February 28, 2009

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா?


தற்போது இந்தியாவில் மும்பை,ஹைதராபாத்,அஹமதாபாத், கல்கத்தா ஆகிய இடங்களில் ஐமேக்ஸ் திரையரங்கங்கள் உள்ளன. ஐமேக்ஸ் (இமேஜ் மாக்ஸிமம்) திரையரங்கில் உபயோகப் படுத்தப்படும் திரையானது குறைந்தபட்சம் 72 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இதைவிட அதிகமான அளவிலேயே தற்போது ஐமேக்ஸ் திரை செய்யப்படுகிறது. 2010க்குள் சென்னையிலும், பெங்களூருவிலும் தலா ஒரு ஐமேக்ஸ் திரையரங்குகளை உருவாக்க வேண்டும் என ஐமேக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் சத்யம் தியேட்டர் குழுமத்துடன் இதற்க்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவில் வரும் இரண்டு ஆண்டுக்குள் 10 ஐமேக்ஸ் திரையரங்குகளை (தற்போது இருப்பவற்றுடன் சேர்த்து) உருவாக்க ஐமேக்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. இம்முயற்ச்சி சாத்தியமாகுமா?, தமிழ் திரைப்படங்களை இந்தத் திரையில் காணமுடியுமா? என பார்ப்போம்.

தமிழில் இதுவரை ரஜினிகாந்த் நடித்த மாவீரன் திரைப்படம் மட்டுமே 70 எம் எம் பிலிமில் படமாக்கப் பட்டுள்ளது. மொத்தமாகப் பார்த்தால் இந்தியாவில் 20க்குள் தான் 70 எம் எம் படங்கள் வந்துள்ளன. ஷோலே, ஏக் துஜே கேலியே, சாகர் , ரஸியா சுல்தான் உட்பட 10 க்கும் குறைவான படங்களே இந்தியில் வந்துள்ளன. மோகன்லால் நடித்த படயோட்டம் என்னும் மளையாளப் படம், மூன்று தெலுங்குப் படங்கள் மற்றும் ஒரு கன்னட படம் ஆகியவையே 70 எம் எம் பிலிமில் படமாக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் 70 எம் எம் திரை உள்ள திரையரங்குகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். கோவையில் ராகம்,கங்கா, சென்ட்ரல், மதுரையில் சினிப்பிரியா, திருச்சி மாரிஸ் என பெரிய ஊர்களிலேயே ஒன்றிரண்டு தான் இருக்கின்றன சென்னையின் முதல் 70 எம் எம் திரை தியேட்டரான ஆனந்த் மூடப்பட்டுவிட்டது. சத்யம்,காசி போன்றவை மட்டுமே நன்கு செயல்படுகின்றன. உதயம் தியேட்டர் கூட இப்பொது ஏலத்துக்கு வந்துள்ளது. ஏலத்தில் எடுப்பவர் தொடர்ந்து நடத்துவாரா? அல்லது வணிக வளாகமாக மாற்றுவாரா என்று தெரியவில்லை. 70 எம் எம் திரை எனில் குறைந்தது 1000 இருக்கைகளாவது போடவேண்டும். அவை வேலைநாட்களில் நிரம்புவது மிக கடினம். எனவே சிறிய திரை, 200 இருக்கை என்ற தத்துவம் கொண்ட மல்டிபிளக்ஸ்கள் தற்போது சென்னையில் கோலோச்சி வருகிறது.

ஐமேக்ஸ் திரையங்குகள், அதில் உபயோகப் படுத்தப்படும் பிலிம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பற்றி பார்க்கும் முன் 35 எம் எம். 70 எம் எம், 16 எம் எம், சினிமாஸ்கோப், சினிராமா, சூப்பர் 16. சூப்பர் 35 ஆகிய பிலிம்கள், அதன் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பார்ப்போம்.


35 எம் எம்

இதுவரை தமிழில் படமாக்கப் பட்ட 99 சதவிகித தமிழ் படங்கள் இந்த பிலிமிலேயே படமாக்கப்பட்டுள்ளன. ஈஸ்ட்மென் உருவாக்கிய பிலிம் சுருளிலிருந்து எடிசன் மற்றும் டிக்சன்
ஆகியோரால் இந்த 35 எம் எம் பிலிம் தயாரிக்கப் பட்டது. 35 எம் எம் (மில்லி மீட்டர்) என்பது பிலிம் சுருளின் மொத்த அகலத்தைக் குறிக்கும். இதில் படம் பதிவு செய்யப்படும் பகுதியானது, 21.95 மி மி அகலமும், 18.6 மி மி உயரமும் கொண்ட பகுதியே. (படத்தில் START என்று எழுத்து காணப்படும் பகுதி). படத்தில் நீல நிறத்தில் காட்டப் பட்டுள்ள பகுதி சவுண்ட் டிராக்குக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிலிமின் இருபுறமும் துளைகளை காணலாம். சாதரணமாக ஒரு பிரேமுக்கு நான்கு துளைகள் இருக்கும்.
ஒரு அடி பிலிம் சுருள் என்பது 16 பிரேம்களைக் கொண்டது. நம் திரைப்படம் ஓடும் வேகம் ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள். நம் தமிழ் படங்கள் சராசரியாக இரண்டரை மணி நேரம் ஓடும் படி எடுக்கப் படுகின்றன. இது 9000 வினாடிகள். ஒரு வினாடிக்கு ஒன்றரை அடி வீதம் 13,500 அடி படக்காட்சி நமக்குத் தேவை. சரிபாதி அளவு எடிட் செய்யப்பட்டாலும் 27,000 அடியில் ஒரு படத்தை முடித்து விடலாம். செல்வராகவன் (புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்) ,தரணி (தூள்) போன்றோர் 2 லட்சம் அடிக்கும் மேலாக படம் எடுப்பதாக குற்றச் சாட்டு உள்ளது. கே எஸ் ரவிகுமார், ஹரி, பி வாசு, எஸ் பி முத்துராமன் ஆகியோர் 20000 அடிக்கும் குறைவாகவே படத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள். தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இவ்வளவு அடிக்குள் ஒரு படத்தை முடிக்க வேண்டுமென இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மீறினால் விசாரனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.

சார்லி சாப்ளின் படங்களைப் பார்த்தோமானால் படத்தில் உள்ள கேரக்டர்கள் விரைவாக அசையும். அதற்க்குக் காரணம் அவற்றின் வேகம் வினாடிக்கு 18 பிரேம்கள். புன்னகை மன்னன் படத்தில் கமல் ஏற்று நடித்த சாப்ளின் செல்லப்பா வேடம் ஆடும் மாமாவுக்கு குடும்மா குடும்மா என்னும் பாடலை பார்த்திருப்பீர்கள். அதில் சாப்ளின் எபெக்ட் வேண்டு மென்பதற்க்காக கமலின் ஆலோசனைப்படி அந்த பாடல் வினாடிக்கு 18 பிரேமாக ஆக்கப்பட்டது.


உலகம் முழுவதும் 35 எம் எம் புரஜெக்டர்களே எல்லா திரையரங்குகளிலும் ஆக்ரமித்திருந்தன. 70 எம் எம் திரையில் விரியும் காட்சிக்கு தீனி போட அத்ற்கேற்ற கதை தேவை, காட்சி அமைப்பில் அதிக கற்பனைத்திறன் தேவை, செலவும் அதிகம். எனவே அனைத்து இயக்குனர்களும் 35 எம் எம் மிலேயே காலத்தை ஓட்டிக் ஒண்டிருந்தார்கள். அமெரிக்காவில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டு அது அங்கு பிரபலமான போது, தியேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பார்வையாளனையை திரையரங்குக்கு இழுக்க வேண்டிய கட்டாயம். ஆபத்பாந்தவனாக வந்தது சினிமாஸ்கோப் தொழில்நுட்பம். 1953 ஆம் ஆண்டில் உருவான இந்த தொழில்நுட்பம் 1973 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழன் திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவிற்க்கு அறிமுகமாகி 1990 க்குப் பின் முழு வீச்சில் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.

35 எம் எம் மில் என்ன குறை?

குறை என்று அதை சொல்ல முடியாது. 35 எம் எம் பிலிமின் மூலம் திரையிடப்படும் பிம்பத்திற்க்கு தேவையான ஆஸ்பெக்ட் ரேஷியொ 1.33 : 1. அதாவது திரை மூன்றடி உயரம் கொண்டதாக இருந்தால் அகலம் நான்கு அடியாக இருக்க வேண்டும். சினிமாஸ்கோப் முறையில் கிடைக்கும் பிம்பத்தின் ஆஸ்பெக்ட் ரேஷியொ 2.66 : 1. அதாவது திரை மூன்று அடி உயரமிருந்தால் அகலம் எட்டு அடி வரை போகலாம். 1990 க்கு முன் வந்த பெரும்பாலான திரைப்படங்களை நீங்கள் டிவியில் பார்த்தால் இதை உணரலாம். டிவி திரை முழுக்க படம் தெரியும் (அபூர்வ சகோதரர்கள், நாயகன், மௌன ராகம், மனிதன்). இவை 35 எம் எம் பார்மட்டில் தயாரிக்கப் பட்டவை. தற்போதைய படங்களான வில்லு, சிலம்பாட்டம் ஆகியவற்றை நீங்கள் பார்த்தால் அது பாதி திரையில் மட்டுமே தெரியம் ( வைட் ஸ்கிரீன் டிவிக்கள் விதிவிலக்கு). இந்தப் படங்கள் சினிமாஸ்கோப் முறைப்படி தயாரிக்கப் பட்டவை. இம்முறையில் தயாரிக்கப் படங்கள் பார்வையாளனுக்கு நல்ல காட்சிஅனுபவத்தை கொடுக்கக் கூடியவை.

சினிமாஸ்கோப்பும் 35 எம் எம் பிலிமிலே தான் படமாக்கப்படுகிறது. எப்படி அது சாத்தியமாகிறது?. இந்த முறையால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தாக்கம், 16 எம் எம், ஐ மேக்ஸ் ஆகியவை வரும் பகுதிகளில்.

58 comments:

Thamiz Priyan said...

