February 06, 2012

பூவும் பூ சார் இடங்களும்

சில நாட்களுக்கு முன், சென்னையில், பேருந்துக்காக காத்து இருந்தபோது, அருகேயுள்ள பூக்கடையில் பூ வாங்கிய பெண் ஒருவர், தன் கணவரிடம் சன்னமான குரலில் பேசியது என் காதில் விழுந்தது.

“துஷ்டிக்கு கட்டுற மாதிரி இடம் விட்டு கட்டியிருக்காங்க”. கடந்த ஐந்தாண்டுகால சென்னை வாழ்க்கையில் இந்தமாதிரியான அங்கலாய்ப்புகள் கேட்டது மிகக் குறைவு. பூ கட்டும் குடும்பத்திலோ அல்லது அதன் அருகாமை வீடுகளிலோ இருப்பவர்கள் தான் இந்த வார்த்தையைப் பிரயோகப் படுத்துவார்கள்.

அன்பு நண்பர் மருத்துவர் புருனோ ஒருமுறை சொன்னார் “சென்னையில் வழங்கப்படும் சிகிச்சையை தென் மாவட்டங்களில் கொடுத்தால் மருத்துவருக்கு அடிவிழும்” என்று.

அம்மாதிரி இங்கு கிடைக்கும் பொருட்கள், சேவைகள் ஆகியவை குறைவான தரத்தை கொண்டவையாகவே இருக்கின்றன. அன்பு நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் சென்னை புரோட்டா சால்னாவின் தரத்தைப் பற்றி சொல்லும் போது, “சாணியில் முக்கி சாப்பிடுவது போல் இருக்கிறது” என்பார். சென்னைவாசிகளுக்கு உண்மையான தரம் தெரிவது இல்லை என்பது மதுரைப் பகுதி மக்களின் உறுதியான எண்ணம்.

அதனால்தான் திண்டுக்கல்,சேலம்,மதுரை, விருதுநகர்,ஆம்பூர் என பல ஊர்களின் ஸ்பெசல் அயிட்டங்களும் சென்னையில் சக்கைப் போடு போடுகின்றன். சென்னைக்கு உரிய பிரத்யேக அயிட்டமான வடகறியை, சென்னை எல்லையைத் தாண்டி யாரும் சீண்டுவதில்லை.

மயிலாப்பூரில், மதுரை மல்லிகையை மட்டுமே கட்டி ஒரு கடையில் மாலை வேளையில் விற்கிறார்கள். முன் தினமே அட்வான்ஸ் கொடுத்தால்தான் கிடைக்கும் நிலையில் அதன் டிமாண்ட் இருக்கிறது.


இப்படி பூவிற்கு பெயர் போன, மதுரை ஏரியா பக்கம் பூக்காரர்கள் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

பூக்கட்டி விற்பது தற்போது மட்டுமல்ல ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே எல்லா ஜாதியினராலும் செய்யப் பட்டு வந்திருக்கிறது. அதற்கு ஆதாரம் பல ஆண்டுகளாக பல்வேறு ஜாதியினரால் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் பூக்கடைகள். முன்காலத்தில் பண்டாரம் என்ற பிரிவினர் மட்டும் இத்தொழில் ஈடுபட்டதாக பூக்கடைகாரகள் சொன்னார்கள்.

மதுரையைச் சுற்றியுள்ள பூக்கடைகாரர்களின் தினப்படி வாழ்க்கை காலை மூன்று மணியளவில் தொடங்கிவிடுகிறது.
சமயநல்லூர், மேலூர், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் வரையிலான பூக்காரர்கள் மதுரையிலும், திண்டுக்கலுக்கு அருகிலுள்ளோர் திண்டுக்கலிலும், நிலக்கோட்டை தாலுகா, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளோர் நிலக்கோட்டையிலும் பூ வாங்குவார்கள் (அவர்கள் மொழியில் உதிரிப்பூ). மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் வர இந்தப் பூக்கடைகளும் காரணம். 12 மணிக்கு மேல் தான் பூ வரத்து தொடங்கும். காலை நாலு மணிக்குள் வியாபாரிகள் வாங்கிப் போய்விடுவார்கள்.


அப்படி வாங்கிச் சென்ற பூக்களை தாங்கள் பிடித்து வைத்திருக்கும் வீடுகளில் டெலிவரி செய்து விடுவார்கள். அந்த வீட்டுப் பெண்கள், தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அவசரத்திற்கேற்ப பூக்களை கட்டிக் கொடுப்பார்கள். இதற்கு மல்லிகை, கனகாம்பரம் என்றால் ஆயிரத்திற்கு இவ்வளவு என்றும், கதம்பப் பூவிற்கு பந்துக்கு இவ்வளவு என்றும் கட்டுக்கூலி நிர்ணயித்திர்ப்பார்கள்.

தீப்பெட்டி ஓட்டுவது, தீக்குச்சி அடுக்குவதை விட இது வருமானம் தர்ம் தொழில் தான். ஆனால் டிமாண்ட் மாறிக் கொண்டேயிருப்பதால் சீரான வருமானம் கட்டிக் கொடுப்பவர்களுக்கு இருக்காது.

பூக்கடைக் காரர்கள் ஒருவர், இருவருக்கு மேல் வேளைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை கட்டத் தெரிந்த ஒருவர் இருந்தால் போதும். மீதமுள்ளவற்றை அவுட் சோர்சிங் முறையில் செய்து கொள்வார்கள். தற்போது பெரிய நகர பூக்கடைகளில் மட்டுமே பலரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

சுப முகூர்த்த நாட்கள், தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள், வெள்ளிக்கிழமைகள், ஆடி மாத அம்மன் பண்டிகளைகள், வழக்கமான வெள்ளிக்கிழமைகளில் பூ வியாபாரம் களை கட்டும். இந்த நாட்களில் விலை அதிகமாகவும் மற்ற நாட்களில் அதில் பாதியாகவும் இருக்கும். இருப்பதிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சமயங்களில் தான் பூ விலை உச்சத்துக்குப் போகும். ஏனென்றால் இந்தப் பண்டிகைகள்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் கொண்டாடப்படும் நிகழ்வுகள்.

இது தவிர கூடைகளில் கொண்டு வந்து விற்கும் பெண்கள், பஸ் ஸ்டாண்ட், கோவில் அருகில் கடை போட்டிருக்கும் பெண்கள் ஆகியோர், பெரும்பாலும் கமிசன் வியாபாரிகளிடம் பூ வாங்கி கட்டி விற்பார்கள். இவர்களுக்கு ஆண்களின் சைக்காலஜி அத்துப்படி. கையில் பளபள பிரேஸ்லட், மோதிரத்தை வைத்து புது மாப்பிள்ளை என்று கண்டு பிடித்து விட்டால் எப்படியும் வாங்க வைத்து விடுவார்கள். ஆனால் பெண்களிடம் இவர்கள் ஜம்பம் செல்லாது. இது தவிர இப்போது வீடுகள், கடைகளுக்கு மாத விலை பேசி ரெகுலராக கொடுப்பவர்களும் அதிகரித்து உள்ளார்கள். அவர்கள் சீசனுக்கேற்ப அளவை கூட்டி குறைத்து கொடுப்பார்கள்.

பூ கட்டும் வீட்டை எளிதில் கண்டு பிடுத்து விடலாம். மல்லி, கனகாம்பரம், சாமந்தி என ஒரு கலவையான வாசனை அடிக்கும். தரை எப்பொழுதுமே ஈரமாக நசநசப்புடன் காணப்படும். வெளியில் பூக்கட்டுவதற்கான வாழை நாரை காய வைத்திருப்பார்கள். இப்போது பலரும் ட்வெயின் நூலை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிகளில் சாம்பிராணி போட்டு வீட்டை புகை மண்டலமாக்கி விடுவார்கள். இல்லையெனில் சிறு சிறு பூச்சிகள், நச்சு உயிரினங்கள் படையெடுக்கத் துவங்கி விடும். ஏனென்றால் பல பெண்கள் குழந்தைகளை அருகில் போட்டுக் கொண்டுதான் பூ கட்டுவார்கள்.

