May 03, 2013

கோட்ஸ் கோவிந்து மாமா


டாடி, இப்போ இன்வர்டரோடயே ஏஸி வருதே? என் ரூமுக்கு அத வாங்கி மாட்டுப்பா என்று ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் சொல்லிக்கொண்டிருக்கும் போது காலிங்பெல் சத்தம் கேட்டது.
வந்தது கோவிந்தராஜன். என் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரர். மதுரை கோட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோரில் ஒருவர். பெத்தானியாபுரத்தில் ஒண்டுக்குடித்தன வரிசை வீட்டில் இருந்துவிட்டு இப்போது அது காம்ப்ளக்ஸாக மாற்றப்பட்டதால் சமயநல்லூரை நோக்கி புலம் பெயர்ந்தவர்.

என்னுடைய பள்ளிப்பருவ கோடை விடுமுறைகள் குதூகலமாக இருக்க இவரும் ஒரு காரணம். சைக்கிள் என்பது லக்சுரியாக இருந்த காலகட்டம் அது. மதுரையில் சென்ட்ரல், நியூசினிமா தியேட்டர்களில் சைக்கிள் பார்க்கிங் டோக்கன் போடுபவர்களுக்குத்தான் டிக்கட் கொடுப்பதில் முன்னுரிமை. கோவிந்து மாமா டே ஷிஃப்டுக்கு போகும்போது, அவரை கொண்டு போய் கோட்ஸ் வாசலில் இறக்கிவிட்டு, அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றுவேன். பின் சரியாக ஷிஃப்ட் முடியும் நேரத்தில் பிக்கப்.

கோவிந்து மாமா மட்டுமல்ல. அவர் வம்சமே தொழிலாளர்களாக வாழ்ந்து முடிக்க சபிக்கப்பட்டிருந்தது. லீடர்ஷிப் குவாலிட்டி என்பது அவர்களின் ஜீனில் இல்லை. மதுரை கோட்ஸ், ஃபென்னர், டி வி எஸ், ஜெயவிலாஸ், சௌந்தர்ராஜா என சுற்று வட்டார மில்களிலும், ஐ டி சி, பிராக்டர் அண்ட் கேம்பிள், ஸ்மித்கிளைன் பீகம் போன்றோரின் டீலர்களிடம் அவர்கள் வேலை செய்து வந்தார்கள்.

கோட்ஸின் எல்லா பிரிவுகளுக்கும் தேவையான ின்சக்தியை வழங்கிக்கொண்டிருந்த பெரிய பிளைவீல் நின்றதும், துடித்துப்போன பல குடும்பங்களில் கோவிந்து மாமாவின் குடும்பமும் ஒன்று. அத்தனை வருடம் வேலை பார்த்தும் சேமிப்பு என்றெல்லாம் அவரிடம் ஏதும் இல்லை. அவுட்டரில் ரெண்டு செண்டு நிலம் கூட வாங்கி வைக்கவில்லை.

அவர்கள் பரம்பரையே அப்படித்தான். அவசியம், அவசரம் என்கின்ற இரண்டு பதத்துக்குள் அவர்கள் பொருளாதாரத்தை அடக்கி விடலாம். மாத தேவைகள் – அவசியம். அதற்கு மாத சம்பளம் வந்துவிடும். எதிர்பாரா மருத்துவ செலவு – அவசரம். அதற்கு வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்து சமாளிப்பார்கள்.

வேலை போனாலும், கிடைத்த காம்பன்சேஷன் பணத்தை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தார் கோவிந்து மாமா. அப்போது கைகொடுத்தான் அவர் மகன் வெங்கடேசன். அவனுக்கு இன்னொரு வெங்கடேசன் மூலம் ஐ டி சி டீலர் ஒருவரிடம் வேலை கிடைத்தது. .

