October 25, 2009

தமிழ்சினிமாவில் மீனவர்கள்

உலகின் பாரம்பரியத் தொழில்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது உழவும், நெசவும். அதற்கு அடுத்ததாகத்தான் நமக்கு மீன்பிடித் தொழில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் உழவுக்கும் நெசவுக்கும் முன்னரே கூட இந்த தொழில் நடைபெற்றிருக்கக் கூடும். தமிழ்நாட்டில் சென்னை, கடலூர்,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இத்தொழில் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

உழவுத் தொழிலைப் பற்றி தமிழ் சினிமா கருத்தியல் ரீதியாக என்ன சொல்லி இருக்கிறது? என்று பார்த்தால் நமக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தான் கிடைக்கும். எம்ஜியாரின் விவசாயி முதல் தற்காலத்திய படங்கள் வரை விவசாயத்தை ஒரு பேக் ட்ராப்பாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளன. விவசாயிகள் கூட்டுறவாக செயல் படவேண்டும், பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், காவிரி பிரச்சினை (ஒரு படம் எடுக்கப்பட்டது, வெளிவரவில்லை) என்பது போன்ற எந்தக் கருத்தையும் ஆணித்தரமாகச் சொல்லாமல் மேம்போக்காக மட்டுமே காட்டி வந்துள்ளன.

நெசவைப் பற்றி இன்னும் மோசம். இப்போதுதான் ஒரு காஞ்சிவரம் வந்திருக்கிறது. நெசவைத் தவிர அதன் உப தொழில்களான சாயப் பட்டறை போன்றவற்றைப் பற்றிய பதிவுகள் தமிழ்சினிமாவில் இல்லை. ஸ்ட்ரைக் நடக்கும் காட்சி, அதன்மூலம் ஒரு ஹீரோயிஸக் காட்சிக்கு மட்டுமே நெசவு ஆலைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அது மாதிரியான ஸ்பின்னிங் மில்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் போன்றவற்றை ஒரு வசனமாகக் கூட காட்டியதில்லை நம் சினிமா. நமக்குத் தெரிந்ததெல்லாம் போனஸ் பிரச்சினை மட்டுமே.

நெசவுத் தொழிலில் சம்பந்தமான படங்களில் வீரம், ஈரம் மற்றும் கதைக்குத் தேவையான சம்பவங்கள் குறைவு என்று சொன்னாலும் அதற்கெல்லாம் பஞ்சமேயில்லாத மீனவர் வாழ்க்கையையாவது நம் சினிமா ஒழுங்காக பதிவு செய்திருக்கிறதா என்றால் அதிலும் ஏமாற்றமே.

படகோட்டி (எம்ஜியார்), தியாகம் (சிவாஜி), கடல்மீன்கள் (கமல்ஹாசன்), சின்னவர், கட்டுமரக்காரன் (பிரபு), கடலோரக் கவிதைகள் (சத்யராஜ்), கடல் பூக்கள் (முரளி, மனோஜ்), செம்பருத்தி (ராதாரவி, மன்சூர் அலிகான்), நிலாவே வா (விஜய்), சிட்டிசன் (அஜீத்) என பல படங்களில் பலர் மீனவர் வேடத்திலோ அல்லது மீனவக் கிராமங்களில் வாழ்வது போன்றோ காட்சியமைப்புகள் உள்ளன.

பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகளும், கடல் பூக்களும் வெங்கடேசின் நிலாவே வாவும் தென் தமிழக மீனவ கிராமத்தை கதைக்களமாக கொண்ட படங்கள். சிட்டிசனை டெல்டா மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டம் வரையில் உள்ள மீன் பிடிப் பகுதிகளில் ஒன்று என்பது போல் (அத்திப்பட்டி) சொல்லி இருப்பார்கள். சின்னவர், கட்டுமரக்காரன் போன்றவை சுத்தமான மைய நீரோடைத் தமிழை பேசும் படங்கள்.

இதில் என்ன பிரச்சினை? சென்னை காசிமேடு, ராயபுரம் மக்கள் பேசும் மீனவ பாஷைக்கும், கடலூர் தேவனாங்குப்பம் பகுதி பாஷைக்கும், கன்னியாகுமரி பாஷைக்கும் வேறு பாடு உண்டு. கன்னியாகுமரி மீனவர்களின் பாஷை ஓரளவுக்கு நிலாவே வா படத்தில் காட்டியிருப்பார்கள். ஆனால் மற்ற படங்களில் அதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது.

