June 12, 2009

பெண்களின் பிரச்சனைகளை பேசிய 94 ஆம் ஆண்டின் திரைப்படங்கள்

பெண்களுக்கு கருவறையில் இருந்தே பிரச்சினைகள் ஆரம்பித்து விடுகின்றன. அவை கல்லறை வரை ஓய்வதில்லை. ஆச்சரியப்படும் வகையில், பெண்களின் அனைத்துப் பருவங்களிலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தான படங்கள் 94 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளன. அதைப் பற்றிய ஒரு பார்வை.

கருத்தம்மா

பாரதிராஜா இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த படம்.ராஜஸ்ரீ, மகேஸ்வரி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமான படம். பொன்வண்ணனுக்கு நல்ல கேரக்டர் அமைந்து, அவர் பெயர் சொல்லும் நடிகராக மாறிய படம். பெரியார் தாசன் குணசித்திர நடிகராக அறிமுகமான படம். தென்மாவட்டங்களில் பெண்ணுக்கு கல்யாணத்தின் போது வரதட்சணை கொடுத்து, பின் கடைசிவரையிலும் (பொறந்த வீட்டுக் கோடி) செலவழிக்க வேண்டியிருப்பதால், பெண் குழந்தை பிறந்தஉடனேயே அதற்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் இருக்கிறது. (இப்போது குறைந்திருக்கிறது?)

இதை பதிவு செய்த படம்தான் கருத்தம்மா. மூன்றாவதும் பெண் குழந்தை என்று அறிந்ததும் அதை கொன்றுவிடச் சொல்கிறார் பெரியார் தாசன். அந்த ஊர் வாத்தியாரோ அந்தக் குழந்தையை காப்பாற்றி எடுத்துச் சென்று வளர்க்கிறார். பின் அந்தக்குழந்தை மருத்தவராகி, அந்த தந்தைக்கே வைத்தியம் செய்கிறாள். இடையில் முதல் பெண் குழந்தையை (சரண்யா) திருமணம் செய்து கொடுத்து படாத பாடு படுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பெண் குழந்தை (ராஜஸ்ரீ) தன் தந்தையை கஷ்டப்பட்டு கவனித்துக் கொள்கிறார். அவரது காதலர் அந்த ஊர் கால்நடை மருத்துவர் (ராஜா). பெண்கள் குடும்பத்தை தாங்குவதில் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பதிவு செய்த படம்.

இந்தப் படத்தில் போறாளே பொன்னுத்தாயி, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற பாடல்கள் இருந்தாலும், எப்போது கேட்டாலும் மனதை அறுக்கும் பாடல் ஒன்றும் உள்ளது. பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் போது பாடுவதாக வரும்,

”அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆம்பிளையா நீ பொறந்தா
பூமியிலே இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளியே ”

என தேனி குஞ்சரம்மா பாடும் பாடல்.

மகாநதி

தாயில்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் இரு குழந்தைகள். தந்தை எதிர்பாராத விதமாக சிறைக்குச் செல்ல நேரிட, ஆண் பையனோ ஒரு கழைக்கூத்தாடியிடம் தஞ்சம் அடைகிறான். பெண் குழந்தை? அது விபச்சார விடுதிக்குள் தள்ளப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்த தந்தை அந்த பெண்ணை மீட்கிறார். மீட்புக்குப் பின்னரும் அந்தப் பெண் படும் வேதனை?


அரண்மனை காவலன்


அனாதையாக விட்டால் மட்டும்தானா பெண்ணுக்குப் பிரச்சினை? பெற்றோர்கள் இருந்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளி தாளாளர், ஊர் பெரிய மனிதர். ஆனாலும் சின்ன புத்தி. பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்கிறார். ஊர் ஒன்று கூடி தண்டனை வழங்குகிறது. அதன் பின்னரும் அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள், அதற்கு ஒரு மீட்பர் எனப் படம்.

பிரியங்கா

அடுத்த வீட்டில் வேலைக்குச் செல்லும் பருவ வயது பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையைச் சொல்லிய படம். ஒரு பெரிய பணக்கார வீட்டிற்க்கு வேலைக்குச் செல்கிறாள் ஒரு பெண். ஹோலி கொண்டாட்டங்களில் வீடே திளைத்திருக்க, அந்த வீட்டுப் பையன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவளை மானபங்கப் படுத்தி விடுகிறான். குடும்பமே சேர்ந்து அதை மறைக்கிறது. அந்த வீட்டு மருமகள்(ரேவதி), நியாயம் கேட்க புறப்படுகிறாள். கணவனின் (ஜெயராம்) குடும்பமே அதை எதிர்க்கிறது. நியாயத்திற்க்காக போராடும் ஒரு வழக்கறிஞர் (பிரபு) ரேவதிக்கு துணை நிற்கிறார். நியாயம் வெல்லுகிறது.

இந்தப் படம் முதலில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில், மீனாட்சி சேஷாத்ரி(மருமகள்),சன்னி தியோல் (வழக்கறிஞர்) வேடங்களில் நடிக்க இந்தியில் தாமினி என்ற பெயரில் வெளியானது. இந்தப்படத்திற்க்காக சன்னி தியோல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.


பதவிப்பிரமாணம்


ஒரு அரசியல்வாதி. அவர் முதல்வராக வேண்டுமெனில் குறிப்பிட்ட ஜாதகம் உள்ள பெண்ணை சுடுகாட்டில் திருமணம் செய்து, அங்கே முதலிரவு நடக்க வேண்டும் என்று ஜோசியர் சொல்கிறார். அப்படிப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடிக்கிறார்கள் அடிப்பொடிகள். அதற்கடுத்த நாள் அந்தப் பெண்ணுக்கு திருமணம். மண்டபத்தில் இருந்து சுடுகாட்டுக்கு பெண்ணைக் கடத்துகிறர்கள்.ஜோசியர் சொன்னது நடக்கிறது. அரசியல்வாதி முதல்வரும் ஆகப்போகிறார். இதை அறிந்த பெண்ணின் அண்ணன் (விஜயகாந்த்), அந்த
அரசியல்வாதியை கடத்தி, கொன்று அதை தடுக்கிறார்.

சரிகமபதநீ

வழக்கமான பார்த்திபன் பிராண்ட் படமென்றாலும், இதன் அடிநாதம் இன்னசெண்ட் வயதில் இருக்கும் பெண்ணை ஏமாற்றுவதால் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையும், அதன் பின்விளைவுகளுமே. பார்த்திபன் குழுவினர் ஒரு திருமணத்திற்கு செல்கிறார்கள். அங்கே வளையவரும் இளம்பெண் (சங்கீதா). தன் வழக்கமான பிளேபாய் வித்தைகளை அந்தப் பெண்ணிடம் காட்டுகிறார். இருவரும் சந்திப்பதைக் கண்டு (ஏதும் நடக்காவிட்டாலும்)மண்டபத்தில் வதந்தி பரவுகிறது. திருமணம் முடிந்ததும் பார்த்திபன் டாட்டா காட்டிவிட்டு செல்கிறார். வதந்தியால் குடும்பம் தீக்குளிக்கிறது. பெண்ணுக்கு சித்தப் பிரமை ஏற்படுகிறது. அவர்களின் உறவுப்பெண் (ரோஜா) அதற்கு பழிவாங்க வருகிறார்.


மே மாதம்

ஏழை, நடுத்தர பெண்ணுக்கு மட்டும்தான் பிரச்சினையா? வசதியான பெண்ணுக்கு?. இளம்பெண்ணுக்கு பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கிறார் தந்தை. பிடிக்காத ஆளை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். பெண் தப்பித்து சென்னை வருகிறாள். ஒரு போட்டோ கிராபரை காதலிக்கிறாள். துரத்தல்கள்.

தயாரிப்பாளர் ஜீ வியை புதைகுழிக்குள் தள்ளிய படங்களில் இதுவும் ஒன்று. பாலு இயக்கத்தில் வினீத், சோனாலி நடித்த படம். ஏ ஆர் ரகுமான் இசை. என் மேல் விழுந்த மழைத்துளியே, மார்கழி பூவே போன்ற அருமையான பாடல்கள் இருந்தும் படுத்துக் கொண்ட படம்.

நிலா

வசதியான வீட்டுப்பெண் (வினிதா), ஒரு விபத்தால் சுய நினைவை இழக்கிறாள். குழந்தை தனமாக மாறி விடுகிறாள். குல்பி ஐஸ் விற்கும் ஜெயராம் அவளைக் காப்பாற்றி திருமணமும் செய்து கொள்கிறார். குழந்தை பிறக்கிறது. பெண்ணுக்கு சுய நினைவு திரும்புகிறது. அப்போது தான் தெரிகிறது, அவள் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று. பல போராட்டங்களுக்குப் பின் தெளிவு பிறக்கிறது. ஜெயராமுடன்
சேர்ந்து வாழத் தொடங்குகிறாள்.

மகளிர் மட்டும்

சரி திருமணத்தோடு பெண்ணின் பிரச்சினை முடிந்து விடுமா? என்ன?. வேலைக்குப் போகும் பெண்ணிற்கு? வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை பதிவு செய்த முக்கியமான படம் இது.சபல புத்தி மானேஜர் (நாசர்), சமத்துவப் பார்வை கொண்டவர் பெண்கள் விஷயத்தில். அது ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும் சரி, அலுவல உதவியாளரானாலும் சரி, துப்புறவுத் தொழிலாளியாக இருந்தாலும் சரி. பெண் பெண்ணே என்னும் உயர்ந்த தத்துவத்தை கடைப்பிடிப்பவர். பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தொல்லை கொடுக்கிறார். வெகுண்டெழுந்த பெண்கள் அவருக்கு சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள். கிரேசி மோகன் வசனம், இளையராஜா இசை, கமல்ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படம். தயாரிப்பாளர் தாணு தமிழ் ஆர்வலராக தலைகாட்டிய படம்.

பவித்ரா

நடுத்தர வயது பெண்ணுக்கு மட்டும் வராதா பிரச்சினை?. தன் மருத்துவமனையில் சேரும் நோயாளியை (அஜீத்) தாய்ப்பாசத்துடன் கவனிக்கிறார் நர்ஸ் (ராதிகா). கணவருக்கு (நாசர்) மனைவியின் நடத்தையில் சந்தேகம். வாழ்க்கை நரகமாகிறது.


இதைத்தவிர இந்த ஆண்டு வெளியான, அரவிந்த்சாமி, ரேவதி நடிக்க சுரேஷ் மேனன் இயக்கிய பாச மலர்கள் திரைப்படம் அனாதையாகும் பெண் குழந்தைகளை வளர்க்கும் தொழிலதிபர் என்னும் கருவை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் நடித்த அனைத்துக் குழந்தைகளும் பெண்களுக்கு ஏற்படும் எல்லாக் கொடுமைகளையும் இன்றும் அனுபவிக்கிறார்கள். பயப்பட வேண்டாம். அவர்கள் அனைவரும் இன்றைய முண்னனி டிவி சீரியல் நடிகைகள். முக்கிய உதாரணம் மெட்டி ஒலி காயத்ரி.

பருவப் பெண்களுக்கு வரும் வயதுக் கோளாறு, அதனால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொன்ன படம் பிளே கேர்ள்ஸ். இதுவும் இந்த ஆண்டுதான் வெளியானது. சில்க் ஸ்மிதா நாயகி. இந்தப் படத்தில் தான் ஷகீலா, ஷீத்தல் ஆகியோர் அறிமுகமனார்கள்.

June 08, 2009

1984 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை.

இந்த ஆண்டு இந்திய அரசியலில் புயல் வீசிய ஆண்டு. இந்திராகாந்தி அவர்கள் தன்னுடைய
பாதுகாவலர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து ராஜீவ் பிரதமரானார். அவர் உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு மக்களை சந்தித்தார். தமிழகத்திலோ எம்ஜியார் அவர்கள் உடல்நிலை மோசமாக பாதிக்கப் பட்டு போராடிக் கொண்டிருந்தார்.

அப்பல்லோ, புரூக்ளின், டயாலிசிஸ் போன்ற சொற்கள் அனைத்து தமிழர் நாவிலும் புழங்கிக்
கொண்டிருந்தன. வதந்திகளும் சுழன்றடித்துக் கொண்டிருந்தன. ராஜீவ் தேர்தலை சந்திக்க தயாரானதும், அப்போதைக்கு எம்ஜியாருக்கு நெருக்கமானவர்களாக இருந்த ஆர் எம் வீரப்பன்,பண்ருட்டி ராமசந்திரன் ஆகியோர் ஆட்சி மீதமிருக்கும் நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்ட மன்ற தேர்தலையும் நடத்தி விடலாம் என முடிவு செய்தனர். அவர்கள் இந்திரா, எம்ஜியார் அனுதாப அலை, ராஜீவின் வசீகரம் ஆகியவை வெற்றி தேடித்தரும் என்று நம்பினர். அது வீண்போகவில்லை.

இந்த தேர்தல் தான் ஜெயலலிதா முதன் முதலாக பிரச்சாரம் செய்த பொதுத் தேர்தல்.எம்ஜியாரின் மருத்துவமனைப் படங்களை வெளியிட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட இரண்டாவது தேர்தல். அமெரிக்காவில் படுத்துக் கொண்டு ஆண்டிபட்டியில் எம்ஜியார் ஜெயித்த தேர்தல். முதன்முதலாக வீடீயோ பிரச்சாரம் அறிமுகமான தேர்தல்.(எம் ஜி யார் மருத்துவமனைக் காட்சிகள்).

ஆனால் தமிழ்சினிமா எந்த புற பாதிப்பையும் உட்கொள்ளாமல் தன் பாதையில் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. 117 திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டன.15 படங்கள் 100 நாட்களை தொட்டன. அதைப் பற்றிய ஒரு பார்வை.

சிறை

ஆர் சி சக்தி இயக்கத்தில், அனுராதா ரமணன் கதையில் ராஜேஷ், லட்சுமி நடிப்பில் வெளிவந்த படம்.

இந்தப் படத்தின் கதை விகடன் மணிவிழா போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. (அப்போதே 50000
ரூபாய்). இந்த பணத்தில் நூறு பவுனுக்கு மேல் வாங்கலாம் என்று பலர் அப்போது பேசிக் கொண்டார்கள்.
இன்றைய கணக்குக்கு 10 லட்சத்தை தாண்டும். ஒரு சிறுகதைக்கு (அதுவும் தமிழில்) இவ்வளவு பெரிய பரிசு இதுவரை வந்ததில்லை.

ஒரு பிராமணரின் மனைவியை (லட்சுமி), ஊர் மைனர் (ராஜேஷ்) பாலியல் பலாத்காரம்
செய்து விடுகிறார். லட்சுமியின் கணவர் அதை தட்டிக் கேட்காமல் இருக்கிறார். ஆனால் குடும்பத்தார் லட்சுமியை புழுப் போல நடத்துகிறார்கள். பொறுத்துப் பார்த்த லட்சுமி, கடைசியில் அந்த மைனர் வீட்டுக்கே பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார்.

அச்சமில்லை அச்சமில்லை


அரசியலை மையமாகக் கொண்டு தமிழில் வெளிவந்த சில படங்களில் இதுவும் ஒன்று. ராஜேஷ் வளரத் துடிக்கும் அரசியல்வாதி. சரிதா காதலியாயிருந்து மனைவியானவர். பின் ராஜேஷ் அரசியல் சூழ்நிலை களால் கெடுவதைப் பார்த்து பிரிகிறார். கதைக்களமாக உள்ளூர்,கிராமப்புற அரசியல் இருந்தது.

மேகத்தை தூதுவிட்டா போன்ற அருமையான மெலடிப் பாடல்கள் இருந்தாலும், அப்போது கையில காசு வாயில தோசை என்னும் பாடலே பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பாக பாடப் பட்டது.

செத்தவனும் ஓட்டுப் போட வருவான், அந்த கடவுளும் வரிசையில நிற்பான் என்னும் வரிகள்
சிலாகிக்கப்பட்டன. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஊர் எப்படி மாறுகிறது என்பதை அருமையாக காட்சிப் படுத்தியிருப்பார்கள்.

நாளை உனது நாள்


புத்தாண்டுக் கொண்டாட்டம். கலந்து கொண்ட அனைவரது பெயரையும் சீட்டில் எழுதிப் போட்டு குலுக்கி (எடுப்பது அனுராதா, ஆடிக்கொண்டே) எடுக்கிறார்கள். வந்த அனைவருக்கும் வெளிநாட்டுக்கு விமானப்பயணம் பரிசு. விமானம் கிளம்பி, கோளாறு காரணமாக ஒரு தீவில் தரையிரங்குகிறது.

செல்போன் இல்லாத காலம். வெளியுலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு பங்களா மட்டும் தட்டுப் படுகிறது. அங்கே ஒரு சமையல்காரி மட்டும், உணவுப் பொருள்களுடன். அவளுக்கும் ஒரு விபரமும் தெரியவில்லை. உணவு மட்டும் தயாரித்து தருகிறாள்.

இரவில் பெண் குரலில் அமானுஷ்ய பாடல். ஒவ்வொருவராக தொடர்ந்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். யாரை சந்தேகப்படுகிறார்களோ அவர்கள்தான் அடுத்து இறக்கிறார்கள். முடிவு என்ன?. யார் இதை ஏற்பாடு செய்தது?

கடைசி வரை கிரிப்பாகச் செல்லும் இந்த திரில்லரை இயக்கியவர் ஏ ஜெகன்னாதன். விஜயகாந்த், ஜெய்சங்கர், மனோரமா,நளினி, சத்யராஜ் நடித்த இந்தப் படம் ஏன் எந்த டிவியிலும் வரவில்லை எனத் தெரியவில்லை.

விதி

மறைந்த பாலாஜி, வழக்கம் போல் தயாரித்த இந்தி ரீமேக். மோகன், பூர்ணிமா ஜெயராம் (பாக்யராஜ்), ஜெய்ஷங்கர், லட்சுமி, பூர்ணம் விஸ்வனாதன், மனோரமா நடித்த இந்தப் படத்துக்கு வசனம் ஆரூர் தாஸ். ஏமாற்றிய காதலனை கோர்ட் மூலம் காதலி கைப்பிடிக்கும் கதை.

மதிய நேர முடிதிருத்தகங்கள், டீக் கடைகள் போன்றவற்றில் இந்தப் படத்தின் வசன கேசட்தான் ஓடிக் கொண்டிருக்கும். தீபாவளி சமயங்களில் விடிய விடிய வேலை நடக்கும் டெய்லர் கடைகளில் இந்தப் பட வசனத்தைக் கேட்டுக்கொண்டுதான் பையன்கள் காஜா எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பராசக்தி, மனோகரா வுக்குப் பின்னர் வசனத்திற்க்காகவே ஓடிய படம் இது என்று கூட சொல்லலாம்.

நீங்கள் கேட்டவை


என் டேஸ்டுக்கு எடுத்தாத்தான் பார்க்க வரமாட்டேங்கிறங்க. சரி. நீங்க கேட்குறதயே தர்றேன் என்று பாலு மகேந்திரா களம் இறங்கிய படம்.

கனவு காணும், பிள்ளை நிலா, அடியே மனம், ஓ வசந்த ராஜா என வெரைட்டியான பாடல்கள்.

இந்த பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாடலை அதிமுகவினர் ரீ மிக்ஸ் செய்து ரெட்டை இலை இரண்டும் பச்சை இலை என பாடி கேன்வாஸ் செய்தார்கள்.

இது தவிர இந்த ஆண்டின் மிகச்சிறந்த நாட்டுப்புற/கானா என வகைப்படுத்தும் படி இரண்டு பாடல்கள் வந்தன.

டி கே எஸ் நடராஜன் பாடிய என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி பாடல் வாங்க மாப்பிள்ளை வாங்க என்னும் படத்திலும்,

என் அத்தை பெத்த மல்லிகைப் பூவே, ஏன் ஆசைக்கேத்த முல்லைப் பூவே மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா என்னும் பாடல் பேய்வீடு என்னும் இடம்பெற்று வெளியானது.


ரஜினிகாந்த்

ரஜினி இந்த ஆண்டு தமிழில் மட்டும் ஐந்து படங்களில் நடித்தார். ஒன்றுக்கொன்று மாறுபட்ட படங்கள் என்றும் சொல்லலாம். தம்பிக்கு எந்த ஊரு படம் ரஜினியின் படங்கள் குடும்பத்தோடு பார்க்கக்கூடியவை என்று அனைவர் மனத்திலும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது. அடுத்து இதே ஆண்டில் வெளி வந்த நல்லவனுக்கு நல்லவனும் அதை உறுதி செய்தது. அன்புள்ள ரஜினிகாந்த்தில் ரஜினியாகவே
நடித்தார். சுமாரான ஓட்டமே. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த கை கொடுக்கும் கையில் ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான வேடம். நான் மகான் அல்ல படம் மட்டுமே ரஜினியின் (அப்பொதைய)
டிரேட்மார்க படம்.

கமல்ஹாசன்

இந்த ஆண்டு கமலின் ஒரு படம் மட்டுமே வெளிவந்தது. எனக்குள் ஒருவன். இதில் ஷோபனா அறிமுகமாகி இருந்தார். படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியடையவில்லை. இந்த ஆண்டில் கமல் பெரும்பாலும் இந்தித் திரையுலகையே வட்டமிட்டுக் கொண்டிருந்தார். (சாகர் படப்பிடிப்பு).

விஜயகாந்த்

இந்த ஆண்டு விஜயகாந்த் 18 படங்களில் நடித்தார். வைதேகி காத்திருந்தாள் வெள்ளி விழா கொண்டாடியது.நூறாவது நாள், நாளை உனது நாள் ஆகியவை 100 நாட்களைக் கடந்தன.

சத்யராஜ்

அதுவரை துணை நடிகர் அளவில் தலையைக் காட்டிக் கொண்டிருந்த சத்யராஜை நம்பர் 1
வில்லன் ஆக்கியது இந்த ஆண்டுதான். இந்த ஆண்டில் வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரில் கூட ஒரு சிறு வேடம் தான். ஆனால் நூறாவது நாளும், 24 மணி நேரமும் அவரை தூக்கி விட்டன.


மோகன்


நூறாவது நாளில் ஆண்டி ஹீரோ, 24 மணி நேரம், நான் பாடும் பாடல் ஆகியவற்றில் நல்ல வேடம் என மோகனின் வண்டி வழக்கம் போல ஓடியது.


முரளி/அர்ஜூன்


முரளி பூவிலங்கு மூலமும், அர்ஜூன் நன்றி படத்தின் மூலமும் அறிமுகமானார்கள். பூவிலங்கில் அறிமுகமான பூவிலங்கு மோகனும், குயிலியும் இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் புகுந்து விளையாடுகிறார்கள்.

June 06, 2009

திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை - மனதிற்க்கு தோன்றிய சில காரணங்கள்.

அருமை நண்பர் ஜாக்கி சேகர் மற்றும் வந்தியத்தேவன் ஆகியோர் இது பற்றி சில கேள்விகளை
எழுப்பியிருந்தார்கள். அவர்களின் கேள்வியில் நியாயமான ஒரு கருத்து இருந்தது.

முதலில் தமிழகத்திற்க்கு பின்னர் தேசிய அளவில் என்று இருந்திருக்கலாமே? என்று.

என் மனதிற்க்குத் தோன்றிய சில காரணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1. சிறந்த திரைக்கதை அமைப்புடைய பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும், சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது நாம் பல படிகள் பிந்தங்கியே இருக்கிறோம். பல படங்கள் தேவையில்லாத காட்சிகள், லாஜிக் மீறல்களுடன் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. பல திரைக்கதை உத்திகள் இங்கு இன்னும் பரீட்சித்து பார்கப்படவே இல்லை. எனவே ஒரு உத்தியைச் சொல்லி, அதற்கு எடுத்துக் காட்டு வேண்டுமெனில் நாம் பிற நாட்டு படங்களையே சொல்ல வேணடியிருக்கிறது. அவை சரியான
ஆங்கில சப் டைட்டில்களுடன் எளிதில் கிடைக்கின்றன.

2. தமிழில் திரைக்கதையை சொல்லிக் கொடுக்க வேண்டுமெனில் நல்ல ஆசிரியர்கள் வேண்டும். தவறில்லாமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அதில் சந்தேகமே இருக்கக் கூடாது. இது போன்று வகுப்பு எடுக்கும் அனுபவம் உடையோர் இங்கு குறைவு. பாலு மகேந்திரா (இங்கு வகுப்பெடுத்தார்) போன்ற சிலரே
உள்ளனர். இனி அதிகமோனோர் உருவாவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. எனவே வேறு மொழி ஆட்களை அழைத்து வரும் போது ஆங்கிலம் இணைப்பு மொழியாக உபயோகப் படுத்தப்படுகிறது.

3. திரைக்கதை சம்பந்தமாக குறிப்புகள் அடங்கிய மெட்டீரியல்ஸ் (ஆங்கிலம்) கொடுக்கப்பட்டது. இதை தமிழில் மாற்ற பெரு முயற்சி தேவை.

4.இந்த நிகழ்வானது சென்னை ஐ ஐ டியின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக
நடத்தப் பட்டது. இரண்டு மாதம் முன்னர் அடூர் கோபாலகிருஷ்ணன் நடத்திய திரைக்கதை
புரிதல் அமர்வும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப் பட்டது. அதுவும் தேசிய அளவிலேயே நடத்தப்பட்டது.

ஐஐடி மத்திய அரசு நிறுவனம். அதில் மாநிலம் சார் நிகழ்ச்சிகள் மிக அரிது. எல்லாமே தேசிய கண்ணோட்டம்தான்.

5. இட வசதி, ஆசிரியர் மாணவர் விகிதம், மாணவர்களிடம் கல்வி சென்று சேரும் விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டு பார்த்தால் 250 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் சூழல் இருந்தது. ஆனால் இந்திய அளவில் உதவி இயக்குநர்கள் எவ்வளவு? எனவே சினிமாவைப் பற்றிய ஓரளவு அடிப்படைப் புரிதல் உள்ளவர்களையும்,சினிமாவை தொழிலாக கைக்கொள்ளப் போகிறவர்களையும் மட்டும் முதல் கட்டமாக அனுமதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அவர்களை இனம் காணவே தங்களுக்குப் பிடித்த படத்தைப் பற்றிய அப்ஸ்ட்ராக்ட் கோரப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் புரிதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

6. தமிழிலும் இது நடைபெறும்.ஆனால் சில காலம் கழித்து.

(இதற்க்குமுன் அவ்வை சண்முகி பட தயாரிப்பின் போது, வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களைக் கொண்டு ஒரு பயிற்சிப்பட்டறை தமிழ் கலைஞர்களுக்காக கமல் நடத்தினார்.

மேலும் ஆளவந்தான் பட சமயத்திலும்
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு வகுப்பு நடத்தப் பட்டது.

மேலும் முழுக்க முழுக்க தமிழிலும் நடத்த பின்னாட்களில் வாய்ப்பு இருக்கிறது.)




நிகழ்வு பற்றிய சில உதிரி தகவல்கள்


மதிய உணவு பெரும்பாலும் சீன முறைப்படி இருந்தது. கமல்ஹாசன் அடிக்கடி பிளாக் டீ,
முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் எடுத்துக் கொண்டார் என கேட்டரிங்காரர்கள் கூறினார்கள்.

இளைஞர்கள் அதிகம். கேரளா, வங்கம், மும்பை அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது.
தமிழ் உதவி இயக்குநர்கள் நான் பார்த்த வரையில் 20க்கும் அதிகமானோர் இருந்தனர்.

வகுப்பு நடக்கும் போதும், கலந்துரையாடலின் போதும் கமல் அரங்கின் உள்ளேயே இருந்தார்.
நல்ல மாடரேட்டராக செயல்பட்டார்.

ஆனால் படம் திரையிடப்படும் போது, வெளி அரங்கில் சுற்றிவந்து பணிகளை கவனித்தார்.
தன்னார்வலர்கள்,பாதுகாப்பு பணியாளர்கள் என அனைவரின் சினிமா பற்றிய கேள்விகளுக்கும்
பதிலளித்தார்.

கமலின் செல்போன் அவர் உதவியாளரிடமே இருந்தது. முக்கிய அழைப்புகள் மட்டுமே கமலிடம் தரப்பட்டன.