December 25, 2015

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி

தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நண்பரொருவர் சொல்லுவார், ’என் ஒய்ஃப் கவர்மெண்ட் சர்வண்ட்டுங்க. தமிழ்நாட்டோட எந்த மூலைக்கு அவங்களை ட்ரான்ஸ்பர் பண்ணினாலும் கவலைப்படாம கிளம்பிடுவோம், ஏன்னா எப்படியும் அங்க ஒரு இஞ்சினியரிங் காலேஜ் இருக்கும்ல’. இது போன்ற சூழ்நிலை இல்லாத 80களில் எங்கள் ஊர் பையன்களுக்கு கனவே கலை அறிவியல் கல்லூரிகள் தான்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, மெஜுரா காலேஜ், தியாகராஜா கலை அறிவியல் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, திண்டுக்கலில் ஜிடி நாயுடு கல்லூரி, உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தா கல்லூரி, உத்தம பாளையம் காஜி கருத்த ராவுத்தர் கௌதியா கலைக் கல்லூரி, திருவேடகம் விவேகானந்தா கல்லூரி ஆகியவையே எங்கள் ஊரில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பாக இருந்த கல்லூரிகள். எங்கள் ஊர் பேஸ்கட்பால் விளையாட்டுக்கு புகழ்பெற்றது என்பதால் திருச்சி செயிண்ட் ஜோசப் போன்ற கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும்.

இவற்றுள் எந்த கல்லூரி கிடைத்தாலும் சேர்ந்துவிடும் எங்கள் ஊர்காரர்கள் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி என்றால் மட்டும் மிகவும் யோசிப்பார்கள்.

அது ஏனென்றால்…..

எங்கள் ஊரில் சங்கு பிரியாணி ஸ்டால் என்னும் ஒரு கடை இருந்தது. தினமும் நண்பகல் 12 மணிக்கு திறந்து மதியம் 2 மணிக்கு அடைத்து விடுவார்கள். மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, தால்சா, கரண்டி ஆம்லெட், தயிர் வெங்காயம், கொஞ்சம் தயிர்சாதம் இதுதான் மெனு. இதை சாப்பிட்டாலும் பார்சல் என்றாலும் ஒரே பேக்கேஜாகத்தான் கொடுப்பார்கள். ஞாயிறுகளில் பிளாக்கில் கூட பார்சல் போகும். வெள்ளாட்டு கறி மட்டும் தான் உபயோகிப்பார்கள். ஆம்லெட்டுக்கு நாட்டுக்கோழி முட்டை, தால்சாவுக்கு நெஞ்செலும்பு மட்டும், வீட்டு எருமைத்தயிர் தான் சாதத்துக்கும், தயிர் வெங்காயத்துக்கும்.

காமாட்சி அவ்வா என்று ஒருவர். மதிய சாப்பாட்டை கணவனுக்கு பரிமாறிவிட்டு இரண்டரை மணியளவில் வீட்டிலேயே தன் வடைக்கடையைத் திறப்பார். ரெண்டே அயிட்டங்கள் தான். தவலை வடை மற்றும் பஜ்ஜி. சட்னி சாம்பார் எதுவும் கிடையாது. அவ்வளவு பக்குவமாக தவலை வடைக்கு எப்படி அரைப்பார் என்றே தெரியாது, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கூட ஈஸியாக வாங்கிவிடலாம் ஆனால் இந்த பார்முலாவை கடைசிவரை யாராலும் வாங்கமுடியவில்லை. மதியம் 2 மணியில் இருந்தே கையில் தூக்குச் சட்டி, பாத்திரங்களுடன் சிறுவர்கள் காத்திருப்பார்கள். இந்தக் கடையும் நான்கு மணிக்கு மூடப்படும்.

இது போல இன்னும் பல கடைகள். சரசவ்வா ஆப்பம், கோவிந்தம்மா பாட்டி பணியாரம், தாயார் அவ்வா காரச்சீயம் என வகைக்கொன்றாக ஸ்பெஷாலிட்டி கடைகள் இருக்கும். ராஜு ஆப்பக் கடையில் புரோட்டாவிற்கு மட்டும் ஆறு வகைகளில் குழம்பு சட்டிகள் இருக்கும். சாப்பிடுபவர் தேவைக்கேற்ப பல வித பெர்முடேசன் காம்பினேசன்களில் அதைக் கலந்து தருவார்கள்.

இப்படித் தின்றே பழகியவர்களுக்கு ஹாஸ்டல் சாப்பாடு என்பது தூக்கு தண்டனைக்குச் சமம். அதனால் மதுரையில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே சேருவார்கள். ஏனென்றால் மாலை வேளைகளில் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடலாம். அப்படியும் சனி, ஞாயிறுகளில் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்கள். திங்கட் கிழமை போகும்போதும் முறுக்கு,சீடை,இட்லிப் பொடி, பருப்புப் பொடி என அள்ளிக்கொண்டு போவார்கள். இத்தனைக்கும் ஹாஸ்டல் சாப்பாடு நன்றாகவே இருக்கும்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியானது சைவ மடத்தால் நடத்தப்படும் கல்லூரி. அங்கே கைக்குத்தல் அரிசி சாப்பாடுதான் போடுவார்கள். சிற்றின்ப ஆசையை தூண்டவல்ல லாகிரி அயிட்டங்கள் எல்லாம் சமையலில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சப்பென்றே சாப்பாடு இருக்கும். சுற்றி 5கிமீ தூரத்துக்கு கடையே இருக்காது. அதனால் இரண்டே நாட்களில் எங்கள் ஊர்ப் பையன்கள் சுவரேறி குதித்தாவது ஓடிவந்து விடுவார்கள்.

அதிகாலை எழுந்து பச்சைத் தண்ணீரில் குளிப்பதும் எங்களுக்கு ஒவ்வாமை. சித்திரை மாதத்தில் கூட வெந்நீர்தான். அதிலும் என்னைப்போன்ற சிலர் வெறும் வயிற்றில் பல் கூட துலக்க மாட்டோம். உமட்டிக்கிட்டு வருது என்று சொல்லி, காபி குடித்துவிட்டுத்தான் பல் விளக்குவோம். ஆனால் விவேகானந்தாவில் அதிகாலை எழுந்து பச்சைத்தண்ணியில் குளித்து பிரேயர் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும்.

அதுவும் எல்லோருக்கும் பரிமாறி முடித்த உடன் தான் சாப்பிட வேண்டும். ஆனால் எங்கள் மக்கள் அடுப்படியில் இருந்து வந்தால் கூட தோசை ஆறிவிடும் என்று சமையல்கட்டிலேயே சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள். சூட்டை விடுங்கள். உணவைப்பார்த்து விட்டால் ஏன், உணவு இருக்கிறது என்று தெரிந்தாலே தேடி எடுத்து தின்று விடுவார்கள். அமாவாசை போன்ற விரதங்களுக்கு கூட சுத்தபத்தமாக சமைக்க முடியாது. கொதிக்கும் வடைச்சட்டியில் கூட கைவிட்டு வடை எடுத்து விடுவார்கள், அவ்வளவு ஏன்? ,எங்கள் ஊரில் பெண்கள் அவ்வை நோன்பு என்று ஒன்று இருப்பார்கள். அதற்கு கொழுக்கட்டை செய்து வழிபடுவார்கள். அந்தக் கொழுக்கட்டையை ஆண்கள் சாப்பிடக்கூடாது ஏன் பார்க்கவே கூடாது என ஒரு ஐதீகம். பார்த்தால் கண் போய்விடும் என அக்காக்கள் பயமுறுத்தி ஒளித்து வைப்பார்கள். ஆனால் எங்கள் பையன்களோ அந்த பாத்திரத்தை தேடி எடுத்து கொழுக்கட்டையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட பையன்களுக்கு பசியோடு தட்டை முன்னால் வைத்து காத்திருக்கச் சொன்னால்?. மேலும் எங்கள் ஊரில் மூட்டிய கைலி மட்டும் தான் கட்டுவார்கள். வேஷ்டி எல்லாம் விசேஷங்களுக்குத்தான். அங்கே ஒற்றை வேஷ்டி கட்டவேண்டும். இதையெல்லாம் கேட்டுக் கேட்டு பள்ளிக்கூட பையன்களுக்கு ஒரு வைராக்கியமே பிறந்துவிடும். மதுரை காலேஜ்ல சீட் வாங்குற அளவுக்கு படிச்சிடனும்டா என களத்தில் இறங்கிவிடுவார்கள்.

