March 18, 2009

ரகுவரன் – சில நினைவுகள்



கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன்.

ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள்.

அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா? என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர்.

எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.

அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார்.

அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார்.
1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது.

1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று.

அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார்.

குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார்.

ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது.

லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை.

தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு.

ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் சென்ற ஆண்டு இதே நாளில் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களி விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.

57 comments:

narsim said...

நன்றி முரளி கண்ணன்..

மிக நல்ல பதிவு..ஒரு மிக அருமையான நடிகரைப்பற்றி, தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் எதார்த்தமாய் அவரின் பெருமையையும் அவர் இல்லா வெறுமையையும் உணர்த்தி இருக்கிறீர்கள்.

ஆம் நானும் ரகுவரனை பிடிக்காத ரசிகரை பார்த்ததாக நினைவில்லை..

அவருக்கு அஞ்சலிகள்.

கே.என்.சிவராமன் said...

ரகுவரன் அறிமுகமான படம், 'ஏழாவது மனிதன்' முரளி...

கே.என்.சிவராமன் said...

ரகுவரனின் இழப்பு, தமிழ் சினிமா கதாசிரியர்களின் கற்பனைக்கு ஏற்பட்ட இழப்பு.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காதல் படங்களே வருவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. யோசித்துப் பாருங்கள். ஒரு குடும்பம். அதில் நடக்கும் சம்பவங்கள் என கதையை பின்னினால், அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், அண்ணி, தங்கை, தாத்தா, பாட்டி... என கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டி வரும். அதற்கான நடிகர் - நடிகையர் இப்போது இருக்கிறார்களா? உணர்ச்சியமான கட்டங்களை தன் தோளில் சுமக்கும் அளவுக்கான துணைப்பாத்திரங்களில் நடிக்க இப்போது யார் இருக்கிறார்கள்.

எஸ்.வி. ரங்காராவ், நாகையா, சுப்பையா, சகஸ்ரநாமம், பாலையா, எம்.ஆர். ராதா, முத்துராமன், ஜெமினி கணேசன், வரலட்சுமி, டி.கே. பகவதி, கண்ணாம்பா, எம். என். ராஜம்... என அப்போது நடிகர்கள் திரைக்கதைக்கு உயிர் கொடுத்தார்கள். பல நல்ல சிவாஜி - எம்.ஜி.ஆர். படங்கள் உருவாக, வெளிவர, நாமும் ரசிக்க இவர்கள்தான் காரணம்.

இன்று அப்படி யார் இருக்கிறார்கள்? ஒன்றிரண்டு பேர் தவிர வேறு யாரையுமே அடையாளம் காட்ட முடியவில்லையே. வருவர்கள் அனைவரும் ஹீரோ கனவுடன்தானே வருகிறார்கள்? துணைப் பாத்திரங்களில் நடிக்க ஆட்களே இல்லையே? அதனால்தான் இருப்பவர்களை வைத்து முக்கியமான, உணர்வுப்பூர்வமான காட்சிகளை அமைப்பது இன்றுள்ள திரைக்கதையாசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறது. அதனால்தான் ஹீரோ - ஹீரோயின் போதும். காதல் படம் எடுத்துவிடலாம், என பல கதாசிரியர்கள் முடிவு செய்கிறார்கள்.

ம்.. தரமான சினிமா வர, நல்ல துணை நடிகர்கள் தேவை... ஆனால் இருக்கும் துருவ நட்சத்திரங்களையும், நாம் இழந்துக் கொண்டிருக்கிறோம்... படங்களும் உயிரில்லாமல் வெளிவருகிறது...

நல்ல அஞ்சலி கட்டுரை.

இந்த நேரத்தில் நல்ல துணை நடிகர்களை ஏராளமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரகுவரன் விதைத்திருக்கிறார், இல்லையா முரளி?

அக்னி பார்வை said...

ரகுவரன்..நிச்சய்மாக தமிழ் சினிமாவில் தனி இடம் பெற்றவர். ‘ஐ நோ’ என்ற வசனம் போதும் ஒரு காட்சியில் எல்ல உண்ர்வுகளையும் கொண்டு வர.

இவர் நடிப்பு ஜெர்மன் நடிகர் க்ளாஸ் கின்ஸ்கியை ஒத்த இருக்கும்.

நல்ல ப்திவு முரளி ..உங்களிடம் நான் ஏற்கனவே இந்த கேள்வியை இருந்தாலும் பரவில்லை இப்பொது சொல்லுங்கள் கமலஹாசன் ரகுவரன் இணைந்து நடித்துள்ளார்கள?

Cable சங்கர் said...

//ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை.//

:(:(

Cable சங்கர் said...

//படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று.//

இந்த காட்சி படத்தில் வராது முரளி.. ஏனென்றால் இவருக்கு பதிலாய் நடிப்பவர் நாசர் என்று கேள்வி.

Cable சங்கர் said...

துள்ளி திரிந்த காலம் என்கிற் படத்தில் அவர் மகன் அவரின் ரயிலிலேயே அடிப்பட்டு இற்க்கும் காட்சியில் அவர் கண்களில் தெரியும் எக்ஸ்பிரஷன் வேறு நடிகர்களிடம் பார்த்த்தில்லை. அது போல தன் பெண்ணின் கல்யாணம் தன் பையனாலே நின்று போய்விட்ட்தை சோகத்தை.. காட்சிபடுத்தும் போது இயக்குனர் சொன்ன டயலாக்கை எல்லாம் கேட்டுவிட்டு ரூமுக்குள் போய் வெளியே வந்து வார்தைகளே இல்லாமல் நடித்து பின்னியிருப்பார். வி மிஸ் ஹிம் வெரி மச்

Vidhya Chandrasekaran said...

puriyadha pudhir moviela avar pesum "i know" endra dialogue soopera irukkum:)

IDEAL said...

//எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.//

முற்றிலும் உண்மை...
நல்ல பதிவு. தொடருங்கள்.

மாதவராஜ் said...

முரளிக்கண்ணன்!

தமிழில் எனக்குப் பிடித்தமான நடிகர்களில் ரகுவரன் ஒருவர். அவரை நினைவுபடுத்தியதற்கும், முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டதற்கும் நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.//

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.
ஆமாங்க., ரகுவரனை பிடிக்கல அப்படின்னு இதுவரை எனக்குத் தெரிந்து யாருமே சொன்னதில்லை.

அந்த ஐ க்னோ வசனத்தைப் பற்றி ஒரு பேட்டியில் கே.எஸ். ரவிக்குமார் மிகவும் சிலாகித்து சொன்னார், அந்த காட்சிக்கு பக்கம் பக்கமாக வசனம் எழுதி வைத்திருந்தார்களாம். ஆனால் அந்த ஐ க்னோ என்ற வார்த்தையயே ஏகப்பட்ட மாட்லேஷன்களில் ரகுவரன் பேசிவிட, வசனங்கள் தேவைப்படவில்லை என்று சொன்னார் கே. எஸ்.

பச், இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

கார்க்கிபவா said...

ஆம். ரகுவரனை பிடிக்காதவ்ங்க யாரு?

நவீன் said...

ரகுவரன் நான் விரும்பும் நடிகர் அவரை பற்றிய நான் படிக்கும் முதல் பதிவு இது .அருமையாக இருந்தது .

அத்திரி said...

நல்ல பதிவு தல..... ரகுவரனை அவ்ளோ எளிதில் மறக்கமுடியாது............

புருனோ Bruno said...

//எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.
//

நச்

புருனோ Bruno said...

//சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. //

அருமையான படம் அல்லவா. தற்பொது அது போன்ற படங்கள் வருவதில்லையே

புருனோ Bruno said...

//1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் //

புரியாத புதிரில் இவர் ஒரு வசனத்தை பல முறை கூறுவார் (ஐ நோ)

அஞ்சலியில் ரேவதி (எழுந்திரு அஞ்சலி) !!!

புருனோ Bruno said...

முதல்வன் மிஸ்ஸிங்

--

(முதலில் திட்டமிட்டுருந்தபடி) அந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்

புருனோ Bruno said...

// அதனால்தான் இருப்பவர்களை வைத்து முக்கியமான, உணர்வுப்பூர்வமான காட்சிகளை அமைப்பது இன்றுள்ள திரைக்கதையாசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறது. //

பைத்தியக்காரன் சார்

உங்கள் கருத்துடன் வேறு படுகிறேன்

கதை அமைக்க வேண்டியது கதாசிரியரின் பணி.

அதற்கு தகுந்த நடிகர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது இயக்குனர் தான்

தற்சமயம் துனைப்பாத்திரங்களில் நடிக்க பசுபதியோ, கிஷோரோ சரியான தேர்வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

முரளிகண்ணன் said...

நர்சிம், இந்த பதிவிற்க்கு காரணகர்த்தா நீங்கள்தான். உங்களுக்கு என் நன்றிகள்.


பைத்தியக்காரன்,

\\இந்த நேரத்தில் நல்ல துணை நடிகர்களை ஏராளமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரகுவரன் விதைத்திருக்கிறார், இல்லையா முரளி?
\\

ஆமாம் சார். படத்தை தாங்கும் நட்சத்திரங்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள். விரிவான பகிர்தலுக்கு நன்றிகள்.

புருனோ Bruno said...

சமீபத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழுவை எடுத்துக்கொள்ளுங்கள்

அதில் வரும் துணை நடிகர்களில் யார் மோசமாக நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்

ரகுவரன் ஒரு sensation. அவர் அளவிற்கு ஆட்கள் இல்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்

ஆனால் மோசமான திரைக்கதைக்கு நடிகர்களை குறைகூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

முரளிகண்ணன் said...

அக்னிபார்வை வருகைக்கு நன்றி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்றே நினைக்கிறேன்.

கேபிள்சார் விரிவான பகிர்தலுக்கு நன்றிகள்.

வித்யா,ஐடியல் தங்கள்வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

மாதவராஜ் சார், அமிர்தவர்ஷினி அம்மா, கார்க்கி, நவீன், அத்திரி, புருனோ தங்களின் வருகைக்கும் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்க்கும் நன்றிகள்.

சின்னப் பையன் said...

நல்ல பதிவு தல

Anonymous said...

முரளி,

இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்'ன்னு ஒரு தொ.கா சீரியல்ல ரகுவரன் அற்புதமா நடிச்சிருந்தார்.

நல்ல அஞ்சலிக் கட்டுரை.

Anonymous said...

பைத்தியக்காரன் சரியாகச் சொல்லியிருக்கிறார். வருகிறவர்கள் எல்லோருன் ஹீரோக் கனவுடந்தான் வருகிறார்கள். அப்படியே சி.எம்.

வனம் said...

வணக்கம்

அட என்னோட ரகுவரன் இரந்து 1 வருடம் ஆகிவிட்டதா !


அவரபற்றி எழுதியதுக்கு நன்றி


நன்றி
இராஜராஜன்

வனம் said...

மண்ணிக்கனும்

இரந்து இல்ல இறந்து

தயவுசெய்து மாற்றிவிடுங்கள்

நன்றி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஒரு திறமையான நடிகரைப் பற்றிய நினைவுகூறல்...

எப்படி முதல்வனை மறந்தீர்கள்?

'அந்த சீப்பை எடு,தலையை கலைச்சுட்டான்' என்பாரே..அசத்தல் சீன் அது..

கடைசியில் it was a good interview என்ற புன்னகையான நினைவுகூறலும் அருமை...

நர்சிம் நினைவூட்டலும் தொடர்பான அழகான பதிவும் அருமை..

ராஜ நடராஜன் said...

பல பரிமாணங்கள் கொண்டவர் ரகுவரன்.போதைப் பழக்கத்திற்கு திரைத்துறையில் அதிகம் பேர் அடிமையாவதற்கு காரணம் மன அழுத்தமா?அல்லது நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதன் அசதியில் மெல்ல தொத்திக்கொண்டு விடுகிறதா?

முரளிகண்ணன் said...

சின்னப் பையன், வடகரை வேலன் தங்கள் வருகைக்கு நன்றி

வனம் மாற்றிவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அறிவன், முதல்வனை சேர்த்து விடுகிறேன். நன்றிகள்

ராஜ நடராஜன் தங்கள் வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி

சரவணகுமரன் said...

:-(

idu seiya mudiyaatha izhappu, avarathu maraivu...

பாலா said...

உதயம் படத்தில் நம்ம ‘பவானி’ கேரக்க்டரும் மிஸ் ஆய்டுச்சே..! :(

வெட்டிப்பயல் said...

Nalla pathivu...

Oru kaalathula Rajini Raghuvaranaiyum, Kamal sathyarajaiyum valarthu vida aarambichanganu padichiruken.

Rajini + Sathyaraj vanthiruku.. but Kamal + Raghuvaran vantha maathiri niyabagam illai :(

thedi paakaren...

வந்தியத்தேவன் said...

அருமையான அஞ்சலிக் கட்டுரை முரளிகண்ணன் அண்ணா.
ரகுவரன் என்ற பெயர் வந்தாலே சில பாத்திரங்கள் கண்ணில் நிற்கும்.
1. புரியாத புதிர் வில்லன்
2. பாட்சா மார்க் ஆன்டனி ‍
3. முதல்வன் அரங்கனார்
4. மஜ்னு என்ற படத்தில் பால் தாக்ரே போல் ஒரு நல்ல அரசியல்வாதி
5. ஒரு மனிதனின் கதை தியாகு
6. ஆஹாவில் பானுப்பிரியாவின் அன்புக் கணவர்
7. சம்சாரம் அது மின்சாரத்தில் நடுத்தர வகுப்பு கணவர் அல்லது குடும்பத் தலைவர்
8. லவ் டுடே விஜயின் நண்பன் போன்ற தந்தை.

இப்படிப் பல அடுக்கிகொண்டே போகலாம். இன்னமும் முதல்வன் அர்ஜீன் பேட்டி கண்ணில் இருக்கின்றது. தற்போது அதனை ஆதித்யா சானலில் மொக்கையாக்கி வைத்திருக்கின்றார்கள். இந்தப் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அதனை நிறுத்தச் சொல்லிகோரிக்கை விடுக்கவேண்டும். ஒரு பேட்டி எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு சிறந்த காட்சி அந்தக் காட்சி.

முரளிகண்ணன் said...

சரவண குமரன், அவரது மறைவு நமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஹாலிவுட் பாலா, ஆம் ஒரே பகுதியாக எழுத வேண்டும் என நினைத்ததால் பவானி, ஆஹா கேரக்டர்கள் எல்லாம் மிஸ் ஆகிவிட்டன.

வெட்டிபயல் நன்றி.

வந்தியதேவன் தங்களின் விரிவான பகிர்தலுக்கு நன்றி.

கே.என்.சிவராமன் said...

டாக்டர்,

'வெண்ணிலா கபடி குழு' குறித்து தாங்கள் சொன்னது முற்றிலும் சரி. அதேநேரம், அவர்கள் அனைவருமே புதுமுகங்கள் என்பதையும் நாம் மறக்க வேண்டாம் என நினைக்கிறேன். ஆக, தேர்ந்த துணை கதாபாத்திரங்களுக்கு நடிக்கத் தெரிந்த புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

அப்புறம் டாக்டர், பசுபதி இப்போது கிட்டத்தட்ட கதையின் நாயகனாக மாறிவிட்டார். என்றாலும் 'ராமன் தேடிய சீதை' போல் அவ்வப்போது அவரும் இணையான பாத்திரங்களில் நடிக்கிறார்தான். ஆனால், காஸ்ட்லி நடிகராகிவிட்டார் டாக்டர்.

கிஷோர்..? நல்ல சாய்ஸ்தான்.

narsim said...

நர்சிம், இந்த பதிவிற்க்கு காரணகர்த்தா நீங்கள்தான். உங்களுக்கு என் நன்றிகள்.//

பரிசலுக்கு சொல்ல வேண்டிய நன்றி அவர்தான் அலையில் அழைத்தார்

பதிவு..ஆழ்ந்த பதிவு..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்ல பதிவு முரளிகண்ணன்.

கோவி.கண்ணன் said...

முரளி (திரை) மோகனம்... கலக்கல் அருமை, இரகுவரன் பற்றிய விரிவான தகவல்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்!

கோவி.கண்ணன் said...

மீ தான் 40 யா ?
:))))))

Bleachingpowder said...

//ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை//

//narsim said...
ஆம் நானும் ரகுவரனை பிடிக்காத ரசிகரை பார்த்ததாக நினைவில்லை//

//DEAL said...
ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.//

முற்றிலும் உண்மை...
//

// ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.//

//கார்க்கி said...
ஆம். ரகுவரனை பிடிக்காதவ்ங்க யாரு?//

//புருனோ Bruno said...
ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.
//

நச்
//

என்ன எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி, ரகுவரனை பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்கனு சொல்றீங்க? எதுக்கும் யாராச்சு போய் சாரு கிட்ட ரகுவரனை பிடிக்குமான்னு கேளுங்க, எதாவது லத்தின் நடிகரின் பேரை சொல்லீட்டு, ரகுவரன் நடிப்பு குப்பை, அவரை எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு தான் சொல்லுவாரு.

நல்லது நாயிக்கு சேராதுன்னு சொல்லுவாங்க, எல்லாருக்கும் பிடிச்ச இளையராஜாவைவே அவருக்கு பிடிக்கல.

அப்புறம் முரளி, இந்த பதிவை நீங்க ரெண்டு மூனு பாகமா போட்டிருக்கலாம். சிவா, முகவரி, முதல்வன் பற்றி கொஞ்சமும், இவ்வளவு பிரபல நடிகராய் இருந்தும் கமலுடன் ஒரு படத்தில் நடிக்க முடியாமல் போனது, எந்த படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடிக்காததையும் பற்றியும் விரிவாக எழுதுங்கள் முரளி.

நந்தா said...

மிக அருமையான, தேவையான பதிவு. ரகுவரனை நினைக்கும் போதெல்லாம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என் நினைவில் வராமல் போகாது. அப்படம் குறித்து கூட ஒரு பதிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

நீங்க கலக்குங்க.

http://blog.nandhaonline.com

முரளிகண்ணன் said...

பைத்தியக்காரன், நர்சிம் தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

நன்றி பரிசல்

ஜியோவ்ராம் சுந்தர், கோவிகண்ணன் நன்றிகள்.

பிளீச்சிங் பவுடர், அவரது வித்தியாச வேடங்களைப் பற்றி விரைவில் எழுதுகிறேன். நன்றி.

நந்தா, உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல அஞ்சலி முரளி

ஸ்ரீ.... said...

நல்லதொரு அஞ்சலிக் கட்டுரை. மிக்க நன்றி.

ஸ்ரீ....

நல்லதந்தி said...

//தற்சமயம் துனைப்பாத்திரங்களில் நடிக்க பசுபதியோ, கிஷோரோ சரியான தேர்வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்//

டாக்டர் சார், பசுபதியைத் தெரியும் அது யாருங்க கிஷோர்!. ஐய்யய்யோ! நான் எந்த உலகத்தில் இருக்கேன்! :)

முரளிகண்ணன் said...

டிவிஆர், ஸ்ரீ, நல்லதந்தி வருகைக்கு நன்றி

Thamira said...

மிக மிக பிரமாதமான நினைவாஞ்சலி.. மனதைத்தொட்ட இறுதி வரிகள்.!
நன்றி முரளி.

முரளிகண்ணன் said...

nanri thamira

பட்டாம்பூச்சி said...

மிக நல்ல பதிவு.
அருமையான அஞ்சலிக் கட்டுரை.

புருனோ Bruno said...

//என்ன எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி, ரகுவரனை பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்கனு சொல்றீங்க? எதுக்கும் யாராச்சு போய் சாரு கிட்ட ரகுவரனை பிடிக்குமான்னு கேளுங்க, எதாவது லத்தின் நடிகரின் பேரை சொல்லீட்டு, ரகுவரன் நடிப்பு குப்பை, அவரை எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு தான் சொல்லுவாரு.//

அது அவரது கருத்து
எனக்கு ரகுவரனை பிடிக்கும் என்பதற்காக சாருவிற்கும் அவரை பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாசிசம்.

//நல்லது நாயிக்கு சேராதுன்னு சொல்லுவாங்க,//

அதே போல் ரகுவரனின் ஒரு அம்சம் பிடிக்கும் என்பதற்காக ரகுவரனின் அனைத்து அம்சங்களையும் பிடிக்க வேண்டும் என்பதில்லை

உதாரணமாக எனக்கு ரகுவரனின் நடிப்பு பிடிக்கும். அதே நேரம் ரகுவரனின் போதை பழக்கம் பிடிக்கும் என்றால் இல்லை என்று தான் பதில் வரும்.

புருனோ Bruno said...

//டாக்டர் சார், பசுபதியைத் தெரியும் அது யாருங்க கிஷோர்!. ஐய்யய்யோ! நான் எந்த உலகத்தில் இருக்கேன்! :)
19/3/09 13:36//

வெண்ணிலா கபடி குழு என்று ஒரு படம் வந்திருக்கிறது

அதை திரையரங்கில் பாருங்கள்

அதில் கபடி கோச்சாக ஒருவர் வருகிறார்.

முரளிகண்ணன் said...

பட்டாம் பூச்சி, புருனோ வருகைக்கு நன்றி.

@நல்லதம்பி

கிஷோர் பொல்லாதவன், ஜெயம் கொண்டான்,சிலம்பாட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.


இதேபோல சரோஜா, சென்னை-28,தாமிரபரணி, பருத்திவீரன் ஆகிய படங்களில் நடித்த சம்பத்தும் கவனிக்க பட வேண்டியவரே

வினோத் கெளதம் said...

ரகுவரனுக்கு கண்ணீர் அஞ்சலி.

அவர் நடித்த 'நேருக்கு நேர்" என்ற படத்தையும்

அவரை பற்றிய உங்களின் அடுத்த பதிவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Mahesh said...

/இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள்./

ம்ம்ம்.... ஒரு நல்ல நடிகனை மட்டுமல்ல நல்ல மனிதனையும் இழந்து விட்டோம். :(

Unknown said...

neengal kurippida marandha matrumoru nalla padam 'amarkkalam'
shalini than ponnu nu therinjadhum naser kitta kalanguvarey?!