குமாஸ்தா வேலை கிடைத்தால், குமாஸ்தா அளவுக்குச் சிந்தித்தால் அந்த வேலையில் தாக்குப்பிடிக்கலாம்.மானேஜர் போல சிந்தித்தால் பிரமோஷன் வாங்கி உயராலாம். முதலாளி போல சிந்தித்தால் வாழ்க்கையில் மிக உயரலாம். ஆனால் இந்த வெங்கடேசன் ுமாஸ்அளவுக்குூட சிந்திக்காட்டான். எப்படியோ காலம் அவர்களுக்கும் ஓடிக்கொண்டிருந்தது.

”நம்ம வெங்கடேனுக்கு பொண்ணு தகைஞ்சிருக்கு. சமயநல்லூர்ல ஒரு ஜெராக்ஸ் கடையில வேலை பார்க்கிறா, வர்ற ஞாயித்துக்கிழமை வெத்தலை பாக்கு மாத்தறோம், அவசியம் வரணும்” என்பதுதான் கோவிந்து மாமாவின் செய்தி.

காப்பி ஆனவுடன், கிளம்பும் போது,

வெங்கடேசன் முதலாளி, உனக்கு நல்ல பழக்கமாமே? இப்போ இவன் அண்ணாநகர் பிராஞ்சுல இருக்கான். சமயநல்லூர்ல இருந்து போய் வரவே நேரமாயிடுதுங்கிறான். விளாங்குடி பக்கத்துல ஒரு பிராஞ்சு இருக்கில்ல, அங்க மாத்தி வாங்கிக் கொடுத்தா சௌியமா இருக்கும். என்று கேட்டுவிட்டுச் சென்றார்.

”அவனே ஒரு கூறு இல்லாத பைய, அவன சொந்தக்காரன்னு சொல்லி அசிங்கப்படணுமா? இந்த கலெக்டரு எங்க வேலை பார்த்தா, என்னவாம்? என மனைவியிடம் பொரிந்தேன்.

விடுங்க. நல்ல மனுஷன். மூத்தவன் பிறந்திருந்தப்ப அவர் சம்சாரம் ஆஸ்பத்திரிக்கி வந்து எவ்வளோ  ஒத்தாசையா இருந்தாங்க?. இதச் செய்யுறதுல என்ன குறைஞ்சிறப் போறீங்க? என்று சமாதானப் படுத்தினாள் என் மனைவி.

வெங்கடேசனின் முதலாளி, நான் ரீஜனல் மானேஜராக இருக்கும், நிறுவனத்தின் பிராடக்டுகள் சிலவற்றை டீலர்ஷிப் எடுத்திருக்கிறார். அவ்வகையில் நல்ல பழக்கம். போனில் அழைத்து, பார்க்க வரவேண்டும் என்று கேட்ட போது, இரவு உணவுக்கு வீட்டிற்கு வரச் சொன்னார்.
லௌகீக விஷயங்கள் பேசி முடித்ததும், வெங்கடேசன் விபரத்தைச் சொன்னேன். உங்கள் உறவினரா என்று ஆச்சர்யப்பட்டவர், நாளைக்கே மாறிக்கச் சொல்லுங்க என்றார்.

இரவு உணவு முடிந்ததும், வெளியில் வந்து காற்றோட்டமாய் நின்று சிகரெட் புகைப்பது அவர் வழக்கம். பக்கத்து பிளாட்டுகளில் இரவு எட்டரை மணிக்கும் ஜேசிபி வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. எங்கள் இருவருக்குமிடையேயான பேச்சு பல கோணங்களில் சென்று கொண்டிருந்தது. மீண்டும் எப்படியோ வெங்கடேசனுக்கு வந்தது.

ஆட்டிடியூட், கோல் அப்படின்னு எதுவுமே இல்லை சார் அவனுக்கு. அதான் வருத்தமாயிருக்கு. ஏன் அவங்கப்பாவும் அப்படித்தான். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட ஒண்டிக்குடித்தனத்துல இருக்கமேயின்னு முப்பது வருஷத்துல ஒரு நாள் கூட அவர் சிந்திச்சதேயில்லை. என்றேன்.

உடே அவர் என்னிடம், ரவி, இந்த உலகம் ஓரளவாவது நல்லாயிருக்குன்னா, நீயோ நானோவா காரணம்? இல்லப்பா. உங்க கோவிந்து மாமா மாதிரி ஆளுகளாலதான். என்றார்.

உனக்கு எத்தனை வீடு இருக்கு? என்றார்.

“மூணு இருக்கு. இப்போ புதூர்ல ஒரு பிளாட் சொல்லியிருக்கேன். என்றேன்.

உனக்கு ரெண்டு பசங்க. பின்னாடி உனக்கொண்ணு, பிள்ளைங்களுக்கு ஆளுக்கொண்ணுன்னு பார்த்தாலும், மூணு வீடு போதும். எதுக்கு நாலாவது? என்று கேட்டார்.

ஒரு வீடு கட்டணுமின்னா, எவ்வளோ மணல்? ஒருநாள்ல உருவாகுறதா, அது? எத்தனை ஆயிரம் வருஷம் ஆகணும் மணலா மாற?, சோபிஸ்டிகேட்டடா கட்டுறேன்னு, கிரானைட்டுக்கு எத்தனை மலையை அழிச்சிருக்கோம்?, எவ்வளோ மரம் வெட்டிருக்கோம்? ஏஸி, பிரிட்ஜு,டிவின்னு எவ்வளோ கரண்ட வேஸ்ட்பண்ணுறோம்?. அதக்கூட விடு. எவ்வளோ தண்ணிய வேஸ்ட் பண்ணுறோம்? வீடுகட்ட, அதை மெயிண்டெயின் பண்ண? புதுசா ஒரு வீடு வரணுமின்னா எவ்வளோ இயற்கை வளம் அழியும், தெரியுமா? தேவைக்கதிகமா அதிக இடத்தோட வீடு கட்டிக்கிறதும் குத்தம்தான். நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறேன்.

முன்னேறனும்னு நாம பேசிக்கிறோம். எவ்வளோ பெட்ரோல் , டீசல அழிக்கிறோம்? ட்ராவல் பண்ண.

அதிகமா ஆசப்படமா, கிடைக்கிறத வச்சு திருப்தி பட்டுக்கிட்டு இருக்குற கோவிந்து, வெங்கடேசன் மாதிரி ஆளுகளோட கோட்டாவத்தான் நாம யூஸ் பண்ணி அழிச்சுக்கிட்டு இருக்கோம். என்று நீளமாக பேசி முடித்தார்.

வெங்கடேசன் கல்யாணத்துக்கு நிச்சயம் போய்வர வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.

April 20, 2013

சிவில் இஞ்சினியரிங் படிப்பு – ஒரு பார்வை

உழவு, நெசவு ஆகிய தொழில்கள், கலை, இலக்கியம் எல்லாம் மனிதன் சிந்திக்க ஆரம்பித்த உடன் தான் வந்திருக்கும். ஆனால் பொறியியலும், மருத்துவமும் மனித இனம் உருவான உடனேயே உருவான ஒன்று. பிரசவம், மருத்துவம் என்றால், மழை, மின்னல், வெள்ளத்துக்கு பயந்து மனிதன் குகைகளில் ஒதுங்கியது பொறியியல். குறிப்பாக சிவில் எஞ்சினியரிங்.

அனுபவ பாடமாக விளங்கிய இந்த படிப்பு, பரம்பரை பரம்பரையாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. கிரேக்க கட்டடக் கலை, காந்தாரக் கட்டட கலை, மொகலாய கட்டட கலை என  ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. கல்விச் சாலை ரீதியிலான படிப்பு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே நாலந்தா பல்கலைகழகத்தில் ஆர்க்கிடெக்சர் படிப்பு இருந்திருக்கிறது. 

தஞ்சை பெரிய கோயில், கல்லணை என பல அற்புத கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், இப்படிப்பு கலாசாலையாக அமைத்து நுட்பங்கள் சொல்லிக்கொடுக்கப்படாமல் அனுபவ மற்றும் பரம்பரை பாடமாகவே இருந்து வந்தது.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் அவர்கள் ஆட்சி புரிய ஏதுவாக இங்கே பல கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டன. அதில் ஒன்றுதான் நில அளவை துறை. அதற்கு ஆட்களை பயிற்றுவிப்பதற்காக “ஸ்கூல் ஆஃப் சர்வேயிங்” 1794ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1859ல் இது சென்னை பல்கழைகழகத்துடன் இணைக்கப்பட்டது. இதுவே “கிண்டி எஞ்சினியரிங் காலேஜ்” என்று இன்றளவும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

1919ல் தொடங்கப்பட்டு தற்போது ஐ ஐ டி வாரணாசி என தற்போது அழைக்கப்படும் “பனாரஸ் இந்து யுனிவர்சிடி” அதற்குப்பின், முன்னால் பாரத பிரதமர் நேரு அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ஐ ஐ டி க்கள், என் ஐ டிக்கள்,  டாடா, பிர்லா ஆகியோர் தன்முனைப்பில் உருவாக்கிய ஐ ஐ எஸ் சி, பிட்ஸ் பிலானி,என எந்த உயர் கல்லூரி நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் சிவில் துறை பிரதான பங்கு வகிக்கும்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்,
1929ல் தொடங்கப்பட்டு, தற்போது தமிழக அரசு தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ள அண்ணாமலை பல்கழைகழகத்திலும் சிவில் இஞ்சினியரிங் படிப்பு பிரதானமாக இருந்து வந்திருக்கிறது. அதன்பின் 1950-60 களில் தொழில் அதிபர்களால் தொடங்கப்பட்ட கல்லூரிகளான பி எஸ் ஜி, சி ஐ டி, தியாகராஜா மற்றும் அரசால் தொடங்கப்பட்ட கோவை, சேலம், திருநெல்வேலி பொறியியல் கல்லூரிகள் எல்லாவற்றிலும் சிவில் துறை சிறப்பாக இயங்கி வந்தது

1984 ல் தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தொடங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அனுமதி கொடுத்தபோது, உருவான எல்லா கல்லூரிகளிலும் இரண்டு துறைகள் நீக்கமற இருந்தன. அவை சிவில் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்.
இந்த இரண்டு துறைகளுக்கு சிறந்த பேராசிரியர்களும் கிடைத்தார்கள். அதற்கு காரணம் மேற்சொன்ன கல்லூரிகளின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்.

இப்படிப்பட்ட சிறப்பு இருந்தாலும், நல்ல பேராசிரியர்கள் இருந்தாலும், மாணவர்கள் சுயநிதி கல்லூரிகளில் சிவில் படிப்பை ஏற்கத் தயங்கினார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் அருகியிருந்த வேலை வாய்ப்பு. அரசுத்துறைகளில் அப்போது போதிய அளவு ரெக்ரூட்மெண்ட் இல்லை. தொழிற்சாலைகளிலும் அனுபவமிக்க டிப்ளமோ பொறியாளர்களையே பயன்படுத்தினார்கள்.

தற்போது இருப்பது போல் கவுன்சிலிங்கில் துறையை தேர்வு செய்யும் முறை முன்னர் கிடையாது. கல்லூரியைதான் தேர்வு செய்ய முடியும். முதலாமண்டு (இரண்டு செமெஸ்டர்கள் இல்லாமல் – ஒரே பருவமாக பாடங்கள் நடத்தப்படும்) முடியும்போது, கல்லூரிகளில் விருப்பம் கேட்டு துறையை ஒதுக்குவார்கள். ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு முறை வைத்திருப்பார்கள். இதில் பெரும்பாலும் சிவிலை யாரும் விரும்பமாட்டார்கள். வேறுவழியில்லாமல் தான் எடுப்பார்கள்.

95க்கு பின்னர், சாப்ட்வேர் துறையின் வளர்ச்சிக்குப் பிறகு, வேலை வாய்ப்புகள் பெருக, ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.. அகில இந்திய தொழில்நுட்ப கழக விதிகளின் படி, கல்லூரி தொடங்கும் போது, மூன்று துறைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும். ஒரு துறைக்கு 60 மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலும் சிவில் துறை தொடங்கப்படவில்லை.

ஒரு காரணம் மாணவர் விருப்பச் சேர்க்கை குறைவு என்றாலும், இன்னொன்று இந்தப் பிரிவு தொடங்க ஆகும் செலவு. ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டிரியல்ஸ் லேப், புளுயிட் டைனமிக்ஸ் லேப், கான்கிரீட் லேப், சாயில் மெக்கானிக்ஸ் லேப், என்விரான்மெண்ட் லேப், கேட் லாப், சர்வே லேப் என அண்ணா பல்கழைகழக விதிமுறைப்படி பத்து லேபுகள் குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இவற்றின் உபகரணங்கள் விலையும் மிக அதிகம்.

ஆனால் கம்பியூட்டர் சைன்ஸ், ஐ டி போன்ற துறைகள் தொடங்க கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர்கள், நெட்வொர்க் உபகரணங்கள் மட்டும் போதும். இவற்றின் விலை, சிவிலுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
1996ல் மு.கருணாநிதி முதல்வராய் ஆனவுடன் அரசாங்க வேலைகள் பலருக்கும் சிபாரிசு இன்றி கிடைத்தன, இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு வீட்டுக்கதவை தட்டி அப்பாயிண்மெண்ட் ஆர்டர்கள் கொடுத்தார்கள். அப்போது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில் ஏராளமான சிவில் இஞ்சினியர்கள் பலன் அடைந்தார்கள்.

காலம் செல்லச் செல்ல, பல தொழிற்சாலைகள் வந்தன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஏராளமான அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்தன. இந்தியாவை பொருளை உற்பத்தி செய்யும் நாடாக மட்டுமில்லாமல் பொறியியல் டிசைன்/கன்சல்டிங் நாடாகவும் மற்ற உலக நாடுகள் பார்க்க ஆரம்பித்தன.

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் சிவில் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின. இவற்றைச் சமாளிக்க மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேவை என்பதால் சிவிலுக்கு டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியது.

எனவே தற்போது பல கல்லூரிகளும் சிவில் பாடப்பிரிவை துவுக்கியுள்ளன. சிவில் பிரிவு உள்ள கல்லூரிகள் தங்கள் மாணவர் சேர்க்கை அனுமதியை (அப்ரூவ்ட் இன்டேக்) அதிகபடுத்தியுள்ளன.
ஆனால் இப்போது சிவில் துறைக்கு தகுதியான பேராசிரியர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம் சிவில் முதுகலை பட்டப்படிப்பில் சேர யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. சில கல்லூரிகளின் வேலை வாய்ப்பு விளம்பரங்களில், சிவில் துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு அதிக சம்பளம் தருவதாக கூட அறிவிப்பு தென்படுகிறது.

டி சி எஸ் போன்ற சாஃப்ட்வேர் நிறுவனங்களும் இத்துறையைச் சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். மாநில அரசு, மத்திய அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை பணிகள், உள்ளாட்சி பணிகள், மேம் பாலங்கள், சேது சமுத்திர திட்டம், தங்க நாற்கர சாலை திட்டம் ரயில்வே துறை, மெட்ரோ ரயில் திட்டங்கள், தொழிற்சாலை கட்டுமானம், வணிகவளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என சிவிலுக்கு வாய்ப்புகள் எங்கும் உள்ளன.

இது போல் வளைகுடா நாடுகளிலும் நல்ல வாய்ப்புகள் தற்போது உள்ளன. கத்தார்,ஓமன், சவுதி அரேபியாவில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கத்தாரில் 2020ல் ஒலிம்பிக் பந்தயங்களும், 2022ல் உலக் கோப்பை கால்பந்து போட்டிகளும் நடக்கப் போவதால் ஏராளமான ஸ்டேடியங்கள், தங்குமிடங்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன. துபாயிலும் 2008ல் இருந்த தேக்க நிலை மெதுவாக மாறிவருகிறது.
வளைகுடாவைப் பொறுத்த வரையில் இந்தியர்களால் நடத்தப்படும் கட்டுமான நிறுவனங்கள் அனுபவமில்லாதவர்களையும் பணியில் அமர்த்திக்கொள்கிறார்கள். அரபு நிறுவனங்கள் அனுபவத்தையும், ஐரோப்பியர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் கம்யூனிகேசன் ஸ்கில்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் சிவில் இஞ்சினியரிங் தொடர்புடைய ஸ்டேட்புரோ, எல் எஸ் டைனா, நாஸ்ட்ரான், பேட்ரான் போன்ற சாஃப்ட்வேர் கற்பதும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும்.

எனவே முன் எப்போதும் இல்லாத வரையில் இத்துறை எழுச்சி கண்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நான் சிவில்டா என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும்படி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தரவுகள்
விக்கி பீடியா இணையதளம் (கல்லூரிகள் தொடர்பான விபரங்கள்)
பதிவர் வெங்கடேஷ் (வளைகுடா தொடர்பான விபரங்கள்)

April 19, 2013

பிளேபாய் கமல்


குழந்தை நட்சத்திரமாய் இருந்த கமல் 73 ஆம் ஆண்டு ”சொல்லத்தான் நினைக்கிறேன்” மூலம் இளவயது நடிகராகி 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 43 ஆண்டுகளும் அவரை விடாமல் துரத்தி வருவது பிளேபாய் இமேஜ். இதற்கு முக்கிய அடித்தளமாய் இருப்பது, அவர் முதல் சில ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களே. அதுவும் குறிப்பாக முதல் ஐந்து ஆண்டுகளில், தன் 24 வயது வரையில் ஏற்று நடித்த கேரக்டர்களே.

சொல்லத்தான் நினைக்கிறேனில், நாயகன் சிவகுமார். அவரை மூன்று பெண்கள் காதலிக்கிறார்கள். கமலுக்கு மைனர் வேடம்.  கமலிடம் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற மூவரில் இன்னொரு பெண், கமலை மணக்கிறார்.

இதே ஆண்டு வெளியான குமாஸ்தாவின் மகள் திரைப்படத்திலும் மைனர் வேடம். தன்னிடம் பணியாற்றும் குமாஸ்தாவின் மகளை, அவள் விருப்பத்திற்கு மாறாக மணக்கும் கதாபாத்திரம்.

74ல் வெளியான விஷ்ணு விஜயம் படத்தில் தன்னை விட வயதான ஷீலாவை காதலிக்கும் பாத்திரம்.

75ல் வெளியான பட்டாம்பூச்சியில் தன் உயர்வுக்கு காரணமான பெண்ணை காதலித்து கழட்டி விடும் பாத்திரம். அபூர்வ ராகங்களில் தன்னை விட பலவயது மூத்த ஸ்ரீவித்யாவை காதலிக்கும் பாத்திரம். இதே ஆண்டில், தெலுங்கில் வெளியான மற்றொரு சீதாவில் (மூன்று முடிச்சின் அசல்) இங்கு ரஜினி ஏற்றிருந்த, நண்பனின் காதலியை காதலித்து, அதற்காக நண்பனையே நட்டாற்றில் விடும் பாத்திரம்.

கமலின் அன்னியோன்ய நண்பர் ஆர் சி சக்தி எடுத்த உணர்ச்சிகள் படம் இங்கே வர தாமதமானது. ஆனால் அது ராசலீலா வாக மலையாளத்தில் வெளியானது 75ல். கிராமத்து வாலிபன், தன் பண்ணையாரின் மகளால் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகிறான். பின் நகருக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் வேலை செய்கிறான். அங்கும் அவனுக்கு சில பெண்களால் பாலியல் தொந்தரவு. பின்னர் ஒரு விலைமாதுவை ரெய்டில் இருந்து காப்பாற்றி அவளுடன் நட்பாகிறான். இறுதியில் பாலியல் நோய்க்கு ஆளாகிறான்.

அடுத்து கமல் நடித்த படம், மோகம் முப்பது வருஷம். இதில் அவர் சுமித்ராவை காதலிக்கிறார். படாபட் ஜெயலட்சுமியின் கணவர் கிராமத்தான். அதனால் ஸ்டைலான கமல் மீது படாபட்டுக்கு ஆசை. நூல் விடுகிறார். இதற்கிடையில் ஸ்ரீபிரியா வேறு. அவருக்கு கமல் மூலம் குழந்தை பெற ஆசை. எப்படி இந்த இருவரையும் தவிர்த்து விட்டு சுமித்ராவை கைப்பிடிக்கிறார் என்பதே கதை.

மன்மதலீலை. படத்தலைப்பே போதும். வக்கீல் மனைவி, குமாஸ்தா மகள், குடிகாரனின் மனைவி என கண்ணில் படுவோரையெல்லாம் கவிழ்க்கும் பிளேபாய் பாத்திரம். கடுப்பாகி, விவாகாரத்து கொடுத்துச் சென்ற மனைவியையே, காத்திருப்புக் காலத்தில் கர்ப்பமாக்கி விடும் பாத்திரம்.
லலிதா என்னும் படத்தில் சுமித்ரா கமலின் காலேஜ் சீனியராக வருவார். இருவருக்குமான காதல், பிரச்சினைகள் என பயணிக்கும் படம்.
அவர்கள் படத்தில் கமல் ஒரு வெண்டிரிலோக்விஸ்ட். சைக்கோ கணவனிடம் இருந்து விவகாரத்துப் பெற்ற சுஜாதவை காதலிக்கும் பாத்திரம்.

”ஊர்மகள் மரிக்குமோ” என்ற மலையாளப்படம் இதில் ஷோபாவை திருமணம் செய்து அவரை கொன்று விடும் பாத்திரம். பின் விதுபாலாவை திருமணம் செய்து கொள்வார். ஷோபாதான் விதுபாலா ரூபத்தில் வந்து பழிதீர்ப்பார்.

78ல் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது. கமலின் காதலியின் தோழி விதவை. திருவிழா பார்க்க தோழியின் கிராமத்திற்கு சென்றிருப்பார் காதலி. காதலியை பார்க்கப் போகும் கமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் விதவையின் விரகத்தை தீர்த்து வைப்பார்.

இதே ஆண்டு மலையாளத்தில் வெளியான “வயநாடான் தம்பன்” என்னும் படத்தில் இளம் பெண்களின் ரத்தத்தை குடித்து, நூறாண்டுகளுக்கு மேல் இளமையுடன் வாழும் பாத்திரம். பெண்களை மயக்கி சரசமாடி கொல்லும் வேடம்.  பின் பழிவாங்கப்படுவார்.

இதே ஆண்டு வெளியான “சிகப்பு ரோஜாக்கள்”. தன்னைவிட மூத்த பெண்ணால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி, அவள் தப்புவதற்காக பழியை கமல் மேல் போட்டு விட, நகருக்கு விரட்டப்படுகிறார். அங்கு வேலைக்குச் சேரும் இடத்தில், முதலாளி அவருடைய மனைவியின் தவறான நடத்தையால் கொலைகாரர் ஆகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கிறார்கள், பின்னர் என்ன ஆனது என்பதே கதை.

