மின்விசிறி இல்லாததும் அவர்களை திண்ணைக்கு வரவழைத்தது. புரணி என்ற வார்த்தை எனக்கு அறிமுகமானது அங்குதான். பெரும்பாலும் பழைய சினிமா கதைகள், பிறந்த புகுந்த வீடு பெருமைகள் சில கிசுகிசுக்கள் பரிமாறப்படும்.



சாதாரண நாட்களில் டல்லடிக்கும் இந்த திண்ணைகள் திருவிழா சமயங்களில் டாலடிக்கும். அந்நாளைய பதின்மவயது பெண்களின் தேசிய உடையான பாவாடை சட்டை மற்றும் தாவணிகளால் திண்ணை அலங்கரிக்கப்படும் . (இப்போதும் அணிகிறார்களே சுடிதார் நைட்டி :-(( ). அவர்கள் போடும் கோலமும் அதற்கு நண்பிகளின் கமெண்ட் என தெருவே கலகலப்பாக இருக்கும். மாட்டுப்பொங்கல் அன்று எல்லோரும் திண்ணையில் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது, மருதாணி வைப்பது என அமர்க்களப்படும். தீபாவளி அன்று அவர்கள் திண்ணையில் நின்று கொண்டு அண்ணன் தம்பிகள் வெடிவெடிப்பதை கலாய்ப்பார்கள். அதெல்லாம் ஒரு வசந்த காலம்.



இந்த கோடை விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது வெறிச்சோடிய திண்ணைகள் என்னை வரவேற்றன. பல திண்ணைகள் வீட்டின் வரவேற்பரையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தன. அந்த 6 – 8 ல் அவர்கள் நெடுந்தொடர் கதாபாத்திரங்களுடன் உறவாடிக்கொண்டிருந்தனர். வாம்மா திண்ணையில உட்கார்ந்து பேசலாம் என்ற என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள் அம்மா. வழக்கொழிந்து போன தொழில்களில் விரைவில் சேரப்போகும் தயிர்,வளையல் விற்போர், ஈயம் பூசுதல்,பிளாஸ்டிக் ரிப்பேர் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது மட்டும்தான் இப்பொது திண்ணைகள் உயிர் வாழ்கின்றன.

தலை பாலபாரதி ஆரம்பித்து சென்ஷி சொன்னதற்காக முதலில் எழுதி விட்டேன். ஆர்வமுள்ளவர்கள் திண்ணை பற்றி எழுதலாம். ஆர்வம் தெரிவித்த முத்துலட்சுமி அவர்களை அடுத்து எழுத அழைக்கிறேன்

திண்ணை பற்றிய அணைத்து பதிவுகளையும் காண

24 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி .. மிகவேகமாக ஆரம்பித்துவிட்டீர்கள்...அழகான படம்.
இப்போ புரணி பேசாம டிவி பத்தி தானே பேசறாங்க எதோ நல்லது தானேன்னு சிலர் டிவிக்கு வக்காலத்து வாங்கவும் வசதியாப்போச்சு..
அழைப்புக்கு நன்றி..
என் திண்ணைக்கனவைப்பற்றி கண்டிப்பாக இன்று எழுதி விடுகிறேன்..

(பத்திபிரிச்சு போடலாமே.. படிக்க எளிதாக இருக்கும்..)

DHANS said...

திண்ணை பதிவை படித்தவுடன் எனக்கு பழைய ந்யபகம் அப்படியே மனதில் நிழலாடியது. நான் பார்த்த வீட்டு திண்ணைகளை கடந்த வாரம் ஊருக்கு செல்கையில் கவனித்தேன், திண்ணை இருந்த வீடுகள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டன. இனி திண்ணைகளை காண்பது அரிது :(

சென்ஷி said...

//வழக்கொழிந்து போன தொழில்களில் விரைவில் சேரப்போகும் தயிர்,வளையல் விற்போர், ஈயம் பூசுதல்,பிளாஸ்டிக் ரிப்பேர் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் போது மட்டும்தான் இப்பொது திண்ணைகள் உயர் வாழ்கின்றன//

:((

நல்லா எழுதியிருக்கீங்க முரளி...

ஹைய் அடுத்தது அக்காவா :))

ஜமாய்ங்க... :))

முரளிகண்ணன் said...

பத்தி பிரித்து போட்டுவிட்டேன். உங்க கச்சேரிய ஆரம்பிச்சுருங்க முத்துலட்சுமி அவர்களே

முரளிகண்ணன் said...

சென்ஷி வாய்ப்பு உருவாக்கி கொடுத்ததற்கு நன்றி

முரளிகண்ணன் said...

\\ இனி திண்ணைகளை காண்பது அரிது :(
\\
ஆமாம் தன்ஸ்

Athisha said...

அபார்ட்மென்ட்ல திண்ணைக்கு எங்க போறது ,

ஆனாலும் நீங்க ரொம்ப வேகம்ணா,
பாலாணா பதிவுல பின்னூட்டம் வெளியாகரதுக்கு முன்னால உங்க பதிவே வந்திருச்சு .

நல்லாருக்குணா...வாழ்த்துக்கள்

அந்தக்காவுக்கு அடுத்து நான்தான் இத தொடருவேன் சொல்லிபுட்டேன்

முரளிகண்ணன் said...

\\அந்தக்காவுக்கு அடுத்து நான்தான் இத தொடருவேன் சொல்லிபுட்டேன்\\

அதிஷா அவங்ககிட்ட தகவல் சொல்லீர்றேன்

Athisha said...