அனைத்துமே புதிய தகவல்கள்! தொடருங்கள்!

Venkatesh said...

அருமையான தகவல் மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்.

அக்னி பார்வை said...

உங்களுக்கு நான் ’திரை ஞானி’ என்ற பட்டத்தை கொடுத்து என்னை கௌரவித்துக் கொள்கிறேன்..

சான்ஸே இல்ல இந்த மாதிரி எழுத நிறைய திறமை வேண்டும், அது உங்களுக்கு அதிகமாக உள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான தகவல்கள்
முரளி

முரளிகண்ணன் said...

தமிழ் பிரியன், திரட்டி.காம் மிக்க நன்றி. தொடருகிறேன். ஆதரவு தாருங்கள்.

அக்னிப்பார்வை மிக்க நன்றி. பட்டமெல்லாம் வேண்டாம். பின்னூட்டம் போதும்.

முரளிகண்ணன் said...

டி வி ராதாகிருஷ்ணன், முத்து தங்கள் வருகைக்கு நன்றி

சயந்தன் said...

சுவாரசியமான புதிய தகவல்கள். பதிவிற்கு நன்றி

MSK / Saravana said...

சான்ஸே இல்லீங்க்ணா.. கலக்கல் தகவல்கள்.
:)

MSK / Saravana said...

இன்னும் தொடரவும்..

Cable சங்கர் said...

சூப்ப்பர் முரளீ..

Unknown said...

//சினிமாஸ்கோப்பும் 35 எம் எம் பிலிமிலே தான் படமாக்கப்படுகிறது//

இவ்வளவு காலமும் சினிமாஸ்கோப்புக்கு தனி ஃபிலிம் என்றே நினைத்திருந்தேன். உங்களது கட்டுரைகள் மிக விளக்கமாக இருக்கிறது, தகவல்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

சின்னப் பையன் said...

அருமையான தகவல் மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்.

வினோத் கெளதம் said...

இவ்வளவு விஷயம் இருக்கா..
very informative technical details..


//தற்போதைய படங்களான வில்லு, சிலம்பாட்டம் ஆகியவற்றை நீங்கள் பார்த்தால்..//

Technical details மனசுல எளிதா பதிய நடுவுல நகைச்சுவை வேறு..

andygarcia said...

ஆனாலும் உங்களுக்கு அறிவு ஜாஸ்தி!

யாத்ரீகன் said...

Interesting, but doesn't iMax needs a seperate special Camera ?! and btw.. iMax (image maximum)-nu ipo dhaan therinjudhu :-) ..nandri..

மாதவராஜ் said...

முரளிக்கண்ணன்!

தொழில்நுட்பம் குறித்த இந்த தகவல்கள் அவசியம் எனக் கருதுகிறேன். பார்வையாளனுக்கு சில பிரக்ஞைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஐமேக்ஸ் குறித்து நீங்கள் எழுதுவதற்காக காத்திருக்கிறேன். ஹைதராபாத்தில் ஐமேக்ஸ் திரையரங்கில் ஒரு படம் பார்த்தேன். அது ஒரு பிரமிப்பான அனுபவம்!

MSATHIA said...

பயனுள்ள தகவல்லகள்.

வெண்பூ said...

வாவ்.. அருமையான தகவல்கள் முரளி..

ஒரே ஒரு தகவல்.. ஐ மேக்ஸில் ஒரு தடவை படம் பார்த்து விட்டால் வேறு எந்த திரை அரங்கிலும் படம் பார்க்க முடியாது, அவ்வளவு நேர்த்தி, சவுண்ட் எஃபக்ட்.. அதிலும் ஹைதை பிரசாத்ஸ் அருமையாக பராமரிக்கப்படுகிறது. நான் அமெரிக்காவில் பார்த்ததை விட ஹைதையில் அருமையாக இருந்தது..

நீங்கள் நாகரிகம் கருதி சொல்லாமல் விட்ட இன்னொரு விசயம். முதலில் அந்த அரங்கு சென்னையில்தான் அமைய இருந்தது. ஆனால் அரசியல் / நிர்வாக இழுவைகள் தாங்க முடியாததாலும், நாயுடு இது ஹைதையில் அமைவது அந்த நகருக்கு பெருமையாக கருதி சில பல சலுகைகள் கொடுத்ததாலும் அது சென்னைக்கு வரவில்லை. :(

வெண்பூ said...

//
நம் திரைப்படம் ஓடும் வேகம் ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள்
//

//
கமலின் ஆலோசனைப்படி அந்த பாடல் வினாடிக்கு 18 பிரேமாக ஆக்கப்பட்டது
//

வேகம் அதிகமாக வேண்டுமென்றால், ப்ரேம்கள் / வினாடி அதிகமாகத்தானே இருக்கவேண்டும். இங்கே கம்மியாக இருக்கிறதே.. புதசெவி..

ஆதவா said...

முற்றிலும் புதிய தகவல்கள்...... கலக்கிட்டீங்க...

எங்க ஊரில் ஒரு 70 MM தியேட்டர் உண்டு.. விசாரித்துப் பாருங்க்ளேன்.. (திருப்பூர் - நடராஜ்)

நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை... வாய்ப்பு கிடைச்சால் நிச்சய்ம் பார்ப்பேன்....

புருனோ Bruno said...

//நம் திரைப்படம் ஓடும் வேகம் ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள். //

ஆக
ஒரு வினாடிக்கு 1.5 அடி
ஒரு நிமிடத்திற்கு 90 அடிகள்
11 நிமிடத்திற்கு 990 அடி

ஒரு ரீல் என்பது 1000 அடி (300 மீட்டர்) அல்லது 11 நிமிடம்

13 ரீல் என்றால் அந்த படம் 143 நிமிடங்கள் (2 மணி 23 நிமிடங்கள்)
13.5 ரீல் என்றால் அந்த படம் 148.5 நிமிடங்கள் (2 மணி 28 நிமிடங்கள்)
14 ரீல் என்றால் அந்த படம் 154 நிமிடங்கள் (2 மணி 34 நிமிடங்கள்)

இப்பொழுது கீழுள்ள கணக்கு புரிகிறதா
//நம் தமிழ் படங்கள் சராசரியாக இரண்டரை மணி நேரம் ஓடும் படி எடுக்கப் படுகின்றன. இது 9000 வினாடிகள். ஒரு வினாடிக்கு ஒன்றரை அடி வீதம் 13,500 அடி படக்காட்சி நமக்குத் தேவை.//

பொதுவாக படங்களை திரையிடும் போது இரண்டு ரீல்களை சேர்த்து ஒரு சக்கரத்தில் சுற்றி அது தான் ஒளிப்படக்காட்டியினால் காண்பிக்கப்படுகிறது. எனவே ஒரு படங்காட்டி தொடர்ந்து 22 நிமிடங்கள் ஓடும்.

நவீன திரையரங்குகளில் இரு படம் காட்டும் இயந்திரங்கள் இருக்கும். ஒரு படங்காட்டி 22 நிமிடங்கள் ஓடி முடியும் நேரத்தில் அடுத்த படங்காட்டி ஓடத்துவங்கும். இரண்டாவது ஓடிக்கொண்டிருக்கும் போது முதலாவது படங்காட்டியில் அதற்கு அடுத்த இரு ரீல்களும் மாட்டப்பட்டு தயாராக வைக்கப்படும். இரண்டாவது முடியும் போது முதலாவது இயங்கும். இப்பொழுது இரண்டாவது பொறியில் அதற்கு அடுத்த இரண்டு ரீல்களையும் பொறுத்துவது தான் ஆபரேட்டர் வேலை.

டூரிங் டாக்கீஸ் போன்ற சிறு திரையரங்குகளில் ஒரு படங்காட்டும் கருவி மட்டுமே இருக்கும். இங்கு இரு ரீல்கள் ஓடிய பின்னர் (22 நிமிடங்களுக்கு பிறகு) அந்த சுருளை எடுத்து விட்டு அடுத்த சுருளை பொருத்த வேண்டும். எனவே சிறிது தாமதம் இருக்கும்

புருனோ Bruno said...

//வேகம் அதிகமாக வேண்டுமென்றால், ப்ரேம்கள் / வினாடி அதிகமாகத்தானே இருக்கவேண்டும். இங்கே கம்மியாக இருக்கிறதே.. புதசெவி.//

வெண்பூ சார்

இதில் இரு வேகங்கள் இருக்கின்றன

முதலாவது ஒளிப்பதிவு வேகம் (camera speed)
அடுத்தது படங்காட்டும் வேகம் (projector speed)

இரண்டும் ஒன்று என்றால் உங்களுக்கு படம் அதே வேகத்தில் தெரியும்.

அப்படி இல்லாமல் வினாடிக்கு 24 பிரேம்கள் ஒளிப்பதிவு செய்ததை வினாடிக்கு 12 பிரேம்கள் காட்டினால் என்னவாகும். ஒரு வினாடி நடந்ததை நீங்கள் இரு வினாடி பார்க்கலாம். இது தான் ஸ்லோ மோஷன்.

இதற்கு பதில் வினாடிக்கு 48 பிரேம்கள் ஒளிப்பதிவு செய்து வினாடிக்கு 24 பிரேம்கள் காட்டினாலும் தெரிவது ஸ்லோ மோஷன் தான். இப்படி பதிவது தான் கிரிக்கெட்டில் நீங்கள் பார்க்கும் spin motion camera !!

தற்பொழுது இதையே மாற்றி பாருங்கள்

வினாடிக்கு 24 பிரேம்கள் ஒளிப்பதிவு செய்து அதை வினாடிக்கு 48 பிரேம்கள் படம் காட்டினால் என்னவாகும். எல்லாரும் வேகமாக நடப்பார்கள் அல்லவா (அந்த கால விசிடியில் x2 என்று உண்டு) தற்பொழுது பவர் டிவிடி போன்ற மென்பொருட்களில் இது போன்ற வசதிகள் இருக்கின்றன

அதே போல் வினாடிக்கு 12 பிரேம்கள் ஒளிப்பதிவு செய்து அதை 24 பிரேம்களாக காட்டினால் அப்பொழுதும் அதே விளைவு தானே

சந்தேகம் தீர்ந்ததா

புருனோ Bruno said...

சார்லி சாப்ளின் படங்களைப் பார்த்தோமானால் படத்தில் உள்ள கேரக்டர்கள் விரைவாக அசையும். அதற்க்குக் காரணம் அவற்றின் படமாக்கப்பட்ட வேகம் வினாடிக்கு 18 பிரேம்கள். படம் காட்டும் வேகம் வினாடிக்கு 24 பிரேம்கள்.

புன்னகை மன்னன் படத்தில் கமல் ஏற்று நடித்த சாப்ளின் செல்லப்பா வேடம் ஆடும் மாமாவுக்கு குடும்மா குடும்மா என்னும் பாடலை பார்த்திருப்பீர்கள். அதில் சாப்ளின் எபெக்ட் வேண்டு மென்பதற்க்காக கமலின் ஆலோசனைப்படி அந்த பாடல் வினாடிக்கு 18 பிரேமாக படமாக்கப்பட்டு, வினாடிக்கு 24 பிரேமாக படங்காட்டப்பட்டது.

படங்காட்டும் கருவியின் வேகம் என்பது படம் முழுவதும் ஒன்று தான். அதை மாற்ற முடியாது என்பதால் தான் படமாக்கும் வேகத்தை மாற்றினார்கள்

புருனோ Bruno said...

35 மிமி படச்சுருள் என்றால் ஒரு ரீல் - 1000 அடி அல்லது 300 மீட்டர்

16 மிமி படச்சுருள் என்றால் ஒரு ரீல் - 400 அடி அல்லது 120 மீட்டர்

புருனோ Bruno said...

//நீங்கள் நாகரிகம் கருதி சொல்லாமல் விட்ட இன்னொரு விசயம். முதலில் அந்த அரங்கு சென்னையில்தான் அமைய இருந்தது. ஆனால் அரசியல் / நிர்வாக இழுவைகள் தாங்க முடியாததாலும், நாயுடு இது ஹைதையில் அமைவது அந்த நகருக்கு பெருமையாக கருதி சில பல சலுகைகள் கொடுத்ததாலும் அது சென்னைக்கு வரவில்லை. :(//

இது போல் பல சலுகைகள் அளிக்கப்பட்ட நிறுவனம் தான் சத்யம் கம்யூட்டர்ஸ் என்பதும் நிர்வாக நடைமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதில் தான் பல ஊழல்கள் நடைபெறுகின்றன என்பதும் அனைவரும் உணரவேண்டும் :) :)

IDEAL said...

முரளி கண்ணன் அவர்களே:

மிக்க நன்றி, பயனுள்ள தகவல்கள்

தொடருங்கள்.

பாலா said...

முரளி சாரோட.. ப்ரூனோ-வும் ஜாய்ண்ட் பண்ணிட்டு கலக்கறீங்க போங்க..!!!

Vidhya Chandrasekaran said...

சுவாரசியமான தகவல்கள் முரளி:)

பிரேம்ஜி said...

நிறைய தகவல்கள்.சிறப்பான பதிவு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சினிமா மேட்டருக்குள்ள சத்யம் கும்பினியினரைக் கொண்டு வந்ததற்கு ஏதேனும் ஒரு உள்குத்து இருக்குமோ....

வெண்பூ said...

ஆஹா.. புருனோ இன்னிக்கு நீங்களும் சேந்துட்டீங்களா? எப்படியோ என் சந்தேகம் தீந்தது மட்டுமில்லாம இன்னும் அதிக விவரங்களும் தெரிய வந்தது. நன்றி..

butterfly Surya said...

நல்ல தகவல்கள். அருமை. தொடருங்கள். வாழ்த்துகள்.

கோபிநாத் said...

"திரைஞானி" எங்கள் அண்ணாச்சியின் உழைப்பை பாராட்டி அவருக்கு துபாய் தலைமை சங்கத்தின் சார்ப்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ;)

dubukku said...

புருனோவின் கருத்து மொடைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை விட படு கேவலமானது. அப்படிப் பார்த்தால் கல்வித்துறையில் சலுகைகளை கொடுப்பதும் தவறுதான் என்று ஒப்புக்கொள்வாரா?

அத்திரி said...

தல சுவாரஸ்யமான தகவல்கள்.... தொடரட்டும்....

புருனோ Bruno said...

//புருனோவின் கருத்து மொடைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை விட படு கேவலமானது. அப்படிப் பார்த்தால் கல்வித்துறையில் சலுகைகளை கொடுப்பதும் தவறுதான் என்று ஒப்புக்கொள்வாரா?//

விவசாயம், சிறுதொழில் போன்றவைகளுக்கு சலுகைகள் அளிப்பதை நான் வரவேற்கிறேன்.

கல்வித்துறை என்பது பெரிய வார்த்தை. கிராமப்புறங்களில் மாதம் 100 ரூபாய் கல்விக்கட்டணம் வாங்கும் ஒரு ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு சலுகைகள் அளிப்பதற்கும், சென்னையில் மாதம் 10,000 கல்விக்கட்டணம் வாங்கும் ஒரு பள்ளிக்கு சலுகை அளிப்பதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.

1990களில் சிறுநகரங்களில் எத்தனையோ திரையரங்குகள் மூடப்பட்டு திருமண மண்டபங்களாகளோ பல்பொருள் அங்காடிகளாகவோ மாறின. அவற்றிற்கு சலுகை அளித்தால் வரவேற்கிறேன். (திரைப்படம் பார்க்க 15 ரூபாயும், டீ 3 ரூபாயும் கடலை முட்டாய் 1 ரூபாயும், வண்டி நிறுத்த 2 ரூபாயும் கட்டணம் அங்கு)

200 ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்கும், ஒரு கோக்கை 50 ரூபாய்க்கு விற்கும், ஒரு கேக்கை 40 ரூபாய்க்கு விற்கும், பாப்கார்னை 60 ரூபாய்க்கு விற்கும், வண்டி நிறுத்த 30 ரூபாய் கட்டணம் வாங்கும் ஒரு திரையரங்கிற்கு சலுகை வேண்டும் என்பது என்னை பொருத்த வரை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது குறித்து எனது பதிவில் எழுதியுள்ளேன்

கல்வியின் விலை - 1

கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்

கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை

வெண்பூ said...

அட விடுங்க புருனோ.. அப்படி பாத்தா நம்ம ஊர்ல குடுக்காத சலுகைகளா? தன்னோட மகன் கம்பெனிக்காக சலுகை குடுத்தத பார்லிமென்ட்லயே ஒத்துகிட்டவங்கதான நம்மள ஆள்றவங்க.. இதுல ஆந்திரா என்னா, தமிழ்நாடு என்னா...

எல்லாம் ஒரே குட்டைதான், ஒரே மட்டைதான்.. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :))))

கார்க்கிபவா said...

புதுசு புதுசு.. ஆனா ஐமேக்சில் நான் படம் பார்த்திருக்கிறேன் ஹைதையில்

குப்பன்.யாஹூ said...

எனக்கு என்னவோ படத்தின் கதை, காட்சிகள் நன்றாக இருந்தால் போதும், அந்த படத்தை டூரிங் டாக்கீஸில் கூட பாத்து ரசிக்கலாம்.

இன்றைக்கும் பராசக்தி, பலே பாண்டியா, சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, கரகாட்ட காரன், வெய்யில் போன்ற படங்களை எந்த டூரிங் டால்க்கீஸ், அல்லது சிறிய ஊர் திரை அரங்குகளில் கூட பார்த்து ரசிக்க முடியும்.

அதே சமயம் என்னதான் imax, de டி எஸ் வந்தாலும் வில்லு, தெனாவட்டு போன்ற படங்களை பார்க்க முடியுமா.


imax, dts are just like packing materials of a food box. If the food is not good, packing material cant provide good taste.

Thamira said...

கச்சிதமாக நடையிலும், தகவல்களிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இனிதான் இருக்கிறது ஆட்டமே என்பது போல இருக்கிறது உங்கள் பதிவுகள். தொடர்க.. சினிமா தொழில்நுட்பத்தை மேலும் அறிவோம். நன்றி. வாழ்த்துகள்.!

புருனோ Bruno said...

//அட விடுங்க புருனோ.. அப்படி பாத்தா நம்ம ஊர்ல குடுக்காத சலுகைகளா? //

வெண்பூ சார்

சரி என்ன சொல்ல வரீங்க

சலுகை குடுப்பது சரியா
சலுகை குடுப்பது தவறா

--
முதலில் நீங்கள் சலுகை கொடுப்பது சரி என்பது போல் எழுதியிருந்தீர்கள்

இப்பொழுது நீங்கள் என்ன கூறவருகிறீர்கள் என்பது தெரியவில்லை

//எல்லாம் ஒரே குட்டைதான், ஒரே மட்டைதான்.. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :))))//

ஐமேக்ஸ் போன்ற திரையரங்குகளுக்கு சலுகை அளிப்பது சரியா அல்லது தவறா என்று நீங்கள் தெளிவாக கூறினால் நான் ஏற்றுக்கொள்கிறேனா இல்லையா என்று கூறுகிறேன்
--

புருனோ Bruno said...

//எனக்கு என்னவோ படத்தின் கதை, காட்சிகள் நன்றாக இருந்தால் போதும், அந்த படத்தை டூரிங் டாக்கீஸில் கூட பாத்து ரசிக்கலாம்.

இன்றைக்கும் பராசக்தி, பலே பாண்டியா, சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, கரகாட்ட காரன், வெய்யில் போன்ற படங்களை எந்த டூரிங் டால்க்கீஸ், அல்லது சிறிய ஊர் திரை அரங்குகளில் கூட பார்த்து ரசிக்க முடியும்.//

:) :) :)


//அதே சமயம் என்னதான் imax, de டி எஸ் வந்தாலும் வில்லு, தெனாவட்டு போன்ற படங்களை பார்க்க முடியுமா.//

ஹி ஹி ஹி

//imax, dts are just like packing materials of a food box. If the food is not good, packing material cant provide good taste.//
நெத்தியடி

புருனோ Bruno said...

//எல்லாம் ஒரே குட்டைதான், ஒரே மட்டைதான்.. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :))))//

வெண்பூ சார், இப்படி பொதுவாக கூறி தப்பிக்க முடியாது

நான் தெளிவாகவே கூறியுள்ளேன். 1,00,000 பேர் பயன் பெறும் சலுகை வேறு, அம்பானி இருவர் மட்டும் பயன் பெறும் சலுகை வேறு

இரண்டையும் ஒன்றாக குழப்ப வேண்டாம்.

Naresh Kumar said...

முரளி கண்ணன்,

நிறைய டெக்னிக்கல் விஷயமா சொல்றீங்க!!!

திரை உலகத்தில் இதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்று தெரிய வில்லை. ஆனா நடுத்தர மக்களிடம் இதர்கு எப்படிப்பட்ட ஒத்துழைப்பு கிடைக்குமென்று தெரியலை!!!

எனக்கு தெரிந்து கிராமங்களில் திருட்டு விசிடியில பாக்காதீங்கன்னு இப்ப சொன்ன அடிக்க வந்தாலும் வந்துடுவாங்க. சேலம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில், ஒரு டிக்கெட்டுக்கு 90 ரூபாய் என்பது எந்தளவு ஒத்து வரும் என்று தெரியவில்லை!!!

எப்படியோ நீங்க இப்படியே கொடுத்த்ட்டு இருங்க, அப்பதான் நாங்களும் நாலு விஷயம் கத்துக்க முடியும்...

புரூனோவின் விளக்கங்களும் அருமை!!!

புருனோ Bruno said...

//. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :))))//

ஆதாரத்துடன் விளக்கப்படும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வேன்.

கற்பனைகளை கருத்துக்களாக ஏற்கலாமே தவிர தகவலாக கருத முடியாது

--
இந்த தர்க்கத்தை பகுத்து பார்க்கலாம்
--
ஐமேக்ஸ் நிறுவனத்திற்கு தமிழகத்தில் சலுகை மறுக்கப்பட்டது தவறு என்ற ரீதியில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். அது உங்கள் நிலை

ஐமேக்ஸ் போன்ற பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் (அல்லது பிறர் தங்களது மாத சம்பளம் அனைத்தையும் செலவழித்தால் மட்டுமே பயன்படுத்த முடிகிற) ஒரு “கடை”க்கு சலுகை தேவையில்லை. அதற்கு பதில் சிற்றூர்களில் இருக்கும் திரையரங்குகளுக்காவது அளிக்காலாம் என்பது என் நிலை

சிலர் சினிமா என்பதே தேவையில்லாத. எந்த வகை திரையரங்கிற்கும் சலுகை அளிக்கக்கூடாது என்று கூறலாம். அது அவர்களின் நிலை
--
பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருட்கள் / சேவைகளுக்கு இது போல் அளவிற்கு அதிகமாக சலுகைகள் தேவையில்லை என்ற நிலைக்கு உதாரணமாகத்தான் சத்யம் கதையை உதாரணமாக காட்டினேன்.
--
இதில் எந்த ஒரு கட்சியோ அல்லது எந்த ஒரு மாநிலமோ எங்குமே வரவில்லை
--
இப்பொழுது விளக்க வேண்டியது உங்கள் முறை
--
ஆதாரத்துடன் விளக்கப்படும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வேன் !!!
--

புருனோ Bruno said...

அதற்கு முன்னர் ஐமேக்ஸில் ஒரு திரைப்படம் பார்க்க கட்டணம் எவ்வளவு என்று படம் பார்த்தவர்கள் யாராவது கூறினால் இந்த விவாதத்தை படிப்பவர்களுக்கு விபரம் கிடைக்கும்

--

அதே போல் நான் அளித்துள்ள சுட்டிகளை ஒரு படித்தால் நான் கூறுவது ஐமேக்ஸ் என்பதற்கு மட்டுமல்ல எனப்தும் புரியும்

வெண்பூ said...

வந்துட்டேன்...

முதலில் விலை: ஐ மேக்ஸில் நான் பார்த்த போது 2 வருடங்களுக்கு முன்னால் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓடும் படங்களுக்கு ரூ 120.. அதற்கு மேல் போகும் படங்களுக்கு ரூ 180.. :)))

வெண்பூ said...

புருனோ,

என்னோட ஆதங்கம் அந்த திரை அரங்கு ஹைதைக்கு போனதுதானே தவிர, என் முதல் பின்னூட்டத்தில் எந்த இடத்திலுமே அந்த சலுகைகள் சரி என்று சொல்லவில்லை. அது அங்கே போனதுக்கு இரண்டு காரணங்கள்:

ஒன்று நிர்வாக இழுவைகள். அந்த அரங்கு எல்.வி.பிரசாத் குடும்பத்தார்க்கு சொந்தமானது, சென்னையில் அவர்களுக்கு ஏற்கனவே பிரசாத்ஸ் ஸ்டுடியோஸ் இருக்கிறது என்று நினைக்கிறென் (தவறு என்றால் சொல்லவும்). அப்போதைய செய்திகளின் படி, அன்றைய அரசு அவர்கள் கொடுத்த திட்டத்திற்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை (அவர்கள் எதிர்பார்த்ததை பிரசாத்ஸ் கொடுத்திருக்க மாட்டார்களாய் இருக்கும் என்பது வேறு விஷயம்), ஒரு வேளை சரியான ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் கூட அது சென்னையில் இருந்திருக்கும்.

