June 18, 2009

ரெண்டடி வீடு

கூந்தல் பராமரிப்பில் அக்கறையுள்ள பெண்களுக்கு அது செம்பருத்தி வீடு. சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்டியவர்களுக்கு அது ரெண்டடி வீடு. தியாகி பென்சன் வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது பெரிய வீடு. எட்டாம் வகுப்பு ஏ மாணவர்களுக்கு மட்டும் அது விஜி வீடு.

விஜி என்று எங்களால் அழைக்கப்பட்ட விஜயகுமார் அந்த வீட்டின் ஒரே வாரிசு. வீட்டின் வெளிப்புற சுவர்கள் இரண்டடி அகலத்திலும், உட்புறத்தில் அறைகளைப் பிரிக்கும் சுவர்கள் ஓரடி அகலத்திலும் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டைச் சுற்றிலும் செம்பருத்தி வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஊரின் முக்கியஸ்தர்க கூட, நடக்க நடக்க மெருகேறும் கோட்டக்கல் பதிக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் வரவேற்பறையைத் தாண்டி சென்றதில்லை. வகுப்புத் தோழனானதால் என் கால்கள் மட்டும் அந்த மூன்று மாடி வீட்டின் பல அறைகளையும் மெருகேற்றியிருக்கின்றன.

உயரமாகக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் இடிதாங்கியோடு கட்டப்பட்டிருந்த அந்த வீடு இப்போது ஆண்டெனா கூட வைக்க வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் சகல அறைகளுக்கும் செல்லும் உரிமை இருந்தாலும் கிணற்றடியை ஒட்டியிருந்த அந்த பிரத்யேக அறைக்கு மட்டும் சென்றதில்லை.

ஒரு கோடை விடுமுறையில் விளையாட்டு சாமான்கள் பற்றாக்குறையாய் இருந்த மதியப் பொழுதில் அந்த அறையை திறந்தான் விஜி. உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப் பட்டுப் போனேன். அறைக்குள்ளே ஒரு திண்ணை. அதன் ஒரு பக்கத்தில் தலைவைத்துப் படுப்பதற்கேற்ப வளைவுகளுடன் கட்டப்பட்டு இருந்தது. சுவற்றில் ஏராளாமான ஓவியங்கள். நான்கைந்து மரப் பெட்டிகள், அதுபோக வெள்ளித்தட்டு, வென்னீர் விளாவி குளிப்பதற்கேற்ப வெண்கல பாத்திரங்கள்.

மரப் பெட்டிகளைத் திறந்தான் விஜி. ஒன்றில் அறுபதுகளில் வாரப் பத்திரிக்கைகளில் வந்த தொடர்களின் பைண்டிங்குகள். இன்னொன்றில் சந்தன கட்டையால் செய்யப்பட்ட மீன் வடிவ பல்லாங்குழி, அதில் போட்டு விளையாட குறைபாடுள்ள முத்து, பவளங்கள், வெள்ளியால் செய்த தாயக்கட்டை, தந்த பேன் சீப்பு, மர்பி டிரான்ஸிஸ்டர் என கலவையான பொருட்கள். நாங்கள் தேடிய பரமபத சோபன படம் கிடைத்ததும் கதவை மூடிவிட்டு வெளியேறினோம். சில ஆண்டுகளுக்குப் பின்னரே அந்த அறை எதற்கு என்ற அர்த்தம் எனக்கு விளங்கியது.

நண்பர்கள் செட்டில் முதல் திருமணத்திற்கு இருக்கும் சந்தோஷம், எதிர்பார்ப்பு கடைசி சில திருமணங்களுக்கு இருப்பதில்லை. வாழ்த்து போஸ்டர் ஒட்டுவது, மாப்பிள்ளை அழைப்பு காரை அலங்காரம் செய்வது, மண்டபத்தை கலகலவென ஆக்குவது எல்லாம் முதலிரண்டு திருமணங்களுக்குத் தான். குடும்பஸ்தன் ஆகி வெவ்வேறு ஊர்களில் செட்டில் ஆகியவுடன் நண்பனின் திருமணத்துக்கு, உறவுக்காரன் போல் நேரத்துக்குப் போய் கிப்ட் கொடுப்பதுடன் கடமை முடிந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு திருமணத்துக்கு போய் அரட்டையடித்துக் கொண்டிருந்த போது விஜி என்னடா பண்றான் என பேச்சு வந்தது.

அவர்கள் வீட்டுச் செலவுக்கு கை கொடுத்து வந்த ரைஸ் மில்லும் நொடிக்கவே, அதை மொத்தமாக விற்று ஏனைய கடன்களையும் அவன் அப்பா அடைத்து விட்டாராம். வீடு மட்டும் பாக்கி. இப்போது அவன் ஒரு ஆடீட்டரிடம் நான்காயிரம் சம்பளத்துக்கு வேலை செய்வதாக பதில் வந்தது. இந்தக் காலத்தில நல்ல வேலை பார்க்கிறவனுக்கே பொண்ணு கிடைக்க மாட்டேங்குது. இவனுக்கு எப்படியோ? என்று நண்பர்கள் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

சில மாதங்கள் கழித்து விஜியின் கல்யாணப் பத்திரிக்கை வந்தது. பெண் வீட்டார் சார்பில் திருமணம். ஆடம்பரமாக நடத்திக் கொண்டிருந்தார்கள். பெண்ணின் அழகுக்கும் குறைவில்லை. ஆசிரியை பணி. போதாக்குறைக்கு ஐம்பது சவரனுக்கு மேல் நகை.

தெரிந்த தரகரை ஓரம்கட்டி விசாரித்த போது அவர் சொன்னார். “ நல்ல வேலையில இருக்குற நெறைய பையன்களை காமிச்சேன். பொண்ணோட அம்மா அதெல்லாம் வேணாம்னுட்டாங்க. காரணம் கேட்டா, “இந்தப் பசங்கள்ளாம் மிஞ்சிப் போனா அஞ்சு கிரவுண்டில வீடு கட்டுவாங்க, அதுல மாடி கட்டுனாலும் வாடகைக்கு விட்டுடுவாங்க. என் பொண்ணு காலம் பூராம் புறாக் கூண்டில வாழணுமா? ன்னு கேட்டாங்க.

இப்போது பெண்ணின் அம்மாவை நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஏதோ ஒரு ரெண்டடி வீட்டிலிருந்து புறாக் கூண்டுக்கு இடம் பெயர்ந்து போயிருந்த சோகம் கண்ணில் தெரிந்தது.

28 comments:

Mahesh said...

நல்ல பதிவு.... வழக்கம்போல உங்களோட சரளமான நடைல..

//சில ஆண்டுகளுக்குப் பின்னரே அந்த அறை எதற்க்கு என்ற அர்த்தம் எனக்கு விளங்கியது// இந்த மாதிரி போறபோக்குல ஒரு கோடி காட்டறது உங்க forte.

முரளிகண்ணன் said...

நன்றி மகேஷ்

நையாண்டி நைனா said...

முந்திய கவிதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இருக்காப்லே இருக்கே...

முரளிகண்ணன் said...

நையாண்டி நைனா,

ஸ்பீல்பெர்க்குக்கும் பேரரசுக்கும் முடிச்சிப் போடுறீங்களே?

நையாண்டி நைனா said...

என் கடை பக்கம் வர வர நீங்க எட்டி பார்க்க மாட்டேன்குறீங்க....

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு முரளி, வீட்டுக்கான இன்ட்ரோ நல்லா இருந்தது.

முரளிகண்ணன் said...

நைனா, அடிக்கடி வந்து போய்கிட்டுத்தான் இருக்கேன்.

நன்றி நாடோடி இலக்கியன்

தராசு said...

உங்களின் வழக்கமான நடை தலைவரே, அதிலும் அந்த "பஞ்ச்" முடிவு சூப்பர்.

நம்ம் கடைப் பக்கமும் வர்றது.

மணிஜி said...

ரொம்ப பிடிச்சிருந்தது..

Raju said...

இதுல எந்த மு.க. ஸ்பீல்பெர்க்கு, எந்த மு.க. பேரரசு..?

முரளிகண்ணன் said...

தராசண்ணே வர்றேண்ணே.

நன்றி தண்டோரா

டக்ளஸ்ஸண்ணே

பன்ச் டயலாக்க அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

சென்ஷி said...

:)

நல்லாயிருக்குது!

கார்க்கிபவா said...

:)

வணக்கம் ஸ்பீல்பெர்க்

Starjan (ஸ்டார்ஜன்) said...

பொண்ணோட அம்மா கெட்டிக்காரங்க தான் !

தன் பொண்ணை நல்ல வாழ வழி செய்திருக்காங்க !!!

முரளிகண்ணன் said...

வாங்க சென்ஷி.

கார்க்கி,

\\வணக்கம் ஸ்பீல்பெர்க்\\

எத்தனை நாளைக்குத்தான் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீங்கண்ணு சொல்லுறதுன்னு ஒரு சேஞ்சுக்கு அப்படிப் போட்டேன்.

டக்ளஸ்ஸண்ணே அதில ஒரு அரசியல் பண்ணிட்டாரு.

நீங்க வேறயா கார்க்கி.

ஆறிப்போன புண்ணுல ஆசிட் ஊத்தாதீங்கய்யா.

வாங்க ஸ்டார்ஜன்

Thamira said...

மிக நல்ல ஒரு கதை.. கடைசி வரிகள் உச்சம்.!

Thamira said...

மிக நல்ல ஒரு கதை.. கடைசி வரிகள் உச்சம்.!

Thamira said...

:-) For Follow up..

ஷண்முகப்ரியன் said...

உங்கள் கதைகளை நான் ஆர்வமாகப் படிப்பேன்.நீங்கள் ஒரு தடவை கூட ஏமாற்றியதில்லை,இந்த முறையும்.வாழ்த்துகள்,முரளி.

முரளிகண்ணன் said...

நன்றி ஆதி.

நன்றி வித்யா.

நன்றி ஷண்முகப்பிரியன் சார். மிக சந்தோஷமாக உணருகிறேன்

நர்சிம் said...

முரளி.. அந்த மெல்லிய சோகம் தான் விசயமே.. அதுவும் வீடும் மண்ணும் சார்ந்த விசயங்கள் மிகவும் மனதை பாதித்து விடும்.அதை அருமையாக கொண்டு வந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி நர்சிம்

வெண்பூ said...

அருமை முரளி.. ஒரு தேர்ந்த எழுத்தாளரோட லாவகம் தெரியுது உங்க எழுத்துல.

வெட்டிப்பயல் said...

வேஸ்ட்...

கதையை சொல்லல. இப்படி நல்ல கதையெல்லாம் ப்ளாக்லயே போடறீங்களே. அதை சொல்றேன்.

முரளிகண்ணன் said...

வாங்க வெண்பூ.


வெட்டிப்பயல், சிலவற்றை பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியுள்ளேன்.

பார்ப்போம்.

உங்கள் ஊக்கப்படுத்தலுக்கு நன்றிகள்.

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் மு.க

நிச்சயம் வரும் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல ஒரு கதை முரளி

Unknown said...

//இந்தப் பசங்கள்ளாம் மிஞ்சிப் போனா அஞ்சு கிரவுண்டில வீடு கட்டுவாங்க//

அஞ்சு கிரவுண்டே புறாக்கூண்டா :-)?

//இப்போது பெண்ணின் அம்மாவை நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். ஏதோ ஒரு ரெண்டடி வீட்டிலிருந்து புறாக் கூண்டுக்கு இடம் பெயர்ந்து போயிருந்த சோகம் கண்ணில் தெரிந்தது//

இதை இன்னும் கொஞ்சம் subtleஆ சொல்லி இருக்கலாம்ன்னு தோணுது.