May 28, 2009

ஒளிப்பதிவாளர் கர்ணன் - சில நினைவுகள்

தனிமனித வாழ்க்கையின் தலையாய சோகங்களை பட்டியலிடச் சொன்னால் எவருடைய பட்டியலிலும் இடம் பிடிக்கும் சோகம் ஒன்று இருக்கிறது. அதுதான் அங்கீகாரம் கிடைக்காமை. அதிலும் கொடுமையான சோகம் என்னவென்றால் சிறப்பான செயல்களைச் செய்யும் போது அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் அதைவிட மாற்றுக் குறைந்த செயல்களைச் செய்யும்போது ஒரு எதிர்மறை அங்கீகாரம் கிடைப்பது.


தமிழ்சினிமா பல தரம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களை உருவாக்கி வந்துள்ளது. முதன் முதலில் தமிழ்நாட்டில் ஸ்டுடியோ வசதி இல்லாதபோது கல்கத்தா,மும்பை ஆகிய இடங்களிலேயே தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் இங்கு ஸ்டுடியோ வசதி வந்தவுடன் அதில் பணிபுரிவதற்க்காக அங்கிருந்து பல தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னை வந்தார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்கள் சைலன் போஸ், கமால் கோஸ், ஜித்தென் பானர்ஜி போன்றவர்கள்.இந்த கலைஞர்கள் தொழில்நுட்ப வசதி குறைவான காலத்திலேயே வித்தியாசமான காட்சிகளை அமைத்தவர்கள்.

இவர்கள் வரிசையில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கியவர் டபிள்யூ ஆர் சுப்பாராவ். இவர் அபிமன்யூ,ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி, சபாஷ் மீனா, கப்பலோட்டிய தமிழன் முதலான பல படங்களுக்கு ஒளிப்பதிவாளர். தந்திர காட்சிகளை அமைப்பதில் சாமர்த்தியமானவர். மாண்டேஜ் உத்தியில் இவர் ஏராளமான தந்திரகாட்சிகளை அபிமன்யூ,மனோன்மணி,ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிய படங்களில் அமைத்துள்ளார்.

இவரது உதவியாளராக பணிபுரிந்தவர்தான் கர்ணன். இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் கற்பகம்,சாரதா உட்பட கிட்டத் தட்ட அவரின் எல்லாப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் கர்ணனே. கே எஸ் ஜியின் படங்கள் எல்லாமே குடும்ப உறவு சார்ந்த சிக்கல்களை மையமாகவே கொண்டிருக்கும். சாரதாவில் (1962), கணவன் தனக்கு ஆண்மையில்லை என்பது தெரிந்தவுடன் மனைவியை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவான். பலத்த மனப் போராட்டங்கள் நடைபெறும்.

இதுபோலவே அவரின் எல்லாப் படங்களிலும் ஒரு பிரச்சினை, அதனால் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டம் என்றே கதை நகரும். சில படங்களில் கிளைமாக்ஸ் மட்டும் 30 நிமிடம் இருக்கும். எல்லாமே வசனம்தான். ஆனால் அதை போரடிக்காமல் காட்சிப் படுத்தியிருப்பார்கள். அதற்கு உறுதுணையாக விளங்கியது கர்ணனின் ஒளிப்பதிவே.

சாரதாவில் பல புகழ்பெற்ற பாடல்கள் உண்டு. மணமகளே மருமகளே வா, ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன? ஆகியவை அமரத்துவம் பெற்றவை. இதில் ஒருத்தி ஒருவனை பாடலில் எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரது உருவங்கள் கலைந்து பின் அதே வேகத்தில் ஒன்று சேரும். அப்போதைய வசதிகளலோடு ஒப்பிடுகையில் அது சாதனையே.

கற்பகம்(1963) படத்தின் பிரபல பாடல் மன்னவனே அழலாமா (இது பின்னர் மேட்டுக்குடி(1996) படத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டது). இப்பாடல் இறந்து போன மனைவி, கணவன் ஜெமினி கணேசனை ஆறுதல் படுத்தப் பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் அந்த ஆவியின் உருவம் பட பிரேம் முழுவதும் மேலும் கீழும், குறுக்கும் நெடுக்கும் போய் வருவது போல படமாக்கப்பட்டிருக்கும். இது அப்போதைய காலகட்டத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. கர்ணனின் குருவான சுப்பாராவே இதை வியந்து பாராட்டியிருக்கிறார்.

இதுபோல பல சாதனைகளைச் செய்த கர்ணன், தான் இயக்குநரானவுடன் பல கௌபாய் டைப் படங்களை இயக்கினார். அவை இன்றும் ரீ ரிலீஸ் வேல்யு உடன் உள்ளன. அதற்கு அப்படங்களில் இடம்பெற்ற தாராளமான கவர்ச்சிக் காட்சிகளும் ஒரு காரணம். கவர்ச்சிக் காட்சிகள் இருந்தால் மட்டும் போதுமா? ஒரு படம் ஓடிவிடுவதற்கு? சராசரி ரசிகனுக்கு தேவைப்படும் ஆடல், அதிபயங்கர சண்டைக்காட்சிகள், தொய்வில்லாத திரைக்கதை ஆகியவற்றின் கலவையாகவே அந்தப் படங்கள் இருந்தன.

கங்கா, எங்க பாட்டன் சொத்து,ஜம்பு, புதிய தோரணங்கள்,ரெட்டைக்குழல் துப்பாக்கி,ஜான்ஸி, இது எங்க பூமி ஆகிய படங்கள் அவர் இயக்கியதில் வெற்றி பெற்ற படங்கள்.

கங்கா

தமிழில் கடைசியாக வந்த முழு கவ்பாய் டைப் படம். சிம்புதேவன் இயக்கத்தில் வந்த “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்”  ஸ்பூஃப் வகையறா. இதில் வரும் சண்டைக்காட்சிகளை இப்போது பார்த்தாலும் மிகப் பிரமிப்பாக இருக்கும். குதிரையின் கால்களில் மனிதனைக் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்வது போல காட்சிகள் இருக்கும். குதிரையின் வேகம் அசாத்தியமாக இருக்கும். கால்களின் வேகத்தையும், அதில் கட்டி வைக்கப்பட்டு வதைபடும் மனிதனின் வேகத்தையும் டைட் குளோசப்பில் எடுத்திருப்பார். சேஸிங் காட்சிகளின் கோணமானது நாமும் அந்தக் காட்சியில் பயணப்படுவது போலவே அமைக்கப் பட்டிருக்கும். ஜிம்மி ஜிப், அகேலா, ஸ்டெடி காம், மானிட்டர் வசதி போன்ற எதுவுமே இல்லாமல் எப்படித்தான் எடுத்தார்களோ? என்று வியக்கும்படியே இப்படத்தின் ஒளிப்பதிவு இருக்கும். தன் படங்களில்
உபயோகப்படுத்த நல்ல குதிரைகளை வாங்கி அவரே சொந்தமாக வளர்த்து வந்ததாகவும் கூறுவார்கள்.


எங்க பாட்டன் சொத்து

இந்தப் படத்தின் சிறப்பு ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள். இந்தியா ஒரு உப கண்டம் என்று மெய்பிப்பது போல இந்த படத்தில் எல்லாவித நிலப்பரப்புகளும் காட்டப்படும். பாலைவனம், நீர் வீழ்ச்சி, பனிப்பாறை,வளமான சமவெளி,சரளைக்கல், செம்மண் பூமி என எல்லா இடங்களிலும் காட்சிகள் இருக்கும். அங்கே ஆக்ரோஷமான சண்டையும் இருக்கும். அந்தக் சண்டைக் காட்சிகளின் வேகமும், கோணமும் நம்மை பார்வையாளர் ஸ்தானத்தில் இருந்து போட்டியாளர் ஸ்தானத்திற்க்கு உயர்த்திவிடும். கர்ணனின் சிறப்பு தெரிந்ததால்தான் எம்ஜியார் தன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டைக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய கர்ணனை பணியமர்த்திக் கொண்டார்.

ஜம்பு

இந்தப் படம் முழுக்க ஒரு தீவில் நடைபெறுவதாக அமைந்திருக்கும். இதில் பல மிருகங்கள் வந்து போகும்.அவை எல்லாமே தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து பெறப்பட்ட பிலிமில் இருப்பவை. அவற்றை இடைச்செருகலாக இந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பார். படக் கதாநாயகன் அவற்றை அணுகும் கோணமும்,அவை நாயகனை பார்க்கும் கோணமும் அற்புதமாக மேட்ச் செய்யப்பட்டிருக்கும்.ஆனால் இரண்டு காட்சிகளும் வெவ்வேறு இடங்களில், காலகட்டத்தில்,ஒளியில்,பிலிமில் எடுக்கப் பட்டதால் அந்த வேறுபாடு எளிதாகத் தெரியும். ஆனால் அது இரண்டாம் முறை பார்க்கும்போதே.அந்த அளவுக்கு முடிந்த வரையில் இரண்டு காட்சிகளையும் மேட்ச் செய்திருப்பார் கர்ணன். டிஜிடல் இமேஜிங் இல்லாத காலமல்லாவா அது?

ரெட்டைகுழல் துப்பாக்கி

இதிலும் கற்பனைக்கு எட்டாத பல சண்டைக்காட்சிகள் உண்டு. ஒரு பாக்கு மரத்தில் ஹீரோவும், அருகில் உள்ள மரங்களில் வில்லனின் அடியாட்களும் தொங்கிக் கொண்டு பலத்த சண்டை போடுவார்கள்.சர்க்கஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் போல மரத்துக்கு மரம் தாவி நடக்கும் சண்டை அது.

ஜான்ஸி

இந்தப் படத்தின் ஆரம்பத்தில் வரும் கார் சேஸிங் சிறப்பாக படமாக்கப் பட்டிருக்கும். ஒரு கார் பறந்து ஒரு குடிசைக்குள் புகும். குடிசையில் இருக்கும் இருவர் பக்கவாட்டில் பறப்பார்கள். கார் இன்னொரு வழியாக வெளியே வந்து விடும். இது அத்தனையும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்.


கற்பனைக்கு எட்டாத கோணங்களில் கேமராவை வைத்து படம் எடுத்தவர் கர்ணன். அதுமட்டுமில்லாது எந்த காட்சியையும் கவனச் சிதறல் இல்லாமல் பார்வையாளன் பார்க்கும்படி அமைக்கத் தெரிந்தவர்.

தமிழ்சினிமா கேமெராமேன்களைப் பற்றி எழுதும் எவரும் முதலில் ஆரம்பகாலப் படங்களின்  கேமெராமேன்களைப் பற்றி எழுதுகிறார்கள். பின்னர் பாலுமகேந்திரா,அசோக்குமார்,பி சி ஸ்ரீராம், கே வி ஆனந்த், ரவி கே சந்திரன், ரவி வர்மன்,மணிகண்டன் என தாவிவிடுகிறார்கள்.

குறிப்பிடத்தக்க பணியாற்றிய கர்ணன் போன்றோருக்குரிய அங்கீகாரத்தை அவர்கள் கொடுப்பதில்லை.பெண்களை எக்ஸ்பிளாய்ட் செய்து படமெடுத்தவர் என்ற ஒற்றை வரியில் அவரை அடக்கி விடுகிறார்கள்.

அங்கீகாரம் பெறாமல் கூட இருந்து விடலாம். ஆனால் எதிர்மறை அங்கீகாரம் பெருஞ்சோகம்.

39 comments:

நர்சிம் said...

தகவல்கள் தகவல்கள் என அருமை முரளி..

//
இந்தப் படத்தின் சிறப்பு ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள். இந்தியா ஒரு உப கண்டம் என்று மெய்பிப்பது போல இந்த படத்தில் எல்லாவித நிலப்பரப்புகளும் காட்டப்படம். பாலைவனம், நீர் வீழ்ச்சி, பனிப்பாறை,வளமான சமவெளி,சரளைக்கல், செம்மண் பூமி என எல்லா இடங்களிலும் காட்சிகள் இருக்கும்//

கலக்கல்

இது(வும்)நட்சத்திரப் பதிவு..

கார்க்கிபவா said...

ஆனா இந்த படமெல்லாம் பகல் காட்சி படமாச்சே சகா :))))))

சென்ஷி said...

மிகச்சிறப்பான பதிவு முரளி...

//அங்கீகாரம் பெறாமல் கூட இருந்து விடலாம். ஆனால் எதிர்மறை அங்கீகாரம் பெருஞ்சோகம்.//

:((

மறத்தமிழன் said...

அன்பரே,

"அங்கீகாரம் பெறாமல் கூட இருந்து விடலாம். ஆனால் எதிர்மறை அங்கீகாரம் பெருஞ்சோகம்"

சத்தியமான வார்த்தை...


ஸ்டடி காம்,மானிட்டர் ‍‍புரியுது.
ஜிம்மி ஜிப்,அகேலா இதல்லாம் என்ன என்று விவரித்தால் நன்று.
சினிமாவைப் பற்றி நிறைய ஆழ்ந்து படித்திருக்கிரீர்கள்.
சமூகத்தின் மீது தமிழ் சினிமாவின் தாக்கம் குறித்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
மறத்தமிழன்.

வினோத் கெளதம் said...

கர்ணன் என்றல் எனக்கு இது நாள் வரை அதே மாதிரி கௌபாய் டைப் படங்களின் இயக்குனர் என்றளவு தான் தெரியும்..அனால் இன்று தான் அவர் மிக சிறந்த ஒளிப்பதிவாளர் என்று தெரிந்துக்கொண்டேன்..

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல தகவல்கள்...முரளி ,

Mahesh said...

//அங்கீகாரம் பெறாமல் கூட இருந்து விடலாம். ஆனால் எதிர்மறை அங்கீகாரம் பெருஞ்சோகம்//

பொற் சொற்கள் !!

கே.என்.சிவராமன் said...

முரளி,

'காமிரா மேதை' கர்ணனின் ஆளுமையை ஓரளவுக்கு பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்ட வேண்டிய விஷயம்.

இவர், இயக்குநரானதும் முதலில் 2 அல்லது 3 குடும்பப் படங்களைதான் எடுத்தார். ஆனால், அவை வர்த்தக ரீதியாக தோல்வியடைந்தன.அதனால்தானோ என்னவோ எதிர்கோணத்துக்கு மாறினார்.

இவருக்கு பிடித்த லோகேஷன் காஷ்மீர்தான். பாடல் காட்சிகளை பெரும்பாலும் அங்குதான் எடுப்பார். ஒருமுறை காஷ்மீர் சென்றால், குறைந்தது 3 படங்களுக்கு சேர்த்து பாடல்காட்சிகளை எடுத்துவிடுவாராம். பெரும்பாலும் ஜெய்சங்கர்தான் ஹீரோ என்பதால், 3 படங்களுக்கான சண்டைக்காட்சிகளையும் ஏக் தம்மில் படம் பிடிப்பாராம்.

செங்கல்பட்டு ஏரியும், திரிசூலம் மலையும் இவரது படங்களில் பெரும்பாலான காட்சிகளை ஆக்ரமிக்கும்.

மது, புகை, பெண் என்ற எந்த பழக்கமும் இவருக்கு கிடையாது. க்ரூப் டான்சர்களை இவரளவுக்கு மதிப்பவர்கள் குறைவு என சொல்வார்கள்.

படங்களில் இடம்பெறும் குதிரைகள், இவருடைய சொந்த 'பிள்ளைகளே'. புரவிகளுக்காக ஒரு பண்ணையே வைத்திருந்தார். ஆரோக்கியமான புரவிகளை வாங்கும் நுணுக்கம் தெரிந்தவர். ஹேண்டில் ஷாட்டிலும், டிரிக் ஷாட்டிலும் கில்லாடி.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் பதிவுக்கு நன்றி முரளி...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நையாண்டி நைனா said...

வாரி வழங்குனது கர்ணனுக்கு அப்புறம் நீ தாண்டி மாப்ளே.

முரளிகண்ணன் said...

நர்சிம் வருகைக்கு நன்றி.

கார்க்கி, அதேதான் நான் சொல்ல வருவது. அதற்க்கு முன் அவர் செய்த
சாதனைகளுக்குரிய அங்கீகாரம் கிட்டவில்லை.

சென்ஷி, வருகைக்கு நன்றி.

கே.என்.சிவராமன் said...

//வாரி வழங்குனது கர்ணனுக்கு அப்புறம் நீ தாண்டி மாப்ளே.//

நையாண்டி, செம நையாண்டி :-)

முரளிகண்ணன் said...

மறத்தமிழன், நன்றி.

இந்த இடத்தில் ஒரு சிறு விளம்பரம்.

சில மாதங்களுக்கு முன் ஜிம்மி ஜிப், அகேலா மற்றும் சினிமாஸ்கோப், ஐமேக்ஸ் பற்றி பதிவு எழுதியுள்ளேன்.
(இந்த வலைப்பூவில்). உங்களுக்கு சுட்டி அனுப்புகிறேன்.


வினோத் கௌதம், அது ஒரு கனாக்காலம், மகேஷ் மிக்க நன்றி

சரவணகுமரன் said...

முரளிகண்ணன், நீங்கள் கர்ணனின் ரசிகர் என்பது தெரிந்ததே... அவரை பற்றி பல அறியாத தகவல்களை அளித்ததற்கு நன்றி...

முரளிகண்ணன் said...

அன்பு பைத்தியக்காரன்,

மிக்க நன்றி. நான் பார்த்த படங்களிலிருந்தும், சேகரித்த தகவல்களிலும் இருந்தும் இந்தப் பதிவு எழுதினேன். அதனால் தான் முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை.

தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

நையாண்டி நைனா நன்றி.

முரளிகண்ணன் said...

வாங்க சரவணகுமரன்.

\\ கர்ணனின் ரசிகர் எனத் தெரிந்ததே\\

:-))))))

Vidhya Chandrasekaran said...

ஒரு படம் கூட பார்த்ததில்ல. ஆனாலும் தகவல்கள் சுவாரசியமாக உள்ளதுபாஸ்:)

ரமேஷ் வைத்யா said...

காமிரா மேதை என்று புகழப்பட்ட ஒரே ஒளிப்பதிவாளரான் கர்ணன் பற்றி நல்லொரு பதிவு.

நையாண்டி நைனா said...

/*
பைத்தியக்காரன் said...
//வாரி வழங்குனது கர்ணனுக்கு அப்புறம் நீ தாண்டி மாப்ளே.//

நையாண்டி, செம நையாண்டி :-)
*/

நன்றி அண்ணா....
(எனக்கு பதிவுலக ஆஸ்கார் கெடச்சா மாதிரி இருக்கு)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா.


வைத்யான்னா மிக்க நன்றி.

அக்னி பார்வை said...

இவர் படத்தில் ஹீரொயினின் கவர்ச்சியும் தூக்கலாய் இருக்கும் அதிலும் இவர் கர்ணன் தான்

dondu(#11168674346665545885) said...

ஒரு முறை ஓடும் ரயிலில் ஃபுட்போர்டில் சண்டை காட்சி. அதை எடுக்க கர்ணன் முன்னால் செல்லும் பெட்டியில் படுத்துக் கொண்டு பாதி உடம்பை வெளியே நீட்டி காமிரா மூலம் ஷூட் செய்திருக்கிறார். அவர் வெளியா விழுந்து விடாமல் இருக்க அவர் மேல் 8 பேர் அமர்ந்தனராம்.

இந்த செய்தி துணுக்கு குமுதத்தில் வந்த போது “கர்ணன் மேல் எவ்வளவு பேர் உட்கார இயலும்? விடைக்கு பார்க்க பக்கம் 84” என போட்டு, விடை: எட்டு பேர் என குறித்து, அதற்கான செய்தியையும் தந்தார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கர்ணனுக்கு சரியான கதாசிரியர் கிடைக்கவில்லை தல

பாலாஜி மாதிரி ரீமேக் ஆளுங்க அவர கொஞ்சம் கரெக்ட் பண்ணியிருந்தா
சூப்பர் படங்கள் கிடைத்திருக்கும்

கே.எஸ்.ஜி படங்களுக்கு கேமிராவை ஒரு ஸ்டேண்டில் ஃபிக்ஸ் செய்து விட்டு ஒரு தூக்கம் தூங்கி விட்டு வந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். அது போன்ற படங்களிலேயே அவர் திறமையை நிரூபித்தவர். அவரது குதிரை ஓட்டங்களை யூடியூப்பில் தேடிய போதுதான் இந்த கவர்ச்சியான சண்டைக் காட்சிகள் கிடைத்தன. யூடியூப்பில் எப்படி சில நிமிடக் காட்சிகள் ஏற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் அவற்றை யூடியூப்பில் நானே ஏற்றி விடுவேன். குறைந்த பட்சம் சில ஆட்களாவது அவரது திறமையை அறிவார்கள்.

மிக அதிகமான வேகத்தில் ஓடும் குதிரையும் அந்த வேகத்துக்கு சிதறும் தண்ணீரும் ஒரு துளி பிசிறு கூட இல்லாமல் படமாக்கும் திறமை வாய்ந்தவர் அவர்.

இளமைக்கால எம்.ஜி.ஆர், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்றோருடன் ஒரு கூட்டணி அமைந்திருந்தால் ஹாலிவுட்டிற்கே சவால் விடப் பட்டிருக்கும்.

ஜெய்சங்கர் கூட இளமை அவரைவிட்டு விடைபெறும் காலக் கட்டத்தில் தான் அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

தமிழ்திரையுலகங்களின் சோகங்களில் இதுவும் ஒன்று.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டோண்டு சார் சொல்லும் தகவல்களையும் பாருங்கள். தொழில் பக்தி எவ்வளவு இருந்திருக்கிறது.
பாராட்டப் படவேண்டியவர்.


உள்ளே வெளியே படம் வந்த போது பார்த்திபன் சொன்ன காரணம்தான் கர்ணன் அவர்களுக்கும் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு தீய பழக்கமும் இல்லாத தொழில் பகதிமானுக்கு கிடைத்த பரிசு பகல்காட்சி இயக்குநர். என்ன கொடுமை..

நான் சுட்டியிருக்கும் காட்சிகளில் கூட கொஞ்சம் கூட முதுகுவளையாத பெண்களைப் பயன்படுத்தி அற்புதமான சண்டைக்காட்சிகள் எடுத்திருப்பார். இன்றைய சில சண்டைக்காட்சி நாயகர்களைவிட அந்தப் பெண்களின் சண்டைக்காட்சி நன்றாக இருக்கும்.

Cable சங்கர் said...

அருமையான.. தகவல்கள் முரளி.. அதிலும் கர்ணனை தெரிந்தவர்கள் கெள்பாய் படஙக்ளை மட்டுமே தெரிந்து வைத்து கொண்டு பிட்டு பட டைரக்டர் என்று நினைத்து கொண்டிருப்பார்கள். அதனால் அவரை பற்றிய தகவல்கள் நிச்சயம் எல்லோருக்கு தெரிய வேண்டியதுதான். காமெரா மேதை என்கிற பட்டம் அவர் ஒருவருக்கு தான் கொடுத்திருக்கிறார்கள்.

முரளிகண்ணன் said...

வாங்க அக்னிபார்வை.

டோண்டு சார், வருகைக்கும் அற்புதமான தகவலுக்கும் நன்றி.

உங்களின் ஞாபகசக்தி பிரமிக்கவைக்கிறது.

முரளிகண்ணன் said...

சுரேஷ்,

முதற்கண் உங்களின் சுட்டிகளுக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள குதிரையின் வேகமும் தண்ணீர் சிதறலும் நான் அவர் படங்களில் பார்த்து அதிசயித்ததுண்டு.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல அவருக்கு தக்க பக்கதுணை கிடைக்கவில்லை.

\\இளமைக்கால எம்.ஜி.ஆர், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்றோருடன் ஒரு கூட்டணி அமைந்திருந்தால் ஹாலிவுட்டிற்கே சவால் விடப் பட்டிருக்கும்\\


\\தமிழ்திரையுலகங்களின் சோகங்களில் இதுவும் ஒன்று\\

100% உண்மை.

நான் குறிப்பிட மறந்த பெண்களின் சண்டைக்காட்சியைப் பற்றி குறிப்பிட்டதற்க்கு நன்றிகள் பல.

முரளிகண்ணன் said...

கேபிள்ஜி தங்கள் வருகைக்கு நன்றி.

நான் பதிவில் கேமிராமேதை என குறிப்பிடாததற்க்கு காரணம், மற்ற எல்லோரும் சேர்ந்து அதை சொன்னால் சிறப்பாக இருக்குமே என்றுதான்.

பைத்தியக்காரன், ரமேஷ்வைத்யா பின்னர் நீங்கள் என அனைவரும் அதை குறிப்பிட்டு மகிழ்சிப்படுத்தி விட்டீர்கள்

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் போடலாமுன்னு வந்தா Sureஷ் குடுமி பிடி சண்டை பாருங்கன்னு கூப்பிட்டுப் போயிட்டாரு:)அங்க போனா மே பூல் பண்ணிட்டாரு!

கர்ணன் = ஒளிப்பதிவு இயக்குநர்.கதை,பாடல்,எம்.ஜி.ஆரும்,சிவாஜியும் ஆக்கிரமிப்பில் ஒளிப்பதிவு நுணுக்கங்கள் பற்றிய சிந்தனை மக்களுக்கு இல்லாமல் போய் விட்டது என நினைக்கிறேன்.பத்திரிகைகளும் நுணுக்கத் தகவல்களை சொல்லித் தர மறந்து விட்டன.(தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு!பாலுமகேந்திரா,கர்ணன் ஒளிப்பதிவெல்லாம் சிதம்பர ரகசியமாய் இருந்திருக்கலாம்)

தனக்கென்ற பாணியில் கர்ணனும்,விட்டலாச்சார்யாவும் நினைவில் நிற்க வேண்டியவர்கள்.ஆனால் இவர்களின் திறமைகளை கவர்ச்சி நாயகிகள் அபகரித்துக் கொண்டார்களென்று பகல் காட்சி பின்னூட்டங்கள் சொல்கின்றன.

Bruno said...

அருமை அருமை

அறிவிலி said...

//கற்பனைக்கு எட்டாத கோணங்களில் கேமராவை வைத்து படம் எடுத்தவர் கர்ணன்.//

எனக்கு கர்ணண் என்றாலே கவர்ச்சி நடிகைகளின் தொடைதான் நினைவு வரும்.

உங்கள் இடுகையை படித்தபின் அவர் மேல் பெரிய மரியாதை வந்துவிட்டது.

ச.முத்துவேல் said...

இந்த இடுகையைப் பதிவிடுவதன் பின்னணியிலுள்ள உங்களின் உழைப்பும், உணர்வும் வியக்க வைக்கிறது. வழக்கமாக உங்களைப் படிக்கமுடியறதில்லயேன்னு உறுத்தல் தருது.

தமிழன்-கறுப்பி... said...

தகவல்களாய் குவிக்கிறீர்கள்..

அங்கீகாரம்...!

Venkatesh Kumaravel said...

என்ன தான் ஸ்பானிய, அமெரிக்க கௌபாய் அளவுக்கு இல்லாவிட்டாலும் நமக்கு கிடைக்கப்பெற்ற தொழில்நுட்பத்துடனும், வாய்த்த முதலீட்டிலும் இந்த திரைப்படங்களை நல்லாவே படம் பிடிச்சிருந்தாரு கே டி.வி-யிலும் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்ஸிலும் பார்த்து வியந்திருக்கிறேன். குறிப்பாக ஜெய்சங்கரை அருமையாக க்ளிண்ட் ஈஸ்ட்வுட்-டிற்கு மாற்றாக ஆக்கிய சாம்ர்த்தியம்.. அழ்காக நம்ம ஊருக்கு உரித்தான செண்டிமெண்டுகளை வெஸ்டர்னுக்குள் புகுத்தியது... நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு... மேன்மேலும் தொடரவும்!

கோபிநாத் said...

பதிவும் பின்னூட்டங்களும் அருமை ;)

எல்லாமே புதுசு ;)

ஸ்ரீ.... said...

ஒவ்வொரு பதிவின் பின்னணியிலும் தங்கள் பெருமுயற்சி இருக்கிறது. குறிப்பாக சினிமா பற்றிய பதிவுகளில். உங்களது முயற்சிகள் பதிவுகளோடு நில்லாமல் அனைத்துத் தமிழரும் வாசிக்கும் வண்ணம் புத்தகமாகக் கொண்டு வரலாம் எனத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ....

RV said...

கர்ணன் அந்த் காலத்துக்கு soft porn எடுத்தவர் என்றுதான் நினைத்திருந்தேன். உங்கள் பதிவு பிரமாதம்! அதை பற்றியே நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன், முடிந்தால் பாருங்கள்! http://awardakodukkaranga.wordpress.com/2009/05/30/ஜம்பு-புகழ்-கர்ணன்/

நல்லதந்தி said...

//எம்ஜியார் தன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டைக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய கர்ணனை பணியமர்த்திக் கொண்டார்.//
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் கர்ணனைத் தன்னுடைய நீதிக்குத் தலைவணங்கு என்ற படத்திற்கு பைக் சேஸிங் காட்சிகளுக்காகத்தான் பணியமர்த்தினார்.உலகம் சுற்றும் வாலிபனுக்காக இல்லை என நினைக்கிறேன்!. நல்ல பதிவு.வாழ்க முரளிகண்ணன்!.

butterfly Surya said...

ஜம்புவில் ஒரு பாட்டு என்று நினைவு

“” மச்சான் தொட்டா மச மச.. மனசுக்குள் ஏதோ கச முச..”"

சரியா..??