December 13, 2015

பொறியியல் கல்லூரி அக்கிரிடேசன் - ஓர் அறிமுகம்



மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வு முடிந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரியை தேர்வு செய்ய தொடங்குவர்கள். (பலர் ஏற்கனவே நிச்சயித்திருப்பார்கள்).
இப்பொழுது தமிழகத்தில் +2 தேர்வு எழுதுபவர்களில் பெரும் விழுக்காட்டினர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தான் சேர்கிறார்கள். இவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்யும் அடிப்படை புவியியல் சார்ந்ததாகவே இருக்கிறது.

அதன்பின் அக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் எவ்வளவு பேர் வளாகத்தேர்வு மூலம் பணி ஆணை பெற்றிருக்கிறார்கள் என்ற காரணி. அதன்பின்னரே அக்கல்லூரியின் கற்பிப்பு தரம் வருகிறது. பின்னர் அதில் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் உள்ளதா என பார்த்து பின் தெரிவு செய்கிறார்கள்.
இதில் கல்லூரியின் கற்பிப்பு தரம் என்பது எதைப் பொறுத்தது?

ஐஐடிகளில் பி எச் டி, எம் எஸ் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் வைவா முடிந்ததும் கொடுக்கும் தேநீர் விருந்து பிரசித்தி பெற்றது. தங்கள் ஆய்வுக்கு உதவிய பேராசிரியர்கள், டெக்னீசியன்கள் மற்றும் சக மாணவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அதனை அளிப்பார்கள். அப்போது அங்கு வரும் பேராசிரியர்கள் கலகலப்பாக தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
அன்று விருந்து கொடுத்தவர், தீஸிஸ் சப்மிட் செய்துவிட்டு தற்போது பெரிய அளவில் இருக்கும் தனியார் பல்கலையில் வேலை பார்ப்பவர். அவர் அப்பொழுது ஐஐடியில் இல்லாத இன்பராஸ்ட்ரக்சர் கூட தன் பலகலையில் இருப்பதாகக் கூறினார்.

அப்போது அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர் சொன்னார் “ காலேஜுக்கு இன்பிராஸ்டிரக்சர் என்பது அங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்” என்று. எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் ஆசிரியர்களின் தகுதியை எப்படி வரையறுப்பது? அதே போல் ஒரு கல்லூரியின் கற்பிப்பு தரத்தை எப்படி குவாண்டிஃபை செய்வது?

இங்குதான் வருகிறது அக்கிரடிடேசன்.
இந்தக்கல்லூரியில் படித்து முடித்து வெளிவரும் மாணவரிடத்தில் குறைந்தபட்ச தரம் நிச்சயம் இருக்கும் என்று உறுதி கொடுப்பதே அக்கிரடிடேசனின் முக்கிய பணியாகும். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சேரும் கல்லூரி அக்கிரடிடேசன் பெற்றிருக்கிறதா? என்பதை கற்பிப்பு தரத்திற்கான அளவுகோலாக கொள்ளலாம். இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அக்கிரடிடேசன் என்பது கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு தனித்தனியாகக் கொடுப்பது. முழுக்கல்லூரிக்கு அல்ல.

தங்கள் பிள்ளை சேரும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அக்கிரடிடேசன் பெற்றுள்ளதா? என பார்க்கவேண்டும்.
முதலில் இந்தியாவில் என்னென்ன அக்கிரடிடேசன் முறைகள் உள்ளன? எனப் பார்ப்போம். பின்னர் உலகளவில் உள்ள முறைகள் பற்றிப் பார்ப்போம்.

தேசிய கல்விக் கொள்கை (1986)ன் வழிகாட்டுதல் படி உருவானது நாக் எனப்படும் நேசனல் அசெஸ்மெண்ட் மற்றும் அக்கிரடிடேசன் கவுன்சில் (NAAC). இது நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் போன்ற உயர் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச் சான்றிதழ் அளிக்கிறது. இது முழு கல்லூரிக்கும் அளிக்கப்படும் சான்றிதழ். ஆனால் பொறியியல், மேலாண்மை போன்ற புரபசனல் கல்லூரிகளுக்கு என் பி ஏ எனப்படும் நேசனல் போர்ட் ஆப் அக்கிரடிடேசன் (NBA) தரச் சான்றிதழ் வழங்குகிறது. இது அந்தந்த கல்லூரிகளில் உள்ள துறைகளுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுவது.


இது தவிர மருத்துவம், பல்மருத்துவம் போன்ற பல பிரிவுகளுக்கும் கவுன்சில்கள் உள்ளன.

நாம் இங்கே என் பி ஏ அக்கிரடிடேசன் பற்றி மட்டும் பார்ப்போம்.