படகோட்டியில் எம்ஜியாரும், சரோஜாதேவியும் அன்பேவா வில் பேசியது போலவேதான் பேசுவார்கள். தியாகம் படத்தில் சிவாஜியும், கடல் மீன்களில் கமலும் அப்படித்தான். கடல் பூக்கள் திரைப்படத்தில் முரளி ஓரளவு முயற்சித்திருப்பார்.

சரி பாஷையை விட்டுவிடுவோம். வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறதா? மீனுக்கு வியாபாரிகள் விலை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், மீனவர்களின் குடிப்பழக்கம், அவர்களின் கோபம் ஆகியவையே மீண்டும் மீண்டும் பதிவு செய்யப் படுகின்றன. சில படங்களில் மட்டும் எந்திர படகுகளால் கட்டுமர மீனவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இது மட்டும் தானா, மீனவர்களின் பிரச்சினை? கச்சத்தீவு, இலங்கை ராணுவ அத்துமீறல்கள் போன்றவை பதிவு செய்யப் பட்டுள்ளனவா? எப்படி முடியும்? சமீபத்திய பேராண்மை மிகச் சிறந்த உதாரணம், மத்திய அரசின் சென்சார் போர்டு எப்படி செயல்படும் என்பதற்கு. படித்து முன்னுக்கு வரும் பழங்குடியினர் மீது மற்ற முன்னேறிய ஜாதியினர் காட்டும் குரோதத்தை பல வசனங்களின் மூலம் சித்தரித்திருந்தார்கள். அவையெல்லாம் வெட்டுப் பட்டு விட்டன. பாவம் ஆப்பரேட்டரின் குடும்பத்தாருக்கும் இதனால் பலத்த திட்டு.

மீன்கள் இனப் பெருக்கம் செய்யம் காலங்களில் மீன் பிடிக்க நிலவும் கட்டுப்பாடுகள், அந்த நாட்களீல் மீனவர்கள் பொருளாதார பிரச்சினையை எங்கணம் சமாளிக்கிறார்கள்?, பவழப் பாறைகள் அழிப்பு, வெடி வைத்து மீன் பிடிக்கும் ஆபத்தான போக்கு, மண்டைக்காடு கலவரம், கன்னியாகுமரி,தூத்துக்குடி,சென்னை மாவட்ட மீனவ அரசியல் போன்ற எதுவுமே ஒரு சிங்கிள் ஷாட்டில் கூட பதிவு செய்யப் படவில்லை.

புகழ்பெற்ற செம்மீன் படத்திற்கு பின்னால் தகழி சிவசங்கரனின் நாவல் இருந்தது. வண்ண நிலவனின் கடல் புறத்தில், நரசய்யாவின் பல நூல்களில் மீனவக் கதைகளும், பிரச்சினைகளும் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை படத்தில் மாலுமிகளின் ஒரு பக்கத்தை காட்டிய ஜனநாதன் போன்றவர்கள் மனது வைத்தால் மீனவர்களின் உண்மை வாழ்க்கையை நாம் திரையில் காணலாம்.

42 comments:

அகநாழிகை said...

நல்ல கட்டுரை.
இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

- பொன்.வாசுதேவன்

முரளிகண்ணன் said...

நன்றி பொன். வாசுதேவன்

பிரபாகர் said...

முரளி... அருமையான தகவல்கள்... நிறைய உழைத்து ஒவ்வொரு பதிவையும் தருகிறீர்கள்... நிறைய அலசல்கள்...

நல்ல பதிவு. அருமை முரளி.

பிரபாகர்.

Toto said...

முர‌ளி ஸார்.. ந‌ல்ல‌ ப‌திவு. இதுவ‌ரை க‌தைக்கள‌த்தை மாற்றத்தான் தொழில்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌வே ஒழிய‌, அவ‌ர்க‌ள் வாழ்வு முறையை சொல்வ‌த‌ற்கு அல்ல‌ என்று நினைக்கிறேன்.. காஞ்சிவ‌ர‌ம் ப‌ட‌ம் காஞ்சிபுர‌த்தில் கூட‌ ஓட‌வில்லை என்ப‌து தான் ந‌டைமுறை. தூர‌த்து இடிமுழ‌க்க‌ம் [ விஜ‌‌ய‌காந்த் ], ஆன‌ந்த‌ராக‌ம் [ சிவ‌குமார் ] ‍ மீன்பிடித்தொழில் காட்ட‌ப்ப‌ட்ட‌ மேலும் சில‌ ப‌ட‌ங்க‌ள்.

-Toto
www.pixmonk.com

வெளிச்சத்தை நோக்கி said...

vanakkam murali,
kamaloda pasavalai padadathai neenga parthacha?anthapadam good example for meenavarkalin life.

சென்ஷி said...

வண்ணக்கனவுகள் (கார்த்திக்) இந்தப் படமும் மீன்பிடித் தொழிலாளராக நாயகன் வருவார். கொஞ்சமாக அவர்களது வாழ்க்கையை காட்டியது போலத் தோன்றினாலும் முழுமையாய் எனக்குத் தெரிந்து மீனவ சமுதாயம் குறித்துக் காட்டப்பட்ட படம் எதுவுமில்லை.

Kasthuri said...

அருமையான பதிவு ..நிலாவே வா பற்றிய தகவலுக்கு நன்றி ..எங்கூர் பாஷை எப்படி வந்திருக்கிறது என்பதற்காகவே இந்த படம் பார்க்கணும் .

ஜோ/Joe said...

முரளி சார்,
பதிவுக்கு நன்றி ..இது பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும்.

மீனவ கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் ,தமிழ் சினிமாவில் மீனவர்கள் பற்றிய காட்சியமைப்புகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.

கடலுக்கு போகும் மீனவன் தெருவில் நடக்கும் போதும் ஆற்றில் மீன் பிடிக்கும் இரு சின்ன வலையை தோளில் போட்டுக்கோண்டு வளைய வருவதும் (கடலில் மீன் பிடிக்கும் வலை குறைந்தது 150 மீட்டர் நீளமாவது இருக்கும் ),அவர்கள் உடையும் ,மீனவ பெண்கள் பற்றிய சித்தரிப்பும் செம காமெடியாக இருக்கும் .

எங்கள் ஊர் பாஷை 'நிலாவே வா' படத்தில் வருவதாக சொல்லியிருக்கிறீர்கள் ..இதற்காகவே தேடிப்பிடித்து பார்க்க வேண்டும்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை முரளி.

முரளிகண்ணன் said...

நன்றி பிரபாகர்

நன்றி டோடோ

நன்றி வெளிச்சத்தை நோக்கி, பாசவலை டப்பிங் என்பதால் இதி சேர்க்கவில்லை. அதில் ஆந்திர பகுதி மீனவர்களின் வாழ்க்கை ஓரளவு பதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் கமலின் மோனோ ஆக்டிங்கில் மீனவர்களின் சிரமத்தை காட்டியிருப்பார்.

முரளிகண்ணன் said...

நன்றி சென்ஷி.

நன்றி கஸ்தூரி. நிலாவே வா வை மிகவும் எதிர்பார்க்காதீர்கள். படத்தில் சில பாத்திரங்கள் அந்த பாசையை பேசுவார்கள்.

நன்றி ஜோ. விரிவான பதிவிற்க்கே முயற்சித்தேன். தரவுகளும் உள்ளன. காட்சியமைப்புகளோடு விரைவில் விரிவாக எழுதுகிறேன். நிலாவே வா வை மிகவும் எதிர்பார்க்காதீர்கள். படத்தில் சில பாத்திரங்கள் அந்த பாசையை பேசுவார்கள்.

நன்றி நாடோடி இலக்கியன்

TBCD said...

பிலிம் நியுசு ஆனந்தனுக்கு அடுத்து முரளி கண்ணன் தான் போல இருக்கே !

வெகு சில சமகால இயக்குனர்களே களம்,அதற்கான சிரத்தை குறித்து பிரயத்தனப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிபிசிடி

ஜோ/Joe said...

முரளிகண்ணன்,
உங்களுக்கு தனிமடல் ஒன்று அனுப்பியிருக்கிறேன்.

Unknown said...

நல்ல கட்டுரை முரளி. மீனவ நண்பனும், படகோட்டியும் எம்ஜிஆருக்கு மீனவர்களின் ஓட்டை வாங்க உபயோகப்பட்டது. "கடல் மேல் பிறக்கவைத்தான்” பாடல் ஓரளவு மீனவர்களின் கண்ணீரைத் தொட்டுச் சென்றாலும் அனைத்து படங்களுமே மீனவர்களின் வாழ்க்கையை மேம்போக்காக மட்டுமே படம்பிடித்துக் காட்டியுள்ளன. ஜனநாதன் போன்ற ஒரு சிலர் முயற்சித்தால் உண்டு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படகோட்டியில் ஓரளவு ஒற்றுமை பற்றியும், பசி பட்டினி கூட்டுறவு சங்கங்கள் பற்றியெல்லாம் எடுத்திருப்பார்கள். எம்ஜியாரின் ஹீரோயிசத்தின் முன் அனைத்தும் தோற்றுப் போய்விட்டன..,

=============================

மீனவ நண்பன் கதை, திரைக்கதை ஸ்ரீதர் அதைப் பற்றிக் கொஞ்சம் எடுத்து விடுங்களேன்

==================================

மொழி பற்றி சொல்வதில் எனக்கொரு கருத்து உண்டு. இதே காசி மேடு பற்றியும் கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும் ஆங்கிலத்தில் படம் எடுத்தால் அல்லது இன்னபிற முக்கியப் பிரச்சனைகள் பற்றியும் ஆங்கிலத்தில் படம் எடுத்தால் ஆங்கிலத்தில்தான் அந்த ஊர் மீனவர்களைப் பேச வைக்க முடியும். அது போல தமிழில் எடுக்கும்போது நல்ல தமிழில், இலக்கண சுத்தியும் பேச வைக்கலாமே.., ஒருவேளை எதிர்கால சந்ததியினர், இந்த தமிழைப் பார்த்து தூய்மையாகப் பேசக் கற்றுக் கொள்ளமாட்டார்களா? அதை ஏன் முயற்சி செய்ய மறுக்கிறார்கள்!

இப்போது கூட கேலியாக பேசுவதற்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் கோவைத்தமிழ் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. சவால் விடும்வகையில் பேசுவதற்கு தேனி,மதுரை தமிழ் வந்திருக்கிறது. சென்னைத்தமிழையும் சில குறிப்பிட்ட நேரங்களில் தமிழகம் முழுவதுமே பயன்படுத்துகின்றனர்.

உள்ளே போ வார்த்தைகளை பாஷா போலவே உபயோகப் படுத்துவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அப்புறம் ஏன் வட்டாரத் தமிழ்களைப் பயன்படுத்த வேண்டும்? நல்ல எளிமையான இயல்பான தமிழையே பயன்படுத்தலாமே?

சிவாஜி படங்களில் பெரும்பாலும் அவர் எளிமையான தமிழையே 70ன் இறுதிவரை பயன்படுத்திவந்தார், ஆனால் இயல்பு என்ற என்ற போர்வையில் நல்ல தமிழை மாற்றித்தான் ஆகவேண்டுமா?

முரளிகண்ணன் said...

நன்றி கேவிஆர் சார்.

டாக்டர்,

மீனவ நண்பன் - ஸ்ரீதர் பின்னர் வருகிறேன்.

இந்த வட்டார வழக்கு பேசுவது பற்றி பல விவாதங்கள் வலைப் பதிவுகளில் நடந்து விட்டன.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மைய தமிழை எழுதுவது, பேசுவது நல்லதா?

அல்லது கரிசல், கொங்கு, தென், மீனவ வழக்குகள் அப்படியே தொடர வேண்டுமா? என.

உங்களது கோணமும் சரியாகவே உள்ளது.

இது பெரிய விவாதத்திற்குரிய டாபிக்.

யோசிக்க வேண்டிய விஷயம்.

புருனோ Bruno said...

சூப்பர் கட்டுரை !!

அருமையான தகவல்கள்

புருனோ Bruno said...

//இயற்கை படத்தில் மாலுமிகளின் ஒரு பக்கத்தை காட்டிய ஜனநாதன் போன்றவர்கள் மனது வைத்தால் மீனவர்களின் உண்மை வாழ்க்கையை நாம் திரையில் காணலாம்.//

இயற்கை படத்தில் சீமா பிஸ்வாசின் பாத்திரம் மற்றும் அந்த பாதிரியார் இருவரின் பாத்திரப்படைப்பும் நன்றாக இருந்தது என்று நினைக்கிறேன்.

அந்த படத்தில் பதியப்பட்ட கருத்துக்கள் குறைவு என்றாலும் சரியாக பதியப்பட்டன.

butterfly Surya said...

நல்ல பகிர்வு.. நன்றி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான தகவல்கள்

வினோத் கெளதம் said...

தல சமிபத்தில் ஷாம் நடித்து?!அந்தோனி-யார்? என்று ஒரு படம் வந்தது.

அப்புறம் சத்யராஜ் நடித்து
புது மனிதன் (நினைக்கறேன் ) மீனவர்கள் பேக் ட்ராப்பில் வந்தது ஆனால் அதில் சத்யராஜ் மீனவர் இல்லை..

முரளிகண்ணன் said...

நன்றி டாக்டர்

நன்றி வண்ணத்துப் பூச்சியார்

நன்றி டிவிஆர் சார்

நன்றி வினோத் கௌதம்

Thamira said...

வாசுதேவனுக்கு ஒரு ரிப்பீட்டு.!

சுடுதண்ணி said...

உங்கள் பதிவுகள் அருமை.. இயன்றால் ஆனந்த் பாபுவைப் பற்றி பதிவிடுங்கள். நன்றி.

முரளிகண்ணன் said...

நன்றி ஆதி

நன்றி சுடுதண்ணி

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீன் ரொம்ப சுவையானதாக இருந்தது .

ஓ சாரி ,மீனவர்களை பத்திய கட்டுரை சூப்பர் .

சமீபத்திய அந்தோணியாரை விட்டுட்டீங்களே !

அது என்னமோ தெரியல ஷாம் படம் ஓடமாட்டேங்குதே !!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு ...

கோபிநாத் said...

கலக்குறிங்க அண்ணே.

\\ஜனநாதன் போன்றவர்கள் மனது வைத்தால் மீனவர்களின் உண்மை வாழ்க்கையை நாம் திரையில் காணலாம்.\\

உண்மை...அடுத்த படம் ராஜா ராணி காதல் கதையாம்!?

அப்புச்சி said...

தங்களின் பதிவு www.tamiljournal.comதளத்தில் சிறப்புக் கட்டுரை பகுதியில் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திப்பிரிவு சார்பில்
மொழிவேந்தன்

அப்புச்சி said...

தங்களின் பதிவு www.tamiljournal.comதளத்தில் சிறப்புக் கட்டுரை பகுதியில் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திப்பிரிவு சார்பில்
மொழிவேந்தன்

Jerry Eshananda said...

முரளி கண்ணு சௌக்கியமா? பதிவு நன்றாக இருந்தது

மணிஜி said...

வழக்கம்போல் முரளி அசத்தல்

நாஞ்சில் நாதம் said...

அசத்தலான நடை. கடலை தாயாக நம்பிய மீனவர்கள் சுனாமி வந்த பிறகு தங்களுடைய வாரிசுகளை வேறு வேலை பாக்க சொல்கிறார்கள்.

கிழக்கு பக்கம் இலங்கை ராணுவம். மேற்கு பக்கம் கேரளா மீனவர்கள் அப்படின்னு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சோதனை தான்.

தினம் தினம் செத்து பிழைக்கும் வாழ்க்கை.

சினிமாவாக எடுத்தாலும் அடிப்படை பிரச்சனையை யாரும் சொல்லமாட்டார்கள்.

//மண்டைக்காடு கலவரம், //

சுஜாதா அவர்களுடைய "விடிவதற்குள் வா" என்ற நாவல் மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையாக கொண்டது.

அத்திரி said...

தல வழக்கம் போல் அருமை

ISR Selvakumar said...

நீங்கள் எதிர்பார்க்கின்ற டிரெண்ட் இனிமேல்தான் வரும். வந்து கொண்டிருக்கின்றது.

kanagu said...

nalla padhivu anna.. :)

namadhu iyakkunargal atharku thayanguvathum.. athil miga perum arasiyal iruppathume kaaranam ena ennukiren.. neengal kurippita puthagangalai padikka muyarchikiren :)

Beski said...

அருமையாக உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள்.

படங்களில் பதியப்படாவிட்டால் என்ன? பதிவுகளில் பதிய முயற்சி செய்கிறேன்.

முரளிகண்ணன் said...

நன்றி செல்வகுமார்

நன்றி கனகு

நன்றி எவனோ ஒருவன்

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...

ஒரு வினாடி வினா கேள்வி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1990களில் ஏற்பட்ட கலவர ஆபாயத்தின் போது ஒரு உணர்ச்சி வசப்பட்டு திரண்டிருந்த மக்கள் ஒருவரின் உரையை கேட்டு அமைதியா கலைந்து சென்றனர். (சினிமாவில் இறுதிகாட்சியில் நீண்ட பிரசங்கத்தை கேட்ட அனைவரும் திருந்துவது போல் நடந்த சம்பவம் அது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்)

அன்று பேசியது யார் தெரியுமா

SIV said...

செம்பருத்தி???
மீன் வியாபாரம் பற்றி சில காட்சிகள் வருமே