சில பெற்றோர்கள் மட்டும் வற்புறுத்தி அங்கேயே படிக்க வைத்து விடுவார்கள். இப்போது கவனித்துப் பார்த்தால், அந்த குருகுல முறைக் கல்லூரியில் படித்ததால் கெட்ட பழக்கத்தை விட்டவர்கள் என்பது குறைவு. அங்கு செல்லும் முன் என்னவெல்லாம் செய்தார்களோ அதை திரும்பிவந்தும் செய்தார்கள், என்ன புதிதாக எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்.

17 முதல் 20 வரையிலான வயது ஒரு மாதிரியான வயது. எதையும் செய்யாதே என்றால் செய்யத்துணியும் வயது. அலைபாய்வது, எதையும் முயற்சி செய்யத் துடிப்பது. அந்த வயதில் அதற்கான வாய்ப்புகளை குறைப்பது என்ற வகையில் விவேகானந்தா கல்லூரி நல்ல கல்லூரி.

மனத்திற்கான பிரீசர் என்று கூட சொல்லலாம். 17 வயதில் இருக்கும் கெட்ட பழக்கங்களோடே 20 வயதில் வெளிவருவார்கள். 20 வயதில் 17 வயதுக்கான தீய பழக்கங்களோடு இருப்பதும் ஒரு நல்லதுதானே?
மற்றவற்றை விடுங்கள். உடல்நலத்தை சீராக்கி விடுவதில் வல்லது இந்தக் கல்லூரி. எந்த பட்டை தீட்டலும் இல்லாத கைக்குத்தல் அரிசியில் தேவையான சத்துக்கள் இருக்கும். புரதச்சத்துக்காக அவித்த பயறு வகைகள், கொண்டைக்கடலை என உப்புக் குறைவாகப் போட்டு, எண்ணெய் குறைத்து தாளித்து தருவார்கள். காலை விரைவாக எழுதல், உடற்பயிற்சி, யோகா, தியானம் என உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் அங்கு பல உண்டு.

சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் அங்கே கிடைக்கும் இன்னொரு நன்மை. பொதுவாக எல்லா ஹாஸ்டல்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சில இடங்களில் பிளெக்சிபிள் டைமிங் இருக்கும். இங்கே அதே நேரத்தில் பிரேயருக்கு அப்புறம் சாப்பாடு என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிடுவார்கள்.

ஒரு பிரபலமான ஆய்வுச்சாலை சோதனை நிறையப்பேர் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சோதனைச் சாலையில் இருந்த விலங்குகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் ஒரு மணியை அடித்து விட்டு சாப்பாடு போட்டிருக்கிறார்கள்.

ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் உணவுப்பொருளின் வாசனையை விட மணிச்சத்தத்திற்கே வயிற்றில் ஜீரணிப்பதற்கான என்சைம்கள் சுரக்கத் தொடங்கியதாம். அதுபோலவே விவேகானந்தா மாணவர்களுக்கும் பிரேயர் சாங்கை எங்காவது கேட்டாலே பசிக்கத் துவங்கிவிடும்.

இப்போதும் பி,காம் போன்ற துறைகளுக்கு இடம் கிடைப்பது அங்கு கடினம் தான். தன்னாட்சி பெற்று, NAAC அக்கிரிடிடேசன் பெற்று நன்கு நடந்து வரும் கல்லூரி. ஆனால் இந்த தலைமுறை நடுத்தர வகுப்பு மாணவர்கள் மிகவும் தயங்கும் அளவுக்கு சட்டதிட்டங்கள் இருக்கிறது.

No comments: