February 18, 2009

படப்பெட்டியும் டிஜிடல் சினிமாவும்

முன்பு தமிழ்படங்களுக்கு சராசரியாக 60 முதல் 80 பிரிண்டுகள் வரை போடுவார்கள். ஒரு ஏரியாவிற்க்கு சராசரியாக 10 பிரிண்டுகள் வரை கொடுக்கப்படும். பின் அந்த திரையரங்குகளுக்கு கூட்டம் குறையத் தொடங்கியதும் அடுத்த கட்ட ஊர்களுக்கோ, அல்லது அந்த ஊரில் தொலைவில் உள்ள திரையரங்கிலோ படம் திரையிடப்படும்.


உதாரணத்துக்கு மதுரை - ராமானாதபுரம் (ஓல்ட் எம் ஆர் என்று வினியோக வட்டாரத்தில் சொல்வார்கள்) ஏரியாவை எடுத்துக் கொள்வோம்.
இங்கே மதுரை யில் இரு தியேட்டர்களிலும், திண்டுக்கல்,தேனி,கம்பம், விருதுநகர்,சிவகாசி,ராஜபாளையம்,காரைக்குடி,பழனி, ராமனாதபுரம் ஆகிய ஊர்களில் ஒரு தியேட்டரிலும் படம் வெளியாகும்.


கூட்டம் குறைய ஆரம்பித்ததும் மதுரையில் உள்ள இரண்டாம் கட்ட தியேட்டர்களுக்கும், அருப்புக்கோட்டை,சாத்தூர், ஒட்டன்சத்திரம்,சிவகங்கை,பெரியகுளம்,உசிலம்பட்டி போன்ற தாலுகா/நகராட்சி அளவிலான ஊர்களுக்கும் படம் திரையிட கொடுக்கப்படும்.


பின்னர் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சின்னாளபட்டி, சோழவந்தான் என அடுத்தநிலை ஊர்களுக்கு கொடுக்கப்படும். கடைசியாக கிராம திரையரங்குகளுக்கும், டூரிங் டாக்கீஸ்களுக்கும் கொடுக்கப்படும்.

மூன்றாம் நிலை ஊருக்கு ஒரு படம் வெளியாகி 100 நாட்கள் கழித்து வந்தால் அந்த படம் பெரிய வெற்றி என கருதப்படும். ஏனென்றால் மதுரை,திண்டுக்கல் இரண்டு ஊர் மட்டுமே 100 நாட்கள் படம் ஓடும் அளவுக்கு மக்கள் தொகை கொண்டவை. மற்றவை 50- 60 நாட்கள் அளவுக்கே கெப்பாஸிட்டி கொண்டவை. இவற்றில் 50 நாட்களும், இரண்டாம் நிலையில் 40- 50 நட்கள் ஓடி பின் மூன்றாம் நிலை ஊருக்கு வந்தால் படம் வெற்றி. 30 நாளிலேயே இங்கு வந்து விட்டால் படம் தோல்வி.

குறைவான அளவு பிரிண்ட் போட காரணம் என்ன?. பிரிண்ட் போட ஆகும் செலவுதான். சராசரியாக ரூபாய் 50,000 ஆகும் ஒரு பிரிண்டுக்கு. பட தயாரிப்பு செலவு 1 கோடி எனக் கொள்வோம் (80 மற்றும் 90 களில்). 80 பிரிண்டுக்கு 40 லட்சம் ஆகும். இது பட தயாரிப்பு செலவில் 40% ஆகும். எனவே குறைவான பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழக அரசு கூட லோ பட்ஜெட் படம் என்பதற்க்கு வைத்திருந்த அளவுகோல் 30 பிரிண்டுக்கும் குறைவாக போடப்பட்டிருக்க வேண்டும் என்பதே. அந்தப் படங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. ரஜினி,.கமல் படங்களுக்கு கூட அந்நாட்களில் 100க்கும் மேல் பிரிண்டுகள் போடப்பட்டதில்லை.

இந்த முறையானது 95க்குப் பின்னால் பெரும் நெருக்கடியை சந்தித்தது.

காரணங்கள்

1. சிற்றூர்களில் தொடங்கப்பட்ட உள்ளூர் கேபிள் டிவிக்கள் புதிய படங்களை (கேசட் மற்றும் விசிடி மூலம்) ஒளிபரப்பின. 100 நாட்கள் கழித்து அந்தப் படம் தியேட்டருக்கு வந்தால் அதற்கு என்ன வசூல் கிடைக்கும்?

2. நகரங்களில் திருட்டு வி சி டி படம் வெளியாகி இரண்டு மூன்று வாரத்தில் எளிதாக கிடைக்க ஆரம்பித்தது. இதனாலும் வசூல் குறைந்தது.

3. பின் தனியார் தொலைக்காட்சிகள், தியேட்டர் பராமரிப்பின்மை, தியேட்டர் ஊழியர்களின் அலட்சியப் போக்கு (வரிசையில் நின்று டிக்கட் வாங்குபவர்களை ஏசுவது, குச்சியால் அடிப்பது) போன்றவற்றால் மத்தியதர வர்க்கம் தியேட்டர்களை புறக்கணித்தது.

இந்த நிலையைப் போக்க மக்களை தியேட்டருக்கு வரவழைக்க பிரமாண்டப் படங்கள், அதிக பிரிண்டுகள் போடுதல்,திருட்டு விசிடி தடுத்தல், தியேட்டர் பராமரிப்பு (தரம் உயர்த்தல்) ஆகிய வழிகள் முன்வைக்கப்பட்டன.

பிரமாண்டப் படங்களின் தோல்வி என்பது பலரையும் பாதிக்கக் கூடியது. மேலும் பிரமாண்டம் வெற்றிக்கு உத்திரவாதமும் அல்ல. தியேட்டர் பராமரிப்பு தற்போது பல நிறுவனங்களால் நன்கு மேற்கொள்ளப் படுகிறது. கார்பொரேட் நிறுவனங்களும் இதில் குத்திதுள்ளன.

மற்ற இரண்டு வழிகளான அதிக பிரிண்ட் மற்றும் திருட்டி விசிடி தடுப்புக்கு ஆபத்பாந்தவனாக வந்திருப்பது டிஜிடல் சினிமா சிஸ்டம். இந்த முறையில் படமாக்கப்பட்டு,எடிட் செய்யப்பட்டு,டப்பிங், ரீ ரெக்கார்டிங் என எல்லாம் முடிந்த பிலிம் சுருளானது டிஜிடல் பார்மட்டுக்கு மாற்றப்படுகிறது. இந்த சோர்ஸ் கன்டென்ட் ஓரிடத்தில் வைக்கப்படும். பின்னர் டிஜிடல் புரஜெக்டர்கள் வைத்துள்ள தியேட்டர்களுக்கு தேவையான போது சாட்டிலைட் சர்வர் மூலம் தரவிறக்கம் செய்யப்படும்.

இதன் சாதகங்கள்

1. பிரிண்ட் போடுவதை விட மிக குறைந்த செலவு. எங்கெங்கு டிஜிடல் புரொஜெக்டர்கள் உள்ளதோ அவை எல்லாமே பிரிண்டுகள் தான். எனவே ஒரே நேரத்தில் எல்லாவித ஊர்களிலும் (மவுண்ட் ரோடு முதல் மன்னாடி மங்கலம் வரை) வெளியிடலாம். இப்பொழுது பல திரைப்படங்கள் இந்த முறையைப் பயன்படுத்தி பேரூராட்சி அளவிலான ஊர்களில் கூட ரிலீஸ் செய்யப்படுகின்றன.

2.திருட்டு விசிடி தடுப்பு. சிலந்தி (மோனிகா நடித்தது) திரைப்படத்திற்க்கு கன்வென்சனல் முறைப்படி பிரிண்ட் போடவே இல்லை. (பெட்டியே இல்லை). டிஜிடல் சிஸ்டம் உள்ள திரையரங்கில் மட்டுமே படம் வெளியிடப்பட்டது. அதனால் பர்மா பாஜாரில் விசிடி கிடைக்கவே இல்லை. படம் ஓரளவு பிக்கப் ஆகியதும் மற்ற இடங்களுக்கும் படத்தைக் கேட்கவே பின்னர் பிரிண்ட் போட்டு கொடுத்தார்கள் (சாதாரண புரஜெக்டர் வைத்துள்ள திரையரங்குகள்).

தியேட்டரில் காமிரா பிரிண்ட் எடுத்தால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?

முன்பு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பட பிரிண்டுகளில் ரகசிய குறியீடுகள் செய்வார்கள்.தியேட்டரில் யாராவது கேமிரா மூலம் படமெடுத்தால் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதைக் கண்டுபிடித்து காவல்துறை மூலம் தண்டிப்போம் என்று விளம்பரம் செய்தார்கள். இந்த முறையை வேறு சில தயாரிப்பாளர்களும் பின்பற்றினார்கள். ஆனால் பைரேட்டுகள் அஞ்சவில்லை. அதையும் முறியடித்தார்கள்.

தற்போது டிஜிடலிலும் இவ்வாறு மார்க் செய்கிறார்கள். முதலில் வெளியில் தெரியும் படியான மார்க்கை செய்தார்கள். திருட்டி விசிடிகாரர்கள் அதையும் வெற்றிகரமாக சமாளித்தார்கள். பின் சுதாரித்துக் கொண்ட டிஜிடல் ஆட்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் மார்க் செய்தார்கள் (வாட்டர் மார்க்). இவ்வாறு மார்க் செய்யப்பட்ட படத்தை எந்த பார்மட்டுக்கு மாற்றினாலும் அவர்களிடமுள்ள கருவியின் மூலம் கண்டுபிடிக்கமுடியும். எனவே கறுப்பு ஆடை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

மேலும் எந்த நேரத்தில் படம் திரையிடப்படுகிறது என்பது முதலான விபரங்களும் பதிவு செய்யப்படுகிறது.

3. எளிதில் படம் அனுப்பும் வசதி. தற்போது வெளியாகி உள்ள படிக்காதவன் படம் உள்பட சுமார் 400க்கும் அதிகமான படங்கள் (இந்திய மொழிகளில்) இம்முறையில் வெளியிடப்பட்டுள்ளன. பழைய முறையில் இயங்கும் புரஜெக்டர் உள்ள திரையரங்குகளுக்கு பிரிண்ட்டும், டிஜிடல் புரஜெக்டர் உள்ள திரையரங்குகளுக்கு சாட்டிலைட் மூலமும் படம் அனுப்பப்பட்டது. எல்லாத் திரையரங்குகளும் இந்த வசதியை ஏற்றுக் கொண்டால் பெட்டி வரல்லை என்ற பதம் வழக்கொழிந்துவிடும்.

இந்தியாவில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது ரியல் மீடியா இமேஜ் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனம். கியூப் என்று திரையரங்குகளில் பார்த்திருப்பீர்கள். பிரசாத் லேப் படச்சுருளை டிஜிடல் ஆக்கும் சேவையை வழங்கி வருகிறது. டெக்சாஸ் நிறுவனம் இதற்குரிய புரஜெக்டர்களை தயாரித்து தருகிறது.

இந்த புரஜெக்டரின் முக்கிய பாகங்கள்

1. டிஜிடல் வீடியோ சிக்னலை தரும் பாகம்

2. தேவையான ஒளி, லென்ஸுகள்

3. மைக்ரோ மிரர் டிவைஸ். இந்த கருவியில் 10 லட்சத்துக்கும் அதிகமான மைக்ரோ அளவிலான கண்ணாடித் துண்டுகள் பொதிந்து வைக்கப் பட்டிருக்கும். இந்த கருவியே வரும் டிஜிடல் சிக்னலை வெள்ளித்திரையில் படமாக விரிய வைக்கிறது.

இந்த புரஜெக்டரில் இருந்து படத்தை திரையிட ரகசிய எண் கொடுக்கப் பட்டிருக்கும். அதை உள்ளீடு செய்தவுடன் டிஜிடல் சிக்னல் தரவிறக்கம் செய்யப்பட்டு படம் ஒளிபரப்பாகும்.

வரும் நாட்களில் இந்த முறையே திரைத் துறையில் பெரிதும் பின்பற்றப் படும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்.

33 comments:

Nilofer Anbarasu said...

சினிமா விமர்சகர்/ஆர்வலர் என்ற வார்த்தை உங்களுக்கு நிஜமாகவே நன்றாக பொருந்தும். மேலோட்டமாக இல்லாமலல் டெக்நிக்கலாக கூட நிறைய தெரிந்து வைத்திருக்கீறீர்கள்.

கார்க்கிபவா said...

wow.. grt info

Vidhya Chandrasekaran said...

சூப்பர் தகவல்கள் முரளி.

அக்னி பார்வை said...

நல்ல பதிவு.. இப்பொழுது அந்த மாதிரி இல்லை என் நினைக்கிறேன்.. வசுல் வைத்து தான் பட வெறி நிர்னியக்க படுகிறது

கே.என்.சிவராமன் said...

Good Post. Keep it up MURALI...

- Paithiyakkaran

முரளிகண்ணன் said...

நிலோபர் அன்பரசு, கார்கி, வித்யா, அக்னி பார்வை, பைத்தியக்காரன் தங்கள் வருகைக்கு நன்றி.

மாதவராஜ் said...

இந்த தொழில்நுட்பம் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். பதிவு விளக்கமாகவும், தெளிவாகவும் இருந்தது. சினிமா மெல்ல மெல்ல கார்ப்பரேட்களின் கைகளுக்குள் போய்க் கொண்டிருப்பது தெரிகிறது.

Anonymous said...

முரளி,

தகவல்களைச் சுவராசியமாகப் படிக்க வைத்திருக்கிறீர்கள். இதையே தைட்டையாக ஒரு கட்டுரையாக எழுதியிருந்தால் இரண்டாவது பத்தியிலேயே விலகி இருப்போம். நீங்கள் இறுதி வரை படைக்க வைத்து விட்டீர்கள்.

கோபிநாத் said...

ஆகா..!!

கலக்கல் தகவல்கள் :)

சின்னப் பையன் said...

நல்ல பதிவு.. நிறைய தகவல்கள்..

சரவணகுமரன் said...

பதிவு அருமை.

அந்த டிஜிடல் புரொஜெக்டர்கள் எவ்ளோங்க?

முரளிகண்ணன் said...

மாதவராஜ்,வடகரை வேலன், கோபிநாத்,சின்னப்பையன், சரவணகுமரன் வருகைக்கு நன்றி.

சரவணகுமரன் விரிவான தகவல்கள் வரும் பதிவுகளில் சேர்த்து விடுகிறேன்.

Anonymous said...

UFO Technology? With this digital systems, the DTS sound quality in theater is degrading. The sound isn't impressive as it does thru' film rolls. You could have added about minuses in digital format as well.

Thamira said...

நல்ல பதிவு.. நிறைய தகவல்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிறைய விசயங்களை தெரியப்படுத்தி இருக்கீங்க.... நல்லா இருக்கு பதிவு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//டிஜிடல் புரஜெக்டர் உள்ள திரையரங்குகளுக்கு சாட்டிலைட் மூலமும் படம் அனுப்பப்பட்டது. //


தொலைக்காட்சி மாதிரியா பாஸ்...

ஆதவா said...

பல சினிமா தகவல்கள் அடங்கியிருக்க்கும் போல இருக்கே!!!!

உங்களுடைய எல்லா ப்ளாக்குகளில் சென்று நொந்துவிட்டடஎன்.. எது ஆக்டிவா இருக்குணு தெரியாமல் முழிச்சேன்.....

பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் எனக்குப் புதியது!!!

தொடருங்க.

முரளிகண்ணன் said...

முத்து,தாமிரா,முத்துலட்சுமி கயல்விழி,சுரேஷ் தங்கள் வருகைக்கு நன்றி

ஆதவா

\\உங்களுடைய எல்லா ப்ளாக்குகளில் சென்று நொந்துவிட்டடஎன்.. எது ஆக்டிவா இருக்குணு தெரியாமல் முழிச்சேன்\\

இந்த வலைப்பூவில் மட்டுமே இப்போது பதிவெழுதி வருகிறேன். தங்கள் ஆதரவு தொடரட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிறைய தகவல்கள்..நல்ல பதிவு

ஷாஜி said...

Why not they release DVD to theaters and thro' projector they can screen the film.?
(like our office projector)

Is it like record & play. Like download it from satelite and then play. or like live streaming from satellite...

Anonymous said...

ok. in spite of all that you have said, how is it that we are able to watch all the news movies including naankadvul in the internet. (Ofcourse camera print only)

புருனோ Bruno said...

//தியேட்டர் பராமரிப்பு தற்போது பல நிறுவனங்களால் நன்கு மேற்கொள்ளப் படுகிறது. கார்பொரேட் நிறுவனங்களும் இதில் குத்திதுள்ளன.//

?? குதித்துள்ளன

அது சரி. இப்படி இவர்கள் திரையரங்கை பராமரிக்கிறேன் என்று கட்டணத்தை உயர்த்துவது குறித்து உங்களின் கருத்தென்ன

இங்கே பார்க்கவும்
http://www.payanangal.in/2008/04/3_07.html

அத்திரி said...

அருமையான தொகுப்பு

Cable சங்கர் said...

தலைவரே... சாட்டிலைட் மூலம் அப்லோட் செய்து பின்னர் தியேட்டரில் இருக்கும் சர்வரில் டவுன்லோட் செய்யும் முறை.. இங்கு இன்னமும் முழு வழக்கத்துக்கு வரவில்லை. இன்னும் டெமோவிலேயே உள்ளது. அந்த வசதி கூட UFO என்கிற் ஒரு கம்பெனி மட்டுமே mpeg4ல் கம்ப்ரஷன் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

தற்போதைய முறை என்னவென்றால், ஹார்ட்டிஸ்கில் என்கோடட் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்கில் அனுப்புகிறார்க்ள்.

தற்போது டிஜிட்டல் சினிமாவில் நெ.1 ரியல் இமேஜ்
2.uFo
3.கலசா என்கிற கம்பெனி கூட டிஜிட்டல் ப்ரொஜெக்டர் விற்கிறார்கள்.

ஆனால் டி சினிமா எனப்படும் ஆர்.டி.எக்ஸ் எனப்படும் ப்ரொஜெக்டர் சென்னையில் சத்தியத்தில் மட்டுமே எல்லா திரையரங்குகளீலும் இருகிறது. அதனுடய விலை கிட்டத்தட்ட அவர்கள் வாங்கும் போது 50 லட்சம்..

எம்.எம்.அப்துல்லா said...

/வரும் நாட்களில் இந்த முறையே திரைத் துறையில் பெரிதும் பின்பற்றப் படும் //

பெரிதும் அல்ல...முழுவதும்னு நினைக்கிறேன்.

வெண்பூ said...

நல்ல தகவல் முரளி.. நீங்க சொன்னதுக்கப்புறம்தான் டிஜிட்டல் ப்ரொஜக்டர் இந்த அளவுக்கு ஊடுறுவி இருக்குறதே தெரிஞ்சது. அது இன்னும் சோதனை அடிப்படையில இருக்குறதாத்தான் நெனச்சிட்டு இருக்கேன்..

Cable சங்கர் said...

தமிழ் நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களுக்கு மேல் டிஜிட்டல் புரொஜக்‌ஷ்ன் சிஸ்டத்துக்கு மாறி விட்டிருக்கிறது..

ராமகுமரன் said...

நல்ல பதிவுகள் , நன்றி, சினிமா பற்றிய நிறைய விஷயங்களை இதன் மூலம் தெரிந்துக்கொள்கிறேன். டிஜிட்டல் புரொஜக்டருக்கும் சாதாரன புரொஜக்கட்டருக்கும் உள்ள விலை வித்தியாசம் சுமாராக எவ்வளவு இருக்கும்

narsim said...

எவ்வளவு விபரங்கள் முரளி.. காரணங்களையும் சாதகபாதகங்களையும் அலசிய விதம் அருமை..

திரைக்குப் பின் நிகழும் விசயங்களையும் நுட்பமாகவும் தெளிவான நடையிலும் தொகுத்த விதம் அருமை.. தொடருங்கள்..

பிரேம்ஜி said...

நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்.சத்யத்தில் துளியும் கோடு விழாத படங்களை டிஜிட்டல் ப்ரொஜக்சன் மூலம் பார்த்த அனுபவம் சிறப்பான ஒன்று.சிறப்பான பதிவு.தொடருங்கள்.

முரளிகண்ணன் said...

டி வி ராதாகிருஷ்ணன்,ஷாஜி,புருனோ,அத்திரி,அப்துல்லா,வெண்பூ,ராம்குமார், நர்சிம், பிரேம்ஜி தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

கேபிள் சங்கர் சார் தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி

Nilofer Anbarasu said...

enna boss, puthusaa pathivu onnum podalayaa.... looking for new post :)

anujanya said...

அன்பரசு, முரளி என்ன மாதிரி கூட்ஸ் வண்டிகளுக்காகக் காத்திருக்கிறார்.

மிக நல்ல பதிவு முரளி. ஏராளமான தகவல்கள். எங்கிருந்து, எப்படிச் சேகரிக்கிறீர்கள்?

அனுஜன்யா