// அவங்ககிட்ட தகவல் சொல்லீர்றேன்//

சொல்லுங்க சொல்லுங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் எழுதியாச்சு.. அப்படியே மூணுபேரைக்கூப்பிட்டாச்சு.. நிறைய பேரு இருக்கோமே.. அப்படியே எல்லாரும் வழக்கம்போலமுடிஞ்சப்போ எழுதுவாங்க தொடர்ந்து பதிவுகள் அதையொட்டி பதிவுகள் தினமும் வந்து கொண்டிருக்கும்.. (இது போல தொடர் விளையாட்டுகளில் இரண்டு மூன்று பேர் கூப்பிடுவது பழக்கம் )
அதிஷா ஜீவ்ஸ் ..ஆயில்யன் ..

கிரி said...

திண்ணை படம் சூப்பரா இருக்குங்க :-)

Viji said...

முரளி சார் தினம் தினம் சூப்பரா பதிவுகள் எழுதறீங்களே. கலக்குங்க :)

- யெஸ்.பாலபாரதி said...

முரளி, திண்ணை குறித்த உங்கள் அனுபவத்தையும் பார்வையையும் பதிவு செய்தமைக்கு நன்றிகள்!

உங்களின் பதிவை இங்கே சேமித்து இருக்கிறேன்.

http://blog.balabharathi.net/திண்ணை/

ராமலக்ஷ்மி said...

திண்ணையைப் பற்றி சுவாரசியமான பதிவு.
//பல திண்ணைகள் வீட்டின் வரவேற்பரையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தன. அந்த 6 – 8 ல் அவர்கள் நெடுந்தொடர் கதாபாத்திரங்களுடன் உறவாடிக்கொண்டிருந்தனர். //

நிதர்சனம். உயிருள்ள நண்பர்கள் ஆரவாரித்திருந்த இடத்தை உயிரற்ற பிம்பங்கள் ஆக்கிரமித்து கொண்டதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
திண்ணையைப் பற்றி சுவாரசியமான பதிவு.


கயல்விழி அவர்கள் சுட்டிய வழியில் தங்கள் திண்ணையை எட்டிப் பார்க்க வந்தேன். எனக்கும் திண்ணை கட்டும் எண்ணம் இருக்கிறது. கட்டியதும் எட்டிப் பார்க்க அழைக்கிறேன்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலட்சுமி. தங்களின் திண்ணைப்பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

துளசி கோபால் said...

திண்ணைக்காலமுன்னு இப்பச் சொல்லிக்கலாம். இருக்கும் சில திண்ணைகளிலும் கம்பிஅழி போட்டு புது ஆட்கள் யாரும் அண்டவிடாமப் பண்ணி வச்சாச்சு.

அவுங்களைச் சொல்லியும் என்ன பயன்? குற்றமும் மலிஞ்சுபோச்சே. திண்ணையில் ஏறி, ஜன்னல்வழியா திருடிக்கிட்டுப்போக எத்தனைபேர் திரியறாங்க......(-:


திண்ணைக்குறையை நீக்க வீட்டு முன்வாசலில் ஒரு பெஞ்சு போட்டு வச்சுருக்கேன். அதுலே ஏறி, முன்வாசக் கதவுக் கண்ணாடியில் பக்கத்துவீட்டுப் பையன்' எட்டிப் பார்க்கிறான். போன்னு துரத்த முடியாது. அவனுக்குப் பொறுமை ஜாஸ்தி. வந்து எதாவது(?) தின்னத்தரும்வரையில் உக்கார அவனுக்காவது ஒரு திண்ணை இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

நம்மைப் பார்த்தவுடன் வாளிப்பான உடம்பை அப்படியே நீட்டி, வாலைக் குழைச்சு ஆட்டுவான். வாய் உதிர்க்கும் ஒற்றைச்சொல் 'மியாவ்':-))))

முரளிகண்ணன் said...

வாங்க டீச்சர். உங்க பார்வையில் திண்ணை பற்றி எழுதுங்க.

பாரதி தம்பி said...

பிரமாதம். நல்ல எழுத்து நடை. விரைவில் நானும் எழுதுகிறேன்.

முரளிகண்ணன் said...

நன்றி ஆழியூரான். உங்கள் திண்ணை பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

துளசி கோபால் said...

தினம் தினம் புதுத் திண்ணை வேணுமுனா எப்படி? அதான் ஏறக்கொறைய ரெண்டரை வருசம் முந்தியே திண்ணைக்கு பறந்துருக்கேனே........

அப்ப இருந்த எண்ணத்தை மாத்திக்கும் எண்ணம் இல்லாததால் இதோ அந்தப் பதிவின் சுட்டி.

என் திண்ணை


அம்புலிமாமா வாங்குவதே அந்தத் திண்ணைவச்ச வீடுகளின் படத்துக்காக!

ஆகாய நதி said...

ரொம்ப நல்லாருக்கு :) எனக்கும் திண்ணை வெச்ச வீடு கட்டனும் அப்டினு ஆசை தான் இந்த காஸ்ட்லி சென்னைல அதெல்லாம் முடியுமா?
:(

பரிசல்காரன் said...

//இந்த கோடை விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது வெறிச்சோடிய திண்ணைகள் என்னை வரவேற்றன//

திண்ணையே இல்லாத வீடுகள் கொடுமை என்றால், இது அதை விடக் கொடுமை!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ஆகாய நதி

\\ஆசை தான் இந்த காஸ்ட்லி சென்னைல அதெல்லாம் முடியுமா?
\\

மனமிருந்தால் மார்க்கமுண்டு

ராமலக்ஷ்மி said...

முரளிகண்ணன் said...
//வருகைக்கு நன்றி ராமலட்சுமி. தங்களின் திண்ணைப்பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//

உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது. நேரம் கிடைக்கையில் பாருங்கள். தங்கள் பதிவிலேயே என் திண்ணையையும் இணைத்திருக்கிறேன்.