பூ கட்ட பயிற்றுவிக்கும் போது, முதலில் பேப்பரை கிழித்து, நூலில் கட்டி பழகச் சொல்வார்கள், பின் கதம்பம், கனகாம்பரம் என பழகி, இருப்பதிலேயெ கஷ்டமான மல்லிகைக்கு வருவார்கள். சுப நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமாகவும், சாதரான உபயோகத்திற்கு நெருக்கமாகவும், துஷ்டிக்கு இடைவெளி விட்டும் கட்டுவார்கள். அடுத்த கட்டம் மாலை போட பழகுதல். இதை பெரும்பாலும் ஆண்களே செய்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் மாலை கட்டுவதில் ஒரு ஸ்டைல் உண்டு. மதுரைப் பக்கங்களில், ரோஜா மாலை கட்டி முடிந்தவுடன் ஜண்டி எனப்படும் மின்னும் பட்டு நூலால் அலங்கரிப்பார்கள். இதனான் பூ உதிர்வது தடுக்கப்படும். இந்த ஜண்டி அடிப்பது ஒரு கலை. மாலையை மேல் உத்திரத்தில் தொங்க விட்டு கீழ் நாரை கால் கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மாலையின் மேலும் கூழும் சுற்ற வேண்டும். இப்போது இடையில் தெர்மோ கோலால் செய்யப்பட்ட வண்ண அட்டைகளை வைக்கிறார்கள்.

துக்க நிகழ்வுகள் இவர்களுக்கு எதிர்பாராத வருமானம். பெரிய ஆட்கள் இறந்து விட்டால், பார்க்க வருபர்கள் வாங்குவது, கப்பல், தேர் போன்ற வடிவங்களில் பாடை கட்டுவது என பூ ஓடி அடையும்.


முன் காலத்தில் இத்தொழிலில் இருந்த சீரற்ற நிலை காரணமாக, பலர் வருமானக் குறைவால் அவதிப் பட்டார்கள். ஆனால் இப்பொழுது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. பல பூக்காரர்கள் இப்போது கடன் வாங்கி ஐந்து அல்லது ஆறு பவுனுக்கு ஒரு நகையை வாங்கிக் கொள்கிறார்கள். அந்த கடனை தினப்படி வரவு வைத்து அடைக்கிறார்கள். பின் அந்த நகையை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கி, அதில் நகை வாங்கி, பின் திருப்பிக் கொள்கிறார்கள்.

சென்னையில் பூக்கடை ஏரியா, கோவையில் சென்ட்ரல் மார்க்கெட் என கட்டிய பூ விற்பனை கேந்திரங்கள் உள்ளன. இவை இரவு பகலாக செயல்படும். குழந்தை பிறந்த சில நாளில் செய்யப்படும் புண்ணிய தானம் முதல், அவன் நூறாண்டு வாழ்ந்து மறைந்தபின் சில நாட்கள் கழித்து செய்யப்படும் கருமாதி வரையிலான விசேஷங்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். இதே போல் மதுரையில் விளக்குத்தூணுக்கு இடப்பக்கம் இருக்கும் இடத்தில் கிடைக்கும். இது போன்ற பகுதிகளில் இருந்துதான் சிறு பூக்கடைக்காரகள் சந்தனம், பத்தி முதலான பொருட்களை கொள்முதல் செய்து கொள்வார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பூக்கடைக்குச் சென்றிருந்தால் குறிப்பாக கோயில் சார்ந்த பூக்கடைகள். மாலை, கட்டிய பூ, சந்தனம், குங்குமம், பத்தி, கற்பூரம், தேங்காய், பழம் ஆகியவை மட்டும் தான் இருக்கும். ஆனால் இப்போது பார்த்தால் அந்தக் கடைகளில் நெய் விளக்கு, எள் விளக்கு, துளசி மாலை, அருகம் பூ மாலை, எருக்கம் பூ மாலை போன்றவையே அதிகம் காணப்படுகின்றன.

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அவள் விகடன், சினேகிதி, மங்கையர் மலர், மல்லிகை போன்ற மகளிர் பத்திரிக்கைகள் ஜாதகம், தோஷம், பரிகாரத்துக்கு விளக்கு போடுதல், மாலை சாத்துதல் என தீவிரப் பிரச்சாரம் செய்ததில் இந்த போக்கு அதிகமாகிவிட்டது. கணபதிக்கு அருகம்புல், செவ்வாய் முருகன், வியாழன் தட்சிணா மூர்த்தி, வெள்ளி துர்க்கைக்கு எண்ணெஉ, நெய் விளக்கு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், பெருமாளுக்கு துளசி மாலை நெய் விளக்கு , சனி பகவானுக்கு எள் விளக்கு, என இப்பொருட்களே அதிகம் விற்பனையாகின்றன.

ஆமாம் முன்னெல்லாம் நோய் ஏற்பட்டால் எம் பி பி எஸ் டாக்டரைத்தான் பார்ப்போம். ஆனால் இப்போது கால லேசாக வலித்தால் ஆர்த்தோ, பசியால் கை நடுங்கினால் கூட நியூரோ என்று ஓடுகிறோமில்லையா?. அதுபோல் கடவுள்களிலும் ஸ்பெஷலிஸ்டுகள் பெருகிவிட்டார்கள்.
தட்சிணா மூர்த்திக்கு சுண்டல் மாலை நிறையப் பேர் கேட்குறாங்க, அதனால அடுத்த வியாழன்ல இருந்து அதுவும் செய்யலாம்னு இருக்கோம் என்றார்கள். விட்டால் வடை மாலையும் ரெடிமேடாய் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

முன்பைக் காட்டிலும் இப்போது பூ விலை அதிகரிக்கக் காரணம் அதிகமான உதிரிப்பூ விலையும் கட்டும் கூலியும் தான். மாலை வேளைகளில்தான் தோட்டங்களில் பூ பறித்தலை தொடங்குவார்கள். இரவு ஒன்பது, பத்து மணி வரை கூட பூ பறிப்பார்கள். வெயில் சேராதவர்கள், அருகிலுள்ள கிராமப் பெண்டிர் ஆகியோர் முன்னர் ஆர்வமாக பறிக்க வருவார்கள். இப்போது ஆட்கள் கிடைப்பது தட்டுப் பாடாய் இருக்கிறது என்கிறார்கள். மாலை வேளைகளில் கணவர், பிள்ளைகளுக்கு சமைக்க வேண்டும், நாங்க இருந்தாத்தான் பிள்ளைக படுக்கிதுங்க போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. சொல்லப் படாத இன்னொரு காரணம் மாலை நேர சீரியல்கள். இனி பூ பறிக்கவும் ஒரிசா காரர்கள் வந்து விடுவார்கள் போலிருக்கிறது.

பூக்களை பத்திரப்படுத்த, பதப்படுத்த குளிர்பதன சேமிப்பு அறை நிலக்கோட்டை பகுதியில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. 84 ஆம் ஆண்டு தொகுதி அதிமுக எம் எல் ஏ அ. பாலுச்சாமி, ஒரு கோடியில் மல்லிகை செண்ட் தயாரிக்க ஆலை நிறுவுமாரு சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். எம்ஜியாரும் சரி என்றார். அந்த ஆலை இன்னும் வந்த பாடில்லை. அதன்பின் ஏ எஸ் பொன்னமாள் (காங்கிரஸ்), மற்றும் அதற்கடுத்து வந்த பல அதிமுக எம் எல் ஏக்கள் குளிர்பதன சேமிப்பு அறைக்கு சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய அளவில் தங்கள் ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளுக்காக பல இடங்களில் காய்கறிக்கான வேர் ஹவுஸ் அமைத்து வருகிறது. அது போல் பூக்களுக்காகவும் வேர் ஹவூஸ் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. கார்பொரேட்கள் இதை கையில் எடுத்துக் கொண்டால் பிஸ்ஸாவுக்கு கோக் காம்போ போல பூவுக்கு விளக்கு காம்போ வாங்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.

43 comments:

மணிஜி said...

அருமை முரளி...விவரனைகள் ...பத்திரிக்கையில் ..பசுமை விகடனில் வரவேண்டிய கட்டுரை...

Romeoboy said...

\\சென்னைக்கு உரிய பிரத்யேக அயிட்டமான வடகறியை//

இது கூட இப்போ எவரும் ஒழுங்கா பண்ணுறது இல்ல :(.. இன்னைக்கு பொங்கல் வித் வடைகறி :(( ... பதிவு நல்லா இருக்கு அண்ணா

KarthigaVasudevan said...

நைஸ் ஆர்டிகிள் .இதை விட தெளிவா விளக்க முடியாது முரளி கண்ணன் .

முரளிகண்ணன் said...

நன்றி மணிஜி

நன்றி அருண்மொழித்தேவன்

நன்றி கார்திக்கா வாசுதேவன்

balu said...

Meticulous Article!
இவ்வளவு விவரமாக சொல்லியிருக்கிறீர்களே, நீங்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தவரா?

முரளிகண்ணன் said...

நன்றி பாலு. அப்சர்வேஷன் தான்.

கோவி.கண்ணன் said...

முரளி, உங்களுக்கு சினிமாதான் அத்துப்படி என்று நினைத்தேன், நினைப்பை பொய் ஆக்கிவிட்டீர்களே, பூ கட்டுதல் தொடர்பில் அனைத்தும் சிறப்பான 'கோர்பு'

முரளிகண்ணன் said...

நன்றி கோவிஜி

Raju said...

களப்பணியாண்ணே...?

தீவிரமான களப்பணியில்லாம இத்தக் கட்டுரை சாத்தியமாகதுன்னு தோணுதுண்ணே.. சூப்பரான கட்டுரை!

பை த வே, சின்ன வயசுல,எனக்கும் பூ கட்டத் தெரியும்.
:-)

முரளிகண்ணன் said...

நன்றி ராஜு

manjoorraja said...

முரளி மிகவும் விவரமாகவும் தெளிவாகவும் மலர் தொழிலைப் பற்றி விவரித்திருக்கிறீர்கள்.

பாராட்டுகள். நன்றி.

ஈரோடு கதிர் said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க!

முரளிகண்ணன் said...

நன்றி மன்சூர் ராஜா, நன்றி ஈரோடு கதிர்

Indian said...

அருமையான இடுகை.

**
இனி பூ பறிக்கவும் ஒரிசா காரர்கள் வந்து விடுவார்கள் போலிருக்கிறது.
**

யார் கண்டது? வடகிழக்கு மாநிலத்தவரும் போட்டிக்கு வரலாம்.

முரளிகண்ணன் said...

நன்றி இந்தியன்

துளசி கோபால் said...

அருமை! தகவல்கள் கொட்டிக்கிடக்கு. இதன் பின்னே தெரியும் உழைப்புக்கு ஒரு ஸல்யூட்!

முரளிகண்ணன் said...

நன்றி டீச்சர்

Balakumar Vijayaraman said...

சூப்பர் டீடைலிங். அருமையா இருக்குண்ணே. வாழ்த்துகள் :)

பா.ராஜாராம் said...

excellent!

முரளிகண்ணன் said...