இந்த என் பி ஏ வானது ஏ ஐ சி டி யுடன் (All India Council for Technical Education) இணைந்த ஒன்று. ஆனாலும் தனித்தியங்கக் கூடிய அமைப்பு (அட்டானமஸ் பாடி).

இந்த என் பி ஏ வானது கல்லூரிகளை தற்போது வாசிங்டன் அக்கார்ட் என்னும் முறைப்படி தர நிர்ணயம் செய்கிறது.
வாசிங்டன் அக்கார்ட் என்றால் வேறொன்றுமில்லை. அந்த ஒப்பந்தம் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான ஒன்று. இதே போல் சிட்னி அக்கார்ட், டப்ளின் அக்கார்ட் போன்றவையும் உள்ளன.
இதில் வாசிங்டன் அக்கார்ட் என்பது இளநிலை பொறியியல் பிரிவுகளுக்கு மட்டும் தர நிர்ணயம் செய்வது.

சிட்னி அக்கார்ட் தொழில்நுட்பத்திற்கு செய்வது. வித்தியாசம் என்னவென்றால் பொறியியலில் தியரி, உயர் கணிதம் ஆகியவை அதிகமாக இருக்கும். தொழில்நுட்பத்தில் பிராக்டிகல்ஸ் அதிகமாக இருக்கும். அவர்கள் படிப்பை விட செய்முறைக்கே அதிக கவனம் செலுத்துவார்கள். (நம் நாட்டில் இம்முறை இல்லையென்றே சொல்லலாம்)

டப்ளின் அக்கார்ட் என்பது டெக்னீசியன்களை தர நிர்ணயம் செய்யும் அமைப்பு.
நம் நாட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு வாசிங்டன் அக்கார்ட் முறை மட்டுமே இனிமேல் கடைபிடிக்கப்படும்.

இந்த வாசிங்டன் அக்கார்ட் அமைப்பானது 14 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவர்கள் அதில் உள்ளார்கள். நமது நாடு புரவிஷனல் மெம்பர். தற்போது உறுப்பு நாடாக மாற பெரு முயற்சி செய்து வருகிறோம்.

ஏனென்றால் இது ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரம் போன்றது. ஐ நா விலாவது ஐந்து நாடுகள் தான். ஆனால் இங்கோ 14.
இந்த முறைப்படி தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படித்த மாணவர்களை மற்ற உறுப்பு நாடுகள் அங்கீகரிக்கும். எனவே தான் என் பி ஏ தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படிப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

சென்ற பகுதியில் பொறியியல் கல்லூரிகளுக்கான அக்கிரிடிடேசன் பற்றிப் பார்த்தோம். அதில் பாடப்பிரிவுகளுக்குத்தான் [டிபார்ட்மெண்ட்] தர நிர்ணயம், கல்லூரிக்கு அல்ல என்பதைப் பார்த்தோம்.

ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து குறைந்தது இரண்டு பேட்ச் வெளியில் சென்றிருந்தால்தான் தர நிர்ணயக் கமிட்டிக்கு அப்ளை செய்யமுடியும்.

தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.

அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.

எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும். (இது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். வரும் ஆண்டுக்கான ரிப்போர்ட் கூட மாற்றத்துக்கு உள்ளாகுமாம்)

முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.

பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர் அல்லது இருவருமே கல்விப்பணியாகவும் இருக்கலாம்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.


அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.

இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.

பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்

பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.

முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.
இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.

இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.

அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.

பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்

என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.

பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.


மாணவர்களின் தரத்திற்கு

1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்

ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.

என் பி ஏ கமிட்டியின் எல்லைக்குள் வரும் உயர் படிப்புகள்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
மேலாண்மை
ஆர்க்கிடெக்சர்
மருந்தாளுமை [பார்மசி]
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங்
டவுன் மற்றும் கண்ட்ரி பிளானிங்
அப்ளைடு ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ்

இந்த கமிட்டியானது கல்லூரிகளை இரண்டு விதமாகப் பிரிக்கிறது. Tier-1 என்னும் நிலையில் பல்கலைகழகங்களும், தன்னாட்சி (Autonomous) பெற்ற கல்லூரிளும் வருகின்றன. பல்கழைகழத்தின் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் (Affiliated) கல்லூரிகள் Tier-2 வகையில் வரும். டயர்-1 ல் எப்படி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.


எந்தத் துறையாக இருந்தாலும் சரி, +2 படித்து வரும் மாணவன் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணிப்பொறியியல் மட்டுமே படித்திருப்பான். அந்தத் துறையைப் பற்றிய அடிப்படைக் கல்வியை முதல் இரண்டு வருடங்கள் சிறப்பாக போதித்தால் மட்டுமே அவனால் துறையில் ஆழ்ந்த அறிவு பெற முடியும். அடிப்படைப் பாடங்கள் நூறாண்டு பழமை வாய்ந்ததே.