இந்த காலகட்டத்தில் மலையாளத்தில் வெளியான ஈட்டாவில் ஷீலாவுடன் பெரும்காதல் புரியும் பாத்திரம்.

மீண்டும் கோகிலா படத்தில்  மனைவி ஸ்ரீதேவி. நடிகையான தீபாவுக்கு வழக்கறிஞராகப் போய் அவரையும் கரெக்ட் செய்யும் பாத்திரம்.

இதன்பின் சகலகலா வல்லவனின் வெற்றி, மூன்றாம் பிறையில் கிடைத்த தேசிய விருது என கமலின் மன்மத அவதாரங்கள் குறைந்தன.

 சகலகலா வல்லவனிலும், மச்சினனை திருத்த, அவனுடன் தொடர்பில் இருக்கும் பெண்ணிடம் பழகும் வேடம். மூன்றாம் பிறையில் வயதான கணவனிடம் சுகம் கிடைக்காத சில்க் இடம் புரபோசல் வாங்கும் பாத்திரம்.

நம் ஆட்கள், இப்போது கூட திரை நடிப்பை அப்படியே நம்பும் அளவுக்கு நல்லவர்கள். 40 வருடத்துக்கு முன்னால். அப்போது ஆட்சியையே கொடுத்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் பிளேபாயாக நடித்ததால் அப்படி ஒரு இமேஜ் கமலுக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. அவரும் அதற்கேற்ப இரண்டு திருமணம், ஒரு விவாக முறிவு, பெரும்பாலான படங்களில் முத்தக் காட்சி என மக்களுக்கு தீனி போட்டுக்கொண்டேயிருந்தார்.
இந்த கால கட்டத்துக்கு மேல் வெளியான படங்களில் பெரும்பாலும் நல்ல காதலனாகவே நடிக்க ஆரம்பித்தார்.

இந்திரன் சந்திரனில் பெண் பி ஏ வுடன் தொடர்பு கொள்ளும் மேயர் வேடம், பஞ்ச தந்திரத்தில் பல நாட்டுப் பெண்களையும் மடக்கும் பைலட் வேடம் என அவ்வப்போது மட்டும் மன்மத அவதாரம் எடுக்கிறார் கமல்.

என் பள்ளி நாட்கள், கல்லூரி, வேலை, என பல காலங்களிலும் யாராவது ஒருவர், கமல் சரியான பொம்பளப் பொறுக்கிங்க எனறு கூறுவதை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் அந்த வேடத்தை அழகாய்ச் செய்து மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டார் என்றும் சொல்லலாம் அல்லவா?. ஒரு நடிகனாய் அது வெற்றிதானே?
 இப்படி குறை சொல்லும் பலர் ஒன்றை மட்டும் வசதியாய் மறந்து விடுகிறார்கள். பெண்களுக்கு இரண்டாம் திருமணத்துக்கு உரிமையுண்டு என பல படங்களின் மூலம் தொடர்ந்து நிறுவிவருபவர் கமல்ஹாசன் தான்.

சிப்பிக்குள் முத்துவில் குழந்தைகளுடன் இருக்கும் ராதிகா உடன் திருமணம், நாயகனில் விபச்சார விடுதியில் இருந்த சரண்யா உடன் திருமணம், வேட்டையாடு விளையாடுவில் குழந்தையுடன் இருக்கும் ஜோதிகா உடன் திருமணம், மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போலிஸ் அதிகாரியின் கீப்பாய் இருந்தவருடன் வாழ்க்கை என மற்ற ஹீரோக்கள் ஏற்கத்தயங்கும் வேடங்களை ஏற்று ஒரு நம்பிக்கையூட்டுபவராக தொடருகிறார் இந்த பிளேபாய்.