December 13, 2015

முரட்டுக்காளையும் அண்ணாமலையும்

எந்த ஒரு நடிகருக்கும் ஒரு படம் இருக்கும். அந்தப் படத்திற்கு அப்புறம் அவர்களாகவே பெருமுயற்சி எடுத்து, தங்களை கெடுத்துக்கொள்ளாவிட்டால் நட்சத்திரமாகவே காலத்துக்கும் தாக்குப் பிடிப்பார்கள். பல நடிகர்களுக்கு அந்த மாதிரி படம் அமையாமலே போய் நடிகராகவே சில ஆண்டுகள் இருந்துவிட்டு பீல்ட்அவுட் ஆகிவிடுவார்கள். 

1975ஆம் ஆண்டு அறிமுகமான ரஜினிகாந்த் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே அப்போதைய இளைஞர்களின் மனதிற்கு நெருக்கமாகிவிட்டார். எம்ஜியார் முதல்வராகி, படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். ரஜினி, அப்போது ஏற்ற வேடங்களும், ஸ்டைலான உடல்மொழியும் அவருக்கு ஏகப்பட்ட நகரத்து இளைஞர்களை ரசிகர்களாக்கியது. 1980ஆம் ஆண்டில் வெளியான பில்லாவின் வெற்றி ரஜினியின் இடத்தை அசைக்க முடியாததாக மாற்றியது. ஆனால், அதே ஆண்டு வந்த முரட்டுக்காளைதான் ரஜினியை நிரந்தர நட்சத்திரமாக மாற்றியது. 

கிராம இளைஞர்கள் எல்லாம் ரஜினியின் பின்னே திரள முரட்டுக்காளை வழிவகுத்தது. இன்றுவரை அப்படத்தில் இடம்பெற்ற “பொதுவாக எம்மனசு தங்கம்” பாடலுக்கு இணையாக ரஜினிக்கு ஹீரோயிச மைலேஜ் கொடுத்த பாடல் எதுவும் இல்லை. அதுவரை நாயகனாக நடித்த ஜெய்சங்கர் வில்லனாக நடித்ததை ஏற்றுக்கொள்ளும் படி ரஜினியின் பெர்பார்மன்ஸ் இருந்தது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு ரஜினிக்கு சீராக ரசிகர்கள் கூடிக்கொண்டே போனார்கள். தொடர்ந்து, ஏமாற்றாத படங்களை தந்து கொண்டே இருந்ததால் பொதுமக்களின் அபிமானமும் கூடிக்கொண்டே போனது. 

90களில் ரஜினிகாந்தின் தளபதியும், மன்னனும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றதும், தளபதிக்கு அடுத்து பெரிய ஆளு மன்னன், அப்போ மன்னனுக்கு அடுத்த படம் சக்கரவர்த்தியான்னு? எல்லோரும் கேட்ட போது, இல்லை அதுக்கும் மேல அப்படின்னு கடவுளின் பெயரை டைட்டிலாகக் கொண்டு வந்த படம் தான் அண்ணாமலை.

பாலசந்தரின் சிஷ்யர் வசந்த் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப்படத்தில் இருந்து வசந்த் விலகிக்கொள்ள மற்றோரு சிஷ்யரான சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு இயக்குநரானார். 91ல் ஆட்சிக்கு வந்திருந்த அதிமுக அரசின் முதல்வர் ஜெயலலிதாவும்,ரஜினிகாந்தும் ஒரே ஏரியாவில் இருந்ததால் பாதுகாப்பு சோதனைகளுக்காக ரஜினியின் கார் செக்போஸ்டில் நிறுத்தப்பட, அதை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தின. மேலும் அப்போது சென்னை மாநகர சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஒரு சட்டமும் அமலுக்கு வந்திருந்தது. அதற்கு முந்தைய சில பிரச்சினைகளால் ரஜினிக்கு ரெட் கார்ட் போடப்போவதாக விநியோகஸ்தர்களும் அப்போது சொல்லி வந்தார்கள்.

இந்த நிலையில் இந்தக்கால பர்ஸ்ட் லுக்,மோஷன் போஸ்டர்,டீசர் உத்திகளுக்கு முன்னோடியாக அப்போது தமிழக மக்கள் பார்ப்பதற்கு இருந்த ஒரே சானலான தூர்தர்ஷனில் “வணக்கம், நான் தான் அண்ணாமலை” என ரஜினி நீதிமன்ற குற்றவாளி கூண்டில் இருந்து சொல்லும் சில வினாடி காட்சி அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது (இந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒன்று). இது மக்களிடையே பெரிய ஆர்வத்தைத் தூண்டியது.

படம், பண்டிகை விசேசம் ஏதும் இல்லாத நாளில் வெளியானது. ரஜினி படம் வெளியாகும் நாளே விசேஷம் தானே?. முதல் காட்சி பார்த்தபோது, தளபதி, மன்னனோடு ஒப்பிட்டால் அவ்வளவு விசேஷமில்லையே என்று தோன்றியது.
ஆனால் சில நாட்களிலேயே படத்திற்கு வந்த கூட்டம் ஆச்சரியப்படும் படி இருந்தது. ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக வந்தார்கள். சொல்லப்போனால் இந்தப் படத்துக்குப் பின்னர் ரஜினி ரசிகர் வேறு, பொது மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. 

ரஜினியின் வளர்ச்சி ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை, அதனால் இடையூறு செய்கிறார் என்ற செய்தி பத்திரிக்கைகள் மூலம் ரஜினி ரசிகர்களின் மனதில் அப்போது ஆழமாகப் பதிந்திருந்தது. அதனால் ரஜினி ரசிகர்கள் இந்தப்படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்தார்கள். அதற்கேற்றார்போல சில வசனங்களும் படத்தில் வைத்திருந்தார்கள்.

பொதுமக்களுக்கோ, நம்மை ஏமாற்றியவர்களை நாம் நன்கு வாழ்ந்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல நம் எதிரிகள் உதவி கேட்டாலும் காலரைத் தூக்கிக்கொண்டு உதவவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கும். இதற்கு தீனி போட்டது போல் இந்தப்படம் அமைந்திருந்தது. அதற்கடுத்து வந்த எல்லா ரஜினி படங்களுமே ஏறக்குறைய இதே டெம்பிளேட்டில்தான் அமைந்தன.

ரஜினிக்கு என்று இந்த ஏரியாவில் ஒரு தொகை வசூலாகும் என்ற கணக்கு இருக்குமே, அந்தக் கணக்கை உடைத்து புதுக்கணக்கு எழுத வைத்தது அண்ணாமலை. எந்த விநியோகஸ்தரும் எதிர்பார்க்காத லாபத்தை தந்தது.
அண்ணாமலைக்குப் பின் ரஜினி இந்த 23 வருடங்களில் நாயகனாக 15 படங்கள் தான் நடித்திருப்பார். ஆனால் ரஜினி அறிமுகமானதில் இருந்து அண்ணாமலை வரை இருந்த 17 வருடங்களில் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்திருப்பார். 
இதே போலத்தான் முரட்டுக்காளை படமும். அதற்கு முந்தைய ஐந்து வருடங்களில் ரஜினி ஐம்பது படங்களுக்கு மேல் நடித்தார். ஆனால் முரட்டுக்காளைக்குப் பின்னர் அவர் வருடத்துக்கு சராசரியாக ஐந்து அல்லது ஆறு படங்களில் மட்டுமே நடித்தார். அந்த அளவுக்கு அவர் படங்களின் மேல் எதிர்பார்ப்பு ஏற்பட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியதாகிவிட்டது.

அண்ணாமலைக்குப் பின்னர் இன்னும் புதுப்புது ஏரியாக்களில் ரசிகர்கள் பெருகியவண்ணம் இருந்தார்களே தவிர குறையவே இல்லை. பாட்ஷா,படையப்பா எல்லாம் அதனுடைய கண்டெண்ட் வேல்யூவால் ரிப்பீட் ஆடியன்ஸ் பெற்று வசூல் சாதனை புரிந்த படங்கள். 2000க்குப் பின் சிவாஜி,எந்திரன் என உலகம் முழுவதும் வசூல் பெருகினாலும் அது எல்லாவற்றுக்குமே ஒரு ஆரம்பப் புள்ளி அண்ணாமலை தான். 
முரட்டுக்காளைக்குப் பின்னர் ரஜினிக்காகவே விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டார்கள் என்றால், அண்ணாமலைக்குப் பின்னர் திரையுலகமே, தங்கள் படங்களின் வெளியீட்டுத் திட்டங்களை ரஜினிக்காக வகுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

No comments: