March 19, 2009

1988 ஆம் ஆண்டு திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி

இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான ஆண்டு இது. உலக கோப்பை தோல்விக்குப் பின் கபில்தேவிற்க்குப் பதிலாக வெங்சர்க்கார் கேப்டனாக நியமிக்கப் பட்டார். கவாஸ்கர் ஓய்வு பெற்றிருந்த படியால் அருண்லால் அவர் இடத்திற்க்கு ஆட வந்தார். கபில்தேவ் மூட்டு ஆப்பரேசன் மற்றும் வயது காரணமாக தன் வேகத்தை இழந்திருந்தார். சேட்டன் சர்மா பார்மில் இல்லாமல் இருந்தார். பந்து வீசவே ஆளில்லை. கைப்புள்ள போல அடிவாங்கிக் கொண்டிருந்தது இந்தியா. யார் ஆட்டமும் பள்ளிக்கு மட்டம் போட்டு போய் பார்க்கும் படி அமையவில்லை. எனவே பள்ளியில் மதியம் கட்டடித்தால் ஒரே போக்கிடம் தியேட்டர்தான். அடுத்த ஆண்டில் தெண்டுல்கரும், பின்னர் கும்ப்ளே,ஸ்ரீநாத்தின் வரவும் மீண்டும் கிரிக்கெட்டை பார்க்க வைத்தன. அப்படி கட்டடித்து போய் பார்த்த சில படங்கள் இந்த பகுதியில்.


கனம் கோர்ட்டார் அவர்களே

இதுவரை வந்த எல்லாத் திரைப்படங்களிலும் வக்கீல்களை வசதியானவர்கள், பொய்யாக வாதாடுபவர்கள் என்ற தோற்றம் வரும்படியே சித்தரித்திருப்பார்கள். மிக சில படங்களில் மட்டுமே உதவி வழக்கறிஞர்களின் பொருளாதார பிரச்சினையை (மிடில் கிளாஸ் மாதவன், கலக்குறே சந்துரு) சித்தரித்திருப்பார்கள். இனிவரும் படங்களில் அவர்களை கலககாரர்களாக கூட (ஏற்கனவே சுந்தர் சி யின் தீ படத்தில் ஓரளவு காட்டியாகிவிட்டது) சித்தரிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் தான் ஒரு பிரபல வக்கீலின் உதவியாளர்கள் எந்தெந்த வேலையெல்லாம் செய்ய வைக்கப் படுகிறார்கள், அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் என்ன என தெளிவாக காட்டியிருப்பார்கள்.

அதுவரை பெரும்பாலும் காமெடி வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த எஸ் எஸ் சந்திரன் இதில் சீனியர் வக்கீலாக கனமான வேடத்தில் நடித்திருந்தார். அவரின் மனைவியாக ஸ்ரீவித்யாவும், ஜுனியர் வக்கீலாக சத்யராஜும் நடித்திருந்தனர். சத்யராஜின் காதலியாக அம்பிகா. எஸ் எஸ் சந்திரன் சில்க் ஸ்மிதா விரிக்கும் வலையின் மூலம் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். மற்றவர்கள் கைவிட்ட நிலையில் கடைசி ஜூனியரான சத்யராஜ் எஸ் எஸ் சந்திரனை காப்பாற்ற முயற்சிக்கிறார். பின்னர்தான் தெரிகிறது இதற்க்குப் பின் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறதென்று. வழக்கம் போல் எல்லா வில்லன்களையும் புஜ பல பராக்கிரமத்தால் வென்று சீனியரை காப்பாற்றுகிறார்.

மணிவண்ணன் இயக்கிய இந்தப் படத்தின் தோல்விக்கு காரணம், எதார்த்தமான முன்பகுதியும், அதற்க்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்ட பின்பாதியும் தான். வருமானமில்லாத காரணத்தால் முழங்காலுக்கு சற்று கீழ் வரை ஏறிப்போன பேண்டும், சோடாபுட்டி கண்ணாடியும், அப்பாவித்தனமான பேச்சுமாக வளைய வரும் சத்யராஜ் திடீரென்று மெஷின் கன்னை அனாயசமாக கையாளுவது, ”தமிழ் சினிமாவில் லாஜிக் பார்ப்பது என்பதே லாஜிக் இல்லாதது” என்று நம்புவர்களைக் கூட திகைப்பில் ஆழ்த்தியது.

கதாநாயகன்

நாயகனை முதலில் தயாரித்து பின் ஜிவியிடம் கொடுத்த முக்தா பிலிம்ஸாரின் அடுத்த தயாரிப்பு கதாநாயகன். பாண்டியராஜன், எஸ் வி சேகர், ரேகா நடித்த இந்தப் படம் ஒரு மலையாளப் படத்தின் தழுவல். நான் பி காம் பர்ஸ்ட் கிளாஸ், இவன் எஸ் எஸ் எல் சி, சைக்கிளுக்கு ட்ரைவர் வச்சுருக்கவன் நான் போன்ற பாண்டியராஜன் டைப் காமெடி, மாடு வைத்திருக்கும் கோனாரிடம் இந்த கோனார் நோட்ஸ் போடுறது நீங்கதானா? ஐஞ்சு டெல்லிப் பசு, பத்து பாம்பே பசு, பத்து கல்கத்தா பசு போன்ற எஸ் வி சேகர் டைப் காமெடி, சந்திரபோஸின் இசையில் பாடல்கள் என நன்கு ஓடியது இந்தப் படம்.

இதன் மூலமான நாடோடிக்காட்டில் மோகன்லாலும், ஸ்ரீனிவாசனும் அதகளம் பண்ணியிருப்பார்கள்.

குரு சிஷ்யன்

இன்சாப் கி புகார் என்னும் இந்திப்படத்தை தழுவி எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரித்த வெற்றிப் படம். ரஜினி,பிரபு,சீதா, சோ மற்றும் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படத்தின் மூலம் கௌதமி அறிமுகமானார். கவர்னர் ஆட்சி நடந்து கொண்டு இருந்த சூழ்நிலை. இது தொடர்பான பல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் பைத்தியம் தாண்டா (வரிகள் மாற்றப் பட்டன். முதலில் நாமெல்லாம் பாரத நாடு என இருந்தது). காவலர்கள் அரசியல் பேசிக்கொண்டிருக்கும் போது கைதி பிரபு இடையில் புகுந்து “சிவாஜிதான்யா ஜெயிப்பாரு” என்பார். சோ சிந்திக்கும் போது தன் கைவிரல்களால் அத்தனை சின்னங்களையும் கொண்டு வருவார். இந்தப் படத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக்கான “நாங்க செய்யறத தான் சொல்லுவோம், சொல்லுறத தான் செய்வோம்” என்பது திமுகவால் சொல்வதை செய்வோம் என பிரச்சாரத்தில் உபயோகப் படுத்தப் பட்டது.

தர்மத்தின் தலைவன்

கஸ்மே வாடி இந்திப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். குஷ்பூ அறிமுகமான படம். இதிலும் ரஜினியுடன் பிரபு உண்டு. சுஹாசினி இணை. ரஜினியின் ஞாபகமறதி காமெடி மிகவும் ரசிக்கப் பட்டது. ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.

ஊர தெரிஞ்சுக்கிட்டேன்

கலைப்புலி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பிரிந்த ஜி சேகரன் தயாரித்து இயக்கிய படம். பாண்டியராஜன் நாயகன். நண்பனாக செந்தில். இந்தப் படத்தின் முதல் பகுதி காமெடி காட்சிகள் இன்று வரை பலராலும் மறக்க முடியாதவை.

பிம்பிலிக்கி பிலாப்பி, மாமா பிஸ்கோத்து, கள்ள மொய் எழுதுவது என அமர்க்களமான முதல் பாதியும் பின்னர் அதை நியாயப் படுத்தும் கனமான பின் பாதியும் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. சொத்துக்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் சமுதாயப் பிரச்சினையும் படத்தில் தொடப்பட்டிருந்தது.

என் தங்கை கல்யாணி

ராஜேந்தரின் பாணியான மெகா செட்டுகள், தங்கைப் பாசம், காதலியிடம் காதலை மறைப்பது போன்ற அம்சங்களுடன் வந்து வெற்றியடைந்த கடைசிப் படம். இத்ற்க்குப் பின் அவரது படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. (சிம்பு நடித்த எங்க வீட்டு வேலன் விதிவிலக்கு. அதில் மேற்கண்ட அம்சங்கள் இருக்காது). ரிக்சா ஓட்டும் தொழிலாளியாக நடித்த டி ராஜேந்தர் கனவு பாடல்களில் ஜிகினா சட்டையுடன் ஆடி வெற்றி பெற்றார்.

என்னை விட்டுப் போகாதே

டி கே போஸ் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான தாய் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ராமராஜன் படம். கிராமத்து ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்தது. பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் ராமராஜன், கூலி வேலை செய்து காப்பாற்றும் அம்மா. அம்மாவின் மறைவுக்குப் பின் திருந்துவது என வழக்கமான கதை. ஆனால் டி கே போஸின் இயல்பான வசனங்களும், இளையராஜாவின் இசையும் படத்தை தூக்கி நிறுத்தின. இந்த டி கே போஸ் சென்ற ஆண்டு வெளியான கொடைக்கானல் என்னும் படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ”பொன்னப் போல ஆத்தா என்னை பெத்து போட்டா, என்னப் பெத்த ஆத்தா கண்ணீர தான் பார்த்தா” என்னும் பாடல் இளையராஜாவின் தாய் பாச பாடல்களில் குறிப்பிடத்தக்கது.


உன்னால் முடியும் தம்பி

இதுவரையில் கே பாலசந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த கடைசி படம். 21 ஆண்டுகள் ஆகிவிட்டன, இருவரும் இணைந்து. ஜெமினி கணேசன், சீதா, மனோரமா, ஜனகராஜ் நடித்து இளையராஜா இசையில் வெளியானது. கடைசி அரை மணி நேர சொதப்பலால் தோல்வியடைந்த முதல் பத்துப் படங்களில் இதற்க்கும் ஒரு இடமுண்டு. நல்லாத்தானய்யா போயிக்கிட்டு இருந்துச்சு என்னும் வண்ணம் கடைசி அரை மணி நேரத்தில், சிறந்த குடிமகன் விருது, அதைக் கொடுக்க பிரதமர் (ராஜீவ் காந்தி சாயலில் ஒருவர், மொழி பெயர்க்க சிதம்பரம் சாயலில் ஒருவர் வேறு) என சொதப்பி விட்டார்கள். அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த மக்கள் சக்தி இயக்கத் தலைவர் உதயமூர்த்தியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கதாநாயகனது கேரக்டரை அமைத்திருந்தார்கள் (பெயர் உட்பட).

இளையராஜா இசையில் நஞ்சை உண்டு புஞ்சை உண்டு, அக்கம் பக்கம் பாரடா, என்ன சமையலோ, விழியில் கதை எழுதும் நேரமிது என இனிமையான பாடல்கள். ஜெமினி, மனோரமா, ஜனகராஜின் அசத்தலான நடிப்பு என இருந்தும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ரமேஷ் அரவிந்த், தாரிணி ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்கள்.

உரிமை கீதம்

பிற்காலத்தில் கிராமிய படங்களில் முத்திரை பதித்த பிலிம் இண்ஸ்டிடூட் மாணவர் ஆர் வி உதயகுமாரின் முதல் படம். நல்ல சஸ்பென்ஸ் திரில்லர். பிரபு,கார்த்திக்,ரஞ்சனி,பல்லவி, ஜனகராஜ் நடித்தது. கார்த்திக்கின் தந்தை முதலமைச்சர். அவரை பிரபு சுட்டுக் கொன்று விட்டதாக போலிஸ் துரத்துகிறது. கார்த்திக்கும் துரத்துகிறார். ஆனால் பிரபு சதியால் சிக்கியவர் எனத் தெரிந்ததும் இருவரும் இணைந்து எதிரிகளை வீழ்த்துகிறார்கள். ஜனகராஜ் இதில் துணி தேய்ப்பவர் வேடத்தில் அசத்தியிருப்பார். இந்த ஆண்டு ஜனகராஜின் ஆண்டு என்று கூட சொல்லலாம். அவ்வளவு வித்தியாச வேடங்கள். இசை மனோஜ் – கியான். மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் என்னும் அருமையான பாடலும் உண்டு. சுவராசியமான காட்சிகளால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பார் ஆர் வி உதயகுமார்.

மற்றவை அடுத்த பகுதியில்

32 comments:

narsim said...

//இதுவரையில் கே பாலசந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த கடைசி படம்//

‘இதுவரையில்’ என்ற வார்த்தையில் தெரிகிறது உங்கள் அக்கறை..

பதிவும் அதற்கான முன்னுரையும் கலக்கல் முரளி..

ஆம்..கதாநாயகன் அப்பொழுது ஒரு ட்ரெண்ட் செட்டர்..அதை ஒட்டி ஏகப்பட்ட முழுநீள நகைச்சுவைப்படங்கள் வந்தன..

அடுத்த பதிவு எப்போ?

எம்.எம்.அப்துல்லா said...

வ.உ.பி.நி.ஆ

:)

Vidhya Chandrasekaran said...

அப்பாடா இந்த லிஸ்டில் பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கேன். நல்ல அலசல்:)

Dhileep said...

உன்னால் முடியும் தம்பி படம் மிகவும் அருமையான படம்.. கமலும் ஜெமினியும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.. கமலின் அண்ணனாக ஒருவர் அசத்தி இருப்பார்..
நஞ்சை உண்டு பாடல் எனக்கு மிகவும் பிடித்தது...

நீங்கள் சொல்வது போல் கடைசி கொஞ்சம் சொதப்பல் தான்..

முரளிகண்ணன் said...

நர்சிம் நன்றி.

அப்துல்லா புரியலையே

வித்யா வாங்க

தீலிப்குமார் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க

அத்திரி said...

உன்னால் முடியும் தம்பி தோல்வி படமா??????????????????

Anonymous said...

Good post sir...
U have made me to remember the old memories.

பாலா said...

உன்னால் முடியும் தம்பி தோல்வி படமா???

ஆமாங்க.. நான் டவுசர் போட்டுகிட்டு (11) ரஜினி ரசிகனா மட்டு இருந்த காலத்துல, உன்னால் முடியும் தம்பி ஓடலைன்னு.. ஒரே குஷியா இருந்தேன்.

வெவரம் தெரிஞ்சி படம் பார்த்தப்ப சோகமாய்ட்டேன். :(

சின்னப் பையன் said...

பதிவும் அதற்கான முன்னுரையும் கலக்கல்...

Anonymous said...

முரளி,

குஷ்பு வருஷம் 16 -ல் அறிமுகமானவர் என்று நினைக்கிறேன்.

//பிரபலமாகிக் கொண்டிருந்த மக்கள் சக்தி இயக்கத் தலைவர் உதயமூர்த்தியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கதாநாயகனது கேரக்டரை அமைத்திருந்தார்கள் (பெயர் உட்பட).//

ஆனா ஒரு பேட்டியில் கே பி இதை மறுத்தார். வருத்தமா இருந்தது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ரஜினியின் பஞ்ச் டயலாக்கான “நாங்க செய்யறத தான் சொல்லுவோம், சொல்லுறத தான் செய்வோம்” என்பது திமுகவால் சொல்வதை செய்வோம் என பிரச்சாரத்தில் உபயோகப் படுத்தப் பட்டது.//

நெஜம்மா...?

முரளிகண்ணன் said...

அத்திரி, உன்னால் முடியும் தம்பி அப்போதைய வணிக அளவுகோளின் படி தோல்விப் படமே.

நன்றி ஹாலிவுட் பாலா.

நன்றி ஸ்ரீராம், அடிக்கடி வாங்க.

நன்றி சின்னப்பையன்

வடகரை வேலன் சார், வருஷம் 16 படம் 1989 ஆம் ஆண்டு வெளியானது.

தர்மத்தின் தலைவன் பட அறிமுக பேட்டியில் எஸ் பி முத்துராமன் அவர்கள் குஷ்பூ என்னும் பெண்ணை பிரபு ஜோடியாக அறிமுகப்படுத்துகிறோம். நல்ல துறுதுறுப்பான சின்சியரான பெண். ஒரு ரவுண்டு வருவார் என கூறினார். அது 100% க்கும் மேலே பலித்துவிட்டது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராஜேந்தரின் பாணியான மெகா செட்டுகள், தங்கைப் பாசம், காதலியிடம் காதலை மறைப்பது போன்ற அம்சங்களுடன் வந்து வெற்றியடைந்த கடைசிப் படம்.//


ரொம்ப ஃபீலிங்ஸோட நடிப்பார், நமக்கு பார்க்ககே ரொம்ப ஜாலியா இருக்கும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

////பிரபலமாகிக் கொண்டிருந்த மக்கள் சக்தி இயக்கத் தலைவர் உதயமூர்த்தியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கதாநாயகனது கேரக்டரை அமைத்திருந்தார்கள் (பெயர் உட்பட).//

ஆனா ஒரு பேட்டியில் கே பி இதை மறுத்தார். வருத்தமா இருந்தது.//

..................


உலக வரலாற்றில் இதுபோன்று பல சம்பவங்கள் உள்ளன.

Cable சங்கர் said...

//ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.
//

இல்ல முரளி அது ஒரு பெயிலியர் படம்தான்.

Cable சங்கர் said...

//கடைசி அரை மணி நேர சொதப்பலால் தோல்வியடைந்த முதல் பத்துப் படங்களில் இதற்க்கும் ஒரு இடமுண்டு. நல்லாத்தானய்யா போயிக்கிட்டு இருந்துச்சு என்னும் வண்ணம் கடைசி அரை மணி நேரத்தில், சிறந்த குடிமகன் விருது, அதைக் கொடுக்க பிரதமர் (ராஜீவ் காந்தி சாயலில் ஒருவர், மொழி பெயர்க்க சிதம்பரம் சாயலில் ஒருவர் வேறு) என சொதப்பி விட்டார்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்...

முரளிகண்ணன் said...

சுரேஷ், கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

பாலா said...

[//ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.
//

இல்ல முரளி அது ஒரு பெயிலியர் படம்தான்.]
--------

ஹி.. ஹி.. ரஜினி படமாச்சே.. அப்படியே எதுவும் சொல்லாம விட்டுடலாம்னு பார்த்தேன். நீங்க புகுந்து கலாய்சிட்டீங்க. சரி.. போனா போகுது.. நானும் ஒத்துக்கறேன்.

முரளி.. தர்மத்தின் தலைவன் தோல்விப்படம்தான். ஓரளவுக்கு ஓடிய ஊர்கள்ன்னு கூட எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.

======================

பாலா said...

//குஷ்பு வருஷம் 16 -ல் அறிமுகமானவர் என்று நினைக்கிறேன்.//

இல்லீங்க..! குஷ்பு, அறிமுகமானது தர்மத்தின் தலைவன் -லதான். ஆனா வருசம் 16, 1-2 வாரம் முன்னாடி ரிலீஸ் ஆய்டுச்சி.... சிம்ரனுக்கு ஆன மாதிரியே...!

பாலா said...

என்னங்க இது.. வருசம் 16, 1989-ன்னு IMDB சொல்லுது? உண்மையாவா? எனக்கு நினைவிருக்கற வரைக்கும், இரண்டும் ஒரே காலகட்டத்தில் வந்த படங்கள். தப்பா இருந்தா மன்னிச்சிக்கங்கோவ்.

வெட்டிப்பயல் said...

thala,
oru chinna doubt... niraiya peru Varusham 16 thaan kushboo first padamnu solluvaanga...

enga oorla Dharmathin Thalaivan thaan first vanthathu. athanala athu thaan Kushboo arimugamnu naan sandai poatutu irupen. ethukum oru murai confirm panna mudiyumanu paarunga...

BTW, intha listla irukara ella padamum paathirukenu oru santhosham :)

வெட்டிப்பயல் said...

Hollywood Bala,
Enakum rendum ore samayathula release aana maathiri thaan nyabagam...

yaaravathu vayasanavanga vanthu sollungappa :)

புருனோ Bruno said...

தர்மத்தின் தலைவன் தான் குஷ்பூவின் முதல் படம்


குஷ்பூ கதாநாயகியாக நடித்த முதல் படம் வருஷம் பதினாறு

குஷ்பூ ரஜினியுடன் நடித்த பிற படங்கள் - நாட்டுக்கொரு நல்லவன், அண்ணாமலை, பாண்டியன், மன்னன்

புருனோ Bruno said...

தர்மத்தின் தலைவன் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்

முக்கியமாக வார்த்தைகள் அனைத்தும் அர்த்தம் பொதிந்தவை.

முரளிகண்ணன் said...

ஹாலிவுட் பாலா & வெட்டிப்பயல்,

வருஷம் 16 1989ல தான் ரிலீஸ் ஆச்சு.
இதை வடகரை வேலனுக்கு பதிலாக பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேனே.

நான் சென்ற ஆண்டு எழுதிய தமிழ்சினிமாவின் தங்க ஆண்டு 1989 என்னும் பதிவில் கூட இதை எழுதியிருந்தேன். அபூர்வ சகோதரர்கள், ராஜாதி ராஜா, வருஷம் 16, கரகாட்டக்காரன், உட்பட 10 படங்கள் பெரிய வெற்றியை அடைந்த ஆண்டு அது.

முரளிகண்ணன் said...

புருனோ வருகைக்கு நன்றி.

தென் மதுரை வைகை நதி, முத்தமிழ் கவியே வருக, என அருமையான வரிகளைக் கொண்ட பாடல்கள்.

புருனோ Bruno said...

அண்ணா நகர் முதல் தெரு
என் உயிர் தோழன்
ஜீவா
புதியவானம்
செந்தூரப்பூவே

எல்லாம் அடுத்த இடுகையா

வருண் said...

முரளி:

குருசிஷ்யன் ஒரு பெரிய வெற்றிப்படம் என்பதால் தர்மத்தின் தலைவன் தோல்விப்படம் போல் தோன்றியது.

தர்மத்தின் தலைவன் நீங்கள் சொல்லியதுபோல் பெரிய வெற்றியடையவில்லை என்பதே உண்மை :-)

த த ஒரு வித்தியாசமான தேவர் ஃபில்ம்ஸ் படம்.

* இளையராஜா

* எஸ் பி எம் எல்லாம் தேவர் ஃபில்ம்ஸ் படங்களில் வொர்க் பண்ண மாட்டாங்க.

* சுஹாஷினி ரஜினிக்கு தங்கையாக தாய்வீட்டில் நடித்தவர். இதில் ஜோடியாக நடித்தது வித்தியாசமாக இரூந்தது.

_____________
***புருனோ Bruno said...
தர்மத்தின் தலைவன் தான் குஷ்பூவின் முதல் படம்***

உண்மை உண்மை, டாக்டர் ப்ருனோ :-)

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வருண்

chennaivaasi said...

Murali, attakasama padhivu...kalakiteenga...in Guru Sishyan, there was a dialogue "Mic ala pesarathu andha kaalam, mic ala adikkaradhu indha kaalam" referring to the famous TN Assembly galatta when Janaki was CM...

முரளிகண்ணன் said...

ஆமாம் சென்னைவாசி. அந்த டயலாக் குபீரென சிரிப்பை வரவழைக்க கூடியது.

வருகைக்கு நன்றி

ராமகுமரன் said...

வழக்கம் போல சபாஷ் முரளி, கௌதமியும் குஷ்புவும் ஒரே ஆண்டில் அறிமுகமானார்கள் என்பது சுவையான தகவல். பாண்டியராஜன் படங்கள் நல்ல காமெடியாக‌ இருக்கும் அது போன்ற படங்கள் இப்பொழுது வருவதில்லை ஆனால் அவர் படங்கள் முதல் பாதி நல்ல காமெடியாகவும் இரண்டாவது பாதி சீரியஸாகவும் சென்றுவிடும்.