February 22, 2012

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஆண்டு 2003 – ஒரு பார்வை

2003 ஆம் ஆண்டில் தமிழ்சினிமாவின் சென்செஷனாக இருந்தவர் விக்ரம் தான். தூள், காதல் சடுகுடு, சாமி மற்றும் பிதாமகன் ஆகியவை இவர் நடிப்பில் வெளிவந்தன. தூள் மற்றும் சாமி கமர்சியலாக கலக்க, பிதாமகன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தான். சறுக்கலாக காதல் சடுகுடு அமைந்தது. நான்குமே வெவ்வேறு விதமான பாத்திரங்கள். தூளில் கிராமத்து முரட்டு வாலிபன், காதல் சடுகுடுவில் நகரத்து இளைஞன், சாமியில் கம்பீரமான போலிஸ் அதிகாரி, பிதாமகனில் மயானத் தொழிலாளி.

இந்த ஆண்டில் மற்ற நடிகர்களும் போலீஸ் வேடம் போட்டார்கள். அவர்களில் முதலிடத்தில் வந்தது காக்க காக்க சூர்யா தான். அன்புச் செல்வன் ஐ பி எஸ் இன்னும் நம் கண்களில் நிற்கிரார். ஆஞ்சநேயாவில் அஜீத்தும், ராமச்சந்திராவில் சத்யராஜும் காக்கி உடுப்பை அணிந்தார்கள். அர்ஜூன் பரசுராமில் காவல் துறை அதிகாரியாகவும் மற்றும் ஷங்கரின் சிஷ்யர் இளங்கண்ணன் இயக்கத்தில் ஒற்றனாகவும் (சி பி ஐ அதிகாரி) வந்தார். தம் படத்தில் சிம்புகூட கடைசி காட்சியில் காக்கிச் சட்டை மாட்டினார்.

ஆனால் யதார்த்தமான போலிஸ் அதிகாரியாக வாழ்ந்து காட்டியவர் ரஞ்சித் தான். அவரது பீஷ்மர் படம் ஒரு போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நிஜ வாழ்வில் சந்திக்கும் நெருக்கடிகளை சமரசமில்லாமல் சொன்னது. தூசி என்னு ஊரில் ஒரு காவல்துறை சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த நெருக்கடிகளை அடி நாதமாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருந்தார்கள். இந்த ஆண்டில் வெளியான பல வெற்றிப் படங்களினால் இந்தப் படம் கவனிப்பு பெறாமல் போனது.

விக்ரமை அடுத்து இந்த ஆண்டில் கலக்கியவர் தனுஷ். அவரது காதல் கொண்டேனும், திருடா திருடியும் அவருக்கு நல்ல பெயரையும் வசூலையும் தந்தது.


தமிழ்சினிமாவில் சற்று மாறுபட்ட படங்களைத் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் ஜனநாதன் இயற்கை மூலமும், கரு பழனியப்பன் பார்த்திபன் கனவு மூலமும், சமுத்திரக்கனி உன்னை சரணடைந்தேன் மூலமும் அறிமுகமானார்கள்.
செல்வராகவன் அபிஷியலாக காதல் கொண்டேன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை எப்படியாவது நாயகன் ஆக்கி விட வேண்டும் என்று பூஞ்சோலை என்னும் படத்தை ஆரம்பித்தார். ஆனால் படம் வெளியாகவில்லை. அவர் பின் தன் நண்பன் சரண் தயாரிப்பில் வெளியான உன்னை சரணடைந்தேனில் நாயகன் ஆனார். ஆனால் இப்போதோ பல நாயகர்களை உருவாக்கும் இயக்குநராக மாறிவிட்டார்.

தமிழ்சினிமா வழக்கப்படி பல வாரிசுகள் இந்த ஆண்டும் அறிமுகமானார்கள். அவர்களில் ஜீவா இப்போது மிளிர்ந்து வருகிறார். ஆசை ஆசையாய், தித்திக்குதே என்ற அவரது இரு படங்களும் அடிவாங்கின.

சத்யராஜ் மகன் சிபிராஜ் ஸ்டூடண்ட் நம்பர் 1 மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா நாயகர்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டினார்.

ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ராஜா இயக்குநராகவும், ஜெயம் ரவி நடிகராகவும் அறிமுகமானார்கள். ரவி அதன் பின் சில வெற்றிப்படங்கள் கொடுத்தும் முன்னிலை நடிகராக பரிமளிக்காமல் இருக்கிறார். ஜெயம் ராஜா நவீன ஜெராக்ஸ் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, ஷங்கரைக் கூட அதை பாலோ செய்ய வைத்து விட்டார்.

சேர்த்ததை எல்லாம் ஒரே படத்தில் விட்டவர்கள் வரிசையில் இந்த ஆண்டு ஏ எம் ரத்னமும், ரம்பாவும் சேர்கிறார்கள். எனக்கு 20 உனக்கு 18ல் ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா பணத்தை வாரி இறைத்திருந்தார். சந்திப்போமா என்னும் பாடலில் மட்டும் ஏகப்பட்ட மாண்டேஜ் காட்சிகள். ஒவ்வொரு காட்சியிலும் ஏராளமான ரிச் கேர்ள்ஸ். ஏ ஆர் ரகுமான் பாடல்களை இசையமைக்க எடுத்துக் கொண்ட நேரம் அளவுகூட படம் ஓடவில்லை.

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் பாதிப்பில் படம் எடுக்க நினைத்த ரம்பாவின் பொருளாதாரத்துக்கு திரி ரோசஸ் மலர் வளையமாக மாறிவிட்டது.

பெரிய இயக்குநர்களுக்கு இந்த ஆண்டு மரண அடியாக அமைந்தது. பாலுமகேந்திரா – ஜூலி கணபதி, பாரதிராஜா – ஈரநிலம், பாக்யராஜ் – சொக்கத்தங்கம் என சறுக்கினார்கள்.

மௌலிக்கு நள தமயந்தியும், பிரியதர்சனுக்கு லேசா லேசாவும், ஷங்கருக்கு பாய்ஸும் சறுக்கலைத் தந்தன.

நாசர் மோகன்லால், சிம்ரன் கூட்டணியுடன் பாப் கார்ன் எடுத்தார். அது ரசிக யானையின் தீனிக்கு பாப்கார்ன் ஆகவே அமைந்தது.

விஜய்க்கு வசீகரா சுமாராகவும், புதிய கீதை மட்டமாகவும், திருமலை நன்றாகவும் ஓடியது. சிம்பு தம்மில் கொஞ்சம் தம் பிடித்தார். ”அலை” யில் கரை சேரவில்லை.

அங்கிள் நடிகர்களாக மாறியிருந்த விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு ஆகியோருக்கு இந்த ஆண்டும் ஏமாற்றமே. விஜயகாந்த் சொக்கத்தங்கம் மற்றும் தென்னவன் ஆகிய படங்களிலும் சத்யராஜ் ராமச்சந்திரா, மிலிடரி ஆகிய படங்களிலும் நடித்தனர்.


சரத்குமாருக்கு பாட்ஷாவின் ரீ மேக்கான அரசு மற்றும் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான பாறை ஆகியவை ஆறுதலான வெற்றியைத் தந்தன. பிரபு எஸ் மேடம், பந்தா பரமசிவம் போன்ற காமெடி படங்களில் நடித்தார்.


எஸ் டி சபா இயக்கிய புன்னகை பூவே, சந்தோஷ் இயக்கிய மனசெல்லாம் போன்ற படங்கள் மனதை தாலாட்டின. ஜே டி – ஜெர்ரி இயக்கிய விசில் காம்பஸ் திரில்லராக வெளிவந்தது.

இந்த ஆண்டை வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ் ஆண்டு என்றும் சொல்லலாம். வின்னர் படத்தின் மூலம் ஆர்ப்பாட்டமாக அதை ஆரம்பித்தார். பூபதி பாண்டியனின் வசனம், சுந்தர் சியின் கண்ட்ரோல் துணையுடன் அவர் தியேட்டரை அதிரவைத்தார்.

இதே ஆண்டில் தான் சுந்தர் சி அன்பே சிவம் என்ற படத்தையும் இயக்கினார்.

தாஜ்மகாலைப் பற்றி ஒரு ஆங்கில எழுத்தாளர் எழுதும் போது, எவ்வளவோ புகைப்படங்கள் எல்லாவிதமான கோணங்களிலும் எடுக்கப்பட்டு விட்டன. அழகை ஆராதித்து எல்லா மொழிகளிலும் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. ஏராளமான வல்லுநர்கள் டெஸ்டிமோனியல்கள் கொடுத்து விட்டார்கள். ஆனாலும் அதைப்பற்றி எழுத, படமெடுக்க இன்னும் அங்கே ஏராளமான விஷயம் இருக்கிறது என்றார்.

அது அன்பே சிவம் படத்துக்கும் பொருந்தும். 2003ல் தமிழில் பிளாக் பரவலாக மக்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து, இன்று பிளாக் ஆரம்பிக்கும் புது பதிவர் வரை அதைப் பற்றி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அன்பே சிவம் பற்றி எழுதி விடுகிறார்கள்.

இது என் பங்குக்கு.

2007ல் என் நண்பன் அனுப்பிய ஆராய்ச்சிக் கட்டுரை பல கேள்விகளுடன் நிராகரிக்கப்பட்டது. நான் அனுப்பி இருந்த ஒரு கட்டுரைக்கும் பலத்த அடி. மாலையில் இருவரும் சேர்ந்து அன்று விடுதியில் திரையிடப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்தோம். இந்த வேலைக்கே சரியான அங்கீகாரம் கிடைக்கலியே, நாம பார்த்ததுக்கு கிடைக்காததுக்கு வருத்தப் படுறோம் என மனசைத் தேத்திக் கொண்டோம்.


கட்டுரைக்கு உதவிய தளங்கள்

தமிழ்சினிமா.காம்

விக்கி பீடியா

11 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பார்வை. நிறைய விஷயங்கள். நன்றி முரளி பகிர்வுக்கு.

புதுகை.அப்துல்லா said...

2012 ஆம் ஆண்டு வலையுலகில் மீண்டும் முரளிகண்ணன் ஆண்டு :)

Francis Rajesh said...

//ஜெயம் ராஜா நவீன ஜெராக்ஸ் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, ஷங்கரைக் கூட அதை பாலோ செய்ய வைத்து விட்டார். //

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜான்

அண்ணே வணக்கம்னே

வாங்க பிரான்ஸிஸ் ஆரோக்கிய சாமி. நன்றிகள்

கோவி.கண்ணன் said...

சினி தெய்வமே....எப்படி இப்படி தகவலாகக் கொட்டுது

கார்க்கிபவா said...

அந்த தீபாவளி பற்றி நிறைய எழுதுவீங்கன்னு நினைச்சேன்

அஜித் தவிர, அவ்வளவாக போட்டிய்யில்லாமல் இருந்த விஜய்க்கு விக்ரமும், சூர்யாவும் செம ஹிட்ஸ் கொடுத்துட்டு நின்ன நேரம். அஜித்தும் வில்லன் என்ற ஹிட்.. விஜய் மட்டும் தொடர் சறுக்கல்..அவ்வளவுதான் விஜய் என்ற பல்லவி அப்பொழுதும் இருந்துச்சு..

நால்வரின் படமும் ஒரே நாளில் ரிலீஸ்.. ஓப்பனிங் முதற்கொண்டு மொத்த வசூலும் என்னவாச்சுன்னு நான் சொன்ன நம்பவா போறாங்க :)))

எனக்கு மறக்க முடியாத தீபாவளி . ஒரே நாளில் 3 படம் :)..அதுவும் சிங்கபூரில்

bandhu said...

அன்பே சிவம் தோல்வியை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை!

ravikumar said...

Anbe Sivam failure is expected because the theme is not understandable by common person. Unless common person does not understand a movie or play what will be the use?
I do not think it is done by Sundar C , it might be Kamal but named Sundar. Example Hay Ram No one could understand

முரளிகண்ணன் said...

நன்றி கோவியார்

ஹாட் லின்கில் இணைத்து விடுகிறேன்

நன்றி பந்து

நன்றி ரவிகுமார்

முரளிகண்ணன் said...

கார்க்கி

திருமலையின் வெற்றி விஜய்க்கு ஒரு பெரும் திருப்புமுனை.

அந்த விஷயம் பற்றி நீங்கள் உங்கள் பதிவில் ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். நானும் கூட அதைப்பற்றி முன்னர் எழுதிய மாதிரி ஞாபகம்.

அதனால் அந்த பேட்டிலை விரிவாக எழுதவில்லை.

ஆனால் அதை எழுதி இருந்தால் நன்றாக இருந்திக்கும் என்று நினைக்கிறேன். நன்றி

Bruno said...

அண்ணா

இது என் பங்கிற்கு தமிழ் திரைத்துறை - சினிமா - இசையமைப்பாளர்கள், கதாநாயகர்கள் - திருப்புமுனை ஆண்டு 2003