
தற்போது இந்தியாவில் மும்பை,ஹைதராபாத்,அஹமதாபாத், கல்கத்தா ஆகிய இடங்களில் ஐமேக்ஸ் திரையரங்கங்கள் உள்ளன. ஐமேக்ஸ் (இமேஜ் மாக்ஸிமம்) திரையரங்கில் உபயோகப் படுத்தப்படும் திரையானது குறைந்தபட்சம் 72 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இதைவிட அதிகமான அளவிலேயே தற்போது ஐமேக்ஸ் திரை செய்யப்படுகிறது. 2010க்குள் சென்னையிலும், பெங்களூருவிலும் தலா ஒரு ஐமேக்ஸ் திரையரங்குகளை உருவாக்க வேண்டும் என ஐமேக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் சத்யம் தியேட்டர் குழுமத்துடன் இதற்க்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவில் வரும் இரண்டு ஆண்டுக்குள் 10 ஐமேக்ஸ் திரையரங்குகளை (தற்போது இருப்பவற்றுடன் சேர்த்து) உருவாக்க ஐமேக்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. இம்முயற்ச்சி சாத்தியமாகுமா?, தமிழ் திரைப்படங்களை இந்தத் திரையில் காணமுடியுமா? என பார்ப்போம்.
தமிழில் இதுவரை ரஜினிகாந்த் நடித்த மாவீரன் திரைப்படம் மட்டுமே 70 எம் எம் பிலிமில் படமாக்கப் பட்டுள்ளது. மொத்தமாகப் பார்த்தால் இந்தியாவில் 20க்குள் தான் 70 எம் எம் படங்கள் வந்துள்ளன. ஷோலே, ஏக் துஜே கேலியே, சாகர் , ரஸியா சுல்தான் உட்பட 10 க்கும் குறைவான படங்களே இந்தியில் வந்துள்ளன. மோகன்லால் நடித்த படயோட்டம் என்னும் மளையாளப் படம், மூன்று தெலுங்குப் படங்கள் மற்றும் ஒரு கன்னட படம் ஆகியவையே 70 எம் எம் பிலிமில் படமாக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் 70 எம் எம் திரை உள்ள திரையரங்குகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். கோவையில் ராகம்,கங்கா, சென்ட்ரல், மதுரையில் சினிப்பிரியா, திருச்சி மாரிஸ் என பெரிய ஊர்களிலேயே ஒன்றிரண்டு தான் இருக்கின்றன சென்னையின் முதல் 70 எம் எம் திரை தியேட்டரான ஆனந்த் மூடப்பட்டுவிட்டது. சத்யம்,காசி போன்றவை மட்டுமே நன்கு செயல்படுகின்றன. உதயம் தியேட்டர் கூட இப்பொது ஏலத்துக்கு வந்துள்ளது. ஏலத்தில் எடுப்பவர் தொடர்ந்து நடத்துவாரா? அல்லது வணிக வளாகமாக மாற்றுவாரா என்று தெரியவில்லை. 70 எம் எம் திரை எனில் குறைந்தது 1000 இருக்கைகளாவது போடவேண்டும். அவை வேலைநாட்களில் நிரம்புவது மிக கடினம். எனவே சிறிய திரை, 200 இருக்கை என்ற தத்துவம் கொண்ட மல்டிபிளக்ஸ்கள் தற்போது சென்னையில் கோலோச்சி வருகிறது.
ஐமேக்ஸ் திரையங்குகள், அதில் உபயோகப் படுத்தப்படும் பிலிம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பற்றி பார்க்கும் முன் 35 எம் எம். 70 எம் எம், 16 எம் எம், சினிமாஸ்கோப், சினிராமா, சூப்பர் 16. சூப்பர் 35 ஆகிய பிலிம்கள், அதன் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பார்ப்போம்.
35 எம் எம்
இதுவரை தமிழில் படமாக்கப் பட்ட 99 சதவிகித தமிழ் படங்கள் இந்த பிலிமிலேயே படமாக்கப்பட்டுள்ளன. ஈஸ்ட்மென் உருவாக்கிய பிலிம் சுருளிலிருந்து எடிசன் மற்றும் டிக்சன்
ஆகியோரால் இந்த 35 எம் எம் பிலிம் தயாரிக்கப் பட்டது. 35 எம் எம் (மில்லி மீட்டர்) என்பது பிலிம் சுருளின் மொத்த அகலத்தைக் குறிக்கும். இதில் படம் பதிவு செய்யப்படும் பகுதியானது, 21.95 மி மி அகலமும், 18.6 மி மி உயரமும் கொண்ட பகுதியே. (படத்தில் START என்று எழுத்து காணப்படும் பகுதி). படத்தில் நீல நிறத்தில் காட்டப் பட்டுள்ள பகுதி சவுண்ட் டிராக்குக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிலிமின் இருபுறமும் துளைகளை காணலாம். சாதரணமாக ஒரு பிரேமுக்கு நான்கு துளைகள் இருக்கும்.
ஒரு அடி பிலிம் சுருள் என்பது 16 பிரேம்களைக் கொண்டது. நம் திரைப்படம் ஓடும் வேகம் ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள். நம் தமிழ் படங்கள் சராசரியாக இரண்டரை மணி நேரம் ஓடும் படி எடுக்கப் படுகின்றன. இது 9000 வினாடிகள். ஒரு வினாடிக்கு ஒன்றரை அடி வீதம் 13,500 அடி படக்காட்சி நமக்குத் தேவை. சரிபாதி அளவு எடிட் செய்யப்பட்டாலும் 27,000 அடியில் ஒரு படத்தை முடித்து விடலாம். செல்வராகவன் (புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்) ,தரணி (தூள்) போன்றோர் 2 லட்சம் அடிக்கும் மேலாக படம் எடுப்பதாக குற்றச் சாட்டு உள்ளது. கே எஸ் ரவிகுமார், ஹரி, பி வாசு, எஸ் பி முத்துராமன் ஆகியோர் 20000 அடிக்கும் குறைவாகவே படத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள். தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இவ்வளவு அடிக்குள் ஒரு படத்தை முடிக்க வேண்டுமென இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மீறினால் விசாரனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.
சார்லி சாப்ளின் படங்களைப் பார்த்தோமானால் படத்தில் உள்ள கேரக்டர்கள் விரைவாக அசையும். அதற்க்குக் காரணம் அவற்றின் வேகம் வினாடிக்கு 18 பிரேம்கள். புன்னகை மன்னன் படத்தில் கமல் ஏற்று நடித்த சாப்ளின் செல்லப்பா வேடம் ஆடும் மாமாவுக்கு குடும்மா குடும்மா என்னும் பாடலை பார்த்திருப்பீர்கள். அதில் சாப்ளின் எபெக்ட் வேண்டு மென்பதற்க்காக கமலின் ஆலோசனைப்படி அந்த பாடல் வினாடிக்கு 18 பிரேமாக ஆக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 35 எம் எம் புரஜெக்டர்களே எல்லா திரையரங்குகளிலும் ஆக்ரமித்திருந்தன. 70 எம் எம் திரையில் விரியும் காட்சிக்கு தீனி போட அத்ற்கேற்ற கதை தேவை, காட்சி அமைப்பில் அதிக கற்பனைத்திறன் தேவை, செலவும் அதிகம். எனவே அனைத்து இயக்குனர்களும் 35 எம் எம் மிலேயே காலத்தை ஓட்டிக் ஒண்டிருந்தார்கள். அமெரிக்காவில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டு அது அங்கு பிரபலமான போது, தியேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பார்வையாளனையை திரையரங்குக்கு இழுக்க வேண்டிய கட்டாயம். ஆபத்பாந்தவனாக வந்தது சினிமாஸ்கோப் தொழில்நுட்பம். 1953 ஆம் ஆண்டில் உருவான இந்த தொழில்நுட்பம் 1973 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழன் திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவிற்க்கு அறிமுகமாகி 1990 க்குப் பின் முழு வீச்சில் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது.
35 எம் எம் மில் என்ன குறை?
குறை என்று அதை சொல்ல முடியாது. 35 எம் எம் பிலிமின் மூலம் திரையிடப்படும் பிம்பத்திற்க்கு தேவையான ஆஸ்பெக்ட் ரேஷியொ 1.33 : 1. அதாவது திரை மூன்றடி உயரம் கொண்டதாக இருந்தால் அகலம் நான்கு அடியாக இருக்க வேண்டும். சினிமாஸ்கோப் முறையில் கிடைக்கும் பிம்பத்தின் ஆஸ்பெக்ட் ரேஷியொ 2.66 : 1. அதாவது திரை மூன்று அடி உயரமிருந்தால் அகலம் எட்டு அடி வரை போகலாம். 1990 க்கு முன் வந்த பெரும்பாலான திரைப்படங்களை நீங்கள் டிவியில் பார்த்தால் இதை உணரலாம். டிவி திரை முழுக்க படம் தெரியும் (அபூர்வ சகோதரர்கள், நாயகன், மௌன ராகம், மனிதன்). இவை 35 எம் எம் பார்மட்டில் தயாரிக்கப் பட்டவை. தற்போதைய படங்களான வில்லு, சிலம்பாட்டம் ஆகியவற்றை நீங்கள் பார்த்தால் அது பாதி திரையில் மட்டுமே தெரியம் ( வைட் ஸ்கிரீன் டிவிக்கள் விதிவிலக்கு). இந்தப் படங்கள் சினிமாஸ்கோப் முறைப்படி தயாரிக்கப் பட்டவை. இம்முறையில் தயாரிக்கப் படங்கள் பார்வையாளனுக்கு நல்ல காட்சிஅனுபவத்தை கொடுக்கக் கூடியவை.
சினிமாஸ்கோப்பும் 35 எம் எம் பிலிமிலே தான் படமாக்கப்படுகிறது. எப்படி அது சாத்தியமாகிறது?. இந்த முறையால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தாக்கம், 16 எம் எம், ஐ மேக்ஸ் ஆகியவை வரும் பகுதிகளில்.