Thanks balakumar

Thanks Rajaram

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

பூவே வைக்கமாட்டேன் என்று இன்று வரை அடம்பிடிக்கும் எனக்கு பூவில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது..அருமையான பதிவு.

முரளிகண்ணன் said...

நன்றி தென்காசித் தமிழ் பைங்கிளி

Cable சங்கர் said...

wow!!!!

வெட்டிப்பயல் said...

Excellent Article

வெண்பூ said...

சூப்பர்... தெரிந்து கொள்ள வேண்டிய தெரியாத தகவல்கள்..

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள்ஜி

நன்றி வெட்டிபயல்

நன்றி வெண்பூ

sriram said...

அருமையான கட்டுரை மு க. தெளிவான நடை, தொய்வில்லாத விவரணை, ஹாஸ்யம் கலந்து கேப்பிடலிசதுக்கு ஒரு குட்டு - சபாஷ்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பினாத்தல் சுரேஷ் said...

தெரிந்த பூ, தெரியாத தகவல்கள். சவசவத்தனம் இல்லாஅத தெளிந்த நடை. அருமை முரளி கண்ணன்.

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by the author.
Vidhya Chandrasekaran said...

அட்டகாசமான ஃப்ளோ.

பதிவு மணக்குது. சூப்பர் சயிண்டிஸ்ட்:)

Paleo God said...

சூப்பர்.

குத்தாலம் பத்தியும் இதே மாதிரி ஒண்ணு எழுதுங்க தல :)

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்ரீராம்

நன்றி சுரேஷ்

நன்றி வித்யா

நன்றி ஷங்கர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எக்சலண்ட் சார். தரமான கட்டுரை!

முரளிகண்ணன் said...

நன்றி ராமசாமி.

ஒரு விளம்பரம்

நானும் கவுண்டரின் தீவிர வெறியன் தான். கவுண்டரைப் பற்றிய ஒரு தொடர் மூன்றாண்டுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.

http://muralikkannan.blogspot.in/2009/02/blog-post_09.html

http://muralikkannan.blogspot.in/2009/02/2_10.html

http://muralikkannan.blogspot.in/2009/02/3_12.html

http://muralikkannan.blogspot.in/2009/02/4_1096.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முரளிகண்ணன் said...
நன்றி ராமசாமி.

ஒரு விளம்பரம்

நானும் கவுண்டரின் தீவிர வெறியன் தான். கவுண்டரைப் பற்றிய ஒரு தொடர் மூன்றாண்டுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன். /////

சுட்டிகளுக்கு மிக்க நன்றி சார். இப்பவே படிக்கிறேன்!

க.பாலாசி said...

ஆஹா... இதைபத்தி பி.எச்.டி பண்ற அளவுக்கே விசயம் நிறைய இருக்கும்... தெளிவா அருமையா எழுதியிருக்கீங்கண்ணே... எங்க வீட்டுக்கு அக்கம்பக்கத்துல இன்னமும் பூ கட்டுற வேலை செய்யுறவங்க இருக்காங்க...

முரளிகண்ணன் said...

Thanks Balasi

KSGOA said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!!!!

முரளிகண்ணன் said...

நன்றி KSGOA

டிராகன் said...

one of the Great post

முரளிகண்ணன் said...

நன்றி ட்ராகன்

விஜி said...

நல்ல பதிவு. இப்போது மாலை கட்ட தனியாக ட்ரெயிங் வகுப்புகள் உள்ளது. அதே போல் பூவில் கலர் ஸ்ப்ரே செய்வதும் ட்ரை ஃப்ளவர் எனப்படும் காய்ந்த பூவில் அலங்கரமும் விற்பனையும் லேட்டஸ்ட் :))

நாங்களும் ஆராய்ச்சி செய்வமில்ல :))

சிவகுமார் said...

/*பசுமை விகடனில் வரவேண்டிய கட்டுரை...*/
Super information.