அதே நேரம் எப்படியாவது அவர்களை ஹைதைக்கு இழுக்க நாயுடு கொடுத்த சலுகைகளும் ரொம்ப அதிகம்தான். அதை நான் கண்டிப்பாக கண்டிக்கிறேன். இப்போதல்ல ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் என்.டி.ஆர் கார்டனின் ஒரு பகுதியை நீண்ட கால (99 வருடம்?) குத்தகைக்கு மிகக் குறைந்த விலைக்கு அவர் கொடுத்தது குறித்த ஆதங்கம் என்னிடமிருந்தும் என் நண்பர்களிடமிருந்தும் வெளிவரும்.


சொல்லப்போனால் இது போன்ற நிறுவனங்களுக்குத் தரும் சலுகைகள் தேவையற்றது என்ற உங்கள் கருத்துடன் கண்டிப்பாக நான் ஒத்துப் போகிறேன். இந்த் மாதிரி 10 தியேட்டர்களுக்கு தரும் சலுகைகளை குறைப்பது மட்டுமல்ல, தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு (இதை நீங்களும் ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) போன்ற சாமானியனுக்கு உதவாத சலுகைகளை குறைத்து அதன் மூலம் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 10 ரூபாய் அதிகம் தர முடிந்தால் கூட நான் சந்தோசப்படுவேன்..

***
//. நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :))))//

ஆதாரத்துடன் விளக்கப்படும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வேன்.
***

இந்த வரிகளை கிண்டலுக்காக உங்களை சீண்டுவதற்காகத்தான் எழுதினேன். காரணம் நீங்கள் அப்படி அல்ல என்று தெரியும். ஆதாரத்துடன் விளக்கினாலும் ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் இந்த மாதிரி ஆரோக்கியமான விவாதம் நடக்க சான்ஸே இல்லை புருனோ. தவறாக நினைக்காதீர்கள்.. :)))

வெண்பூ said...

மீ த 50.. :)))

புருனோ Bruno said...

//சொல்லப்போனால் இது போன்ற நிறுவனங்களுக்குத் தரும் சலுகைகள் தேவையற்றது என்ற உங்கள் கருத்துடன் கண்டிப்பாக நான் ஒத்துப் போகிறேன்.//

அப்பாடா பிரச்சனை தீர்ந்தது.

//இந்த் மாதிரி 10 தியேட்டர்களுக்கு தரும் சலுகைகளை குறைப்பது மட்டுமல்ல, தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு (இதை நீங்களும் ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) போன்ற சாமானியனுக்கு உதவாத சலுகைகளை குறைத்து அதன் மூலம் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 10 ரூபாய் அதிகம் தர முடிந்தால் கூட நான் சந்தோசப்படுவேன்..//
இந்த வருடம் நடைபெறும் ..... அரசின் நிதிநிலை அறிக்கை படித்தீர்களா (எண் 128)

http://www.tn.gov.in/tamiltngov/budget/BudgetSpeech_Tamil_3.htm

வெண்பூ said...

நியூஸில் பார்த்தேன் புருனோ.. ரொம்ப நல்ல விசயம்.. சீக்கிரம் நடைமுறைக்கு வந்தால் நல்லதுதான்..

வெண்பூ said...

வார இறுதியில் கும்மி அடித்துக் கொண்டாட கடை திறந்து வைத்த அண்ணன் முரளி கண்ணன் அவர்களுக்கு என் சார்பாகவும், டாக்டர் புருனோ சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பாராட்டி அடுத்த முறை அவர் சென்ட்ரல் செல்லும்போது எதிரில் அரசு மருத்துவமனைக்குச் சென்று இரண்டு ஊசி இலவசமாகப் போட்டுக் கொள்ள டாக்டர் புருனோ சலுகைக் கூப்பன் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.. முரளி, விரைந்து செல்லவும்.. :))))

புருனோ Bruno said...

அரசின் நிதிநிலை அறிக்கை படித்தீர்களா (எண் 128)

அரசின் நிதிநிலை அறிக்கை படித்தீர்களா (எண் 128)

புருனோ Bruno said...

வெண்பூ மற்றும் பிற தனியார் துறை நண்பர்களுக்கு

மேலுள்ள சுட்டியில் இருந்து அந்த பக்கத்திற்கு சென்றால் அரசின் நிதிநிலை அறிக்கை முழுவதையும் படிக்கலாம்

ஒரு முறை படித்து பார்க்கவும் !!!

பல சுவாரசியங்கள் இருக்கின்றன

narsim said...

முரளி கண்ணன்..!


அவ்வளவுதான் பின்னூட்டம்.. வேறு வார்த்தைகள் இல்லை..

SANKAR said...

HOW DO I MADE MY COMMENTS IN TAMIL? PL CLARIFY

CA Venkatesh Krishnan said...

தகவல்களுக்கு நன்றி முரளி கண்ணன் !

ராமகுமரன் said...

மிக அருமை, புரிகிற விதத்தில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்