தற்போதைய அட்வான்ஸ்மெண்டுகளை அடுத்த இரண்டு வருடங்களில் எளிதில் கற்றுக் கொள்ளலாம். இந்த இடத்தில் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் காலத்திற்கு ஏற்ப தங்கள் பாடத்திட்டங்களை அப்டேட் செய்து கொள்கின்றன. ஆனால் ஏராளமான இணைப்புக் கல்லூரிகளைக் கொண்ட பல்கலைகழகமானது அப்படி அடிக்கடி தன் பாடத்திட்டத்தை மாற்றிக்கொள்ள இயலாது. (மாணவனுக்கு அடிப்படை அறிவு இருந்தால் வேலையில் சேர்ந்த பின் கூட பிக்கப் செய்து கொள்ளலாம். ஆனால் வேலை கிடைக்க அப்போதைய தொழில்நுட்பம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகளுக்கு)

எனவே என் பி ஏ கமிட்டியானது டயர்-1ல் வரும் கல்லூரிகளில் பாடத்திட்ட உருவாக்கலுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குகிறது.

கல்லூரியின் முக்கிய கட்டமைப்பான ஆசிரியர்களுக்கு மதிப்பெண் வழங்கும்போது,

தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்கிறது.

ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள்?

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் என்ன?

தொடர்ந்து இங்கே பணியில் இருக்கிறார்களா?

புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா? காப்புரிமை ஏதும் பெற்றுள்ளார்களா?

போன்ற அம்சங்கள் பார்க்கப் படுகின்றன.


இது தவிர எஸ் ஏ ஆர் (self assessment report) எனப்படும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அறிக்கையையும் தயாரிக்க வேண்டும். அதில் தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு,
பலவீனத்தைப் போக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அதற்கு கல்லூரி நிர்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.

இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதன மூலம் துறையில் உள்ள ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆக மாறுவார்கள்.

நூலகம்

பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் மற்றும் ரெபரன்ஸ் புத்தகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நூலகத்தில் இருக்க வேண்டும். அது போக ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறைக்கென டிபார்ட்மெண்ட் லைப்ரரியும் இருக்க வேண்டும். அதில் புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அவை வழங்கப்படவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு, ஆராய்ச்சி கட்டுரைகளைத் தாங்கி வரும் சர்வதேச சஞ்சிகைகள் தேவை. அவை எவ்வளவு நூலகத்தில் உள்ளன என்பதும் ஒரு அளவுகோல். தற்போது ஆன்லைனில் எல்லாம் கிடைக்கின்றன. இதுபோக பெரிய பல்கலை, மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பந்தப் செய்து கொண்டு அவர்கள் மூலம் எவ்வளவு புத்தகங்கள் பெறுகிறோம் என்று பார்ப்பார்கள். தற்போது ஐ ஐ டி, அண்ணா பல்கலை ஆகியவை இணையத்தில் தங்கள் பேராசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளை வலையேற்றி வைத்துள்ளார்கள். இவற்றை கவனிக்க மல்டி மீடியா வசதி நூலகத்தில் உள்ளதா? என்றும் பார்ப்பார்கள்.


வேலைவாய்ப்பு

மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதே வேலை வாய்ப்புக்காகத்தான். எனவே மாணவர்களின் எம்ப்ளாயபிலிடிக்கு கல்லூரி என்ன செய்திருக்கிறது? என்று பார்ப்பார்கள்.

எத்தனை பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன?. எந்தெந்த துறைக்கு? யாரால்? போன்றவற்றிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பயிற்சி முடிவுக்குப் பின் மாணவர்களிடம் இருந்து பீட் பேக் பெற்று தொகுத்து வைத்திருக்க வேண்டும்.

எத்தனை வளாகத்தேர்வுகள் நடந்தன?, அவற்றில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள்? அதிகபட்ச/குறைந்த பட்ச/ சராசரி சம்பளம் எவ்வளவு? ஆகிய விபரங்கள் கடைசி மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் காப்பிகள் கூட சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

ஏனென்றால் உள்ளூர் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கிக் கொடுத்து கணக்கு காட்டிவிடக்கூடாது என்பதற்காகவே இத்தனை விபரங்களும் கேட்கப்படுகின்றன.

அவர்கள் ஆய்வின் ஓர் அங்கமாக எம்ப்ளாயர் மீட் எனப்படும் கூட்டம் நடத்தப்படும். அதில் வேலை வாய்ப்பு அளித்தோர்களும், கமிட்டியினர் மட்டும் இருப்பார்கள். அவர்களிடம் மாணவர்களின் செயல்பாடுகளை, கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை விசாரித்து உறுதி செய்து கொள்வார்கள்.

No comments: